வன்னியில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு வந்த வணங்கா மண் கப்பலை நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை இறக்காது, நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஏ.எப்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இக்கப்பல் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் முறையான பயண ஏற்பாடுகள் செய்யாது சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்ததாகத் தெரிவித்துக் கடற்படையினர் தடுத்து வைத்து சோதனை செய்தனர்.
கப்பலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஆயுதங்கள் எவையும் காணப்படவில்லை எனத்தெரிவித்த அதிகாரி ஒருவர் நிவாரணப் பொருட்களே காணப்பட்டதாக உறுதி செய்துள்ளார்.
எனினும் கப்பலை இலங்கைக் கடற்பரப்பிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களும் திருப்பி அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.







