ஐரோப்பாவின் ஏனைய நாடுகளை நோக்கியும் பரவிவரும் ‘பொருளாதார நெருக்கடி’ எனக் கூறப்படும் மூலதனக் கொள்ளையால் இத்தாலியில் மில்லியன் கணக்கானவர்கள் வீடுகளை சூடேற்றிகளைப் பாவிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், நாளாந்த உணவைப் பெற்றுக்கொள்ள ,முடியாத நிலையிலுள்ளதாகவும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய புள்ளிவிபர நிலையத்தின் புள்ளிவிபரங்களை ஆதாரம் காட்டி வெளியிடப்பட்டுள்ள இச் செய்தி இத்தாலியில் 40 வீதமான இளைஞர்கள் வேலையற்றவர்களாக காணப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கிறது. சிக்கனம் என்ற பெயரில் பல்தேசிய நிறுவனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டும் மக்களுக்கான உதவித்திட்டங்கள் நீக்கப்பட்டும் உள்ள நிலையில் இளைஞர்களும் மில்லியன் கணக்கான மக்களும் பெரும் அவலத்துள் தள்ளப்பட்டுள்ளனர்.
புரதச் சத்துள்ள உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலுள்ள மக்களின் தொகை 2010 ஆம் ஆண்டில் 6.7 வீதமாகவும் 2012 ஆண் ஆண்டில் 16.7 வீதமாகவும் காணப்படுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
வியாபாரத்தைப் பெருக்குவது என்ற தலையங்கத்தில் பல்தேசிய நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டு மக்கள் மீதான வரிச்சுமை மேலும் அதிகரிக்கப்பட்டது. ஓய்வூதியம், வேலையற்றோருக்கான உதவித் தொகை என்பன சிக்கனம் என்ற பெயரில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்போது நீக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய அரசிற்கு எதிராகப் போராட்டம் நடத்திய பல கம்யூனிஸ்டுக்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.








