கிரேக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து 20 இலட்சம் தொழிலாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், வான், கடல்வழி மற்றும் ரயில் போக்குவரத்துகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தலைநகர் ஏதேன்ஸில் அரசுக்கெதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல்கள் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தின் பொருளாதார சிக்கனத் திட்டத்திற்கு எதிராகவே இவ் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தப் போராட்டங்களும் இடம்பெற்றுவருகின்றன.
இத் திட்டத்தின் பிரகாரம் ஊதியங்கள் ஒரு வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை, வரி விதிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டிலுள்ள வறியவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்களென தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
தேசியமட்ட வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் நாடெங்கும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.







