தினக்குரல் ஆசிரியர் வி.தனபாலசிங்கம் அவர்களின் ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பாக வெளிவந்த “ஊருக்கு நல்லது சொல்வேன்” நூலிற்கான ஆய்வரங்கினை தேசிய கலை இலக்கியப் பேரவையினர் நடாத்தியுள்ளனர்.
புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல்தனது ஆய்வுரையில், தனபாலசிங்கம் 35 வருட காலப் பத்திரிகைத்துறை அனுபவத்தைக் கொண்டவர். கடந்த 6 ஆண்டுகளாக தினக்குரல் பத்திரிகை ஆசிரியராகக் கடமையாற்றியிருக்கிறார். கரவெட்டி நெல்லியடிப் பகுதிகளில் நடாத்தப்பட்ட மார்க்சிய வகுப்புகளில் கலந்து கொண்ட தோழர் தனபாலசிங்கம் வயிற்றைக் கழுவுவதற்காக என் எழுத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்ற மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் எழுதுபவர். இதற்குத் துணிவு வேண்டும். எனவும் மற்றப் பத்திரிகைகளை விடத் தினக்குரல் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் ஒதுக்குகின்றது. ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறது. இதற்கு மூலவராக இருப்பவர் தனபாலசிங்கம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தனபாலசிங்கம் 2000 இற்கும் அதிகமான ஆசிரியத் தலையங்கங்களை எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமான பல தலையங்கங்கள் நூலில் உள்ளடக்கப்படவி;லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்புரையாற்றிய தினக்குரல் ஆசிரியர் வி.தனபாலசிங்கம், எமது பாதுகாப்புக் கருதியே சில தலையங்கங்களை இந்நூலில் சேர்க்கவில்லை என்குறிப்பிட்டுள்ளமை ஒரு பத்திரிகை ஆசிரியராக அவர் எதிர்நோக்கி வந்துள்ள-வருகிற அச்சுறுத்தல்களை வெளிவுபடுத்தியிருக்கிறது.
பொதுவுடமைக் கருத்து நிலையே எனது அடையாளம். நான் அதை ஒரு போதும் இழக்கவில்லை. நான் பல்கலைக்கழகம் செல்லவில்லை. மக்களோடு செயற்படும் வாய்ப்பை இழக்கக்கூடாது எனக்கூறிய கருத்தக்கள் ஆசிரியர் வி. தனபாலசிங்கம் அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறது.
அவரது எழுத்தில் வெளிப்படும் மக்கள் விரோதிகளுக்கும் சனநாயக விரோதிகளுக்கும் எதிரான குரலின் பின்புலம் பற்றி அறிகிறபோது மனநிறைவு ஏற்படுகிறது.
ஒரு தகமையாளர் தகைமையானவற்றைச் செய்து வந்திருக்கிறார் என்கிற மனநிறைவு அது.