மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது மாணவியான தனுஷிகாவின் படுகொலையுடன் தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடத்தல் காரர்கள் கோரிய பணத்தைக் கொடுத்து குழந்தையை மீட்பதற்குப் பெற்றோர் தயாராகவிருந்தபோதும், கடத்தப்பட்ட தனுஷிகா சனிக்கிழமை 2ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியங்காடு சவச்சாலைக்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த பொலிஸார் 20 பேரை விசாரணைக்கு உட்படுத்தியதுடன், முக்கிய சந்தேக நபர்களைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்திவந்தனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த மூன்று முக்கிய சந்தேகநபர்கள், தனுஷிக்காவின் பாடசாலைப் பையைக் காண்பிக்கச் சென்றபோது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தனுஷிக்காவின் பாடசாலைப் பையைக் காண்பிப்பதற்காக முஸ்லிம் சவக்காலைக்கு அருகில் கூட்டிச்சென்ற இந்த மூன்று சந்தேகநபர்களும், அங்கு மறைத்துவைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு பொலிஸாரைத் தாக்க முற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து ரி-56 ரகத் துப்பாக்கி, 5 கைக்குண்டுகள், 4 மகசீன்கள், 4 பிள்ளைகளின் பைகள் போன்றவற்றை மீட்டிருப்பதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் எட்வேர்ட் ஜுலியன் (20), சோமசுந்தரம் ஜனூசன் (19) மகிந்தன் மயூரன் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்ட நீதிபதி பி.இராமகமலன் அவற்றைப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டப் பிராந்தியப் பொலிஸ்மா அதிபர் எட்வின் குணதிலகவின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
தனுஷிக்காவின் தந்தையாரான சதீஸ்குமார் ஒரு உடற்கல்வி ஆசிரியர் எனவும், இவர் கடந்த 2007ஆம் ஆண்டு இனந்தெரியாத ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலையில் வர்ஷா எனப்படும் 6 வயதுச் சிறுமி இதேபோன்று கடத்திச் செல்லப்பட்டுச் சடலமாக வீதியோரத்திலிருந்து மீட்கப்பட்டார். அந்தக் கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், இந்தக் குற்றச்சாட்டைக் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்திருந்தம இங்கு குறிப்பிடத்தக்கது.