எனது அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் மிரட்டும் வகையில் நடந்து வருவதாக எனது மனைவி கூறியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை என்று உதயக்குமார் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தது. அங்கு கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமாரின் வீட்டு மாடியில் உள்ள அவரது சாக்கர் அறக்கட்டளை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை குறித்து தற்போது இடிந்தகரையில் முகாமிட்டுள்ள உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாகர்கோவில் பழவிளையில் சாக்கர் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி பள்ளியை நடத்தி வருகிறேன். 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வாட்முல் என்ற பவுண்டேஷன் மூலம் எங்கள் டிரஸ்ட்டுக்கு ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் பணம் வந்தது. அது பள்ளிக்கு வாகனம் வாங்குவதற்காக தரப்பட்டது. அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெற்று வங்கி கணக்கு தொடங்கி பணத்தை பெற்றுக்கொண்டோம்.
அதோடு எனது சொந்த பணம் ரூ. 3 லட்சத்தை சேர்த்து செலவழித்து பள்ளிக்கான வாகனத்தை வாங்கினோம். இதற்கு முறையான கணக்கு உள்ளது. கடந்த 1 மாதத்துக்கு முன்பு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் உங்கள் அறக்கட்டளைக்கு வந்த வெளிநாட்டுப் பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் இதற்காக டெல்லி வரவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. கூடங்குளம் போராட்டத்தில் நான் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால் டெல்லிக்கு வர இயலாது என்று பதில் அளித்தேன்.
அதற்கு அவர்கள் இம்மாதம் 29 அல்லது 30-ந்தேதியில் நாகர்கோவில் வந்து உங்கள் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை பரிசோதனை செய்வோம் என்று கூறி இருந்தனர். அதன்படி அவர்கள் இன்று எனது நாகர்கோவில் வீட்டில் சோதனைக்கு வந்துள்ளனர். எங்கள் அறக்கட்டளைக்கு அமெரிக்காவில் உள்ள வாட்முல் பவுண்டேஷனின் தமிழகப் பிரதிநிதியான தமிழ்நாடு பவுண்டேஷன் மூலமும் சிறு சிறு பண உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளிக்கான மேஜை, நாற்காலிகள் போன்ற பர்னிச்சர் சாதனங்கள் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் எனது ஆடிட்டர் மூலம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனது வரவு, செலவு விவரங்கள் எதையும் மறைக்கவில்லை. எனது வீட்டில் அறக்கட்டளை தொடர்பான தஸ்தாவேஜுகள் அனைத்தும் உள்ளது. அவை எங்கெங்கு இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். ஆனால் நான் இடிந்தகரை போராட்டத்தில் இருப்பதால் இங்கிருந்தபடியே எனது மனைவிக்கு உரிய தகவலை கொடுத்து ஆவணங்களை அதிகாரிகளிடம் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன்.
ஆனால் அதிகாரிகள் மிரட்டுவது போல் நடந்து கொள்வதாக என் மனைவி என்னிடம் கூறினார். அதிகாரிகளின் எந்த மிரட்டலுக்கும் நாங்கள் பயப்படபோவதில்லை என்றார் உதயக்குமார்.







