மாவோயிஸ்டுகள் தலைமையில் அல்லது மாவோயிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தும் அரசொன்று நேபாளத்தில் அமைந்து விடக் கூடாது என்பதில் இந்தியா மிகக் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இந்தியா வம்சாவளியில் வந்த இந்தியாவின் தலையாட்டி பொம்மையான மாதவ் குமார் நேபாளை மாவோயிஸ்டுகள் நெருக்கடியின் பேரில் பிரதமர் பதவியில் இருந்து விலக்கிக் கொண்டாலும் அங்கே மாவோயிஸ்டுகள் தலைமையிலான புதிய அரசமைய ஏராளமான முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது இந்தியா. நேபாள நாடாளுமன்றத்தில் 40 சதவீத இடங்களை பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியாக மாவோயிஸ்டு கட்சி இருந்தாலும் அக்கட்சி தலைமையில் மீண்டும் அரசு அமைய முக்கிய கட்சிகள் இசைவு தெரிவிக்கவில்லை. இதனால் அக்கட்சியின் ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்துள்ளது. ஆனாலும் நேபாள மக்களின் வாழ்க்கையை அவர்களின் அரசியல் இறைமையைக் கருத்தில் கொண்டு மாவோயிஸ்டுகள் அமைதி காக்கிறார்கள். இந்நிலையில் இரண்டாவது பெரிய கட்சியான யூ.எம்.எல் தலைமையிலான கட்சிக்கு ஆட்சியமைக்க மாவோயிஸ்டுகள் ஆதரவளித்துள்ளனர். இந்தியா போர் வெறி பிடித்த ஆக்ரமிப்பு ஆசை கொண்ட ஒரு தேசம் என்பதற்கு ஈழம் சாட்சியாக இருந்தது. இப்போது நேபாளத்திலும் அதை நீரூபித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.