விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. மோடி அரசு பேச்சுவார்த்தை என்று பசப்புகிறது.
இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் தனது ஐந்தாம் படை வேலையைத் தொடங்கிவிட்டது. “மூன்று சட்டங்களின் நோக்கமும் நேர்மையானது தான். இருப்பினும், விவசாயிகளின் கவலை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமல்ல குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும்” என்று சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கூறியிருக்கிறது. இது ஒன்றுதான் பிரச்சினை என்பது போலவும், இதை ஒப்புக் கொண்டு விட்டால் மூன்று சட்டங்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என்பது போலவும் கருத்தை உருவாக்குகிறது.
இதுதான் சூழ்ச்சி. சட்டங்களின் நோக்கம் தான் மையமான பிரச்சனை. குறைந்த பட்ச ஆதரவு விலையை இல்லாமல் ஆக்குவதென்பது, அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு வழிமுறை மட்டுமே. பிரச்சனை அது மட்டுமேயல்ல.
பஞ்சாபில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம், ரயில் மறியல் நடந்து வருகிறது. விவசாயிகள் களைப்படைந்து ஓய்ந்து விடுவார்கள் என்று ஆர்எஸ்எஸ் கும்பல் எதிர்பார்த்தது. நடக்கவில்லை. ரயில் மறியல் தொடர்ந்து நடைபெற்ற காரணத்தினால் சரக்குப் போக்குவரத்து 2 மாதங்களாக நின்று போய், பஞ்சாபில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. சரக்கு ரயில் போக்குவரத்தை மட்டும் அனுமதிப்பதாக விவசாயிகள் அறிவித்தனர். “மொத்தமாக மறியலைக் கைவிட்டாலொழிய ரயில் போக்குவரத்தைத் தொடங்க மாட்டோம்” என்று பஞ்சாப் மக்களை பிளாக்மெயில் செய்தது மோடி அரசு.

பணிந்து விடுவார்கள் என்று மோடி எதிர்பார்த்திருக்கிறார். அவர்களோ போராட்டக் களத்தை டில்லிக்கு மாற்றி விட்டார்கள். 3 சட்டங்களையும் திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கைக்கு இணங்காமலேயே, தன்னை நியாயவான் போல காட்டிக் கொள்வதற்காகவே பேச்சுவார்த்தை நடத்துகிறது மோடி அரசு. “நாங்கள் இறங்கிப் போனாலும் விவசாயிகள்தான் முரண்டு பிடிக்கிறார்கள்” என்று காட்டி, பஞ்சாப் விவசாயிகளுக்கு எதிராக நாட்டின் பொதுக்கருத்தை திருப்புவதுதான் மோடி அரசின் உத்தி என்பதாகத் தெரிகிறது.
“டெல்லிக்கு வரும் சாலைகள் எல்லாம் மறித்து, பொருள் போக்குவரத்தை தடுத்து நிறுத்தப் போகிறார்கள். டெல்லி மக்களை நெருக்கடியில் தள்ளப் போகிறார்கள்” என்று ஒரு சதிக் கோட்பாட்டை மோடி அரசு பரப்பி வருகிறது. ஊடகங்கள் இந்த அயோக்கியத்தனத்துக்கு துணை போகின்றன என்று சாடுகிறார் சாய்நாத்.
சதி என ஒன்று இருக்குமானால் அதை செய்திருப்பது மோடி அரசுதான்.
நிதி ஆயோக் எனப்படும் சதி ஆயோக்!
2014ஆம் ஆண்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடனே மோடி செய்த முதல் காரியம், திட்ட கமிஷனை கலைத்துவிட்டு, அதனிடத்தில் நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கியது தான்.
உண்மையில் சதி ஆயோக் என்பதுதான் அதற்குப் பொருத்தமான பெயர்.
டிசம்பர், 2015 இல் நிதி ஆயோக்கில் முன்வைக்கப்பட்ட திட்டம் தான் எழுத்துப் பிசகாமல் இப்போது அமல்படுத்தப்படுகிறது. (Raising Agricultural Productivity and Making Farming Remunerative for Farmers, NITI Aayog, Government of India 16 December 2015)
இன்று இந்த 3 சட்டங்களையும் நியாயப்படுத்துவதற்கு மோடி அரசு கூறுபவை இரண்டு முக்கியமான வாதங்கள். ஒன்று, இச்சட்டங்கள் இடைத்தரகர்களை ஒழித்து விடும். இரண்டு, விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையத்தில்தான் விற்கவேண்டும் என்ற கட்டாயமில்லாமல், தனியார் யாரிடம் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்பதால் அவர்களது வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.
அப்படியானால், இப்போது ஆகப்பெரும்பான்மையான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அரசிடம் தான் விற்றுக் கொண்டிருக்கிறார்களா? இல்லை. “ஆகப்பெரும்பான்மையான விளைபொருட்கள், தனியார் சந்தையில்தான் விற்கப் படுகின்றன. வெறும் 6 விழுக்காடு விவசாயிகள்தான் தங்கள் விளைபொருட்களை அரசுக் கொள்முதல் நிலையங்களில் விற்கிறார்கள்” என்று கூறுகின்றது மோடி அரசு நியமித்த சாந்தகுமார் கமிசனின் அறிக்கை.
ஆகப்பெரும்பான்மையினர் தனியார் சந்தையில்தான் விற்பனை செய்கிறார்கள் எனும்போது, அந்த தனியார் சந்தையில் அம்பானி, அதானி முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரையிலான “தனியார்கள்” அனைவரும் நுழைய வேண்டியதுதானே, எதற்காக 3 தனிச்சட்டங்கள்? ஏனென்றால், அம்பானியும் அதானியும் “சாதா” தனியார் அல்ல, “ஸ்பெசல்” தனியார்கள் – அதாவது கார்ப்பரேட் முதலைகள்.
மோடி அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் 3 சட்டங்களும் திரிசூலம் போன்றவை. இவை ஒரே ஆயுதத்தின் மூன்று முனைகள்.
முதல் சட்டம் அரசு கொள்முதல் என்பதை ஒழித்துக் கட்டுகிறது. இரண்டாவது சட்டம், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுடனான ஒப்பந்த விவசாயத்துக்குள் தள்ளுவதற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது. மூன்றாவது சட்டம், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து தானியங்கள், பருப்புகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் போன்றவற்றை நீக்குவதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள், அவற்றைப் பதுக்கி வைப்பதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்குகிறது.
நிதி ஆயோக் இன் 2015 ஆய்வறிக்கை இது தொடர்பாகக் கூறுவது என்ன என்பதைப் பார்ப்போம்.
முதலாவது
“விவசாயிகள் எல்லா பயிர்களுக்கும், எல்லா இடங்களிலும், குறைந்த பட்ச ஆதரவு விலையைக் கோருகிறார்கள். அது சாத்தியமே இல்லை. எனவே, அரசு தலையிட்டு விலை நிர்ணயம் செய்வது என்ற இந்த அணுகுமுறையையே முற்றிலுமாக மாற்றியமைத்து, விளை பொருட்களின் விலையை சந்தை தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும்.”
(…farmers are seeking MSP for almost all crops and everywhere, which is not feasible. There is a need for paradigm shift from price centric direct intervention to non-price policy instruments. The aim should be to create enabling market environment…)
இரண்டாவது,
“விவசாயிக்கு உத்திரவாதமான விலையைத் தருவதற்கும், தொழில்நுட்ப உதவிகளைத் தருவதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான ஒப்பந்த விவசாயமே சிறந்த வழியாகும். அவர்களும் விவசாயத்தில் முதலீடு செய்ய பெரிதும் ஆர்வமாக இருக்கிறார்கள். உள்நாட்டு சந்தையிலும் உலக சந்தையிலும் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, நமது விவசாயத்தை மாற்றியமைப்பதற்கு இதுதான் பொருத்தமான தருணம்”
(…A well-functioning system of contract farming will go some distance towards providing a guaranteed price as well as necessary technical support to the farmer. With the corporate sector keen on investing in agribusiness to harness the emerging opportunities in domestic and global markets, time is opportune for reforms that would provide healthy business environment for this sector…)
மூன்றாவதாக,
“சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதற்கும், விளை பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் தனியார் முதலீட்டாளர்களை நாம் ஈர்க்க வேண்டும். தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஏற்ற வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும்”
(…There is also need to apply the Essential Commodity Act more judiciously so as to make private investments in the marketing and storage infrastructure more attractive…)
நிதி ஆயோக் அறிக்கை இதை மட்டும் சொல்லவில்லை. கணிசமான விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறுகிறது.
விவசாயிகளை கிராமத்திலிருந்து வெளியேற்றுவது, நிலக்குவிப்பு, தலைகீழ் குத்தகை (Reverse tenancy) ஆகியவற்றை ஒரு திட்டமாகவே முன்வைக்கிறது. (Reverse tenancy – நிலச்சுவான்தார்கள் ஏழை விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தை குத்தகைக்கு விடுவது வழமையான குத்தகை முறை. சிறு-நடுத்தர விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் அவற்றை கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதை தலைகீழ் குத்தகை முறை என்று கூறுகிறோம்)
“தொழில்துறையிலும் சேவைத்துறையிலும் இன்று ஏற்பட்டுவரும் விரைவான வளர்ச்சியின் பயன்கள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டுமானால், அவர்கள் இந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறவேண்டும். விவசாயத்திலிருந்து அவர்கள் வெளியேறினால்தான் அது சாத்தியம். அப்படி வெளியேறினால்தான், சிறு நிலவுடைமைகளை ஒழித்து, பெரு நிலவுடமைகளை உருவாக்க முடியும்.
“நிலக் குத்தகை சந்தையை தாராளமயமாக்கினால், விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளையும், விவசாயத்தில் ஈடுபாடு இல்லாதவர்களையும் விவசாயத்திலிருந்து வெளியேற்ற முடியும். விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களிடம் அந்த நிலத்தை ஒப்படைத்து விளைநிலத்தின் அளவையும் அதிகரிப்பதுடன், பொருளாதார ரீதியில் அவர்களை வலுப்படுத்தவும் முடியும்.”
(…In order that today’s farmer families can share in the faster growth occurring in industry and services, it is essential that some of them be able to find good jobs in these sectors. As some of the farm families move out of agriculture, the opportunities for consolidating and enlarging land holdings will open up as well
The biggest advantage of liberalised and secure land lease market will be that it will ease the exit of those farmers who find farming unattractive or non-viable and economically strengthen those farmers who want to stay in the farming and raise the scale of operational holdings…)
இதுதான் நிதி ஆயோக் என்று அழைக்கப்படும் National Institution for Transforming India வின் -இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசிய நிறுவனம் – “நாட்டைத் தலைகீழாக மாற்றியமைப்பதற்கு” வகுத்திருக்கும் திட்டம்.
கிராமப்புறங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் வெளிப்படையாகவே கூறுகிறது. அவ்வாறு நகரத்துக்கு குடிபெயர்ந்தால்தான் தொழில்துறை, சேவைத்துறை வேலை வாய்ப்புகள் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும் என்றும் ஆசை காட்டுகிறது.
சிறு உடைமையும் துண்டு துக்காணி நிலங்களும் நவீனமான பெருவிகித உற்பத்திக்கு ஏற்றவையல்ல என்பது உண்மைதான். சிறு விவசாயிகளின் நிலத்தைப் பறித்து அவற்றை கார்ப்பரேட்டுகளின் உடைமையாக்குவதன் மூலம்தான், அந்த விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்ற முடியும் என்கிறது மோடி அரசு.
ஏற்கனவே நகரங்களுக்கு குடிபெயர்ந்து புலம்பெயர் தொழிலாளிகளாக மாறிய கோடிக்கணக்கான விவசாயிகளின் கதி என்ன என்பதையும், அவர்கள் வாழ்க்கையில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் கொரோனா ஊரடங்கின்போது நாம் கண்டோம்.
விவசாயிகளின் நிலத்தைப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்குவதுடன், நிலத்தைப் பறிகொடுத்த விவசாயிகளை, நகரங்களின் உழைப்புச் சந்தையில் கொண்டுவந்து குவித்து, மலிவான கூலிக்குத் தொழிலாளிகளாக அவர்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சப்ளை செய்வதுதான், இந்த திரிசூலச் சட்டங்களின் விளைவாக இருக்கும். உணவுத் தற்சார்பை அழிப்பது, பட்டினிச் சாவுகள், சூழலியல் பேரழிவுகள் போன்ற பிரச்சனைகள் தனி.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த சங்கிகள்
2015 இல் நிதி ஆயோக் மேற்படி திட்டத்தை முன்மொழிகிறது. ஆனால் நிதி ஆயோக் கூறும் நோக்கத்துக்கு நேர் எதிரானவற்றை வாக்குறுதியாக வழங்கித்தான் 2014 இல் ஆட்சியைக் கைப்பற்றினார் மோடி.
“விளைபொருட்களின் உள்ளீட்டு செலவுக்கு மேல் அதில் 50% தொகையையும் சேர்த்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட எம்.எஸ். சாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளில் முக்கியமானவற்றை, பதவியில் அமர்ந்த ஓராண்டுக்குள் நிறைவேற்றுவேன்” என்று கூறியது மோடியின் தேர்தல் அறிக்கை.
சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்யக்கோரி, 2015 இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டபோது, “சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்வது சந்தை விதிகளுக்கு எதிரானது . அவ்வாறு செய்ய முடியாது” என்று மறுத்துவிட்டது மோடி அரசு.
2016 இல் விவசாய அமைச்சராக இருந்த ராதா மோகன் சிங்கிடம் மேற்படி வாக்குறுதி பற்றிக் கேட்டபோது, “அப்படியெல்லாம் வாக்குறுதி அளிக்கவே இல்லை” என்று அவர் நெஞ்சறியப் புளுகினார்.
“அதெல்லாம் தேர்தல் காலத்தில் சொல்லப்படும் ஜும்லா” என்றார் நிதின் கட்கரி – இது 2018 இல்.
2019 இல் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “சாமிநாதன் குழு பரிந்துரை தொடர்பாக மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம்” என்று மட்டையடியாக சாதித்தார்.
2020 இல் திரிசூலச் சட்டத்தை மோடி கொண்டு வந்திருக்கிறார் .
“குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க முடியாது” என்று பஞ்சாப் விவசாயிகளிடம் மோடி அரசு மறுத்து வருகின்ற சூழலில், விவசாயத்துறை அமைச்சர் தோமரிடம் கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்பினார் ஒரு நிருபர்.
“2011 இல் நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான பணிக்குழுவின் தலைவராக (Chairman, Working group on Consumer affairs) அன்றைய குஜராத் முதல்வர் மோடி இருந்தார். அந்தப் பணிக்குழு சார்பில் மன்மோகன் சிங்கிடம் ஒரு கோரிக்கையும் வைத்திருந்தார். “ஒரு விளைபொருளுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவான விலைக்கு எந்த வியாபாரியும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக்கூடாது என்று சட்டமியற்றவேண்டும் – என்பதுதான் அன்று மோடி வைத்த கோரிக்கை. இன்று நீங்களே அதை மறுக்கிறீர்களே” என்று கேட்டார் நிருபர்.
“எல்லாவற்றுக்கும் சட்டம் போட முடியாது. அரசாங்கம் சொன்னால் நம்ப வேண்டும்” என்பதுதான் அமைச்சரின் பதில்.
சட்டமே இயற்றினாலும் அதை மோடி அரசு மதிக்கவா போகிறது? ஜி.எஸ்.டி ஏற்படுத்தும் நட்டத்தை ஈடுகட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது சட்டம். “காசில்லை” என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். சட்டத்தை வைத்துக் கொண்டு மாநில அரசுகள் என்ன செய்வது?
விவசாயம் என்பது மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அது தொடர்பான 3 சட்டங்களை தன்னிச்சையாக இயற்றி விட்டு, இதை மாநிலங்கள் மீறக்கூடாது என்று அந்த சட்டத்திலேயே ஒரு சட்டவிரோத வாசகத்தை வைத்திருக்கிறது மோடி அரசு. இதுவும் கூட அரசமைப்பு சட்டம் கூறும் அதிகாரப் பகிர்வுக்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானதுதான். யாரிடம் முறையிடுவது? ஒன்றா இரண்டா, நீண்டதொரு பட்டியலே இருக்கிறது.
“மோடியும் அமித் ஷாவும் சொல்கின்ற ஒரு வார்த்தையைக் கூட நம்ப முடியாது. அவர்கள் பொய்யர்கள்” என்கிறார்கள் பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர்கள். அவர்கள் மோடி அரசை நம்பிப் போராடவில்லை. தங்களுடன் பிற மாநில விவசாயிகளும், இந்திய மக்களும் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் போராடுகிறார்கள்.
அன்று அந்த நம்பிக்கையில்தான் பஞ்சாபின் வீரப்புதல்வன் பகத்சிங்கும் தூக்குமேடையேறினான். அவனுடைய நம்பிக்கையை இந்த நாடு பொய்யாக்கி விட்டது.
இன்றும் கூட தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாதவர்களாக அறியாமையில் மூழ்கி இருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். ஒரு சில வட மாநிலங்களைத் தவிர மற்ற மாநில விவசாயிகளின் நிலையும் இப்படித்தான்இருக்கிறது.
இந்த நிலைமையைக் காணும்போது, பஞ்சாப் விவசாயிகளின் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது. படித்த நடுத்தர வர்க்கமும் சரி, தொழிலாளி வர்க்கமும் சரி – தார்மீக ஆதரவு என்ற எல்லைக்குள் தம்மை சுருக்கிக் கொள்கின்றனர். இது சரியல்ல. அறியாமையில் மூழ்கிக் கிடப்பதும் மன்னிக்கத்தக்கதல்ல.
நம் செயலின்மை மீதும் அறியாமையின் மீதும் நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறார் மோடி.
நாம் செயலில் இறங்குவோம் என்ற நம்பிக்கையில் முன் ஏர் பிடித்துச் செல்கிறார்கள் பஞ்சாப் விவசாயிகள். பின் தொடர்வோம்.
-மருதையன்
நன்றி : இடைவெளி