லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கேர்ணல் கடாபியின் மக்கள் விரோத, சர்வாதிகார அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தொடுத்திருக்கும் லிபியா மீதான போரை எவ்வ கையிலும் நியாயப்படுத்த முடியாது. இப்போர் நடவடிக் கைகளின் உள்நோக்கம் ஏகாதிபத்திய அக்கறையேயன்றி லிபிய மக்கள் நலன் சார்ந்ததல்ல. அதனால் லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் இந்தக் கண்டிப்பு எந்தவகையிலும் கேர்ணல் கடாபியின் எதேச்சதிகார ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குவதாகாது.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அரபு நாடுகளில் இடம்பெற்று வரும் மக்கள் கிளர்ச்சிகள் பற்றியும் அதில் ஏகாதிபத்தியத்தின் தலையீடு பற்றியும் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் குழுவின் சார்பில் அதன் சர்வதேசஅமைப்பாளர் இ.தம்பையா விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அரபு நாடுகளின் ஆளும் வர்க்கத் தலைமைகளின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளமை தவிர்க்க முடியாதது. அந்தக் கிளர்ச்சிகள் அரசியல் வழிகாட்டலும் அரசியல் நிகழ்ச்சி நிரலுமின்றி இடம்பெறுவதால் ஏகாதிபத்திய சக்திகள் அவற்றுக்குச் சார்பாக, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அரபு நாடுகளின் சர்வாதிகாரிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களே. அவர்கள் மக்களின் மத்தியில் நின்று பிடிக்க முடியாதபோது அவர்களை அரச தலைமை யிலிருந்து அகற்றி அவர்களுக்கு பதிலாக தமது வெளிப்படையான பொம்மைகளாக இருக்கக் கூடியவர்களை அரச தலைமையில் இருத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க ஏகாதபத்தியம் எடுத்து வருகிறது. அவ்வாறு முடியாத போது இராணுவ தலையீடுகளை முன்னெடுத்து வருகின்றன. அவ்வாறான இராணுவ தலையீட்டையே லிபியாவில் செய்து வருகின்றன. ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டினால் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் சுதந்திரமோ ஜனநாயகமோ, அமைதியோ நிலைநாட்டப்படவில்லை. அதன் தலையீட்டினால் பாலஸ்தீனப் பிரச்சினை இன்னும் உக்கிரமடைந்து கொண்டே போகிறது.
எனவே நாடுகளின் இறைமை, சுதந்திரம் ஜனநாயகம் போன்றவற்றை மதிப்பவர்கள் எவ்வகையிலும் லிபியா மீதான ஏகாதிபத்திய போரை ஏற்று அங்கீகரிக்க முடியாது. ஆனால் இவ்வாறான தலையீடுகளையும் போரையும் கேர்ணல் கடாபி போன்றவர்கள் அவர்களின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, மனித உரிமைகளை மீறும் நிலைப்பாட்டினாலும் நடவடிக்கைகளினாலும் வரவழைத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
இதனை புரிந்து கொண்டு உலக மக்கள் ஒன்றுபட்டு நாடுகளினதும், மக்களினதும், இறைமையையும் சுதந்தி ரத்தையும் உள்நாட்டுப் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களிட மிருந்தும், ஏகாதிப்பத்திய சக்திகளிடமிருந்தும் பாதுகா த்துக் கொள்ள தேசிய ரீதியாகவும் சர்வதேசரீ தியாகவும் திட்டமிட்டு செயற்பட வேண்டும். உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பேசுவது அவர்களுக்கு மக்களிடமிருந்து ஆபத்த வரும் போதும், அவர்களின் நலன்களுக்கு ஏகாதிபத்தியங்கள் சாதகமாக இருக்காத போதும் மட்டுமே. பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு சார்பானவை என்பதே உண்மை. எனவே அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பை மக்கள் நம்ப வேண்டியதில்லை.
அதே போன்று ஏகாதிபத்தியம் மக்களின் சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும், விடுதலைக்கும் குரல் கொடுப்பதாகவும், தலையிடுவதாகவும் சொல்வது அதனுடைய ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவன்றி மக்களின் நலனுக்காக அல்ல. எனவே போராட்டங்களினதும் கிளர்ச்சிகளினதும் பாதுகாவலனாக ஏகாதிபத்தியத்தை நம்புவது ஆபத்தானதாகும்.
மக்கள் அவர்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டுப் பிற்போக்கு ஆளும்வர்க்க த்திற்குமிடையிலான முரண்பாடுகளை நிச்சயமாகக் கையாள வேண்டி இருக்கும் என்பது உண்மையே. ஆனால் ஒன்றுக்கு எதிராக இன்னொன்றைப் பயன் படுத்துவதாக நம்புவது ஆரோக்கியமானதல்ல. அழிவுகளைக் கொண்டு வரும். எனவே லிபியா உட்பட அரபு நாடுகளில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது நலன்களை ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்குள் முடக்கிக் கொள்ள இடமளிக்காது சரியான அரசியல் தலைமைத்துவத்துடனும் உரிய நிகழ்ச்சி நிரலுடனும் அவர்களின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அரபு நாடுகளின் மக்கள் அந்நாட்டு சர்வா திகாரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் நெறிமுறையான உரிமையைக் கொண்டுள்ளனர். அதேவேளை அவ்வுரிமையைப் பறிக்கும் வகையில் ஏகாதிபத்தியம் தலையீடு செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
இ.தம்பையா
சர்வதேச அமைப்பாளர்
ஊடகங்களுக்கான அறிக்கை 25-03-2011
பெங்காசி கிடைத்தால் போதும் கடாபி தேவையே இல்லை இங்கிருந்து வசதியாக சாப்பிட்டு வாழ்வதால் அவர்கள் எதைச் செய்தாலும் நமது நன்மைக்காகவே இருக்கும் என்பதை நான் மனதார நம்புகிறேன்.அரபுக்காரனிடம் இல்லாத அரிய குணங்களேலலாம் இவர்களீடம் உண்டு.மனிதாபிமானம் பண்பாடு நாகரீகம்.கடாபிக்கு அடி விழுவதை பார்த்து நான் மிகவும் ரசிக்கிறேன்.ஒரு கொடுங்கோலனுக்காக இந்த சமத்துவம் பேசுவோர் ஏன் வெட்டி முறீகிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, உலகத்தில் சிவப்புக்கள் [?? அப்படி ஒன்றும் இல்லை] எல்லாம் என்ன செய்தது? கடாபி என்ற கொடுங்கோலன், தனது மக்களை கரப்பான் பூச்சி, பயங்கரவாதி என்று சொல்லி, கடந்த ஒரு மாதமாக கொல்லும்போது, நம்ம சிவப்பு பேச்சாளர் எங்கே போனார்? மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடக்கும்போது, பேசாமல் இருந்துவிட்டு, மேற்குலகம் ,கடாபியை தாக்கத் தொடங்கியவுடன், ஏகாதிபத்தியம், வாழைக்காய்ப் பத்தியம் என்று உளற ஆரம்பித்து விடுவார்கள். உங்களால் அதை தடுக்க முடிந்ததா? பென்காசி, மிசுராடா மக்களிடம் சென்று இதைக் கூறுவீர்களா?
நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களையும், அமைப்புக்களையும் [ நீண்டகாலமாகவே இதைதான் மந்திரம் போல் உச்சரிக்கின்றீர்கள்] ஒன்று திரட்டி வரும் முன்பாக, ஒடுக்கப்படும் மக்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள். பிறகு யாரை வைத்து, சோசலிசம் பேசப்போகிறீர்கள்.
வலி சுமக்கும் நினைவோடு இன்னமும் வாழும் மக்கள் நாம். அந்த மக்களின் வேதனையும், வலியும் புரியும். உயிரைக் காப்பாற்ற அமேரிக்கா வந்தாலென்ன..சீனா வந்தாலென.. இப்போது தேவை உயிருடன் வாழ்தல். புரட்சியை பிறகு பார்த்துக் கொள்வோம் தோழர்களே
முதலில் தமது நிலையை உறுதிப்படுத்தவேண்டும் அதன் பின்பு உலக விடயத்தில் கவலைகொள்ளவேண்டும்.
கொழும்பில் நடக்கின்ற யு.என்.ஒ விற்கு எதிரான ஆா்ப்பாட்டத்துடன் இவா்களும் இணைந்து ராஐபக்சவைக் காப்பாற்ற முற்படுகிறார்களோ என்னவொ.முதலாளித்துவ வல்லரசுகளின் நிலைப்பாடு இந்த உலகத்தில் எப்படிப்பட்டதென்று குழந்தைகளிற்கும் தெரியும். இதற்கு புதிதாக விளக்கம் வேண்டியதில்லை.
இருந்தாலும் தற்கால புரட்சிகளின் பின்னால் தவிர்க்க முடியாமல் மேற்கத்தய வல்லரசுகளே உள்ளன இல்லையேல் அந்த மக்கள் கூட்டங்கள் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டுவிடுவார்கள் இதற்கு கடாபி ஒரு உதாரணம். அதிஸ்டவசமாக அவா்களிடம் எண்ணை உள்ளது நம்மிடம் அது இருக்கவில்லை அதாவது யுத்தசெலவை அதன் மூலம் ஈடுசெய்துவிடுவார்கள்.
நவீன உலகில் எந்த மக்கள் போராட்டத்தின் பின்புலத்திலும் ஒரு பலம் வாய்ந்த கையின் உதவி இல்லாமல் வெற்றிபெறுவதென்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
“லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் இந்தக் கண்டிப்பு எந்தவகையிலும் கேர்ணல் கடாபியின் எதேச்சதிகார ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குவதாகாது.”
அருமையான கருத்து. பலவேளைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு காரணமாக லிபியாவிற்கு வழங்கப்படும் இடதுசாரிகளின் ஆதரவு லிபிய மக்களிற்கெதிராக கடாபியால் பயன்படுத்தப்படுகிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் விரோத சக்திகளான ஈரான் வடகொரியா போன்றவற்றையும் அம்பலப்படுத்த இடதுசாரிகள் முற்படவேண்டும்.அமெரிக்கா கை வைத்தபிறகு குரல் கொடுப்பதில் லாபமில்லை.
ஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் !
– நல்லையா தயாபரன்
ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?
ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .
ஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் . பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.
இன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.
ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.