‘இலங்கையில் வடக்கு கிழக்கில் இருந்து எப்போது படைவிலக்கல் நிகழும்? பாதுகாப்புச் செலவு போர்க்காலத்தையும் விட அதிகமாக்கப்பட்டிருக்கிறதே!’ என்று கேட்டார் ஒரு நண்பர். இந்தக் கேள்விகள் பல அர்த்தங்களுக்குரியவை. அதைப்போல இவறறுக்கான பதிலும் பல நிலைகளையுடையது.
சட்டென்றோ வெளிப்படையாகவோ பதில் சொல்லமுடியாத ஒரு நிலை இந்தக் கேள்விகளுக்குண்டு. காரணம், இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தமிழ் மக்களின் எதிர்காலமும் பாதுகாப்பும் சம்மந்தப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் இராணுவ விசயங்களைப் பற்றிக் கதைத்தால், அது தமிழ்மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையே இன்னும் உள்ளது. அச்சுறுத்தல் என்ற அளவிலான பாதிப்பல்ல இது. ஆனால், எந்த நிலையிலும் இராணுவம் பலமாகி, அது தமிழ்மக்களின் எதிர்காலத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நிலையே காணப்படுகிறது.
என்றாலும் ஒரு எல்லைவரை சென்று இதற்கான பதிலைச் சொல்லலாம். அப்படிச் சொல்ல வேண்டும். அது ஓரளவுக்குத் தமிழ்மக்களை விழிப்படைய வைக்கும்.
‘போர் முடிந்த பிறகு இராணுவத்துக்கு என்ன வேலை? பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு வடக்குக் கிழக்கில் இருந்து போகவேண்டியதுதானே’ என்றுதான் பலருக்கும் கேட்கத் தோன்றும்.
ஆனால், அப்படி ஒருபோதுமே நடக்கமுடியாது. இது நமது விருப்பங்களின்படி நடக்கும் காரியம் அல்ல. நிலைமைகளின் விளைவாக நடக்கும் செயல்.
போர் முடிந்து விட்டது. உண்மை. போருக்காக வளர்ந்து பெருகியிருக்கும் இந்த இராணுவம் (இதை தனியே இராணுவத்தரப்பு என்று விளங்கிக் கொள்வதை விட படைத்தரப்பு என்று புரிந்து கொள்வதே சரி) இப்பொழுது, மிகப் பலமாக இருக்கிறது. ஆள் எண்ணிக்கை, ஆயுதம், வெற்றிபெற்றதன் காரணமான தகுதி போன்ற காரணங்களால் அது மிகப்பலமாக இருக்கிறது.
அப்படிப் பலம் பெற்றிருக்கும் படைகளை இலகுவாக பணியவைக்கவும் முடியாது. இலகுவாகக் கையாளவும் முடியாது. பொதுவாகவே, போருக்குப்பின்னர் போரில் ஈடுபட்ட படைகளைக் கையாள்வதில் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களும் சரி, இயக்கங்களும் சரி மிகச் சிரமப்பட்டிருக்கின்றன.
போரின்போது, படைகளின் கவனம் முழுதும் போரிலேயே, எதிரியின்மீதே இருக்கும். ஆனால், போர் முடிந்து விட்டால், அதுவும் வெற்றியோடு முடிந்திருந்தால், அந்த வெற்றியில் தனக்கும் பங்குண்டு என்ற உணர்வு படைகளிடம் இருக்கும்.
இலங்கையில் இதற்கு இன்னுமொரு வலுவையும் பரிமாணத்தையும் கொடுத்ததைப்போல, போர் முடிந்த கையோடு, முன்னாள் இராணுவத்தளபதி (போர்க்கால இராணுவத்தளபதி அல்லது வெற்றிபெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா) அரசியலில் குதித்தார். அதுவும் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிக் கெதிராகக் குதித்தார். குதித்தவர் இன்னும் சவாலாகவே இருக்கிறார்.
போரின் வெற்றியை அடிப்படையாக வைத்துக் கொண்டே சரத் பொன்சேகா அரசியலில் இறங்கினார். அவர் தனது அரசியல் பிரவேசத்துக்கு முன்வைத்த ஒரே தகுதியும் அடிப்படையும் இந்தப் போரின் வெற்றிதான்.
ஜனநாயக அடிப்படையில், அவர் அரசியலில் பிரவேசிப்பதற்கு உரிமை உண்டென்றாலும், நடைமுறையில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்ஸவுக்கு அவர் பெரும் சவாலாகவே இருந்தார். அதாவது, போரின் வெற்றியைப் பங்கிடுவதற்கும் முடிந்தால், அதை முழுவதுமாக தனக்கு எடுத்துக் கொள்ளவும் சரத் முயன்றார்.
இதனால், படைகளின் ஆதரவுத் தளம், சரத்துக்குச் சார்பாகச் சென்று விடாது பார்த்துக் கொள்ளவேண்டிய நிலைமை மகிந்த ராஜபக்ஸவுக்கு ஏற்பட்டது. இப்போதும் அதுதான் நிலைமை.
ஒரு நண்பர் வேடிக்கையாகச் சொன்னதைப் போல, ஒப்பீட்டளவில், ரணிலையும் விட அதிக நெருக்கடியையும் அச்சுறுத்தலையும் மகிந்த ராஜபக்ஸவுக்குத் தருபவர் சரத் பொன்சேகாவே. அதனால்தான் சரத் இயங்கமுடியாத ஒரு நிலையில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்.
சரத் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முன்னர், படைகளின் கட்டமைப்பில் தமக்குச் சாதகமான மாற்றங்களைச் செய்துவிடலாம் என்று மகிந்த ராஜபக்ஸ கருதுகிறார். அந்த அடிப்படையில்தான், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சில உயர் அதிகாரிகளை அவர்களின் பணிக்கு அப்பால், பதவிகளுக்கு அப்பால், நிறுத்தினார்.
மட்டுமல்ல, படைகளின் மனங்கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். இதன்மூலம் தனக்கான எதிர் மையம் பலம் பெறாமற் தடுப்பதற்கு முயற்சிக்கிறார். இதை அவர் இரண்டு நிலைகளில் செயற்படுத்துகிறார்.
ஒன்று, முன்னே சொல்லப்பட்டிருப்பதைப்போல, படைகளின் மனதைத் தம்வசப்படுத்துவது. இதற்காக பாதுகாப்புச் செலவீனங்களுக்காக என்ற பெயரில் படைகளுக்கான பெருமளவு நிதியை ஒதுக்கி, அவற்றின் வசதிகளையும் நலனையும் பேணுவது. அதேவேளை படைத்தரப்பின் விருப்பங்களுக்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அத்துடன் படைகளைச் சீண்டும் வகையான தீர்மானங்களை எடுப்பதும் இல்லை.
இந்த அடிப்படையில்தான் இந்த ஆண்டு பாதுகாப்புக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது, சரத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை, சரத் தொடர்பாக வெளிப்படுத்தும் கடுந்தொனியான பேச்சுகளும் இறுக்கமான நடவடிக்கைகளும். இது சரத்தைப் போலச் செயற்பட முனைவோருக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல். அத்துடன் சரத்துக்கு ஆதரவான படை அதிகாரிகள் பதவிகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டதைப் போல தாமும் நிறுத்தப்படுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள்.
ஆகவே, இப்படி நிலைமைகள் இருக்கும் பின்னணியில்தான் வடக்குக் கிழக்கின் படை நிலைகொள்ளலையும் விலகலையும் நாம் விளங்கிக் கொள்ள வேணும்.
போர் முடிந்த கையோடு, வடக்குக் கிழக்கில் இயல்பு நிலையைக் கொண்டு வந்து விடலாம் என்று அதிகம் நம்பியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதற்காக அவர் கொஞ்சக் காலம் கடுமையாக முயற்சித்தார். தொடக்கத்தில் அவருடைய அந்த முயற்சிகளுக்கு பச்சை விளக்குக் காண்பிக்கப்பட்டது. விளைவாக, கொழும்புத்துறை, மறவன்புலவு போன்ற இடங்களிலிருந்து பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டு, அந்தப் பிரதேசங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த ருஸியோடு அடுத்த கட்டமாக, வடமராட்சி கிழக்கு, வலி வடக்குப் பிரதேசங்களின் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, அங்கே மக்களை மீளக் குடியமர்த்தும் முயற்சியில் டக்ளஸ் இறங்கினார். இதற்காக அவர் கூட்டங்களை நடத்தி, மக்களின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் நேரடிக்கவனத்துக்கும் கொண்டு போயிருந்தார்.
அப்போது ஜனாதிபதித் தேர்தல் காலம் என்பதால் படையினரையும் பகைத்துக் கொள்ளாமல், டக்ளஸையும் பகைத்துக் கொள்ளாமல், ‘பார்ப்போம்’ என்றமாதிரி இந்தப் பிரதேசங்களின் மீள்குடியேற்றம் அப்படியே இரண்டுங் கெட்டான் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி படையினரை விலக்கி, மக்களை மீளக்குடியமர்த்தி விடலாம் என்று டக்ளஸ் நம்பினார்.
ஆனால், இந்தப் பிரதேசங்களில் மக்கள் மீண்டும் குடியேறுவதை படைத்தரப்பு விரும்பவேயில்லை. ஆகையால், படைத்தரப்பைப் பகைத்துக்கொண்டு, மக்களை அங்கே குடியமர்த்த அரசாங்கம் தயாராகவில்லை. போகப்போகத்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இந்த நிலைமைகள் புரிந்தது.
இப்பொழுது வாக்குறுதியளிக்கப்பட்டபடி வடமராட்சி கிழக்கு, வலி வடக்கின் மீள் குடியேற்றங்கள் நடைபெறவேயில்லை. அதைப்பற்றி எந்தத் தீர்க்கமான முடிவுகளும் எவராலும் சொல்லப்படவுமில்லை.
ஏறக்குறைய இதே நிலைமைதான் வடக்கு கிழக்கில் எங்கும் நிலவுகிறது. அதிலும் வன்னியில் மிக முக்கியமான கட்டிடங்கள், அமைவிடங்களை எல்லாம் படைத்தரப்பு வைத்திருக்கிறது. இதில் விடுதலைப் புலிகளின் கட்டிடங்கள், அரசாங்கக் கட்டிடங்கள் எனச் சகலதும் அடக்கம்.
இந்த இடங்கள் பொது மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையானவை என்றாலும் அவை படையினரின் சம்மதத்தைப் பெற்றே மறுபடியும் மக்களிடம் கொடுக்கப்படுகின்றன. ஆனால், பல முக்கியமான அமைவிடங்களை படைத்தரப்பு விட்டுக் கொடுக்கத்தயாரில்லை. அது அரசாங்கக் கட்டிடமாக இருந்தலும் கூட.
கிளிநொச்சிப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவிடம் கிளிநொச்சியில் உள்ள பாற்சபைக்கட்டிடத்தை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கும் படி ஒரு அரசாங்க அதிகாரியும் வடமாகாண ஆளுநரும் சொன்னார்களாம். அப்போது அருகே வந்த கிளிநொச்சிப் படைத்தளபதி பஸிலுக்குச் சொன்னாராம், ‘அது புலிகளின் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம், அதில் ஜனாதிபதியின் பிராந்தியச் செயலகத்தை இயங்க வைக்க ஏற்பாடாகியிருக்கிறது’ என்று.
அதை ஆமோதித்துத் தலையசைத்தாராம் பஸில். ஆளுநரும் அரசாங்க அதிகாரியும் அதற்குப்பின்னர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை.
அதைப்போல முல்லைத்தீவிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கிளிநொச்சியில் ஏ9 வீதிக்கருகில் உள்ள நெற்சந்தைப்படுத்தும் சபைக்குரிய காணிகளில் விடுதலைப்புலிகள் சில பெரிய கட்டிடங்களைக் கட்டியிருந்தார்கள்.
இப்பொழுது அந்தக் கட்டிடங்களில் படையினர் முகாமிட்டிருக்கிறார்கள். அந்தக் கட்டிடங்களை அல்லது அந்தக் காணிகளை மீண்டும் தமது தேவைகளுக்காக பெற்றுத் தரும்படி பஸில் ராஜபக்ஸவிடம் விவசாய விரிவாக்க ஆணையாளர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதற்குப் பஸில் சொன்ன பதில் ‘அதெல்லாம் அவர்களிடமே இருக்கட்டும்’ என்று.
ஆகவே படைத்தரப்பின் தேவைகள், விருப்பங்களுக்கு எதிராக அரசாங்கம் சிந்திக்கத்தயாரில்லை. பதிலாக இன்னும் இன்னும் படைகளுக்கான வசதிகளைச் செய்து கொடுக்கவே அது விரும்புகின்றது. படையினரை கவர்ந்து வைத்திருக்கும் தந்திரோபயங்களைப் பற்றியே அது சிந்திக்கிறது. சரத்தை முழுதாகத் தனிமைப்படுத்தவே அது முயற்சிக்கிறது. மட்டுமல்ல, பலம் வாய்ந்திருக்கும் படைத்தரப்பின் பலத்தை மெல்ல மெல்லக் குறைக்கும் வரையிலும் படையினரின் மேல் கைவைக்க அது தயாரில்லை. இதற்குக் குறைந்தது பத்து ஆண்டுகளாவது செல்லலாம்.
ஆகவே, இந்த அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் வரையிலும் – சிந்திக்கும் வரையிலும் – வடக்கு கிழக்கில் இருந்து படைவிலக்கலுக்கு இடமேயில்லை. வேண்டுமானால், படைக்குறைப்பு நிகழலாம். அதுவும் நிலைமைகளைப் பொறுத்து. அதில் நாடுகடந்த தமிழீழ நடவடிக்கைகளின் தன்மையும் கலந்திருக்கிறது.
தம்பி அரவிந்தன்; இந்த கட்டுரைகளை உமது மானசீககுரு சங்கரி ஜயாவுக்கு வாசிக்ககொடுக்கவும்.
அப்போதாவது அவருக்கு கொஞ்சம் புத்திவருகிறதா என பார்க்கலாம்
proffessor ( not professor ?) அவர்களே
உங்களுக்குக் கட்டுரையாளர் யாரென்றும் அவர் ஆனந்த சங்கரியின் மானசீகச் சீடன் என்றும் தெரியுமா அல்லது அவர் வழமையான புலிப் பாட்டுப் பாடாமல் அரசாங்கதை விமர்சிப்பதை வைத்து ஊகிக்கிறீர்களா?
இம் மாதிரி விடயங்களின் உள்ளடக்கம் பற்றிக் கவனித்து விவாதித்தால் பயனிருக்கும்.
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் கட்டுரைகள் வீரகேசரியில் வருவனவற்றில் நிதானமானவை, நியாயமானவை. தனிப்பட்ட மட்டம் தட்டல் எதற்கு?
சங்கரியின் சீடன்தான் அரவிந்தன் என்பதற்கு ஊகம் எதுவும் தேவையில்லை
அந்த உண்மையை அவராலயே மறுத்துரைக்க முடியாது அரவிந்தனை
அறிந்தவர்களுக்கு அவர்களது உறவு நிலை பற்றி தெரியும்.புலிப்பாட்டு பாடுபவன் எல்லாம் புலியும் அல்ல புலிப்பாட்டு பாடாதவன் எல்லாம் புலி அல்லாதவனும் அல்ல (சங்கரியாரின் சீடனும் அல்ல). அடுத்து
டக்கிளசின் தேர்தல் நாடகமே படைவிலகல் அவர் மகிந்தவை நம்பினார் என்பது உண்மையே அதற்க்குதான் அமைச்சர் பதவி கொடுத்தாயிற்றே இதில் நம்பி கெட்டது சங்கரியாரே இன்று இந்திய இலங்கை கணவன்மார் கைவிட்ட நிலையில் தம்பிக்கு எழுதியது போல் இனி மகிந்தாவுக்கும் பல காகித கணைகள் தொடுப்பார் என நம்பலாம். படையினர் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்களை விட்டு அகல பத்து வருடங்களாவது ஆகும் என்பது மிக மிக குறைவு அதற்க்கு நீங்கள் பாட்டன் பூட்டன் ஆனாலும் முடியாது ஏன் எனில்
நீங்கள்தான் வந்தேறு குடிகள் என்கிறானே.இனி கேட்க நாதியில்லாது ஈழத்தமிழன் மெல்லச் சாவான்.
மொட்டையாக “சங்கரியின் சீடன்தான் அரவிந்தன் என்பதற்கு ஊகம் எதுவும் தேவையில்லை” என்று சொல்லி, அவர் மறுக்கமாட்டார் என்று சவால் விடுவதைத் தவிர்த்துத், தயவு செய்து ஆதாரங்களை முன்வையுங்கள்.
அவருடைய எழுத்து அதற்குச் சான்றாக உள்ளதா? எங்கே? எவ்வாறு?
விரும்பாத கருத்துக்களை புறமொதுக்க, “எங்களுக்குத் தெரியும் முஸ்லிம்கள் தகவல் கொடுப்பது”, (தேனி பாணியில்) “எங்களுக்குத் தெரியும் அவர் ஒரு இரகசியப் புலி ஆதரவாளார் என்று” என்கிற விதமாக முத்திரை குத்திக் கொண்டே போனால். உருப்படியாக எதைப் பற்றியுமே பேச இடமிராது — அது தான் உங்கள் நோக்கமென்றால் அச்தைப் பற்றி மேற்கொண்டு பேச வேண்டியதில்லை.
அரசுக்கு உதவ முன் வந்துள்ள முன்னை நாள் இயக்கப் போராளிகளின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும் யார்?
– வீ. ஆனந்தசங்கரி
அரசுக்கு உதவுவது என்றால் கூட தங்களை தவிர வேறு எவரும் வரக்கூடாது என்று சங்கரி நினைக்கிறார் போல் கிடக்கு. அரசுக்கு உதவுவதுக்கும் ஏகபோக தலைமை ஒன்று தேவைப்படுகிறது.
இந்நிலை மாற புலம்பெயர் தமிழர்களது நிலைப்பாட்டில் மாற்றம் வரவேண்டும். புலத்திலிருந்து தொடரும் தனிநாட்டு விடாப் பிடியும் , இந்தியாவிலிருந்து எழுதப்படும் கட்டுக் கதைகளும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியைக் கொடுப்பதற்கு பதிலாக , அவர்களை நிர்க்கதிக்கே தள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. தங்களது சுயநல்துக்காக அப்பாவிகளை எவரும் பகடைக் காய்களாக்க முயலகலாகாது. இது இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்களது அழிவுக்கே வழி செய்யும். பெரும்பாலும் இதுவரை நடந்ததும் அதுவே. படையினர் எப்போது வெளியேறுவர் எனக் கேள்வி எழுப்பும் போதே, இலங்கையில் இனி ஒரு போராட்டம் தொடராது எனும் நிலையை தமிழர்கள் உருவாக்க செயல் பட வேண்டும். நாம் மீண்டும் ஆயுதம் தூக்குவோம் என சொல்லிக் கொண்டு அடுத்தவனை அகிம்சைவாதியாகு என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
புல்ம்பெயர்ந்த தமிழன் தனக்குள்ளே சண்டையிட்டும் தன் இனத்தை காட்டிக் கொடுத்தும் வாழ்க்கை நடாத்துகிறாண்.தனனை நேசிக்காத காரணத்தால்,தன் மன உணர்வுகள சரியாக வெளீப்படுத தெரியாமல் புலம் பெயர்ந்த மண்ணீன் பண்பாடுகள மதிக்காமல் காவல் வானில் ஏற்றப்படுவதும், கைதிகளாகவும் இழிந்த நிலையில் நின்றூ தமிழ்க் குல அவமானமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.இவனா, மாற்றத்திற்காக தன்னை மாற்றப் போகிறவன்??/?
காட்டிக் கொடுக்கிற சம்பந்தனையும் கருணாநிதியையும் ஆதரித்து, அவர்களின் குற்றங்களை எல்லாம மழுப்பிவருகிற ஒருவரிடமிருந்து “இனத்தை காட்டிக் கொடுத்தும் வாழ்க்கை நடாத்துகிறது” பற்றி மடல் வருவது விசேடம் தான்.