இலங்கையில் ராஜபக்ச சர்வாதிகார அரசு வெள்ளை வான் ஒன்றில் சென்று கடத்திக் கொலைசெய்வது அறியப்பட்டதே. பல ஊடகவியலாளர்கள், சமூகப்பற்று மிக்கவர்கள், ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எனப் பலர் வெள்ளை வான் கடத்தல் காரர்களிடம் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். இக் கடத்தல்களின் பின்னணியில் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோதாபய ராஜபக்சவே செயற்படுவதாக லங்கா ஈ நியூஸ் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முழுமையான அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவ விசேட அதிரடிப்படையின் ஆழஊடுருவும் படைப்பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் மேஜர் ஒருவரே இந்த குழுவை வழி நடத்தி வருகிறார்.
மத்துமகே வசந்த என்ற இந்த அதிகாரி, வவுனியா மாமடு பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு காலை இழந்தவர். அங்கவீனம் காரணமாக சேவையில், இருந்து விலகி கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது, விசேட அதிரடிப்படையின் தலைமையத்தில், இருந்து, பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அமைய ஆட்கடத்தில் சம்பவங்களை வழி நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அதிரடிப்படையை சேர்ந்த மேலும் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களும், தற்போது, அதிரடிப்படையில் உத்தியோகபூர்வமாக பணியாற்றவில்லை.
மத்துமகே வசந்த என்ற இந்த அதிகாரி, விசேட அதிரடிப்படையின் ஆரம்பகாலத்தில், அதன் பொறியியல் படைப்பிரிவின் பணியாற்றி வந்ததுடன், ஆழஊடுருவும் படைப் பிரிவில் செயற்பட்ட திறமையான அதிகாரியாவார். இவர், ஹோமாகம மாகம்மன வெதகேவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர். எனினும் வாரத்தில் ஒரு தடவையே அவர் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
இராணுவ அதிரடிப்படையில் முன்னர் பணியாற்றிய, கர்ணல் ஜயந்த ரத்நாயக்க என்பவரே, மத்துமகேவை, பாதுகாப்புச் செயலாளருக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இவர், முன்னர், கோத்தபாயவின் கஜபா படைப்பிரிவில் பணியாற்றினார்.
இவர்கள் கொழும்பில் உள்ளவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்லும் போது, அதற்கு தேவையான பாதுகாப்பு, கொழும்பு பிராந்திய கட்டளை தளபதி பிரிகேடியர் சாந்த திஸாநாயக்கவினால் வழங்கப்படுகிறது. இவரது கட்டளையின் படியே இராணுவ சோதனை சாவடிகளை தாண்டி, இவர்கள் ஆட்களை கடத்திச் செல்கின்றனர் எனவும் லங்கா ஈ நியூஸ் தெரிவித்துள்ளது.







