பேருந்து, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறையாளர்களை கண்டதும் சுட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி.) கே.பி.ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக 19ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த சம்பவங்களை அடுத்து மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடவாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்துள்ளனர்.
இருப்பினும் இப்பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, மாநிலத்தில் ஒரு சில இடங்களில் சமூக விரோதிகள் பேருந்துகள் மற்றும் அரசு சொத்துக்களை கல் வீசி சேதப்படுத்துதல், தீ வைத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொதுமக்களின் உயிருக்கும் மற்றும் உடமைக்கும் சேதம் விளைவிக்க முயற்சிக்கும் சமூக விரோதிகளை கண்டதும் சுடவும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என எச்சரிக்கப்படுகிறது என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.