இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலுவடையும் பட்சத்தில் அவற்றை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா மீது சாட்டி விட்டு தப்பித்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு ஏதுவாக யுத்த காலத்தில் சரத் பொன்சேக்கா கலந்து கொண்ட பாதுகாப்புப் படை தொடர்பான நிகழ்வுகள், இராணுவ உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், பாதுகாப்புக் கவுன்சில் கலந்துரையாடல்கள், இராணுவ முகாம்களுக்கான விஜயங்கள் என்பன தொடர்பான ஒளி, ஒலி நாடாக்கள் அனைத்தும் தற்போது அரசாங்கத்தின் தீவிர பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
பிரஸ்தாப நாடாக்களில் சரத் பொன்சேக்கா சட்டவிரோதமான செயல்கள் தொடர்பாக ஏதேனும் வார்த்தைகளை உதிர்த்திருக்கும் பட்சத்தில் அவற்றை மூன்றாந்தரப்பு வெளியிடுவது போலக் காட்டிக் கொண்டு அரசாங்கமே வெளியில் கசிய விடத் தீர்மானித்துள்ளது.
அதன் மூலம் சரத் பொன்சேக்காவும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரும் மட்டுமே போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக காட்டிக் கொண்டு தப்பித்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிய வருகின்றது.







