இலங்கைத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும், இதற்கு அனைத்து வகையிலும் உதவி செய்து கொண்டிருக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் கோரியும், அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று தென்னாபிக்காவில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒருமைப்பாட்டுக் குழு, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பாலஸ்த்தீன ஆதரவு அமைப்பு, அருட்பா கழகம், தென்னாபிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், தென்னாபிரிக்க கம்யூனியக் கட்சி போன்ற அமைப்புகளைச் சேர்ந்த 1500க்கு மேற்பட்ட பல்லின மக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு தென்னாபிரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பீற்றமாரிற்ஸ்பேர்க்கில் இடம்பெற்றது. நகரின் பிரதான சாலையூடாக சென்ற கண்டன பேரணி இறுதியில் சுதந்திர சதுக்கத்தில் நிகழ்ந்த இலங்கைக்கு எதிரான கண்டனக் கூட்டத்தையடுத்து நிறைவடைந்தது.
குவாசூலு நெட்டால் மாகாண தலைமை அமைச்சர் சிபு என்டெபெலெ சார்பாக வேண்டுகோள் மனுவினைப் பெற்றுக்கொண்ட மாகாண சபை அவைத் தலைவர் வில்லிஸ் எம்சுனு இலங்கைத் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தார்.