வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலும் சுற்றுப்புறங்களிலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆயுதக் குழுக்களால் சிறுவர் போராளிகளாக சேர்க்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச சிறுவர் போராளிகள் ஒழிப்புக் கூட்டணி என்ற அமைப்பு இலங்கை செல்லும் ஐ.நா. விசேட பிரதிநிதி இது தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்த பிரதேசங்களிலிருந்து வெளியேறிய மக்கள் தங்கியுள்ள வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்தும் வவுனியா நகரில் இருந்தும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டு வருவதாக சிறுவர் போராளிகள் ஒழிப்பு கூட்டணி என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளதாக பி.பி.சி. நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பெயர் குறிப்பிடாத சில அரச ஆதரவுக் குழுக்களே இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது;
வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கடத்தப்பட்டு வருவதாக தமக்கு ஊர்ஜிதம் செய்யப்பட்ட புகார்கள் கிடைத்துள்ளதாகவும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் இவர்களை சிறுவர் போராளிகளாக தமது அமைப்புகளில் சேர்த்து வருவதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில ஆயுதக் குழுக்களுக்கு வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தடையின்றி சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினர் அம்முகாம்களில் உள்ளபோதும் சிறுவர்கள் கடத்தப்படுகின்றனர். கடத்தப்படுபவர்களில் 12 வயதுச் சிறுவர்களும் காணப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் கண்காணிப்புகள் குறைவாக இருக்கும் வேளையில் இத்தகைய கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. இவ்வாறு சிறுவர்கள் கடத்தப்படுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியாத போதும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரும் பணம் பெறுவதற்காக சிலரும் கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முகாம்களிலுள்ள சிறுவர்களின் பாதுகாப்பு உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மோசமான நிலையிலுள்ள விடயமாகும்.
யுத்தப் பிரதேசத்திலிருந்து வந்துள்ள மக்கள் முகாம்களுக்குள் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக அவர்களிடம் நடத்தப்பட்டுவரும் சோதனைகள், விசாரணைகள், விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகளாக இருந்தவர்களின் பாதுகாப்புக் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. மன்ற பொதுச் செயலாளர்களின் விசேட பிரதிநிதி இலங்கையில் தெரிவிக்கப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகளையும் துஷ்பிரயோகங்களையும் விசாரிக்கும் நோக்கில் விசேட தூதுவரை இலங்கைக்கு அனுப்ப எடுத்துவரும் முயற்சியை வரவேற்கிறோம்.
இலங்கை இடைத்தங்கல் முகாம்கள், சோதனைச்சாவடிகள், மற்றும் விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் போன்றவற்றுக்கு ஐ.நா.வின் விசேட தூதுவர் சென்று பார்வையிடவும் விசாரணைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் சிறுவர் போராளிகள் ஒழிப்புக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
பொத்தம் பொதுவாக அரச ஆதரவு குழுக்கள் என்று எழுதுவது தவறு.அகதிமுகாம்களில் உள்ள சனங்களுக்கு தெரியும் இந்த வேலையை ஈபிடிபி தான் செய்கிறது. பழிமற்றைய இயக்கங்கள் மீது விழுகிறது.
கிழக்கில் பிள்ளையானும் கருணாவும் கடத்த>வடக்கில் டக்கிளசு! புலிகளின் தொல்லை முடிந்ததென்றால்> இப்ப இக்கூட்டம் புறப்பட்டுவிட்டது!