கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள லிப்படன் சுற்றுவட்டத்றிகருகில் இன்று மாலை 3.15 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினால் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அங்கு ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமார் 30 நிமிடம்வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக ஹைப்பார்க் விளையாட்டரங்கை நேர்க்கி நகர்ந்தது. பொதுக்கூட்டம் நடத்துவதற்காக குறித்த விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரார்கள் கோஷமிட்டப்படி வந்தனர்.
இதன் போது மோசடியான ஜனாதிபதி முடிவுகளை ஏற்கமாட்டோம், பொய் குற்றம் சுமத்தி சட்டவிரோதமாக கைது செய்துள்ளவர்களை விடுதலை செய், ஊடக சுதந்திரத்தில் கை வைக்காதே, சதித்திட்டங்களைத் தீட்டி அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதை நிறுத்து, மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு இடியமீன் சிந்தனையா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இவர்கள் ஒருபுரம் வந்து சேர கொழும்பு கொம்பனிவீதியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ம் இடம்பெற்றதுடன், அவர்களும் கோஷமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள விளையாட்டரங்கை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ஆரம்பமானது.
இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிடப்பட்ட வாக்களிப்பு வீதங்களுக்கு மாறாகவே மறுநாள் கூறப்பட்டன.
முதல்நாள் 70 வீதமாக இருந்த வாக்களிப்புகள் மறுநாள் 80 வீதமாக மாறியது எவ்வாறு?
தேர்தல் தினத்தன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை சிறுசிறு செயல்களில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி அன்றைய தினம் இரவு பாரிய வேலைகளில் ஈடுபட்டு நாட்டு மக்களின் தீர்மானத்தை மாற்றியமைத்துள்ளார்.
இது நமக்குக் கிடைத்த வெற்றி. அது பறிக்கப்பட்டமைக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கிறோம். இதற்கு உரிய பாடத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாம் கற்பிப்போம்.”
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உரையாற்றுகையில்,
“நாம் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். வெவ்வேறு கொள்கைகளையுடையவர்கள். நாட்டில் அராஜகத்தை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்திருக்கின்றோம்” என்றார்.
ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.