இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களும் செய்தியாளர்களும் மிரட்டப்படுகிறார்கள் என்றும், அவர்களை குற்றவாளிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.
அரசிற்கு எதிரான அதிருப்தியாளர்கள் என்ற பட்டியலில் 35 மனித உரிமை ஆர்வலர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கை மனித உரிமைகள் வழக்கறிஞர் ஜே.சி.வேலியமுனா, மனித உரிமைப் போராளி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளதெனவும், இவர்கள் இருவரும் ஏற்கனவே அரசின் நெருக்குதலிற்கு ஆளானவர்களே என்றும் கூறியுள்ளது.
இவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அஞ்சுவதாகவும், அவர்களக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை சிறிலங்க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு சிறிலங்க அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.