தமிழக இலங்கை போராட்ட சக்திகளிடையேயும் , மக்கள் மத்தியிலும் பிழவுகளை ஏற்படுத்தும் இலங்கை இந்திய அரசுகளினதும் சீர்குலைவு சக்திகளதும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போது தமிழக மீனவர் மீது ப்ரவலாக நடைபெற்றுவரும் தாக்குதல்கள் க்ருதப்படுகின்றன. இலங்கை இந்திய உளவு நிறுவனங்கள் இலங்கை, தமிழகம், புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் ஆகியவற்றில் இவ்வகையான சீர்குலைப்பு வேலைகளில் திட்டமிட்டு ஈடுபடுவதாக முன்நாள் இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவதானம் தேவை என்பது பரவலான கருத்து நிலவுகிறது.
பட்டுக்கோட்டை மாவட்டம் மல்லிப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மல்லிப்பட்டினத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
ஆறுபாகம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 20 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மீன்களை பறித்துக் கொண்டு படகுகளையும் சேதப்படுத்திவிட்டு இலங்கை கடற்படையினர் சென்றுள்ளனர்.
கரை திரும்பிய மீனவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை மீன்துறை அனுமதியுடன் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சிலர் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை துப்பாக்கியால் தாக்கினர். இதில் மீனவர் கெபாவுக்கு 2 கைகளும் முறிந்தன. மேலும் 10 மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் மீன்களையும் கொள்ளையடித்து விட்டு இலங்கை கடற்படையினர் சென்றனர்.
உடனடியாக கரை திரும்பி காயமடைந்த மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலை அதிகரித்து வருவதால் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.







