தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த உலகின் முதலாவது சர்வதேச திரைப்பட விழா புதுடில்லியில் புதன் கிழமையன்று தொடங்குகிறது.
சாதாரண மக்களுடன் தொடர்புடைய பிரச்சனை களை எடுத்துக்கூறும் முயற்சியாக இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.
5 நாட்கள் நடைபெறவுள்ள இத்திரைப்பட விழாவில் பல்கேரியா, ஜாம்பியா, பங்களாதேஷ், வட கொரியா, சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்திய தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
திரைப்படங்கள் தேர்வுக்குழுவில் ஹபிபுல்லா தவிர மகசாசே விருது பெற்ற அரவிந்த் கேஜ்ரிவால், மேதாபட்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்டோபர் 6 முதல் 12 வரை இதற்கான விழிப்புணர்வு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.