உலக அகதிகள் தினம் இன்று. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
எது எவ்வாறாயினும் உலகம் முழுவதும் அகதிகள் பாதுகாப்பற்று வாழ்விடங்களை இழந்து உயிரச்சுறுத்தல்களுடன் வாழ்கின்றனர். முன்னெப்போதும் இல்லாதவாறி அகதிகளின் அடிப்படை வாழ்வாதாரப் பெறுமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த அகதிகள் தினத்தில் உலக அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியுள்ளது. அரைவாசிக்கு மேலான அகதிகள் குழந்தைகள். உலக மக்கள் மனித இனத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கத் தவறியுள்ளனர்.
இலங்கை அரச பயங்கரவாதம் உலகில் அகதிகளை உருவாக்கும் கருவிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் எப்போதும் திருப்பி அனுப்பபடலாம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அதே வேளை இஸ்லாமியத் தமிழர்களை இலங்கை அரச பயங்கரவாதிகள் அகதிகளாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனத்தின் முன்பாக தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
உலக அகதிகளுடன் இணைந்து இப் போராட்டத்தை வெற்றிவரை விரிவுபடுத்தும் நோக்கில் எதிர்வரும் 28.06.2014 அன்று பொதுக்கூட்டம் ஒன்றை இதே அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.