மருத்துவர் பினாயக் சென்னுடைய விடுதலையைக் கோரி சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 90 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய துணைத் தலைவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பொதுச் செயலருமாகிய மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
06.01.2011 வியாழனன்று முற்பகல் 10.30 மணியளவில் சென்னை உயர்நீதி மன்றம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் தழுவிய அளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய தினம் சென்னை மாநகரில் ஒட்டப்பட்டிருந்த மறியல் போராட்டச் சுவரொட்டிகளை தேடித்தேடி காவல்துறை கிழித்து கிழிப்பு போராட்டம் நடத்தியது. ம.உ.பா. மைய சென்னை வழக்கறிஞர்கள் கிழிப்பு வீரர்களைக் கையும் களவுமாகப் பிடித்து கடுமையாக எச்சரித்த பின்னரே அப்பணியைக் கைவிட்டனர். மறியல் அன்று காலை முதலே சென்னை உயர்நீதி மன்ற வளாகம் முன்பு ஏராளமான போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகளுக்கும் பஞ்சமில்லை. பிப்ரவரி 19 உயர்நீதி மன்ற வழக்கறிஞர் போராட்டம், கருணாநிதிக்கு ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டியது போன்ற கடந்த கால அனுபவங்கள் காவல் துறையினரை அங்கே குவித்து விட்டது.