இன்று காலை இரவு நேரக்கடமைகளை முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வாக வீரகேசரி மின்பத்திரிகையை பார்வையிட்டுக் கொண்டிருக்கிற போது தான் இரண்டாம் பக்கத்தில் மலேசியாவில் கைதான ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பான அந்த செய்தியை பார்த்தேன். “வடபகுதி அகதி முகாம்களில் இருந்து சிறிய கப்பல் ஒன்றில் அடைக்கலம் தரும் நாடொன்றை தேடி அகதிகளாக புறப்பட்டவர்கள், கப்பல் பழுதடைந்த நிலையில் மலேசியா பினாங்கு தீவருகே கடலில் தத்தளித்து கொண்டிருந்த போது மலேசியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கைவிலங்கிடப்பட்ட நிலையில் ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என தனித் தனியாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்” இவ்வாறு அந்த செய்திகள் தொடர்கின்றது. அதில் உள்ள படத்தில் பெண்கள் கண்கள் கலங்கிய நிலையிலும் குழந்தைகள் தனியாக இருத்தி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் ஆண்கள் பின்புறமாக கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருக்க சூழ காவல்துறையினரும், குடிநுழைவு அதிகாரிகளுடன் பொது மக்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிற படங்களை பார்த்த போது அடிமனதில் சுரீரென வலித்தது.
ஆண்கள் பின்புறமாக கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றதை படத்தில் பார்த்த போது எமது மண்ணில் ஆக்கிரமிப்பு படைகளால் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைது செய்யப்படும் எமது இளைஞர்களின் நினைவு வந்து மனதை அலைக்கழித்தது. ஒரு வித்தியாசம் இங்கு தலையாட்டிகள் இல்லை அவ்வளவு தான். சொந்த மண்ணில் தான் இந்த அவல நிலை எனில் அடைக்கலம் தேடி போகும் வழியிலும் இது தொடர்கதை ஆனதேன்?. எதற்காக அவர்கள் கைவிலங்கிடப்பட்டார்கள்? அவர்கள் என்ன போதைப்பொருள் கடத்தினார்களா? அல்லது வேறு ஏதும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டார்களா? மலேசிய குடிவுநுழைவுத்துறை சட்டத்தின் பிரகாரம் அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கலாம்.
ஆனாலும் மலேசியாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் கரை ஒதுங்கவில்லையே?. பின் வேறு என்னதான் குற்றமிழைத்தார்கள்.? அகதியாக அலைவதை தவிர. இன்று கைவிலங்கிடப்பட்ட நிலையில் சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு அவர்கள் வேடிக்கைப்பொருளாகி விட்டார்களா? அகதி என்றால் கேவலம், அகதி என்றால் வேடிக்கைப்பிராணி. அகதி என்றால் பிச்சைக்காரன். இப்படியாகத்தான் அகதி எனும் சொல்லிற்கு பொருள் கொள்கிறது போலும் இவ்வுலகம். அகதி எனும் மூன்றெழுத்து சொல்லின் பின்னே மறைந்திருக்கிற அந்த மரணவலியை, அதன் தாக்கத்தை அதை அனுபவபூர்வமாக அனுபவித்துக் கொண்டே வாழத் துடிக்கும் மனிதனை விட வேறு யாரும் அறிந்திருக்க முடியாது. மலேசிய குடிநுழைவுத்துறை தடுப்பு முகாம்களை பற்றியும் , அங்கு நடக்கும் உபசாரங்களை பற்றியும் நானும் கொஞ்சம் அந்நிய தொழிலாளராக வந்த புதிதில் அனுபவித்து இருப்பதுடன் அவ்வப்போது செவிவழியாக கேள்விப்பட்டும் இருக்கிறேன்.
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் குழந்தைகளை கூட பெற்றோரிடம் இருந்து பிரித்து தனி முகாம்களில் வைத்துள்ளனர். சொந்த மண்ணில் மட்டுமல்ல, அடைக்கலம் தேடி போகும் வழியில் படகு தரைதட்டும் மண்ணில் கூட குழந்தைகளை தம்மிடம் சேர்த்து வைக்கும் படி கோரி உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலையில் ஈழத்தமிழனின் தலைவிதி. அகதிகளும் மனிதர்கள் தான் என நாடுகளும் சட்டங்களும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. பினாங்கு கடற்கரைக்கு அழைத்து சென்ற அகதிகளை அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களை நாடு கடத்த போவதாகக் கூறி இருக்கின்றனர். இதனால் கப்பலை விட்டு இறங்க மறுத்த அகதிகளிடம் பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கு அனுப்புவதில்லை எனும் உறுதிமொழி (உறுதிமொழிக்கு என்னவாகும் என்பது இனிவரும் காலங்களில் தெரிந்துவிடும்.) வழங்கிய பின்னரே கரைக்கு வந்திருக்கின்றனர்.
அகதிகள் ஒன்றும் சொர்க்கத்தை நோக்கிய கனவுகளில் மிதந்தபடி ஆபத்தான படகுப்பயனங்களில் ஈடுபடுவதில்லை. சொந்த மண்ணில் கிடைக்காத நிம்மதியான வாழ்வை தேடியே உலகெங்கும் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.அப்படி வந்தவர்களிடம் இலங்கைக்கு நாடு கடத்தப்போவதாகவும் நரகத்திற்குள் தள்ளிவிடப்போவதாகவும் மிரட்டுகின்றார்களே, அகதிகள் விடயத்தில் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால் என்ன? அகதிகள் விடயம் உட்பட உலகில் மனிதநேய நெருக்கடிகள் எல்லாவற்றையும் மனிதாபிமான நோக்கில் அணுகாமல் எல்லாவற்றையும் இராஜதந்திர நோக்கிலேயே அணுகும இந்த கேடுகெட்ட மனோபாவம் தொலையப்போவது எப்போது?சரி இந்த செய்தியை படித்து விட்டு கடைத்தெருவுக்கு போய் அன்றைய மலேசிய நண்பன் நாளிதழை வாங்கி புரட்டினால் இரண்டாம் பக்கத்தில் “எழுபத்தைந்து இலங்கை அகதிகளுக்கு நல்ல தீர்வு பிறக்கட்டும்” என ஆசிரியர் தலையங்கம்.
ஆசிரியர் தலையங்கத்தில் “கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்க கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சீமான் கேட்டு கொண்டிருக்கிறார். மனிதநேயம் மிகுந்த நாடு மலேசியா. அதனால் சீமான் கேட்டு கொண்டார் என்பதற்காக மட்டும் அகதிகள் பிரச்னைக்கு தீர்வு காண மலேசியா முன்வரவேண்டும் என எதிர்பார்க்க தேவையில்லை. தனக்கே உரிய மனித நேய பண்பின் அடிப்படையில் ஐ நா அதிகாரிகளிடம் பேசி அகதிகள் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை மலேசியா எடுக்கும். அது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் அது கலந்து பேசிக்கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.” நல்ல விடயம் தான். மனித நேய பண்பிலான மலேசியாவில் நிராதரவான நின்ற ஏதிலிகளை பின்புறமாக கைவிலங்கிடப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் வேடிக்கை பொருளாக்கியது தான் எந்த மாண்பின் அடிப்படையில் என்று புரியவில்லை. இனியாவது இத்தகைய காரியங்களை இவர்கள் தவிர்ப்பார்களா?, அகதிகளையும் மனிதர்களாக மதிப்பார்களா?
மேலும் ” அகதிகள் விரும்பினால் உங்கள் நாட்டில் அனுமதியுங்கள் அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வையுங்கள் என மனுவில குறிப்பிட்டுள்ள சீமான் அவர்களை தமிழ் நாட்டுக்கு குறிப்பிடாதது ஏன்?, உண்மையில் அவர்களை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி மலேசியாவை அவர் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி தமிழக மத்திய அரசு ஆகியவற்றின் இணக்கத்தை பெறுவதில் அவர் தீவிரம் காட்டியிருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளது. இதையும் படித்தவுடன் எனக்கு இவர்களை எண்ணி சிரிக்கத்தான் தோன்றியது.
ஏற்கெனவே மலேசிய தலைநகரத்தில் கணிசமான ஈழத்தமிழ் அகதிகள் ஈஸ்வரலிங்கம் எனும் மனிதநேய பண்பாளரின் மேற்பார்வையில் அரசசார்பற்ற நிறுவனங்கள், சில நல்ல உள்ளம் படைத்த போது மக்களின் உதவியுடனும் பொருளாதாரம்,கல்வி,சுகாதார நெருக்கடிகளின் மத்தியில் முகாம்களில் தங்கியுள்ளனர். மியன்மார், பாகிஸ்தான் போன்ற ஏனைய நாட்டு அகதிகளுக்கு ஐ நா அகதிகள் அலுவலகத்தில் பதிந்து குறுகிய கால இடைவெளியிலேயே அகதிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு விடுகின்றது. ஆனால் ஈழத்தமிழ் அகதிகள் அதிகமானோர் தங்களை பதிவு செய்தும் வெகுநாட்களாக ஐ நாவினால் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. அப்படியே வழங்கப்பட்டாலும் அதை வைத்துக் கொண்டு இவர்கள் தங்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக வெளியே சென்று வேலை தேட முடியாது. ஐ நாவினால் வழங்கப்படும் சிறிய அளவிலான உதவித்தொகையை வைத்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். அப்படியே சாதாரண தேவைகளுக்கு வெளியில் செல்வோர் கூட அகதிகளுக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் பட்சத்திலும் காவல்துறையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுவதுண்டு.
இந்த நிலையில் அவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பும்படி ஏன் சீமான் கோரவில்லை என கேள்வி எழுவதும் நகைப்புக்கிடமானது. ஏற்கெனவே தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகளின் அவலங்கள் ஊடகங்களில் வந்து கொண்டிருப்பதை இவர்கள் அறியாதவர்களா? அங்கு மட்டும் அகதிகள் மனிதர்களாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்களா?. பணம் படைத்தவர்களும், உறவுகள் வெளிநாடுகளில் உள்ளவர்களும் முகவர்களுக்கு கொட்டிகொடுத்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கையில், எஞ்சிய இயலாத அப்பாவிகள் தான் வதைமுகாம்களிற்குள் சிக்கி கொள்கின்றனர். அப்படியும் மிச்சம் மீதி இருக்கிற சொத்தையெல்லாம் விற்று போகிறபோக்கில் எங்காவது ஓரிடத்தில் நிம்மதியாக வாழலாம் எனும் நப்பாசையால் ஆபத்தையும் துச்சமாக எண்ணி படகேறினால் அவலங்கள் தொடர்கதையாக துரத்துகின்றதே.
மலேசியாவிலிருந்து அ.பிரகாஷ்
i wish singala people should run to pillar&post for their safety!
is it possible?
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாயிருக்க வேண்டும்.
இதல்லவா ஞானம்!!
பிரச்சனை என்னவென்றால், எதிரி யாரென்று நமக்கு விளங்குவதில்லை. ஆனாலும் நம் மூக்கை மட்டும் கவனமாக அரிந்து கொள்வோம்.
போக, மலேசியா ஒன்றும் மனித உரிமை பேணும் ஜனநாயக நாடல்லவே!
மேலும் ” அகதிகள் விரும்பினால் உங்கள் நாட்டில் அனுமதியுங்கள் அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வையுங்கள் என மனுவில குறிப்பிட்டுள்ள சீமான் அவர்களை தமிழ் நாட்டுக்கு குறிப்பிடாதது ஏன்?, உண்மையில் அவர்களை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி மலேசியாவை அவர் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி தமிழக மத்திய அரசு ஆகியவற்றின் இணக்கத்தை பெறுவதில் அவர் தீவிரம் காட்டியிருக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளது. இதையும் படித்தவுடன் எனக்கு இவர்களை எண்ணி சிரிக்கத்தான் தோன்றியது.
”
ஏ
ன் இவர்களையும் முகாமில் அடைத்துவைத்து தமிழ்நாட்டு நகரபாதுகாப்புப் படையைக் கொண்டு அடித்துத்துவைக்கவா?”