29.10.2008.
பிப்.7, 1962 அன்று கியூபா மீது பொருளாதார, வர்த்தகத் தடைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்தது. இன்னும் சில மாதங்களில் 47 ஆண்டுகள் முடிந்து விடும். அந்தத் தடைகள் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. மனிதாபிமானமற்ற அந்தத் தடைகள் விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்ந்து கொண்டே போகிறது. அக்.29 அன்று இந்தத் தடைகளை நீக்குவதற்கான தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்கிறது.
இத்தகைய விவாதம் நடக்கப்போவது முதன்முறையல்ல. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. 2007 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 16 ஆண்டுகள் இத்தகைய விவாதங்கள் நடைபெற்று தீர்மானம் மீதான வாக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஒவ்வொரு வாக்கெடுப்பும் அமெரிக்காவிற்கு எதிராகவே அமைந்துள்ளது. அக்.30, 2007 அன்று நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 184 நாடுகள் வலியுறுத்தின. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அமெரிக்காவுக்கு ஆதரவாக வெறும் மூன்று நாடுகள் மட்டுமே வாக்களித்தன.
இந்த முறையும் கியூபாவுக்கு ஆதரவாக, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக நிற்குமாறு கியூப நாடாளுமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நா. தீர்மானம் குறித்து நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தனது வழக்கமான ஆணவத்துடன் அதை அலட்சியப்படுத்தி விட்டது. சர்வதேசக் கருத்தை நிராகரித்து விட்டு பட்டினி மற்றும் நோய்களால் எங்கள் மக்களைக் கொன்று விடலாம் என்ற அதன் முயற்சியை அமெரிக்கா அதிகப்படுத்தியது.
உலக நாடுகள் அனைத்திற்குமே தெரிந்திருக்கும். சமீபத்தில் ஏற்பட்ட ஐக் மற்றும் கஸ்டவ் புயல்களால் கியூபா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதமடைந்துள்ளது. தன்னலமில்லாத மக்களின் சேவையாலும், பல்வேறு நாடுகளின் உதவியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளோம். முதலில் ஒரு லட்சம் டாலர் உதவியளிப்பதாகக் கூறிய அமெரிக்க நிர்வாகம், கியூபாவிற்குள் நுழைந்து சேதத்தை மதிப்பிட அமெரிக்கக்குழுவிற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
கொள்கைரீதியாக, பல ஆண்டுகளாக கியூபா மீது கொடூரமான தடைகளை விதித்துள்ள அமெரிக்க நிர்வாகத்திடமிருந்து எந்த உதவியையும் பெறுவதில்லை என்று கியூபா முடிவு செய்துள்ளது. ஆனால் இத்தகைய துயரமான வேளையில் தற்காலிகமாகவாவது தடைகள் விலக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகள், தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்தன. எந்த சூழ்நிலையிலும் தடைகளை விலக்கிக் கொள்ள முடியாது என்று அமெரிக்க நிர்வாகம் கூறி விட்டது.
இத்தகைய கொடூரங்களால் எங்கள் மக்களின் உறுதியைக் குலைக்க முடியாது. தற்போது நடத்திவரும் போராட்டத்தை எங்களால் தொடர முடியும். ஆனால் கியூப மக்களின் இறையாண்மை மற்றும் உரிமையைப் பறிக்க முயலும் அமெரிக்கா வின் தடைகளை நிபந்தனையின்றி எடுக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை யும், அமெரிக்க அரசையும் வலியுறுத்த வேண்டுமென்று உலகம் முழுவதுமுள்ள நாடாளுமன்றங்களை கியூப நாடாளுமன்றம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.