Saturday, April 25, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஈழப் போராட்டத்தின் தொடர்ச்சியும் எதிர்கால வெற்றி வாய்ப்புகளும் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
03/12/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
43
Home பிரதான பதிவுகள் | Principle posts

1.நம்பிக்கையின்மையின்  ஊற்றுமூலம்

கடந்த ஐம்பது ஆண்டுகளின் எல்லா எதிர்ப்பியக்கங்களும் தோல்வியில் மட்டுமே முடிந்திருக்கின்றன. தரைபடை, கடற்படை என்பவற்றிலிருந்து விமானப்படை வரைக்கும் தன்னகத்தே கொண்டிருந்த உலகின் மிகப்பெரும் பணமுதலீட்டைக் கொண்டிருந்த புலிகளின் தோல்வி எதிர்ப்பியக்கங்களில் பலரை முற்றாக நம்பிக்கையிழக்கும் நிலைக்கு நகர்த்திச்சென்றது. இவ்வகையான கருத்தாக்கங்களின் எதிர்விளைவாக அரச அதிகாரங்களின் கூறுகளோடு சமரசத்திற்கு செல்லும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட அரசியல் வியாபாரிகள் சிலர் அதிகாரவர்க்கத்துடனான தமது தொடர்புகளை இறுக்கப்படுத்திக்கொண்டு அழிவரசியலை சமூகத்தின் பொதுப்புத்தியாக மாற்றத் தலைப்பட்டனர். இந்த அழிவுகளின் இடிபாடுகளிடையே மீண்டெழுந்த சமூகப்பற்றுள்ள ஒரு சிலர் ஆங்காங்கே சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் போராடிவருவது சில வேளைகளில் தொலைவில் தெரிகின்ற நம்பிக்கையாயிருந்தது.

உலகமயமான, ஒழுங்கமைக்கப்பட்ட அதிகார வர்க்கம் ஐரோப்பா, அமரிக்கா, ஐக்கிய நாடுகள், இந்தியா, சீன என்ற அனைத்து ஏகபோகங்களினதும் ஒருங்கிணைவால் பாதுகாக்கப்படுவதால் எதிர்பியக்கங்கள் இவர்கள் யாருடனாவது சமரசத்திற்கு வருவதனூடாகவே உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற அவ நம்பிக்கை உலகம் முழுவதும் விதைக்கப்பட்டது.

எம்மில் பலர்மத்தியில் உருவாகியிருந்த இந்த அவநம்பிக்கையை நேபாள மாவோயிஸ்டுக்களின் கட்சிப் பேச்சாளரான தினநாத் சர்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது வெளிப்படுத்தியிருந்தேன்.
“சீனாவின் பின்னணியோ, இந்தியாவின் பிரசன்னமோ, மேற்கின் அதிகாரமோ இன்றி வெறுமனே ஆயுதமேந்திய மக்கள் போராட்டங்களூடாக  10 வருடங்களுள் எம்மால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதுவும் இந்திய அரசு தனது நேரடியான குடியேற்ற நாடுபோலவே அனைத்துப் பலத்தையும் தமக்கு எதிராகப் பிரயோகித்த நிலையில் இதனை சாதிக்க முடிந்தது.” என்றார்.

எனக்குச் சற்று வியப்பாகவிருந்தது.

“மக்கள் மீது தீவிர ஒடுக்குமுறையைப் பிரயோக்கும் அரசை வெற்றிகொள்வது என்பது விண்ணைத் தொடும் அசாத்தியச் செயற்பாடல்ல. மக்கள் அனைவரும் அரச அதிகாரத்தின் மீது வெறுப்ப்டைந்திருக்கும் நிலையில் மக்களின் ஒரு பகுதியினரான அரச ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றமடைவார்கள். இராணுவம், காவற்படை, கடற்படை, வான் படை என்ற அனைத்துப் பிரிவினரும் அதிலும் குறிப்பாக அவற்றின் கீழணிகள் புரட்சிக்காரர்களோடு இணைந்து கொள்வர். ”
“புரட்சியின் ஒரு குறித்த நிலையில் அரச ஒடுக்குமுறை தவிர்கவியலாது அதிகரிக்கும் நிலையில் அரச படைகளின் சிதைவை அவற்றின் எஜமானர்களால் தடுக்கமுடியாத நிலை உருவாகும். இவ்வேளையில் வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்” என்று அவர் தொடர்ந்தார்.

மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான தத்துவார்த்த அடிப்படை குறித்து மேலும் உரையாடல் தொடர்ந்தது.

2.அரேபிய முன்னுதாரணம்

துனிசியாவில் அரச அதிகாரத்தை நிர்மூலமாக்கிய மக்கள் போராட்டத்தின் ஒவ்வொரு முன் நகவிலும், எகிப்த்தியப் போராட்டங்களின் இறுதியிலும் இராணுவத்தின் பெரும்பகுதி மக்கள் ஆர்பாட்டங்களோடு இணைந்துகொண்டதை கண்டிருக்கிறோம். கடாபி அரசின் ஆணைக்குக் கீழ்ப்பட்டு மக்களை சாரி சாரியாகக் கொன்றொழித்த் லிபிய இராணுவத்தின் பெரும்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களோடு இணைந்து கொண்டபின்னர் கடாபி அரசின் அதிகாரம் குறுகிய நாட்களுள் ஆட்டம்காண ஆரம்பித்தது.

அரபியப் போராட்டங்களின் வெற்றியில் மக்கள் நலன் சார்ந்த அரசு நிறுவப்படுவதற்கான தலைமை அங்கு உருவாகியிருக்கவில்லை என்பதெல்லாம் ஒரு புறமிருக்க மக்கள் போராட்டங்களே அரச அதிகாரத்தைக் கையகப்படுத்துவதற்கான ஒரே வழிமுறை என்பதை இன்னொரு முறை இந்தப் போராட்டங்கள் நிரூபணம் செய்கின்றன.

உறுதியான தத்துவார்த்த வழிமுறையை நோக்கி நிறுவனமயப்படுத்தப்படாத அரபிய நாடுகளின் போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டத்தின் வழியாக ஒழுங்கமைக்கப்படவில்லை. சமூகத்தை ஒழுங்கமைக்கும் கட்சியும் அதனை நெறிப்படுத்தும் மக்கள் திரள் அமைப்புக்களும் அங்கிருந்திருக்கவில்லை. எது எவ்வறெனினும் எலவே, இஸ்லாமிய நிறுவனங்களூடாக இணைவுற்றிருந்த மக்களை அதிகாரத்திற்கெதிரான சுயாதீனப் போராட்டங்களை நோக்கி இணைப்பது வசதியான ஒன்றாக அமைந்திருந்தது.

3.வெற்றிக்கான அடிப்படைகள்

தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் ஒடுக்கும் தேசிய இனத்தின் அதிகார வர்க்க நலன்களின் கீழ் இனவெறியூட்டப்பட்ட பெருந்தேசிய இனத்தின் அரச ஊழியர்களும் இராணுவமும் புரட்சியாளர்களோடு இணைந்து கொள்வது சாத்தியமற்றது என்பது மற்றொரு எதிர்வாதம்.

பெருந்தேசிய வெறியூட்டப்பட்ட இராணுவம் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிப்பதை தனது சமூகக்கடமையாகக் கருதும் வகையில் அதிகாரவர்க்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சூழல் எதிர்கொளப்பட வேண்டியதே இங்கு பிரதானமானது.

புரட்சிக்கான உறுதியான உழைக்கும் மக்களின் தலைமை வழங்கப்படுகின்ற வேளையில் பெருந்தேசிய வெறி வெற்றிகொள்ளப்படலாம்.

1905ம் ஆண்டில் சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்துசென்று தனி நாட்டை உருவாக்கிய நிகழ்வு இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.
சுவீடனின் அதிகாரத்தின் கீழிருந்த நோர்வே தனியாகப் பிரிந்து சென்ற வேளையில் ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இன அதிகாரத்திலிருந்து பிரிந்து செல்வதை நோர்வே மக்களின் உரிமை என வாதிட்ட லெனின் சுவீடிஷ் மக்கள் போராட்டங்கள் குறித்தும் கோட்டிட்டுக்காட்டுகிறார்.

பிரிவின் போது நோர்வே மீதான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு சுவீடிஷ் இரணுவம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. இந்த இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து சுவீடனில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள் அரசை நிலை குலையச் செய்தது. இறுதியில் தனது ஆக்கிரமிப்புத் திட்டத்தைக் சுவீடன் கைவிட்டது.அழிவுகள் தவிர்க்கபட்டன.

ஈழ மக்களின் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே எமது நண்பர்களை அமரிக்க அதிகார வர்க்கத்தின் அலுவலக அழிவுச் சுவடுகளிலும், ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் மத்தியிலும், இந்திய அரசியல் வியாபாரிகளின் வியாபார நிறுவனங்களிலும் தேடியலைந்திருக்கிறோம்.

ஒடுக்கபடுகின்ற தேசிய இனமான தமிழ்ப்பேசும் தேசிய இனங்களின் நண்பர்கள் எமது கொல்லைப் புறத்தில் வாழ்ந்ததை மறந்துவிட்டிருந்தோம். ஒடுக்கப்படும் சிங்கள் மக்களின் பெரும் பகுதியினரை நாம் கண்டுகொண்டதில்லை. இத்தனை அழிவுகளின் பின்னரும், ஒற்றை வேளை உணவிற்கு வழியின்றி வாழ்க்கையைத் தொலைக்கும் சிங்கள மக்கள் தமது நலன்களுக்காவும் குரலெழுப்பும், தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்காகப் போராடும் யாரையும் நிராகரித்திருக்க எந்த வாய்ப்புமில்ல்லை.

சிங்கள மக்களை மட்டுமன்றி, ஏனைய ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் இனங்களைக் கூட எமது எதிரிகளாக்குவதில் மட்டுமே  கடந்தகாலத்தில் ஈழப் போராட்ட இயக்கங்கள் வெற்றிகண்டுள்ளன.

பிரபாகரன் வாழ்கிறாரா இல்லையா என்று விவாதிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்களை அண்மித்திருக்கிறோம். வெற்றிகொள்வதற்கான வழிமுறைகள் குறித்துச் சிந்ததில்லை…

மக்கள் போராட்டங்களுக்கு அடிப்படையான இணைப்புச் சக்திகளான மக்கள் அமைப்புக்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது, எங்கிருந்து அவற்றையெல்லாம் ஆரம்பிப்பது, அழிவிலிருந்து மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள வழிமுறைகள் என்ன.. இவை குறித்த அடிப்படைகளைக் கூடச் சிந்தித்ததில்லை..

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தொடரும் அரேபிய எழுச்சி : யேமனில் ஆர்ப்பாட்டங்கள்

Comments 43

  1. S.G.Raghavan says:
    15 years ago

    சரியான புரிதல் நாவலன், குறைந்த பட்சம் எம்மிடையே அனைத்துப் பலகலைகழக மாணவர் தலைவர் உதுல் பிறேமரத்னே கொண்டிருக்கக் கூடிய செயலூக்கம் கூட இல்லையே!

  2. Rajarajan says:
    15 years ago

    Very true. But most of us talking this for more than 40 years. We spent more time barking at tigers and VP. During that period, no body – NO BODY – cares about the positive paths, even though the paths were open. I still remember PLOT were running a Radio which was so popular among Sinhala villegers. I am pretty confident that if we had such a radio during the final war in 2009, we could have make a internal war against the army or within sinhalese. More then 90% of the sinhala villegers never understod what happened during the last days. #### I still think if we describe them those days and the history with what the same issues they are struglling for – We will have great chances for a greater and positive approach for the next generation atleast. ### Why can’t the media people open a Radio station from TN to broadcast. It is cheap and not impossible. Sinhala exile journalist and Tamil media people can simply do this. Why don’t you people look at this way. I can provide the help anybody wanted.

  3. S.G.Raghavan says:
    15 years ago

    உண்மை ராஜராஜன் ஆம் பிளாட் இன் வானொலி பெரும்பாலான கிராமிய சிங்களவர்களால் செவிமடுக்கப் பட்டது சிங்கள பொலிஸார் அவ்வானொலியை கடமை நேரங்களில் கேட்பதுண்டு. சிங்கள உழைக்கும் வர்க்கத்தின் இயலாமை அறியாமை என்பவற்றை பாவித்தே படைகளுக்கு பெருமளவு இளையர்கள் சேர்க்கப் பட்டனர். சிங்கள வானொலியை புலிகளும் பின்னாளில் செய்திருப்பினும் கிராமிய சிங்கள மக்கள் மத்தியில் பிளாட் அமைப்பின் வானொலி போன்று வெற்றி பெறவில்லை ஏனெனில் புலிகளுக்கு மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து அறிவியலில் அக்கறை இன்மை அல்லது அறிவின்மை காரணமாக இருந்திருக்கலாம் (உதாரணம் புலிகளை தாக்கவல்ல). சிங்கள வானொலி மூலம் தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும் சிங்கள மக்களின் பிரச்சினைக்கு நாமும் குரல் கொடுப்பதன் மூலம் இதனையும் ஒரு வழி முறையாக பாவித்து அடக்கு முறைகளை கூட்டாக தகர்க்க முடியும்.

    ஜெனரல் நீல் டயஸ் இக்கு எதிராக தாக்குதல் நடாத்தியதாக குற்றஞ் சாட்டி பிடிக்கப் பட்ட ஒரு தமிழ் இளையர் குறித்து அவரின் சிங்கள நண்பர்கள் கூறிய வார்த்தை அவனில் நியாயம் இருக்கக் கூடும், அவன் கடுமையாக அரசாங்கத்தால் பாதிக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது. எனவே புரிதல் எங்கு இருந்து வந்தாலும் வரவேற்கப் பட வேண்டும் என்பதே எனது அவா.

  4. chandran.raja says:
    15 years ago

    1905-2011 காலங்களுக்கு இடைவெளி106 ஆறு வருடங்கள் ஆயிற்று. இது சதாரண மனிதவாழ்வில் ஒரு படி கூடவே. இந்த காலஇடைவெளியை பார்த்தால் மிகப்பிரத்தி பெற்ற சுயநிர்ணஉரிமை என்பது காலவதி ஆகிப்போனவையே. அது லெனின் அல்லது போல்சேவேஷ்கட்சிகளின் அறுத்துறுத்து உலகத் தொழிலாளவர்கத்திக்கு வழங்கப் பட்ட வேலைத் திட்டமாக இருந்தாலும் கூடா. இந்த ருஸ்சிய வழிகாட்டிகள் என்றும் தமது நாட்டை பற்றி கவலைப் பட்டது கிடையாது. கால்மாக்ஸ்-ஏங்கல்சின் கம்யூனிஸ்கட்சியின் ஆய்வில் மனம்பதித்து வைத்திருந்தார்கள். தொழிலாளர்வர்கத்திற்கு தாய்நாடோ தந்தைநாடோ கிடையாது என்று உறுதியாக நம்பினார்கள். சர்வதேசரீதியாக தொழிலாளர் அணிவகுப்பது மூலமே இந்த பூவுலகின் முதலாளித்துவத்தை தோற்கடிக்க முடியும் என்னும் கோட்பாட்டை கொண்டிருந்தார்கள்.

    லெனின் வாழ்ந்த காலங்களில் போல்வேஷிக்குள் உருபெற்ற காலங்கள் இரண்டாம் உலகமாக யுத்தத்தை சேர்ந்த காலங்கள். இதில் தோன்றிய வீரர்களுக்கு-அதைவழிடத்தி சென்ற தலைவன்-தலைவர்களுக்கோ தாம் ருஷ்சியர்கள் என்கிற பெருமிதம் கிஞ்சித்தும் கிடையாது. அவர்களுக்கு தேவையானது இந்த உலகில் இருந்து முதாலித்துவத்தை அதன் தலைமை அதிகாரியாக பணிபுரிகிற ஏகாதிபத்தியத்தை துடைத்து கட்டுவதே. இதில் தோன்றிய யுத்ததந்திர உபாயமே இனங்களுக்காண சுயநிர்ணயஉரிமை என்பது. இன்றும் மனிதத்தன்மையை மீறிநடக்கிற மனிதக்கொடுமைகளாக கண்ணால் கண்டு கொள்கிற சாதியொடுக்குமுறையையோ அல்லது இளம்காலையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிற சுவையான பானமான தேயிலைசெடி வளர்ப்பவர்களை அதற்கு உரமாகிப் போன தமிழர்களை எந்த தமிழன் தமிழனாக ஏற்றுக்கொண்டான்?. தன்யினத்தையோ சொந்தமென்று சொல்லமுடியாத ஒரு இனத்திற்கு சுயநிர்யண உரிமையும் ஒரு கேடா? இதெல்லாம் வர்க்க முரண்பாட்டில் வந்த வர்ணகலவையுடன் வந்த வானவில் அல்லவா? இந்தவர்ணக் கலவைகளை உலகம் பூரா தெளித்துவிடுகிற கொடுமை அமெரிக்கா ஐரோப்பா சீனா இந்தியா வாக கைமாறி வருகிறது. எமக்கு தேவையானது அமெரிக்கா ஐரோப்பா சீனா இந்தியா தொழிலாளிவர்க்கத்தின் உறவுகளே! அரேபியதொழிலாளிவர்கத்தின் கிளர்ச்சிகள் நாளை நான் குறிப்பிட்ட நாடுகளையும் பீடிக்க இருக்கிறது. இது இலங்கை இந்தியாவையும் தாக்கமுடியாது என்று ஒரு முட்டாளே! ஆருடம் கூறுவான். மாக்ஸிச்டுகளோ இடதுசாரிகளோ அல்ல. தெளிவான வேலைத்திட்டத்தற்கு அறைகூவல்களுக்கு தொழிலாளிவர்க்கத்திற்கு அழைப்பு விட தயராகிறது சர்வதேச சம்பந்தகுழுவால் தலைமைதாங்க படுகிற நான்காம் அகிலம் ஒன்று மட்டுமே!. அதில் இணைந்திருங்கள். புரிவதற்கு முயற்ச்சி செய்யுங்கள். அதில் நீங்கள் பணியாற்றில் யுத்தமில்லாத உலகத்தை சந்திப்போம்.நாளை உலகம் உங்கள் கைகளில் தமிழ்தொழிலாளர்களே!.!

    • Rajarajan says:
      15 years ago

      As you have mentioned 106 years have gone. during this period world has changed so much. world order has changed so much. Still Capitalism has its own face. But the way it should be defeted MUST changed. If Marks and Engls alive today, their approach would have much different. Because they have tried to find a common ‘theoritical’ solution. Which were tried (not the correct way – anybody can argue) – unsuccessfully. The truth is that there is nobody in this world as of now, does not have the capability to come up with the ‘theories’ that works. Or if there are existing that is not comes to the front line. People who talk about Marxism / communism / Maoism should understand one major factor. Marx, Lenin or Mao are only worked with people. They never asked people to wait something to happen. They agreed it should be a continuous change….. Their idology worked for the world they have lived and understood. As of now they are pure theories. Unless if somebody get it right for the current world order. …. The ME protests are one end of the capitalism failure. even right now west is supporting because they have worked out thte way how they can earn maximum out of it. That is the truth. In Egypt – the militery rule will be backed by west and the comming elections (if any) will bring a west suported Gov. No doubt about that.

      Again Protests in Libiya are a real people’s upraise and it is taken seripus by west too. Because west got enough oil reserve during the short period and they wanted to oil prices to go up. It will help them earn $B’s (if no$Ts).

      I will not agree that western world will have such protests in the near future (may be after 100 years).

      Capitalism is clever enough to control their people by huge media influence …as it is doing right now. As we all know atleast Micheal Moore and Ron Paul could not raise their voice for a small change.

      • ஐசாக் says:
        15 years ago

        the last pension protest held in France unified 2milion people.

        • Rajarajan says:
          15 years ago

          Even in 2009 Tamils protest in London yield more then 100,000. I am talking about the ultimate result. In any developed western country, it is impossible to have a protest to eliminate a government from power. The ultra capitalist setup uses at-most, it’s engine and care the most to save the ‘government(s)’. That is one of the reasons, why GoSL is existing and LTTE canot.

  5. அரிச்சந்திரன் says:
    15 years ago

    பெருந்தேசிய வெறியூட்டப்பட்ட இராணுவம் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிப்பதை தனது சமூகக்கடமையாகக் கருதும் வகையில் அதிகாரவர்க்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் ஒடுக்கும் தேசிய இனத்தின் அதிகார வர்க்க நலன்களின் கீழ் இனவெறியூட்டப்பட்ட பெருந்தேசிய இனத்தின் அரச ஊழியர்களும் இராணுவமும் புரட்சியாளர்களோடு இணைந்து கொள்வது என்பது சாத்தியமற்றது
    என்ற தங்களின் கூற்றுக்கள் என்றும் நிதர்சனமானதாகவே இருக்கும். அதே நேரம், புரட்சிக்கான உறுதியான உழைக்கும் மக்களின் தலைமை வழங்கப்படுகின்ற வேளையில் பெருந்தேசிய வெறி வெற்றிகொள்ளப்படலாம் எனும் தங்களின் கருத்தை தமிழீழ விடுதலைப்போராட்ட தளத்தில் நின்று நோக்கினால் பலன் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

    இலங்கையைப்பொறுத்தவரையில் தேசிய இனப்பிரச்சனை தான் பிரதானமான முரண்பாடு. அதன் பிரகாரம், தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பல கட்டங்களை கடந்து பிரிவினையையே கோரி நிற்கின்றது. அதாவது, தமிழீழமே இலக்கு அதுவே தமிழர்களுக்கு பாதுகாப்பு என்ற அடிப்படை கொண்டது.

    அதாவது, தமிழர்களின் போராட்டம் பொருளாதார, வாழ்வாதார ஏற்ற இறக்கங்கள் பற்றியதையோ அல்லது சமூக, சமய ஏற்றத் தாழ்வுகள் பற்றியதையோ மட்டும் சார்ந்ததல்ல. மொழி, பண்பாடு, வாழ்நிலம், வாழ்வு போன்றவைகளின் நிலையான இருப்பும் நிலைப்பும் சார்ந்ததும் கூட. மொத்தத்தில் இரு இனங்களுக்கிடையிலான போராட்ட வடிவம். மாறாக, ஒற்றுமை கொண்ட வர்க்கநலப் போராட்டமல்ல இணைந்தும் கலந்தும் போராடி சாத்தியமாக்குவதற்கு, இனி வரும் காலங்களில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கலாம் தவறில்லை ஏலவே, 70பதுகளில் JVP யினரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள்தான் ஏனினும், தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை அதனுடன் கலப்பதும் கருத்துக்கள் தொடுப்பதும் பொருத்தமானதல்ல.

    மேலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு முரணான அதிகாரவர்க்க அரசினை அகற்றி, தொழிலாளர் நலன் சார்ந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட தலைமையின் ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான போராட்டத்தினுடைய அல்லது அதிகாரவர்க்கத்திடமிருந்து தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொள்ளுவதற்கான ஒரு போராட்டத்தினுடைய கள நிலைமைகளையும் புற அமைவுகளையும் ஒரு தேசிய இனத்தின் பிரிந்து செல்வதற்கான விடுதலைப் போராட்டத்தின் கள நிலமையுடனும் புற அமைவுகளுடனும் ஒப்பு நோக்குவதும் சமனாகப்பார்ப்பதும் சரியானதன்று.

    நேபாள மாவோயிஸ்டுக்களின் போராட்டமும் தற்போது நடைபெற்று வருகின்ற துனிசிய எகிப்த்திய லிபிய மக்களின் போராட்டங்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இருவகைப்போராட்டங்களிலும் மக்கள் என்பது முதன்மையான சக்தியாக இருப்பினும் பிரிந்து செல்லல் எனும் முதன்மை உரிமைக் கூறுனைக் கொண்ட தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பயணத்திற்கான பரிமாணங்கள் அவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. எனவே, அதன் பிரகாரமே அதன் அசைவியக்கத்தை நகர்த்துதலும் வேண்டும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பொறுத்தவரை அது அவ்வாறு தான் கொண்டு செல்லப்பட்டது அல்லது இல்லை என்பது இவ்விடத்தில் தேவையில்லை. என் எண்ணம் மேற்சொன்ன இரு வகைப்போராட்டங்களின் செல் நெறியினை ஒரே கண் கொண்டு பார்ப்பதும் அதனை ஏற்பதும் தவறு என்பது மட்டுமே. நேபாள மாவோயிஸ்டுக்களின் வெற்றியும் தென் சூடானின் சமீபத்திய வெற்றியும் ஒரே பாதையில் கனிந்த கனிகளல்ல.

  6. S.G.Raghavan says:
    15 years ago

    அரிச்சந்திரன் ஒடுக்கப் படும் இனத்துடன், மக்களுடன், வர்க்கத்துடன் சேர்ந்து போராடுவோம் என்பது தான் செய்தி இங்கு தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை யாரும் மறுதலிக்கவில்லை. அடக்ககப் படும் மக்களுடன் சேர்ந்து பொது எதிரியுடன் போராடுவதன் மூலம் யாருடனும் கலப்பு பிறப்பாகிவிடும் என ஐயப் படுவது அர்த்தமற்றது.

  7. அரிச்சந்திரன் says:
    15 years ago

    ராகவன், நிறுவன ரீதியாக நிறுவப்படும் போராட்டங்களே நிரந்தரமான வெற்றியினையும் நன்மையினையும் பெற்றுத்தரும் அந்த வகையில், பிரிந்து செல்வதற்கான தமிழர்களின் போராட்டத்திற்கு நிறுவனமயப்பட்ட அல்லது தனிப்பட்ட வகையில் மாற்று இனத்தின் மக்களின் வர்க்கத்தினரிடமிருந்து எல்லாக்காலத்திலும் எல்லா வகையிலும் உறுதியான உண்மையான ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்குமென்பது கானல் நீர் என்பதே என்னுடைய வாதம். இது தவறு என்றால் அது எவ்வாறு? அடக்ககப் படும் மக்களுடன் சேர்ந்து பொது எதிரியுடன் போராடுவது என்றால் என்ன? அதன் தன்மை எதுவாக இருக்கப்போகின்றது? இப்போராட்டம் தமிழர்களின் பிரிந்து செல்வதற்கான போராட்டத்திற்கு எவ்வகையில் பங்களிப்புச்செய்கின்றது?

  8. a voter says:
    15 years ago

    பெருந்தேசிய வெறி எவ்வாறு வளர்க்கப்படுகிறது?
    எமது நாட்டைப் பிரித்துவிடுவார்கள் இந்தியாவுடன் சேர்ந்து எம்மை அழித்துவிடுவார்கள் இவர்கள் எமக்கு எதிரானவர்கள் என்பது போன்ற வாதங்களால் அல்லவா?
    நாம் சிங்களமக்களுடன் இணைந்து பொதுப் பிரச்சினைகளிற்காகக் குரல்கொடுக்கையில் இவ்வாதங்கள் அடிபட்டுப் போகும். தன்னாட்சி உரிமையை சிங்கள மக்களும் அங்கீகரிக்கும் காலம் ஏற்படும்.

    • நாவலன் says:
      15 years ago

      பெருந்தேசிய வாதம் உருவானதற்கும், அதன் நீடிப்பிற்கும் இது மிக இலகுவான விளக்கம். இதற்குப் பல பரிணாமங்கள் உண்டு. பௌத்த சிங்கள மேலாதிக்கவாதக் கோட்படும் அது சிங்கள மக்கள் மத்தியில் செலுத்தும் செல்வாக்கும் மிக முக்கியமானது. தவிர, சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மக்கள் போராட்டமாக மேலெழுமானால் இந்தக் கோட்பாட்டை எதிர்கொள்ளவும் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை இணைத்துக் கொள்ளவும் வழிகளைத் திறந்துவிடும். அவ்வாறன்றி, தேசியவிடுதலைப் போராட்டத்தைக் குறுந்தேசியவாதிகள் தமது தலைமைக்கு உட்படுத்திச் சீரழித்துவிடுவார்கள்.

      • chandran.raja says:
        15 years ago

        தேசிய விடுதலைபோராட்டத்தை குறுந்தேசியவாதிகள் தமது தலைமைக்கு உட்படுத்தி சீரழித்து விடுவார்கள். இது நாவலன் கருத்து. இது முழுமையான உண்மையே. இதற்கு உதாரணங்களை தேடிப்போனால் மிகசிறந்த உதாரணமாக நீண்டகாலம் தமிழ்மக்களின் உரிமைகளை தடுத்து நிறுத்தியவர்கள் புலிகளே என்பதை கண்டுகொள்வார்கள். இனத்தின்பெயரில் ஒருஇனத்தின் ஜனநாயகஉரிமைகளை தடுத்து நிறுத்தியவர்கள். அரசியல்வாதிகள் பேராசியர்கள் கல்லூரி தலைமை அதிபர்களை தமிழ்மக்களின் “உரிமைபறிபோகிறது” என்று கொலைகளை அங்கீகரித்த இந்த அநாமதேயப் பேர்வழிகளே!. கடந்த காலத்தில் தமிழ்மக்களின் உரிமைக்காக தமிழ்தலைவர்கள் போராடினார்கள் என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. சிங்கள்பேரினவாதம் பெளவுத்தஅரசு என்பதையும் அங்கீகரிக்க முடியாது. வன்னியில் நடந்தபடுகொலைகளுக்கு சிங்களஅரசு எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது. முழுப்பொறுப்பையும் தமிழ்மக்களும் தமிழ்மக்கள் அங்கீகரித்த தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும். தான் ஒரு சுள்ளாடியாக கதைக்க முயல்கிற நாவலன்; விரும்பிய நேரத்தில் விரும்பிய தலைமையை தாம்பெற்றுக் கொள்கிற அதிகாரத்தை பெறக்கூடிய வல்லமையை பெற்றிருந்தார்களா? தமிழ்மக்கள். சொல்லுங்கள் நாவலன் அவர்களே!. எம்மில் நாற்றத்தை அசிங்கங்களை சுமந்துகொண்டு சிங்கள அரசை குறைகூற முற்படாதீர்கள். இலங்கை தமிழ்சமூகத்தை விட சிங்களசமூகம் வரலாற்றிரீதியாக முற்போக்கான பாத்திரத்தையே வகித்துவருகிறது.குறுகிச் சொல்வதாக இருந்தால் தமிழ்மக்களின் உரிமைகளையும் சாத்தியமாக்கிய வல்மையையும் சிங்களசமூகமே பெற்றிருக்கிறது.தமிழ்சமூகங்கள் அல்ல. இதையெல்லாம் கதைக்கும்போது நான் மகிந்தாவின் ஆதரவாளர்கவே உங்களை கணிக்கசெய்யும்.அது ஒரு பக்கஉண்மையே. மகிந்தாவுக்கான-சிங்களஅரசுகளுக்கான போராட்டம் முதாலித்துவத்கெதிராக திசைமாறும் போதும்-வரை இந்த உண்மையே நிலைத்து நிற்கும். நீங்கள் அறிவுரீதியாக அடக்கியொடுக்கப் படுகிற-அடக்கப்படுகிற கூடாரத்தில் இருக்கிறீர்களா என்பதை திரைச்சீலையை விலத்திக் கண்டுகொள்ளுங்கள்.

        • THAMILMARAN says:
          15 years ago

          சந்திரன் ராசா இலங்கை கிரிக்கெட் வீரர்கள் போராடி நாளக்கு அவுஸ்ரேலியாவை ஜெயிப்பார்களா? அவுஸ்ரேலியா கிரிக்கெட்டை அடக்கி ஆள்கிறது நாம் வென்றால்தான் விடுதலை.நீங்களூம் வந்து கரகோசம் செய்யுங்கள்.

  9. நாவலன் says:
    15 years ago

    அரிச்சந்திரன்,
    உங்கள் எழுத்தாற்றலும் ஆர்வமும் பாராட்டுக்குரியது. இலங்கையில் மட்டுமல்ல பால்கன் நாடுகளில் ஆரம்பித்து, தேசிய இனப்பிரச்சனையின் ஊற்றுமூலம் எப்போதும் ஒரு பொதுவான பண்பைக் கொண்டிருக்கும். இலங்கையில் ஆளும் வர்க்கம் இனங்களைக் கூறுபடுத்தி தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்கிது. பிரித்தானியர்கள் திட்டமிட்டே இலங்கையில் தேசிய இன ஒடுக்கு முறையை ஆரம்பித்து வைத்தார்கள். இவ்வாறான ஒடுக்கு முறையை உருவாக்குவதன் வழியாக இலங்கை சிங்கள் பௌத்தர்களுக்கு உரிய நாடு என்ற பொதுப் புத்தியை சிங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கினர். இதற்காக அனகாரிக தர்மபால போன்றோரை இவர்கள் பன்படுத்திக்கொண்டனர். மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புச் செய்ததும்பிரித்தானிய அரசு தான்.
    சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் வேளையில் தான் சிங்கள் மக்களும் தம் மீதான் ஒடுக்கு முறையை உணர்ந்து அரசிற்கு எதிராகப் போராடுவர். ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனங்கள் சிங்கள் மக்களுக்குத் தம்மீதான ஒடுக்கு முறையை உணர்த்துவதும், அவர்கள் மீதான அரசின் சுரண்டலை உணரச் செய்வதும், தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உந்து சக்தியாகவே அமையும். சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்த போது இவ்வாறான சூழலை நாம் கண்டிருக்கிறோம். ஈழத்தில் நடந்தது போல பாசிச அரசு நாட்டின் ஒருபகுதி மக்களை அழிப்பது நடைபெறக் கூடியதே, அதுவும் நாட்டின் ஒருபகுதி மக்களின் ஆதரவுடன். முழு நாட்டு மக்களையும் அவர்கள் அழிக்க முடியாது. ஆக, சிங்கள் மக்களின் அதிலும் ஒடுக்கப்படுகின்ற சிங்கள் மக்களின் ஆதரவை தமிழ் தேசிய விடுதலைக்கான இயக்கமோ அதனை வழி நடத்துகின்ற கட்சியோ பெற்றுக்கொள்ளுமாயின் வெற்றிபெறுதல் உறுதி. இல்லையேல் அழிக்கப்படுதல் தவிர்க்கமுடியாதது.
    இவையெல்லாம் ஒடுக்கபடுகின்ற தேசிய இனத்தின் மத்தியில் அதிகாரம் செலுத்துகின்ற வியாபாரிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் மையமாகக் கொண்டு போராட்டங்கள் உருவமைக்கப்படுவதால் சாத்தியமாகது.

  10. அரிச்சந்திரன் says:
    15 years ago

    நாவலன், தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி.
    தேசிய இனப்பிரச்சனையின் ஊற்றுமூலம் எப்போதும் ஒரு பொதுவான பண்பைக் கொண்டிருக்கும் என்னும் தங்களின் சுட்டுதல் பொதுவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், தேசிய இனங்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் வேளையில் தான் சிங்கள மக்களும் தம் மீதான ஒடுக்கு முறையை உணர்ந்து அரசிற்கு எதிராகப் போராடுவர் எனும் கோடிடல் எனக்கு குழப்பகரமான தன்மையைத்தருகின்றது.

    2002 ஆம் ஆண்டின் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்நகர்த்தப்பட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் ஒரு படிநிலை விளைவு என்பது என் பார்வை. இப் போராட்டம் பற்றி பல்வேறு நோக்குகளில் நூறு வகை கருத்தாடல்களும் ஊன வகை நகையாடல்களும் வெற்று வாய்களாகளால் சப்பி அலசப்பட்டாலும் தொடர்ந்தும் அசை போட்டுக்கொண்டிருந்தாலும் அவர்கள் (புலிகள்) பயணித்த அப் பயண வடிவத்தின் வழியில் தங்களைப் போன்றோர் விளிக்கும் வீரிய விடயங்களும் மக்கள் நலன் நோக்கிய கூரிய வியாக்கியானங்களும் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது என்பதை நேரிய நெஞ்சம் கொண்ட எல்லோரும் ஏற்றுக்கொள்ளுவர். அங்கிருந்துதான் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்றான் திலீபன்.

    எனவே, மேற்படி நிலையில் நின்று பார்க்கும்போது அதாவது, அடக்கப்பட்ட தமிழர்களின் போராட்டம் வெற்றியை நோக்கி முன் பாய்ந்த வேளைகளில், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் தம் மீதான ஒடுக்கு முறையை உணர்ந்து அரசிற்கு எதிராகப் போராடினரா? என்றால் இல்லை. எனவே, சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் வேளையில் தான் சிங்கள மக்களும் தம் மீதான ஒடுக்கு முறையை உணர்ந்து அரசிற்கு எதிராகப் போராடுவர் என்ற தங்களின் கூற்று கேள்விக்குள்ளாகின்றது.

    மேலும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் வேளையில் சிங்கள மக்களும் தம் மீதான ஒடுக்கு முறையை உணர்ந்து அரசிற்கு எதிராகப் போராடுவார்கள் என்றால் அப்போது அவர்கள் சிறுபான்மைத் தேசிய இன மக்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தருவார்கள் என்றால் அப்போராட்டன் எது? அது எவ்வகைப்பட்ட போராட்டம்? அந்தப் போராட்டம் முள்ளிவாய்க்காலுக்கு முந்திய ஈகம் நிறைந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முற்று முழுதாக நிராகரித்து அரிவரியில் இருந்து தொடங்குகின்றதா? அல்லது வேறு விளக்கங்கள் ஏதும் உண்டா?

  11. கிறுக்கன் says:
    15 years ago

    நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள பேரினவாத சிந்தனைக்குள் புலிகள் உழைக்கும் வறிய சிங்கள மக்களுக்குள் இறங்கி வேலை செய்யவில்லை என்பது வெறும் அபத்தப்பேச்சு…. திருகோணமலையில் முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து சிறந்த ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள், தெற்கில் பாரிய வெள்ளம் ஏற்பட்டபோது அரச இயந்திரங்கள் தொழில்பட முன்னரே பல நிவாரண உதவிகளை கொண்டுசென்றவர்கள் (அதையும் மக்களிடம் இருந்து திரட்டப்பட்டதாகவே காண்பித்தார்கள்) பொருண்மிய நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் எவ்வளவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இதை எல்லாவற்றயும் விட சுனாமி அனர்த்தம் ஏற்படபோது எவ்வளவு விரைவாக மீட்ப்பு அணிகளை களமிறக்கினார்கள் (பொட்டு உட்பட, புலிகளின் சகல கட்டமைப்புகளும் படையணிகளும் களமிறக்கப்பட்டன. குறைந்த பச்சம் இலங்கை அரசிடம் ஒரு அனர்த்த முகாமைத்துவமே இருக்கவில்லை ஏன் ராணுவமோ காவல்துறையோ ஒழுங்கு படுத்தப்பட்டு உதவிக்கு அனுப்பப்படவில்லை. புலிகளின் நடவடிக்கைகளை பார்த்தபின் தான் அரசு அரண்டது ) அதன் மூலம் பல உயிர்களை காக்க முடிந்தது, சகல வசதிகளும் படைத்த பல உலக நாடுகளே இதை பார்த்து வியந்தன.. இல்லை புலிகள் 100 விகிதம் உராய்வற்ற இயந்திரங்களாக இருந்திருக்க வேண்டும் என்கிறீர்களா?    அல்ல பாசிச  புலிகள் இவை எல்லாவற்றையும் ஒரு பகட்டுக்குத்தான் செய்தார்கள்.  மக்கள் நலன் என்ற விடயத்தில் அக்கறை அற்று இருந்தார்கள் என்கிற உங்கள் குறுட்டு பார்வை வெறும் வசை பாடலே.       

  12. S.G.Raghavan says:
    15 years ago

    கிறுக்கன் நீங்களே பல விடயங்களை சொல்லியுள்ளீர்கள் அதில் திருகோணமலையில் முன் பள்ளி அமைத்து சிங்கள பெண் ஆசிரியர்கள் பலருக்கு நியமனம் கொடுத்தனர் இது எவ்வளவு வரவேற்பை பெற்றது என்பதை நீங்கள் அறிந்து
    இருக்கவில்லையா? தென் இலங்கையில் வெள்ள பெருக்கின் போது எழிலன் தலைமையில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணங்களை கொண்டு சென்றபோது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட வரவேற்பை அறியவில்லையா? சிங்கள இனவாதிகளும் அரச சார்பு சக்திகளும் புலிகளின் இச்செயற்ற்பாட்டுக்கு மாசு கற்பித்தது உண்மை.

    திருகோணமலையில் ஒரு பௌத்த பிக்கு இலங்கை புலனாய்வுப் பிரிவால் ஏன் கொல்லப் பட்டார் என்பதை அறிவீர்களா? தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வழங்கவேண்டும் தமிழர்கள் கொடுமைபடுத்தப் படுகிறார்கள் என்பதை சிங்கள மக்கள் மத்தியில் தெளிவு படுத்தியதால். அத்துடன் திருகோணமலையில் இனவாதிகளின் பின்புலத்தில் நடந்த (மூதூர் மாவிலாறு சமர் கால கட்டம்) வன்முறைகளை தட்டிகேட்டது என்பதால் அவர் கொல்லப் பட்டார். இவை புலிகள் மேற்கொண்ட மிக குறுகிய கால நடவடிக்கைகளின் நன்மைகள். எனவே இந்த இடத்தில் நீண்டகால திட்டங்கள் தான் பலனை தரும். சிங்கள இனவாதம் நிறுவன மையப் பட்டு இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நிறுவன மயமாக்கலை தகர்க்க முடியும். சிங்கள மக்களை தெளிவு படுத்துவதனை எமது போராட்ட வழிமுறையில் ஒன்றாக கொள்ள வேண்டும்.

    “புலிகள் 100 விகிதம் உராய்வற்ற இயந்திரங்களாக இருந்திருக்க வேண்டும் என்கிறீர்களா?” என்ற கேள்வியில் நியாயம் உண்டு, ஆனால் அரசியல் ராஜதந்திரப் பெறுமானம் இல்லை என்பது எனது கருத்து.

    • கிறுக்கன் says:
      15 years ago

      அரசியல் ராஜதந்திரம் என்பது வெறும் புலிகளால் மட்டும் தீர்மானிக்கமுடியாத ஒன்று நம்மை சூழ இருக்கும் கிர(ற)கங்கள் அவற்றின் பார்வைகள் எந்தெந்த இடங்களில் விழுகிறதென்பதை பொறுத்ததே… ஓரளவுக்கேனும் இயற்கை அனர்த்தங்கள் அழிவுகள் பற்றிய அனுமானங்கள் எதிர்வு௬றல்கள் அனுபவங்கள் இருக்கின்ற போதும் எங்களால் அவற்றை வெற்றிகொள்ள முடிகிறதா? அதுபோலவே புலிகளும் பல விடயங்களை அனுமானித்திருந்தார்கள் எதிர்வு௬றியும் இருந்தார்கள்.   என்னசெய்ய உலகின் அத்துணை கிர(ற)கங்களும் கெட்ட பார்வையையே செலுத்தியது. பல நிகழ்ச்சி போக்குகள் தான் ஒருவிடயத்தை தீர்மானிக்கிறது ஆக தனியொரு புலிகளால் மட்டும் அவற்றை மாற்றிவிடமுடியாது. முடித்தபின் சிலாகிப்பதில் நமக்கு நிகர் நாமே.         

      • chandran.raja says:
        15 years ago

        உண்மை தான். இப்படியானவை கிறுக்கர்களுக்குரிய வாதமே!.

        • கிறுக்கன் says:
          15 years ago

          கிறுக்கணுகளின் கிறுக்குத்தனத்துக்கு எல்லாம் நீங்கள் ஏன் செவிகொடுக்கிறியள் பேசாமல் உங்கடை புத்திய பாவிச்சு தமிழனுக்கு பிச்சை ஆவது வாங்கிக்கொடுங்கோ புண்ணியமா போகும். உண்ணாணை சந்திரன் ராசா உங்களுக்கு வாந்தி எடுக்கவேணும் எண்டால் கையை விட்டுபாருங்கோ வரும்.  

      • THAMILMARAN says:
        15 years ago

        மழை வந்து உலகக் கோப்பை கிரிக்கெட்டை குழப்பும் என்றூ யாருக்குத் தெரியும்? எல்லாம் கிரக மாற்றங்கள்தான்.மனித விதியை எழுதும் பரம்பொருள அன்றீ யாருக்குத் தெரியும்? பிறந்த குழந்தை இறந்ததும், பிஞ்சு மழலைகள் கொல்லப்பட்டபோதும் எந்த உல்கு குரல் கொடுத்தது.இன்றூ ஒயிலுக்காக கேணல் கடாபியைக் கூட மாற்றூ வழிகளீல் காப்பாற்றவே முயல்கிறது.இது விபச்சாரிகளீன் உலகம் இங் கு தர்ம பத்தினிகளூம் வேசையானால் மட்டுமே வாழ முடியும்.

  13. நாவலன் says:
    15 years ago

    அரிச்சந்திரன்,
    சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணராதவாறு பெருந்தேசிய வாதம் அவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. 60 களின் பின்னர் பெருந்தேசிய வெறி தமிழ்ப் பேசும் இறுபான்மையினருக்கு எதிரான அரசியலாக மாற்றம் பெற்றது. சிங்கள மக்க்கள் விகாரைகள், கிராம சபைகள் என்பன போன்ற கீழ் நிலை அமைப்புக்களூடாக கிராம அளவில் நிறுவன மயப்பாடுள்ளனர். இந்த நிறுவனங்கள் பெருந்தேசிய வாதத்தின் நிர்வாகக் கூறுகளாக அமைந்திருக்கின்றன. இலங்கை அரச அதிகாரத்திற்கு எதிரான குரல் எழும் போதெல்லாம் பெரினவாதத்தை இவர்களூடாகவே முன் நிறுத்துகின்றனர். சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகள் தேர்தல் வெற்றிக்காகவும் இப் பேரின வாதத்தைப் பயன்படுத்துகின்றனர்.
    நாளாந்த வாழ்க்கைக்கே வழியற்ற இந்த மக்கள் மீதான ஒடுக்கு முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நாமும் அவர்கள் போலவே ஒடுக்கப்படுகிறவர்கள் என்ற உணர்வை உருவாக்கவும் வேலை செய்யபட வேண்டும். இவ்வாறான வேலை முறை நிறுவனமயப்பட்ட கட்சிகளால் தான் மேற்கொள்ளப்பட முடியும். தேசிய முரண்பாடு கூர்மையடைந்துள்ள காலப்பகுதியில் தேசிய இயக்கங்களின் வரவும் அவற்றை நெறிப்படுத்டும் கட்சிகளின் வரவும் தவிர்க்கவியலாதவை. அவை தான் சிங்கள் மக்கள் மத்தியில் இவ்வாறான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ல முடியும். அவ்வாறான அமைப்புக்கள் குறுந்தேசிய வாத, இனவாத அமைப்புக்களாக அமைப்புக்களாக உருவாகுமானால் பெருந்தேசியவாதம் நியாயப்படுத்தப்படுவதும், அவர்கள் பெருந்தேசிய அரசுகளுக்கு ஆதரவளிப்பதும் தவிர்க்கமுடியாதவை.

    • Thamil Maran says:
      15 years ago

      Yes still long way to go.

  14. கிறுக்கன் says:
    15 years ago

    கிறுக்கணுகளின் கிறுக்குத்தனத்துக்கு எல்லாம் நீங்கள் ஏன் செவிகொடுக்கிறியள் பேசாமல் உங்கடை புத்திய பாவிச்சு தமிழனுக்கு பிச்சை ஆவது வாங்கிக்கொடுங்கோ புண்ணியமா போகும். உண்ணாணை சந்திரன் ராசா உங்களுக்கு வாந்தி எடுக்கவேணும் எண்டால் கையை விட்டுபாருங்கோ வரும். அதுக்காக எதுக்கு பித்தவாந்தி எடுக்கிறியள் .   

    • chandran.raja says:
      15 years ago

      கிறுக்கர்களின் கிறுக்குத்தனத்தை கண்டும்காணமல் போவதுதான் முறையானது.ஆனால் அரசியல்கருத்துக்களில் கிறுக்குதனத்தை கிரிக்கெட் விளையாட்டுக்களை அனுமதிக்க முடியாது. ஆபத்தானகாரியம். இதைதானே கடந்த காலத்தில் கண்டோம்.

      யாருக்கு? யார்?? பிச்சைபோடுவது? இது கடைந்தெடுத்த கிறுக்குத்தனம் அல்லவா?தமிழரை பிச்சைக்காரனாக்கியதும் அவன் தட்டில் விழுந்த சில்லறைகளையும் தூக்கிசென்றவர்கள் தமிழ்மக்களின் மேலாதிக்கசக்திகள் தான். இதை வர்க்கவிசுவாசம் என்றும் சொல்லுவார்கள். நீங்கள் சொல்லுகிற பிச்சைக்காரர்கள் அந்த நாட்டின் சமூகசக்திகள் உழைப்பாளி பிரிவினரை ஒழுங்கமைப்பது தான் சங்களை நிறுவதுதான் இன்றுயுள்ள தேவை. பிச்சைக்காரர்களாக்கி பிழைப்பு நடத்தவதல்ல. அப்படிநடத்துபவர்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும்.இதில் முதல்தரமாக தமிழ்தேசிய கூட்டமைப்பையே முதலில் குற்றவாளியாக சமூகத்தின் முன்நிறுத்துவேன்.

      • Thamilmaran says:
        15 years ago

        I will agreed with your point but who is going to put the bell on the cat neck

        • chandran.raja says:
          15 years ago

          எலி பூணைக்கு மணிகட்ட முடியுமா? இது மனிதனால் தோற்றுவிக்க பட்ட ஒருகற்பனை கதையல்லவா? இன்றுயுள்ள பிரச்சனை மனிதனால் தோற்றிவிக்க பட்ட பிரச்சனைகள் மனிதலால் எப்படி முடிவுக்கு கொண்டு வரமுடியும்? என்பது பற்றித்தான். இதேபோல் தமிழனால் தோற்றிவிக்க பிரச்சனை தமிழனாலேயே முடிவுக்கு கொண்டுவரவேண்டும். “தீதும்நன்றும் பிறர்தரவரா” இதையெல்லாம் உணர்ந்து வினையாற்றி பலனை எதிர்பார்கிறதிற்கு எனக்கு இயற்கை அளிக்கபட்ட ஆயுள்காலம் போதாது தான். இப்படியான நல்ல சிந்தனைகளில் மனத்தை லயிக்கவிடுவதில் அதில்வரும் ஒருசுகமே அலாதியானது.

  15. S.G.Raghavan says:
    15 years ago

    வினைத்திறன் கூடிய உற்பத்திக்கு அல்லது சேதாரமற்ற உச்ச விளைவுகளுக்கு உராய்வற்ற தன்மை பொறியியலில் நன்மை தரக்கூடியது ஆனால் நூறு வீத உராய்வற்ற நிலைமை நடைமுறைக்கு சாத்தியமில்லை இதற்காக உற்பத்தியை யாரும் நிறுத்தி விடுகிறார்களா? சமுக நடைமுறைகளை உள்வாங்கி கொள்ளுதல் தொழில் புரட்சியில் இருந்து சமூக புரட்சி வரை செல்லு படியானதே. சந்திரன் ராஜா கிறுக்கன் இருவரும் விவாதத்திற்கு அப்பால் செல்லாது கருத்துகளால் வாசகர்களை தெளிவுபடுத்துங்கள்.

  16. கிறுக்கன் says:
    15 years ago

    வினைத்திறன் கூடிய உற்பத்தி பொறிமுறையை கொண்டிருந்தவர்கள் புலிகள் மாத்திரமே உற்பத்திக்கு உரம் ஊட்டியவர்கள் எம்மை பசுமையாக அறுவடை செய்யவிடவில்லை தமக்கு இது மேச்சல் தரையாகவே இருக்க வேணும் எண்டு எண்ணினார்கள். இதை புரியாதவர்களே விளைச்சலின் எத்தனங்களை சீரழித்தனர்..   

    • chandran.raja says:
      15 years ago

      இலங்கையரசின் அரிசியையும் பருப்பையும் வாங்கி தின்றுகொண்டு அவர்களுக்கே குண்டு வைத்தவர்கள்தானே நீங்கள். அதற்கு உங்கள்மட்டத்தில் பிரசாரத்தையும் மேற்கொண்டீர்கள்.இருந்த மிகுதியை மக்களுக்கு கொடுக்காது மண்மூட்டைக்கு பதிலாக பாதுகாப்பாக பங்கர்சுவர்களுக்கு பாதுகாப்புசுவர் தேடினீர்கள். இதில்வினைத்திறன் உற்பத்தி என்று விளக்கமும் வேறா?. கிறுக்கா.

      • Chithra Cheran says:
        15 years ago

        சந்திரன் ராசா, நீர்தான் உண்மையான கிறுக்கன். நீர் எங்கை இருக்கிறீர்? உம்மட கருத்துப்படி புலிதான் ஒண்டுக்கும் உதவாதது. நீரெண்டாலும் அங்கை நிண்டு எங்களைக்காப்பாத்தியிருக்கலாம்தானே! ஏதோ நேர கண்டவர் மாதிரி… நீர்தான் அதுக்கு நெருப்பு வச்சதெண்டு நான் சொல்லுறன்.. நீர் சொன்னது உண்மையெண்டா ஏன் இதுவும் உண்மையா இருக்கப்படாது?

  17. அரிச்சந்திரன் says:
    15 years ago

    நாவலன்,
    தங்களின் கூற்றுக்கள் யாவும் ஏற்புடையவே எனினும், நான் தொடுத்த வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் நேரடியான விளக்கமெதுவும் கிடைக்கவில்லை. இங்குள்ள அனுமானங்கள் அத்திவாரமிடப்படுவதும் அது தொடர்ந்து முன் செல்வதென்பதுமே இப்போதைய சூழலிலுள்ள மிகப்பெரிய சவால். அதனால், இன்றுள்ள சந்ததியால் இது முடியுமென நான் நினைக்கவில்லை செயல் ரீதியாக.

  18. கிறுக்கன் says:
    15 years ago

     அமெரிக்கா மா திங்க தருகுது எண்டு சொல்லி உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்திவிடுவியளோ…  இலங்கை அரசு ஒண்டும் எமக்கு பிச்சை போடவில்லை ராசா எமது பணம் வரி ஆகியவையே சோறுபோட்டது. அய்யா சொல்லுறார் அடிமைகள் எப்போதும் அதிகாரத்துக்கு விசுவாசமாய் இருக்கோணுமாம். இனிமேலும் நீங்கள் உந்த சோஷலிச சமத்துவ முகமூடிக்குள் ஒளியாதைங்கோ உங்களுக்கு விழுகிற எலும்புகளுக்கு விசுவாசத்தை காட்டுங்கோ அதுக்கு ஏன் மற்றவையும் சேத்து இழுக்கிறியள் இங்கை எல்லாரும் ௬ழைப் பாட்டு பாட ரெடி இல்லை Mr. Rasa

  19. நாவலன் says:
    15 years ago

    அரிச்சந்திரன்,
    உங்களுடைய ஏனைய கருத்துக்கள் குறித்து..
    2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்ற உங்கள் கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறே 89 ஆம் ஆண்டில் மாகாண சுயாட்சியை உசபட அதிகாரங்களோடு பெற்றுக்கொண்டதை வெற்றியாகக் கூறும் வரதராஜப் பெருமாள் அணியின் கூற்றிலும் உடன்பாடில்லை. அதிகாரங்களிடையேயான சமரசங்கள் விடுதலையோ வெற்றியோ இல்லை. இதில் ஒவ்வொருவரும் மக்கள் குறித்து துயர்கொள்வதில்லை. அவரவர் சார்ந்த குழுக்கள் குறித்த குழுவாதமே பிரதானப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கிழக்குத் தீமோர் போன்ற நாடுகளின் இன்றைய நிலைமகளைப் ஆராய்ந்தால் இன்னும் உண்மைகள் புலப்படும்.
    ஆயுதப் போராட்டம் என்பதன் வரை முறை, வெற்றி என்பன சாகசங்கள் அல்ல. மக்கள் போராடுகின்ற போது அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு யுத்தத்தம் என்பதே ஆயுதப் போராட்டமாகும். தலைகீழாக நாம் உருவாக்கிய ஆயுதப்போராட்டம் என்பது என்ன? சில நபர்கள் போராடும் போது மக்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பதிலிருந்தே அது ஆரம்பமாகிறது. அதன் இறுதியைத் தான் நாம் சந்தித்திருக்கிறோம். தவிர, புலிகளை விமர்சித்தல் என்பது புலியெதிர்ப்பு அரசியல் குழுக்களால் சீரழிக்கப்படுகிறது. மறுபுறத்தில் புலிகளை மட்டுமல்ல போராட்டத்தின் அனைத்துத் தவறான கூறுகளையும் விமர்சித்தல் என்பது எதிர்காலப் போராட்டத்தைச் செழுமைப்படுத்துவதாக அமையவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களும் நம்மத்தியில்ருக்கிறார்கள்.
    நாம் சிங்கள் மக்களைப் பலதடவை தேசியத்தின் பெயரால் கொலைசெய்திருக்கிறோம். தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள உழைக்கும் மக்கள் குறித்தே நாம் துயர் கொண்டது கிடையாது. அதற்கான மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்கும் எந்த வேலைத்திட்ட்டமும் எம்மிடம் இருந்ததில்லை. பின் எப்படி சிங்கள மக்களை அணிதிரட்ட முடியும்? அரசிற்கு எதிராக அவர்கள் போராட்டத்தை ஊக்கப்படுத்த முடியும்? இறுதியாக ஜே.வி.பி போன்ற இனவாதக் கட்சிகளின் பிடியில் அவர்களை இணைக்கும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
    இப்போது கூட நாம் இவைகுறித்துச் சிந்திப்பதில்லை. தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய வேலைமுறைகள் குறித்துப் பேசுவதற்குப் பதிலாக நமது பெருமைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.
    //சிறுபான்மைத் தேசிய இனங்களின் போராட்டம் வெற்றியை நோக்கி நகரும் வேளையில் சிங்கள மக்களும் தம் மீதான ஒடுக்கு முறையை உணர்ந்து அரசிற்கு எதிராகப் போராடுவார்கள் என்றால் அப்போது அவர்கள் சிறுபான்மைத் தேசிய இன மக்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தருவார்கள் என்றால் அப்போராட்டன் எது?// இது உங்கள் கேள்வி மட்டுமல்ல பதிலும் கூட. இலங்கை போன்ற நாடுகள் சுயநிர்ணய உரிமையுடய தேசங்களின் கூட்டாச்சியே இறுதியில் அமைவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. தேசிய இன முரண்பாடு கூர்மையடைந்துள்ள சமூகப் பின்புலத்தில் இலங்கையிலுள்ள நான்கு தேசிய இனங்களுக்கான தன்னாட்சி உரிமை கொண்ட தேசங்கள் உருவாவதும் இறுத்தியில் அவற்றிடையேயான நிர்வாகக்கூட்டு உருவாவதும் தவிர்க்கமுடியாதவை.

    • a voter says:
      15 years ago

      ஆக உங்கள் கருத்துப்படி விடுதலைப் புலிகள் நடத்தியது விடுதலைப் போராட்டமே அல்ல.
      1990ற்குப் பின் வேறு யாருமே போராடவில்லை போராட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. அப்படியானால் 1990ற்குப் பின் நடந்ததை என்னபெயர் கொண்டு அழைப்பீர்கள் நாவலன் அவர்களே?

  20. vanniyan says:
    15 years ago

    தமிழ் ஈழம் மலர்வதற்கான காலமும்,நேரமும் வரும் வரை தமிழர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக தங்களது மண்ணையும் ,இருப்பையும், இன்று என்ன பலம் இருக்கிறதோ அதனையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். கொசொவோ மலர ஒருநேரம் வந்தது, கிழக்குத் தீமோர் உருவாக ஒருநேரம் வந்தது, கிழக்கு சூடன் உருவாக ஒரு காலம் வந்தது என்றால், ஏன் அந்த நேரமும் காலமும், எமக்கு மாட்டும் வராமல் விடப் போகிறது. இது வரையும் புலிகள் பலமாகவும், அரணாகவும் இருந்ததால், எமக்கு எதிரியின் மேலான அச்சம் இல்லாது இருந்தது. ஆனால் இன்றுதான்நாம் தமிழர் மிகவும் புத்திசாலித்தனக்துடன் போராட வேண்டி உள்ளது.சும்மா சும்மா புலிகள் அப்படி செய்யாமல்விட்டார்கள் , இப்படி செய்து இருந்திருக்கலாம் என்று கட்டுரைகள் எழுதுவது, கவிதைகள் வடிப்பது, மேடை போட்டு பெசுவது ஒரு சதம் கூட பிரயோசனம் அற்றது. இது சபா- நாவலனுக்கும் பொருந்தும்.

  21. சங்கத்தமிழன் says:
    15 years ago

    தமிழ் ஈழம் மலர வலுச் சேர்க்கும் ஆக்க பூர்வமான கருத்துக்களை கள மாக்குங்கள் நாம் கதைத்துக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை

    • chandran.raja says:
      15 years ago

      சங்கத்தமிழா! தமிழீழம் யாழ்பாணமேட்டுக்குடியின் கனவு அவுட். இதுபோக ஈழம் என்கிற சொல்லுக்கும் இலங்கை என்கிறதிற்கும் வேறுபாடுகள் இல்லை. ஈழத்துடன் தமிழையும் சேர்ப்பது தான் சங்கடமானது மட்டுமல்ல விபரீதமானதும் கூடா. இப்படியான எண்ணங்கள் இருக்கிற இலங்கைத் தமிழரையும் ஒட்டக்காலியாக்கி விடும். சிங்களவருக்குரிய உரிமை தமிழருக்கும் வேண்டும்.தமிழருக்குக்கு இருக்கிற உரிமை தமிழ்பேசும்முஸ்லீம்மக்களுக்கு வேண்டும் என்று குரல்எழுப்புங்கள். ஆக மொத்தத்தில் நாம்இலங்கையர்.உழைப்பாளிகள் என்பதற்குள் உள்ளடக்குங்கள். இங்குநாம் சங்கத்தமிழன் என்றுசொல்லியா அகதிஅந்தஸ்து எடுத்தோம்?. சங்கத்தமிழன்-சங்கடத்தமிழன் என்கிற வார்த்தைகள் இனிமேல் விலைபோகாது. மனிதஉரிமைமட்டுமே!. மற்றைய இனத்தின் மதத்தின் உரிமைகளை நீ பாதுகாக்க போராடினால் மட்டுமே உன்னுரிமையும் பாதுகாக்கப் படும்.இதற்கு அப்பால் எந்த வட்டமும்இல்லை. சதுரமும் இல்லை.

      • Thamilmaran says:
        15 years ago

        There is so many things happening there in Jaffna,they can’t have their normal life and they cant even sleep in their Owen homes but some of us here making statement saying that they are better than us discussing about dead thamil Eelam  what a wast   

        • chandran.raja says:
          15 years ago

          திரு.தமிழ்மாறன் தாங்கள் எந்தயுலகத்தில் இருந்து கருத்துச் சொல்லுகிறீர்கள் என்பது புரியவில்லை. ஆகக்குறைந்தது 83 யூலை- 2009 -ம் ஆண்டு 19ம்-திகதி முன்பட்ட துன்பங்களையாக ஈழத்தமிழர்கள் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்?. உங்களுக்கு மனச்சாட்சியிருக்கமாக… மனச்சாட்சியுடன் கருத்துச் சொல்லுங்கள். யாழ்பாணமக்களுக்கு நித்திரையில்லை என்பது புலம்புவது புலம்பெயர் புலிவாரிசுகளும் யாழ்ப்பாண மேட்டுக்குடி கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற உதயன்பத்திரிக்கையும் தமிழரின் தலைவிதியை தானதாக எண்ணிக்கொண்டு அழுதுவடிகிற தேசியக்கூட்டமைப்பும் தான். இதில் யார் பக்கத்தில் இருந்து கதைசொல்லுகிறீர்கள் என்பது எனக்கும் புரியாமல் இல்லை.அது உங்கள் வர்க்கவிசுவாசம். ஏனெனில் அங்குநொந்து நெந்து அழிந்துபோன வர்கத்தை பற்றி சிந்தபவர் தாங்கள் இல்லையே! தயவுசெய்து குறைநினைக்காதீர்கள். புலம்பெயர் இடங்களில் இருந்துவருகிற கருத்துகள் 99.09 வீதமும் இப்படிப் பட்டவையே!.இதையும் மிஞ்சி ஒருவன் முடிவெடுத்தால் அது புரட்சி..

          • THAMILMARAN says:
            15 years ago

            உங்கள விட உன்னதமானவன் உலகில் யாருமில்லை மானுட நேயம் கொண்ட தாங்களே ஏன் புரட்சிக்கு தலைமை தாங்கக் கூடாது.

  22. அரிச்சந்திரன் says:
    15 years ago

    நாவலன்,
    2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று நான் குறிப்பிடவில்லை. அவ் ஒப்பந்தம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் ஒரு படிநிலை விளைவு என்றே குறிப்பிட்டுள்ளேன் அதாவது, வெற்றியையை நோக்கி செல்வதற்கான வழியில் ஓர் அமைவிடம் அவ்வளவுதான்

    இலக்கு ஒன்றை சென்றடைவதற்கு பாதைகள் பல அமைவதுண்டு அந்தவகையிலேயே விடுதலைப்புலிகள் நாடாத்திய ஆயுதப்போராட்டமும் ஒரு பாதை. கள நிலைமைகளின் உள நிலைமைகளே போராட்டத்தின் தன்மையையும் வடிவமைப்பையும் தீர்மானிக்கின்றன. அதன்படி உருவம் பெற்றதே மேற்படி போராட்டம். முட்ட வரும் எருதின் முன் முட்டி போட்டு நிற்றலும், கொட்ட வரும் குளவி முன் கைகட்டி நிற்றலும் முறையன்று.

    இலங்கை போன்ற நாடுகள் சுயநிர்ணய உரிமையுடய தேசங்களின் கூட்டாச்சியே இறுதியில் அமைவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என தாங்கள் கூறியுள்ளதன் மூலம் சுயநிர்ணய உரிமை விதிகளின் அடிப்படையில் பிரிந்து செல்லும் தமிழ் மக்களின் போராட்ட கூறினை முடக்கி கூட்டாச்சிக்கான போராட்டத்தையே தாங்கள் முன்மொழிகின்றீர்கள் என்பது போல் தெரிகின்றது. தமிழீழத்தாயகம் என்ற இலக்கு புலிகளால் நிச்சயிக்கப்பட்டதல்ல. அது தமிழ் மக்களின் பல கட்ட தாவல்களுக்கு பின்னரான முடிவு. அப்படி தமிழ் மக்களின் முடிவினை மறுத்துரைத்து அவர்களின் எண்ணத்துக்கு மாறாக எப்படி மாற்று போராட்டமொன்றுக்கு அவர்களை முதலில் அணி திரட்டப்போகின்றீர்கள்?

    கொலைகள் மனித நாகரீகத்துக்கு விரோதமானவையே. சட்டங்களும் அதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்ளுகின்றன. அதேநேரம், அச் சட்டங்களே தற்காப்புக்காக கொலை செய்யலாம் எனவும் கூறுகின்றன. தேசியத்தின் பெயரால் சிங்கள மக்கள் கொலை செய்யப்பட்டதும் அதன் அடிப்படையில் தான். எங்கள் மக்களை அழித்தால் உங்கள் மக்களை அழிப்போம் எனவே அதனை நிறுத்துங்கள் என்பதே அதன் செய்தி. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது ஆனால், இடையில் அதனை கைவிட்டதனாலேயே மிகப்பாரிய அழிவுகளை தமிழ்மக்கள் சந்தித்தனர்.

    நன்நோக்கமும் கொண்ட விமர்சனங்கள் வேண்டியவை அவைகளே இலக்கினை முன் நகர்த்தும் என்பது தொடர்பில் மாற்றுக்கருத்து இல்லை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...