Monday, March 16, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகள், EPRLF, இந்திய இராணுவம் – ஒருங்கு புள்ளி : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
12/26/2017
in பிரதான பதிவுகள் | Principle posts, போராளிகள் டயரி, அரசியல்
0 0
65
Home பிரதான பதிவுகள் | Principle posts

-இந்திய இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்த 30 வது வருடம் 2017-

மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட வரலாறு அழிவு சக்திகளின் பிடியில் திரிபு படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தமக்குரிய அடையாளத்தை நிறுவிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்பட்டுப் போவது வேதனை தரும் சம்பவங்கள். மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்பட்டு உலகின் ஒவ்வொரு மூலைகளை நோக்கியும் விரட்டியடிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. சமூகத்தின் பொதுவான பிற்போக்குச் சிந்தனையை மாற்றும் போக்கில் இந்த அனுபவங்கள் காத்திரமான பாத்திரத்தை வகிக்கவல்லன. அனுபவப் பகிர்வு என்பது தனிமனித அடையாளத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அன்றி அந்தக் காலத்திற்கே உரித்தான புறச் சூழலையும் அதனோடு இணைந்த அரசியல் மாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாக அமையுமானால் அதுவே அதன் அரசியல் வெற்றியாகும். 80 களின் இறுதிக் கட்டங்களில் ஈழப் போராட்டத்தில் சில குறிப்பான எனது அனுபவங்கள் கற்றலுக்குப் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகிறேன்.

புலிகள்

டிசம்பர் மாதம் 13ம் திகதி 1986ம் ஆண்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F) என்ற இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (L.T.T.E) அழிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பனியுறையும் குளிர்காலம் என்பது கூடத் எமக்குத் தெரிந்திராத அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்து அரசியல் வெம்மை , ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் கேள்விகேட்டது.

யாரும் எதிர்பாராத தாக்குதலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு சந்தியிலும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அப்போதெல்லாம் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது. விமானத் தாக்குதலகளை மட்டும் அவ்வப்போது மக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்திவந்தது.

இராணுவம் தெருவில் இறங்கிச் சண்டை போடுகிறது என்பதை யாரும் நம்பவில்லை. ஈ.பி.ஆர்.எல்,எப்(EPRLF) இற்கு முன்னதாக ரெலோ(TELO) இயக்கமும் புலிகளால் அழிக்கப்பட்டிருந்ததால் எதோ இயக்க மோதல் என்பதைப் பொது மக்கள் ஊகித்துக்கொள்ள நேரமெடுக்கவில்லை.

பலர் இலங்கை அரசிற்கு எதிராகப் போராட மட்டுமே இயக்கங்களில் இணைந்து கொண்டனர். புலிகள் இயக்கத்தினர் அவர்களைத் தேடித் தேடி அழித்தனர். நிராயுதபாணிகளான பல இளைஞர்கள் ஏன் என்று அறியாமலே மரணித்துப் போயினர். தெருத் தெருவாக விடுதலைப் புலிகள் ஒலிபெருக்கியில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் சரண்டயுமாறும் இல்லையெனில் கண்ட இடத்தில் சுடப்படுவார்கள் என்றும் எச்சரித்தனர் . சிலர் தமது வீடுகளிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இல் ஏற்பட்டிருந்த உள் முரண்பாடு காரணமாக அதன் இராணுவத் தளபதியாகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பொறுப்பிலிருந்த அனைத்து இராணுவத் தளப்பாடங்களும் கபூர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவர்தான் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். கபூரைத் தவிர சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு சார்பில் இலங்கையில் இயக்க நடவடிக்கைகளைக் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

சுரேஸ் பிரேமச்சந்திரனின் அதிகார தோரணை பல போராளிகளை விரக்திக்கு உள்ளாக்கியிருந்தது. டக்ளஸ் அணியைத் தவிர ஈ.பி.ஆர்.எல்,எப் இல் இன்னொரு முற்போக்கு அணியும் உருவாகியிருந்தது. அவர்கள் டக்ளஸ் மற்றும் சுரேஸ் முரண்பாடுகளுக்கு அப்பால் புதிய மக்கள் பலமுடைய அணியாகத் திகழ்ந்தனர். ஒரு வகையில் இந்த முற்போக்கு அணியென்பதே ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அடிப்படைப் மக்கள் பலமாக அமைந்திருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் முற்போக்கு அணியினரோடு இயக்கத்திற்கு வெளியிலிருந்த பலரும் தொடர்புகளைப் பேணிவந்தனர்.
அந்தவகையில் எனக்கு அறிமுகமானவர் தான் ஜேரோம் என்ற புனைபெயரைக் கொண்ட ஜெயராஜ். அப்போது அவருக்கு முப்பது வயதாகியிருக்கலாம். ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உருவாவதற்கு முன்பதாகவே இடதுசாரி இயக்கங்களோடு தன்னை இணைத்துக்கொண்டவர். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பொருண்மியப் பிரிவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இயக்கத்தில் உட்கட்சிப் போராட்டங்கள் குறித்து பல தடவைகள் யாழ்ப்பாணத்து நகர வீதிகளைச் சைக்கிளில் கடந்தவாறே பேசியிருக்கிறோம்.

பல்கலைக்கழகப் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட விமலேஸ்வரன் உட்பட பலர் தலைமறைவாக வாழ்ந்த ஜனநாயக முற்போக்கு சக்திகளின் “காசி” யாகத் திகழ்ந்தது உரும்பிராய் கொலனி என்ற கிராமம்.

கிராமிய உழைப்பாளஎ சங்கம் என்ற அமைப்பு அக்கிராமத்திலேயே தோன்றி வளர்ந்திருந்தது. இயக்க மோதல்களில் உயிரைக் காப்ப்பாற்ற முனைகின்றவர்களின் இறுதிச் சரணாலயம் கிராமிய உழைப்பாளர் சங்கமும் உரும்பிராய் கிராமமும் தான். ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட 13ம் திகதி இரவு சில போராளிகள் உரும்பிராயில் தலைமறைவகியிருந்தனர். அவர்களில் ஜெரோமும் ஒருவர்.

13ம் திகதி ஜெரோமை நான் உரும்பிராயில் சந்திக்கும் போது நள்ளிரவை அந்த நாள் தொட்டுக்கொண்டிருந்தது.

ஜெரோமும் நானும் ஒரு குடிசையில் இருந்து எதிர்காலம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ஈ.பி.ஆர்.எல்.எப் இற்குள் உள்முரண்பாட்டைத் தீவிரமடையச் செய்து ஜனநாயக முற்போக்கு சக்திகளைப் பலவீனமடையச் செய்து இறுதியில் புலிகள் இயக்கத்தைப் பயன்படுத்தி அழித்துப் போட்டதே இந்தியா தான் என்று ஜெரோம் வாதிட்டுக்கொண்டிருந்தார். எல்லா இயக்கங்களையும் புலிகளைப் பயன்படுத்தி அழித்து முடித்துவிட்டு இறுதியில் புலிகளையும் இந்தியா அழிக்கும் என்று தொடர்ந்தார்.

நாம் இனிமேல் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்கான புதிய அரசியலை முன்வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் அன்றி இலங்கையில் மக்கள் மத்தியில் தான் அதன் தலைமை வாழ வேண்டும் என்ற ஜெரோம் இதற்காகத் தான் ஏற்கனவே தான் ஆயுதங்களை சில இடங்களில் மறைத்து வைத்திருபதாகவும் கூறினார்.

கல்வியன்காட்டில் ராசபாதை வீதியில் அமைந்திருந்த பெண்கள் முகாமில் சில ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் இப்போது போனால் அவற்றை எடுத்து வந்துவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

அங்கு வேறு குடிசைகளில் எம்மைப் போன்றே பெசிக்கொண்டிருந்தவர்களிடம் நாங்கள் இருவரும் சென்று ஆயுதங்களை எடுத்துவரப் போவதாகக் கூறுகிறோம். பொதுவாக அனைவரும் இப்போது புலிகள் இயகத்தைச் சேர்ந்தவர்கள் தெருத்தெருவாக ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைத் தேடியலைகிறார்கள். கிராமத்தை விட்டு வெளியே சென்றால் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

இறுதியில் ஒரு முடிவோடு நள்ளிரவிற்குச் சற்றுப் பின்னர் ஜெரோம் துவிச்சக்கர வண்டியை செலுத்த நாம் இருவரும் ராசபாதை வீதி முகாமை நோக்கி வயல் வெளிகளை ஊடறுத்துக் கொண்டு செல்கிறோம். அரை மணி நேரத்தில் தனிமை உறைந்து கிடந்த மாடிக்கட்டிட வளாகத்தினுள் நுளைகிறோம். அக் கட்டிடம் பெண்கள் முகாமாகவிருந்தது. அன்று முதல் நாள் அதி காலையிலேயே அங்கு சென்ற விடுதலைப் புலிகள் அங்கிருந்த பெண்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுவிடுகின்றனர். யன்னல் திரைகள் அகற்றப்பட்டு, நீண்ட மாளிககை போன்ற கட்டடத்தின் கதவுகள் ஓவெனத் திறந்திருக்க நிலவு ஒளியில் கட்டடத்தின் பின்புறத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தபோது அதிகாலை ஒரு மணியை அண்மித்திருக்கலாம்.

மணைணைத் குடைந்து இரண்டு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுப்பதற்கான முன் ஆயத்தங்களுடன் நாம் அங்கு சென்றிருக்கவில்லை. அருகில் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு ஆயுதங்களை மீட்பதற்கு எமக்கு 20 நிமிடங்களாவது தேவைப்பட்டிருக்கும். சில கிரனைட்டுக்கள், ஒரு கைத்துப்பாக்கி, எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கி ரவைகள் என்பவற்றை அங்கு பெற்றுக்கொண்டோம்.

கட்ட்டத்தின் உள்ளே சென்ற ஜெரோம் ஒரு பிளாஸ்டிக் பையோடு வெளியே வருகிறார். கட்டட வாசற்கதவு நாம் உள்ளே வரும் போது திறந்தே இருந்தது.

நாம் புறப்படத் தயாராகும் போது புலிகளின் ஜீப் வண்டியொன்று வளாகத்தினுள் வரும் ஒளியைக் காண்கிறோம். எமக்கு அங்கிருந்து தப்பிச் செல்ல வேறு வழிகள் இருக்கவில்லை.

இருள் கவ்விய கட்டடத்தின் மேல் பகுதியில் அவசர அவசமாகச் சென்று ஒளிந்து கொள்கிறோம். ஜீப் வண்டியில் வந்த புலிகள் சில நிமிடங்கள் அங்கே செலவுசெய்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுவிடுகின்றனர். சில நிமிடங்கள் தாமதத்தில் நாங்கள் உரும்பிராய் நோக்கிச் சைக்கிளைச் செலுத்துகிறோம். ஜெரோம் இந்தத் தடவையும் சைக்கிள் செலுத்த நான் அங்கிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் வைத்திருக்கிறேன்.
கோண்டாவில் பகுதியில் அன்னங்கை என்ற இடத்தை அண்மித்ததும் குடியிருப்புப் பகுதிகள் ஊடாகச் சைக்கிளைல் பயணித்துக்கொண்டிருந்த போது நேரம் 2 மணியைத் தாண்டிவிட்டுருந்தது.

இனிமேல் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் புலிகள் இயக்கத்திற்கும் தலைமறைவாகத் தான் நடத்தப்பட வேண்டும் என்பதை நாம் பேசிக்கொண்டே பயணிக்கிறோம். அப்போது குடியிருப்புப் பகுதிகளிலிருந்த வீடொன்றின் சுவர் வழியாக ஜெரோமின் உண்மைப் பெயரான ஜெயராஜ் என்ற பெயரில், “ஜெயராஜ் அண்ணை” என்ற குரல் கேட்கிறது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பலர் துப்பாக்கிகளோடு எம்மைச் சூழந்துகொள்கிறார்கள். அவர்களுள் ஜெரோமின் முன்னை நாள் நண்பரும் ஒருவர். அவர் தான் அந்தக் குழுவிற்குப் பொறுப்பானவர். புலிகளில் முக்கிய பதவியை வகிப்பவர். உடனடியாகவே எங்கள் இருவரையும் சாரமாரியாகத் தாக்குகிறார்கள். துப்பாக்கிகளாலும் கால்களாலும் தாக்குதல் நடத்துகிறார்கள்.

அடியின் கோரத்தின் மத்தியிலும் ஜெரோம் என்னப் பாதுகாக்க முற்படுகிறார். நான் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சார்ந்தவன் இல்லை என்பதையும் தற்செயலாக என்னைக் கண்டபோது சைக்கிளில் ஏறி வந்ததாகவும் கூறுகிறார். என்னை அடிப்பதை நிறுத்திவிட்டு பல கேள்விகள் கேட்கிறார்கள். இறுதியில் நான் இயக்கத்தைச் சார்ந்தவன் அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

பின்னதாக யாரையோ எதிர்பாத்துக் காத்திருந்தார்கள். அரை மணி நேரத்தில் வெள்ளை நிற வான் ஒன்று வந்து சேர்ந்தது. அதற்குள் எம் இருவரையும் ஏற்றிக் கொள்கிறார்கள். அதே வானில் ஏனைய சில கைதிகளையும் காண்கிறோம். பொதுவாக அனைவரும் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த வானில் சுமார் ஐந்து புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஆயுதங்களோடு அமர்ந்திருந்தார்கள். அக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் சரா என்ற புலித் தளபதி. சரா என்பவர் அப்போது கல்வியன்காட்ட்டுப் பிரதேசப் பொறுப்பாளராகவும் புலிகளின் தலமையால் நியமிக்கப்பட்டிருந்தார்.

கோண்டாவில் சுடுகாட்டை அடைந்தபின்னர் வான் அத்ற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டது. ஜேரோமை வானில் இருந்து தர தரவென வெளியில் இழுத்துச் சென்றனர்.

இந்தச் சுடுகாட்டில் வைத்தே உன்னைக் கொலைசெய்யப் போகிறோம் என மிரட்டியவாறே மூன்றுபேர் ஜெரோமோடு சென்றனர். ஆறு அடிக்கும் மேல் உயர்ந்த ஆஜான பாகுவான தோற்றம் கொண்ட ஜெரோமின் கால்களில் துப்பாக்கியால் ஒருவர் அடித்ததும் அவர் கீழே சரிந்தார், உடனே அவரைத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.

சுடலைக்குச் ஜெரோன் அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களாக ஏனைய கைதிகளோடு நானும் பயத்தின் மத்தியில் காத்துக்கொண்டிருக்கிறேன்..
பலமான அலறல் சத்தம் சுடலை நடுவிலிருந்து கேட்கின்றது.

அதிகாலை அமைதியை கிழித்துக்கொண்டு எமது காதுகளை அறைந்த அனத மரண ஓலம், எமது அனைவருக்கும் மரண பயத்தை அறிமுகம் செய்தது.

நாம் எண்ணியது போன்று ஜெரோம் கொல்லப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னதாக மீண்டும் வானிற்கு அழைத்து வரப்படுகிறார். அரவரது முகம் முழுவதும் இரத்தம் வடிந்திருந்தது அவரை இழுத்து வந்தவர்கள் வானிற்குள் அழுத்துகிறார்கள். பின்னர் வான் மானிப்பாய் பகுதிக்குச் செல்கிறது. அங்கு ஏற்கனவே தரித்திருந்த மற்றும் சில வாகனங்களில் இருந்தவர்களோடு பேசிக் கொள்கிறார்கள்.

சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரு வீடு சுற்றி வளைக்கப்படுகிறது. அந்த வீட்டில்ருந்த முதியவர் திருடர்கள் என்ற பயத்தில் யன்னல் வழியாக கத்தியொன்றோடு எட்டிப்பார்க்கிறார். துப்பாக்கிப் பிடியால் அடித்ததில் அவரது விரல் துண்டிக்கப்படுகிறது.

பின்னர் வீட்டுக் கதவு திறக்கப்படுகிறது. அங்கு சோதனையிட்டச் சென்ற புலி உறுப்பினர்கள் சற்றுப் பின்னதாக வெளியெ வருகின்றனர். வானுக்குள் இருந்த சராவிடம் ஒருவர் வந்து இது தவறான தகவல் என்றும் அவர்களுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

மீண்டும் வான் அடுத்த கைதை நோக்கி நகர்கிறது. இதற்கிடையில் வானில் இருந்தவரிடம் கைதி ஒருவர் தண்ணி கேட்கிறார். புலி உறுப்பினர் போத்தல் ஒன்றிலிருந்த கொக்கோகோலாவை வழங்க முற்படும் போது சரா அவரின் கன்னத்தில் அறைந்து, கெட்ட வார்தைகளால் திட்டுகிறார். போத்தலைத் திருப்பி வாங்கிக் கொள்கிறார்.
உரும்பிராய் பகுதிக்குச் சென்ற சரா குழுவினர் அங்கிருந்த ஆமி குமார் என்று அழைக்கப்பட்டவரையும் கைது செய்கின்றனர்.

அதிகாலை 6 மணிக்கு வான் நல்லூர் வைமன் ரோட்டில் இருந்த முகாமை அடைகிறது.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த முகாமில் மேல் மாடியில் இருந்து சித்திரவதைக் கூக்குரல்கள் கேட்கின்றன. அங்கு கொண்டு செல்லப்பட்ட எமது விபரங்களை ஒருவர் பதிந்து கொள்கிறார். அவரது ஒரு கையில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்திற்குக் கட்டுப்போடப்பட்டிருந்தது. இன்று பிரித்தாபியாவில் கே.பி நடத்தும் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானியப் பிரதிநிதியென தன்னை அறிமுகம் செய்யும் வாசு என்பவர் தான் எமது விபரங்களைப் பதிந்து கொண்டவர் என சில காலங்களின் முன்னதாக அறிந்துகொண்டேன்.

நாங்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறோம். முக்கிய உறுப்பினர்களுக்கான சித்திரவதைக் கூடத்திற்கு ஜெரோம் கொண்டுசெல்லப்படுகிறார். எனையவர்கள் கீழ் தளத்தில் என்னோடு சிறிய அறையொன்றில் அடைக்கப்படுகிறார்கள்.

அங்கு ஏற்கனவே நான்கு பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்ந்து பிரான்சில் செயற்படும் கிருபன் என்பவரும் ஒருவர்.

மறு நாள் மாலை ஒரு தொகுதிக் கைதிகளை விசாரணை செய்வதற்காக புலிகளின் தளபதி கிட்டு வருகிறார். விசாரணையின் முடிவில் சிலருக்கு மேலதிகவிசாரணையும், சிலருக்கு விடுதலையும், சிலருக்கு மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

விசாரணையிலிருந்து மீண்ட கிருபன் தன்னை மறுநாள் காலை விடுதலை செய்யப் போவதாகவும் என்னைப் புலிகள் அடைத்து வைத்திருப்பது குறித்து எனது வீட்டில் சொல்லப் போவதாகவும் உறுதியளித்தார்.

கிருபன் அதிகாலை விடுதலை செய்யப்படுகிறர். இரண்டாவது தொகுதிக் கைதிகள் மதியத்தை அண்மித்த வேளையில் அழைக்கப்படுகிறார்கள். அதில் நானும் இணைக்கப்படுகிறேன். விசாரணைக்காக அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். கிட்டு விசாரணை மேற்கொள்ள வாசு குறிப்பெடுக்கிறார். எனக்கு சற்று முன்னதாக விசாரிக்கப்பட்ட ஒருவர் கிட்டு கேட்ட கேள்விக்கு சரியாகப் பதிலளிக்காமையால் கிட்டு வைத்திருந்த சங்கிலியால் அவரது தலையில் ஓங்கி அடிக்கிறார். அவரின் தலை பிளந்து இரத்தம் ஓட நிலத்தில் சரிகிறார். உடனடியாக அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்ப்படுகிறார்.

நான் அழைக்கப்பட்டதும் கிட்டு மற்றும் ஐடியா வாசு என்ற புலி உறுப்பினர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கின்றனர். கிட்டு, வாசு இருவரும் என்னை அடையளம் கண்டு கொள்கின்றனர். விஜிதரன் என்ற பல்கலைகழக மாணவன் புலிகளால் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டது குறித்த போராட்டத்தின் தலைமைக் குழுவில் நானும் செயற்பட்டதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். விஜிதரன் விடுதலை குறித்து இந்த இருவரையும் நான் முதலில் சந்திருந்தேன். வேறு எதுவும் அவர்கள் பேசவில்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். நான் எதுவும் பேசமல் கையெழுத்திடுகிறேன். அதில் இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது. மேலதிகமாக அவர்கள் எதுவும் பேசவில்லை நான் விடுதலை செய்யப்படுகிறேன்.

முகாமிற்கு வெளியே வந்ததும், அங்கே எனது அம்மாவும் அப்பாவும் காத்துக் கொண்டிருந்தனர். கிருபன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். தவிர பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனான கல்வி கற்றுகொண்டிருந்த எனது கைது குறித்து அங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் எனது விடுதலைக்கான போராட்டம் நடத்த தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அங்கு சென்றதும் தெரிய வந்தது.

மரணத்தின் வாசலைத் தரிசித்துத் திரும்பிய உணர்வு ஏற்பட்டது.

சில நாட்கள் உரும்பிராயிலும் பல்கலைக்கழக விடுதியிலும் வெளியுலகம் தெரியாமல் தங்கிருந்தேன்.

புலிகள் தவிர்ந்த அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் அழித்தொழிக்கப்படும் வரை புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்தச் சந்தர்ப்பததைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை இந்திய அரசுகள் அதன் தலைமைகளைத் தம்மோடு இணைத்துக்கொண்டன. பல போராளிகள் வேறு வழியின்றி தலைமைகளின் வழி தொடர்ந்தனர். இன்றைய ஈ.பி.டி.பி யின் இருப்பும் இந்த அடிப்படையிலேயே உருவானது.

ஈ.பி.ஆர்.எல்.எப், இந்திய இராணுவம்

அழிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. அவர்களோடு அழிக்கப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் இராணுவம் செயற்பட்டது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டயன் குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே தன்னை அறிமுகப்படுத்தியது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன.

தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது.

1988 ஆம் நடுப்பகுதில் ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம்.

1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது.

விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர்.

விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர்.

அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன்.
பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார்.

அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன்.

மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன்.

நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.
அங்கிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர்.

தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார்.

மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார்.

சற்றுப் பின்னதாக இரண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர்.

நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர்.

அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார்.

என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர்.

அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர்.

அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார்.

அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது.

யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி.

இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார்.

பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார்.
எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார்.

மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார்.

சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார்.

புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார்.

நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன்,

“உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை.

அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார்.

பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். சில ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “நல்ல தமிழ்” மட்டும் தான் “தோழர்” பேசினார்.
வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது.

ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார்.

அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது.

மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார்.

மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன்.

சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள்.
வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார்.

எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது.

அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர்.

எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார்.

அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார்.

அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார்.

வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர்.

வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள்  ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள்.

இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன்.

அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்திக்கின்றனர். ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர்.

அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன்.

* வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத் தெருக்களில்…

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

Comments 65

  1. nada kannan says:
    14 years ago

    very touching story..it is an example story how innocent Thamils are treated in Srilanka..

  2. Pingback: Indli.com
  3. veeran says:
    14 years ago

    தமிழர்களுக்கு தமிழர்களே பல்வேறு இயக்கங்களின் பெயரில் அழிவை தேடி தந்துள்ளனர்,

    • நிர்மலன் says:
      14 years ago

      ஈபீஆர்எல்எப் ஈஎன்டிஎல்எப் இந்தியதுணைக்குழு சிறிலங்கா முசுலிம் ஈபிடிபி கருணாகுழு சிறிலங்கா துணைக்குழு இவர்கள் தமிழர்கள்களல்ல சொம்பு தூக்கிகள்.

      • veeran says:
        14 years ago

        புலியை ஏன் விட்டு விட்டீர்கள், அவர்களின் அராஜகம் தானே பேர் போனது

        • நிர்மலன் says:
          14 years ago

          சபா நாவலன் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டும். அவர் மாணவர் என அறிந்ததும் விட்டுவிட்டார்களே. புலிகள் யாரையும் குற்றமின்றி தண்டிக்கவில்லை. இந்திய- சிறிலங்கா சொம்பு தூக்கிகளிற்கு தண்டனை வழங்கியது நீதியே தவிர அராஜகம் இல்லை.

          • MAMANI says:
            14 years ago

            யாரும் யாரையும் குற்றம் சாட்டாமல் கொல்வதில்லை(படுகொலைகள் தவிர) ஆனால் வைக்கப்படும் குற்ற சாட்டு என்ன என்பதுதான் கேள்வி?

        • veeran says:
          14 years ago

          பிரபாகரன் மட்டும் கொல்லப்பட்டு ; அடுத்த கட்ட தலைமைகள் மட்டும் தப்பியிருந்தால் ; இதைவிட அனர்த்தங்களும் ; அழிவுகளும் அதிகரித்திருக்கும். அவர்கள் 10 -12 குழுக்களாகி ஆழுக்காள் போட்டுத் தள்ளிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை மட்டுமல்ல அடுத்த அப்பாவிகளையும்தான். இன்று சிங்கள இராணுவத்தோடு முன்னின்று செயல்படுபவர்களும் புலிகள்தான். புலம் பெயர் நாடுகளில் முக்கிய காட்டிக் கொடுப்புகளில் ஈடுபடுபவர்களும் புலிகள்தான்

          • நிர்மலன் says:
            14 years ago

            என லங்காபுவத் செய்திகள் சொல்கின்றன.

          • Thilakar Kamalaselvan says:
            14 years ago

            ஈ.பி.ஆர்.எல்.எப் இல் மூன்று பிரிவுகள் இருந்ததாக சபா நாவலன் சொல்வது சரியானது, அதில் முற்போக்கு அணி வெளியிலிருந்த சபா நாவலன் போன்றவர்களோடு தொடர்பு வைத்திருந்தது, இந்தியாவுக்கு அவர்களை அழிப்பதே நோக்கமாக இருந்தது. முழு ஈபி.ஆர்.எல்.எப் ஐயும் அழித்துவிட்டு பிற்போக்கு தலைமையை தன்னோடு இணைத்துக்கொண்டது. பெரும்பான்மையாக இருந்த முற்போக்கு வாதிகள் புதிய அமைப்புக்களை உருவாக்க முயற்சித்தார்கள், தீப்போறி, தமிழீழ தேசிய விடுதலை முன்னணி போன்றவற்றோடு இணைந்துகொண்டார்கள், ஒரு பக்கத்தில் ஈ,பி,ஆர்,எலெப் தலைமையும் புலிகளும் இலங்கை அரசும் அவர்களைத் துரத்தியது. பலர் புலிகளாலும் ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் போட்டுத் தள்ளப்பட்டார்கள். எஞ்சிய சிலர் இந்தியாவிலும் சிலர் ஐரோப்பாவிலும் தஞ்சமடைந்து விரக்தியின் பிடியில் நடைப்பிணமாக வாழ்ந்தார்கள். ம்.

          • Dr. Sri S. Sriskanda says:
            13 years ago

            Did you read the report of Colonet Gothapaya Rajapakse. The initial strength was only 30,000. With 80.000 joining the Army they had the upper hand.he ini

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          It was great doing relief work here at Batticaloa after the cyclone of 1978 with Sri Padmanaba.

  4. SUNTHAR says:
    14 years ago

    இறந்தவர்களும் சரி, இப்போது இருப்பவர்களும் சரி, மக்கள் மத்தியில் பிரமாண்டமான தேசிய வீரர்கள் போல் உருவகிக்கப்படுகிரார்கள்.
    நாம் எதனை விதைக்கிறோமோ அதிலிருந்து வருவனவற்றையே அறுவடை செய்ய முடியும். அவைக்காற்றுக் கழகத்தில் நாடகம் நடிக்கும் வாசுதேவன் இன்று புலிகளை திட்டுகிறார். சுரேஷ் பிரேமச்சந்திரன் , வாசுதேவன் போன்றோர் முதலில் தம்மை சுய- விமர்சனம் செய்து கொள்ளட்டும். மிகக் கொடுமையான அனுபவம் நாவலன்.

  5. நெருஞ்சி says:
    14 years ago

    1.அய்யர் வாசகர்களுக்கு பதில் தராது நூல் வெளியிட்டது நியாயமா?
    2. நீர்க் குவளையை வீசி எறிந்த தீபம் தொலைக்காட்சி சம்பவத்திற்கு,ஒரு சிறு வருத்தம் கூடத் தெரிவிக்காத தீபத்தில்,சபா நாவலன் தோன்றுவது எதற்கு?
    மேல் குறிப்பிட்ட இரண்டு அராஜக விடையங்களுக்கும், அளிக்கின்ற பதில்தான்,நீங்கள் நடந்த நடக்கிற,நடக்கப்போகிற பாதையை,மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தும்.

    • SUNTHAR says:
      14 years ago

      தீபன் அனஸ் அவரிடம் தனது வருத்தத்தை தெரிவித்து விட்டார். அது நல்ல ஊடக பண்பு.

  6. danush says:
    14 years ago

    வாசிக்கும் போது கண்ணீர் வருகிறது. தங்கன் பிரதாப் போன்றவர்கள் இப்போ என்ன செய்கிறார்கள்.

    • நாவலன் says:
      14 years ago

      தங்கனைப் பற்றி எனக்குத் தெரியாது. ஈ.பி.ஆர்.எல்.எப் முன்னை நாள் உறுப்பினர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பிரதீப் பிரான்சில் வாழ்வதாக நண்பர் ஒருவர் கூறினார்.

  7. Saroja says:
    14 years ago

    ஏந்த ஒரு அமைப்பும் புல்லுரிவிகலாக இருக்காமல் இல்லை
    அனால் இவர்களுடய அராஜகம் இவர்கள் சார்ந்த அமைப்பை இனம் காட்டும்
    இனி மாதிரம் இந்த புல்லுருவிகளுக்கு இடம் வையாதிங்க.

  8. ethayam says:
    14 years ago

    இந்த ஒருங்கு புள்ளிக்குள் ஏன் ரெலோ வரவில்லை?

  9. Vaani says:
    14 years ago

    எல்லா தமிழ் இயக்கங்களும் ஏதோ ஒரு வகையில் அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தியது. இல்லை ; கொஞ்சம் கொஞ்சமாக அழித்தது. சிங்கள இராணுவம் செய்ததை விட ; அதிக தமிழர்களை அழித்தவர்கள் தமிழ் இயக்கங்களைச் சார்ந்தவர்களேயாகும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. அது புலியானால் என்ன புல் என பெயர் வைத்தால் என்ன? தோழர் ஆனால் என்ன சகோதரன் என்றால் என்ன? எல்லாமே ஒன்றுதான்!

    இன்றைய போர் முடிவு உண்மையிலேயே மீதமிருக்கும் தமிழருக்கு ஏதோ ஒரு வகையில் விடிவுதான்.

    பிரபாகரன் மட்டும் கொல்லப்பட்டு ; அடுத்த கட்ட தலைமைகள் மட்டும் தப்பியிருந்தால் ; இதைவிட அனர்த்தங்களும் ; அழிவுகளும் அதிகரித்திருக்கும். அவர்கள் 10 -12 குழுக்களாகி ஆழுக்காள் போட்டுத் தள்ளிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களை மட்டுமல்ல அடுத்த அப்பாவிகளையும்தான். இன்று சிங்கள இராணுவத்தோடு  முன்னின்று செயல்படுபவர்களும் புலிகள்தான். புலம் பெயர் நாடுகளில் முக்கிய காட்டிக் கொடுப்புகளில் ஈடுபடுபவர்களும் புலிகள்தான்.

    பிரபாகரனின் சாவுக்கு பின் புலத்தில் எத்தனை குத்து வெட்டுகள்? இங்கு கையில் ஆயுதமில்லாமலே இவ்வளவு? நாட்டில் இவர்கள் ஆயுதத்தோடு இருந்திருந்தால் நிலமை என்னவாகியிருக்கும்? இனி ஒரு இயக்கமும் சிறீலங்காவில் தலை தூக்க விடலாகாது. அதுவே தமிழருக்கான பாதுகாப்பு.

    இன்று உரிமையை விட உயிரே அந்த மக்களுக்கு பெரிது.

    • MAMANI says:
      14 years ago

      ஆயுதப்போராட்டத்தில் மக்களுக்கு வெறுப்பேத்தியதுதான் புலிகள் எமக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.

  10. நெருஞ்சி says:
    14 years ago

    //SUNTHAR. Posted on 12/21/2011 at 9:05 pm
    தீபன் அனஸ் அவரிடம் தனது வருத்தத்தை தெரிவித்து விட்டார். அது நல்ல ஊடக பண்பு.//
    பொதுமக்களின் தீர்ப்பைக் கோரி, ஒர் காணொளி ஊடகத்தில் நடந்த அராஜகத்தை, சபா நாவலன் வெளிக் கொணர்ந்தார்.
    அதன்பின் மூடிய திரைக்குள் முடிவைத் தேடுதல்,பொதுமக்களை ஏமாற்றும் பணி.
    சுடுபாடுகளை ஒளித்தல்,நியாயம் கற்பித்தல், புலி செய்யக்கூடாது;நாங்கள் செய்யலாம் என்கிற செக்குமாட்டுச் சிந்தனைக்கு வழிவகுக்கும்.
    இணைய தர்மம் இடறிப் போகிற இடத்தில்,எந்தத் தர்மம் வழி நடத்தும்?

    எனது கேள்வி இனியொரு-சபா நாவலனுக்கானது.இதில் SUNTHAR வேறு நபர எனில்,தெரியாத விடையங்களில் மூக்கு நுழைத்தல் ஆபத்தானது

    • நாவலன் says:
      14 years ago

      நெருஞ்சி,
      ஐயரின் நூல் வாசகர் கருத்துக்களையும் உள்வாங்கி செழுமைப்படுத்தப்பட்டு வெளிவருகிறது. நூல் வெளியான பின்னர் அது குறித்த கருத்துக்களை நிங்கள் தெரிவிக்கலாம். தவிர, இனியொரு என்பது பலரின் கூட்டு முயற்சியில் வெளிவருகிறது. நூல் என்பது ஐயரின் தனிப்பட்ட அரசியல் அனுபவங்களை உள்ளடக்கியது.
      தீபம் தொலைக்காட்சியில் நடைபெற்ற தாக்குதல் திரை மறைவில் நடைபெற்ற ஒரு சம்பவம். அதற்கு அனஸும் ஏனைய ஊழியர்களும் மன்னிப்புக் கோரியுள்ளனர். தவிர, தீபத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? அது ஒரு தனி நபர் குறித்த விடயம்.
      இன்று வரைக்கும் புலம் பெயர் நாடுகளில் இருந்து சிந்தனை மாற்றத்திற்கான எழுத்துக்களை வெளிக்கொண்டு வருவது தவிர என்னால் பெரிதாக ஏதும் செய்துவிட முடியாது. நீங்கள் நடக்கப் போகின்ற பாதை குறித்து எல்லாம் பேசுகிறீர்கள்.
      பொதுவாக ஐம்பது வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் முன்னை நாள் போராளிகள் அனைவரதும் நிலமை இதுதான். நாங்கள் புரட்சி செய்யப்போகிறோம் எனப் படம் காட்டிக்கொண்டிருப்பது எல்லாம் வேடிக்கையானது. அது மக்கள் மத்தியில் இருந்து மட்டும் தான் உருவாகும். இலங்கையில் வாழும் மக்களோடும் அங்கு நிலவும் உற்பத்தி முறையோடும் குறைந்தபட்ச தொடர்புகளும் அற்ற நாங்கள் அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியாது. ஆதரவளிக்கலாம். அல்லது எமது மத்திய தரவர்க்க மனோ நிலையில் இருந்து வெளியே வருவோமானால், ஐரோப்பிய நாடுகளின் புரட்சி அமைப்புக்களோடு இணைந்து செயற்படலாம். அது வரைக்கும் எமது பாதை இணைய வெளியைத் தாண்டாது.

    • Dr. Sri S. Sriskanda says:
      12 years ago

      It was great seeing Theepan with Pulidevan and Major General Sarath Fonseka. He was acting like an American and was trying to say, I will kick his ASS.

  11. Danush says:
    14 years ago

    நீங்கள் சொல்லும் ஈ.பி இல் இருந்த அந்த முற்போக்கு அணி இப்ப எங்கே? இலங்கையிலா?

  12. Danush says:
    14 years ago

    புலிகள் ஏன் இந்த இயக்கத்தை அழிக்க வேண்டிய தேவை வந்தது.? இவைகளை பற்றி எழுதும் நீங்கள் ஏன் புதிய அமைப்பை தொடங்கி வழி நடத்தவில்லை? இப்போதும் காலம் கடக்கவில்லையே.

    • நாவலன் says:
      14 years ago

      தனூஷ்,
      புலம் பெயர் நாடுகளிலிருந்து யாரும் எதையும் வழி நடத்த முடியாது. வேண்டுமானால் இலங்கையில் உருவாகும் அமைப்புக்களுக்கு ஆதரவு நிலையில் செயற்படலாம். நெருஞ்சியின் கேள்விக்கு இது குறித்து எழுதியதைப் படிக்கவும்.
      ஈ.பி.ஆர்.எப் மட்டுமல்ல ஏனைய இயக்கங்களில் உருவான முற்போக்கு சக்திகள் உறுதியான அரசியல் கட்சியும் கோட்பாடும் அற்ற நிலையில் உதிரிகளாகச் சிதைந்து போயினர். இப்போது புலம் பெயர் நாடுகளில் தமது சொந்த நலன்களையும் அடையாளத்தையும் முன் நிறுத்தியே பலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

      புலிகள் இயக்கத்தின் வரலாறு என்பது ஏனைய இயக்கங்களின் உருவாக்கத்தை ஆரம்பத்திலிருந்தே நிராகரித்து வந்துள்ளது. இவ்வாறான குழுவாதம் எம் ஒவ்வோருவரிடம் உள்ளது. இதன் நிறுவனமயமான வடிவமே புலிகள்.

  13. Mahendra says:
    14 years ago

    ஆரியப் பண்பாட்டையும், வர்ணாச்சிரம வாழ்வியலையும் அறிந்தோ அறியாமலோ ஏற்று வாழ்ந்துவரும் தமிழர்களாகிய நாங்கள்… அதன் பெறுபேறுகளை, அடுத்தவன் முன்பு கேவலமாக, ஓங்காளமிட்டுச் சத்தியெடுக்கிறோம்! அந்த ஆரியத்தையும், வர்ணாச்சிரமத்தையும் இறுகப் பற்றியபடியே!.

    வர்ணாச்சிரமத்தை கைவிட்டால் எங்களிடையே சாதியமைப்பின் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி ஒற்றுமை வளரும். ஆரியத்தைக் கைவிட்டால் தமிழருடைய முத்தமிழும் தமிழருக்கே சொந்தமாகி கடவுளும் தமிழ்மொழி புரிந்து தமிழர்க்கும் அருள்புரிவார்.

  14. Thevan 2 says:
    14 years ago

    தற்காப்பு போராட்டம் . உரிமைப் போராட்டம் இனவிடுதலைப் போராட்டம் வர்க்கவிடுதலைப் போராட்டம் இன்னும் சில கலவைகளுடன் கூடியதே எமது போராட்டம் . இதில் எந்த இயக்கத்திற்கோ, குழுவிற்கோ அது இடதோ, வலதோ அல்லது முற்போகோ, பிற்போகோ ஒருதரிட்கும் தெளிவான இலக்கு,அதற்கான மூலோபாயம் மற்றும் உடனடி குறுகிய,நீண்ட வேலைத்திட்டங்களும், பார்வையும் இருக்கவில்லை. குறிப்பாக பூகோள அரசியல்(external factors)), நாம் இருக்கும்(internal factors) சமூக அமைப்பு (அரை காலனிய ,அரை நிலப்பிரபுத்துவ ), நாம் இருக்கும் சமூக அமைப்பு மேற்கூறிய கலவைப் போராட்த்திட்கு எதுவரை,யாரால் தலைமை , எதுவரையான சமூக

    மாற்றத்திற்கு , போன்ற கேள்விகட்கு தெளிவும் ,தெரிவும் இருக்கவில்லை.

    ஒப்பீட்டளவில் புலிகளை விட சிறிது தலைமை விசுவாசம் குறைந்தவர்களே ஒழிய.மற்றும் படி அராயகம்,மனித உரிமை மீறல்,பூகோள அரசியல் பார்வை போன்றவற்றில் புலிக்கு சளைத்தவர்கள் அல்ல.

    இதுவே இன்றைய எமது சமூக அமைப்பு (அரை காலனிய ,அரை நிலப்பிரபுத்துவ ) உருவாக்கக்கூடிய அதியுச்ச முற்போக்கு போராட்ட அமைப்பு,வடிவமாகும். நாம் நம் சமூக அமைப்பை புரிந்து அதற்கான நகர்வுகளை மேற்க்கொள்ளாதவரை இனியும் நாவலனிட்கு நடந்தவையே தொடரும்.

    • Thevan 2 says:
      14 years ago

      1.Getting our house in order.

      2.Understand the internal factors, problems.

      3.blaming the problem is not the solution for that problem…………………..so on.

    • நாவலன் says:
      14 years ago

      தேவன்,எம்மில் பலர் எண்ணுவது போல போராட்டம் தோற்றுப்போனது நிர்வாகக் குறைபாடுகளால் அல்ல. நிர்வாகம் என்பது கூட பிரித்தானியா அறிமுகம் செய்த பொறிமுறையையே நாம் இங்கு மறுபடி பிரயோகிக்கிறோம். பிரபாகரன் கூட இப்படித்தான் சிந்தித்தார். இராணுவ நிர்வாகக் கட்டமைபை உருவாக்கினால் போதுமானது என்று. இந்தச் சிந்தனையின் அடித்தளம் தகர்க்கப்பட வேண்டும். நீங்கள் ஒத்துக்கொள்வது போல அரை நிலப்பிரபுத்துவ சமூகம் ஒன்றிலிருந்து சிந்திக்க முற்படுகிறோம்.அரை நிலப்பிரபுத்துவம் என்பது முதலில் தனிமனித தூய்மை வாதத்தையும் பின்னர் அதன் மறுபகுதியான அரைக் காலனியத்தின் நிர்வாகத்தையும் எமது சிந்தனையில் விதைத்துள்ளது. இந்த இரண்டும் தான் புலிகள், புளட், உட்பட அனைத்து இயக்கங்களும். இந்த நிலைமைகளிலிருந்து வெளியேற வேண்டுமானால் சமூகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கம் என்பதிலிருந்து நாம் புதிய வகையான சமூக நிர்வாகத்தை ஆரம்பிக்கலாம். மறுபுறத்தில் யார் கீழணியில் உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலணியில் உள்ளவர்களது நலன்கள் எப்போதும் தேசத்திற்கு எதிரானது. அவர்கள் அன்னிய சக்திகளோடு கைகோர்த்துக் கொள்வார்கள். ஆக போராட்டத்தை எந்த அணி தலைமை வகிக்கும் என்ற முடிவுக்கு வரலாம். இதை வைத்துக் கொண்டு போராட்டம் குறித்த நெறிமுறைய (protocol)உருவாக்கலாம். இவை அனைத்தும் அடிப்படையானவை இவை எமது போராட்டத்தில் missing ஆன படியால் தான் இன்று அழிவுகள்.இவை அனைத்தும் குறித்து 2008ம் ஆண்டில் புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இனியொருவில் நிறையக் கட்டுரைகள் வெளியாகியுள்ளது.

      • P.V.Sri Rangan says:
        14 years ago

        சரியான கருத்து நாவலன்.ஆனால்>புலிகள் ஒரு திடீர் வரவாக அந்நியச் சக்திகளால் உட்புகுத்தப்பட்டு>இந்தி ரோவால் தொடர்ந்து ஆலோவனை கொடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவொரு அமைப்பு என்பதையும் சுட்டிக் காட்டவும்.ரோவின் ஆலோசனையின் விளைவே>அநுராதபுரத்தில் சிங்கள அப்பாவி மக்களது கொலைகள் நிகழ்ந்தது.அந்நியச் சக்திகளது அடியாட்படையின் விருத்தியே இன்றைய புலிகளது மேல்நிலைத் தலைவர்கள்-கே.பி.உட்பட நடாத்தும் நாடகம்.இதையும் குறித்துத்தாம் புலிகளை மதிப்பீடு செய்தாகவேண்டும்.

        • Thevan 2 says:
          14 years ago

          தற்காப்பு போராட்டம் :புலிகள் மட்டும்மல்ல அனைவருமே தற்காப்பு போராட்ட ஆயுததிட்காக இந்தியாவையே நம்புமளவுதான் பூகோள அரசியலை அறிந்திருந்தனர். RAW, புலி, மகிந்தா,சோனியா,ஒட்டுக்குழு, அது ,இது என்று எம்மைத்தவிர பிற காரணிகளின் மீது பழி போடும் நம் சமூக அமைப்பை புரிந்து கொள்ளாதவரை எந்த நகர்வும் நமது எதிரிக்கு சாதகமாகவே அமையும்.

  15. நெருஞ்சி says:
    14 years ago

    1. வாசகர்களின் வினாக்களுக்கு பதில் அளிக்கப்படும் என்பதும்,தவறு சுட்டிக்காட்டப் பட்டபின் ஐயரால் திருத்த விளக்கம் அளிக்கப்பட்டதும் ஏற்கனவே வந்தவை.ஐயரின் சுகவீன செய்தி ‘தேசம்நெட்’டில் வாசித்து,எழுதிய என் கருத்து தணிக்கை செய்யப்பட்டு,ஐயரின் உரையாடல் மீள்பிரசுரம் செய்யப்பட்டது இனியொருவிற்கு நினைவிருக்கலாம்.
    இதில் வாசகர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்கும்,இனியொரு தன் தவறினை மறைக்க “உரையாடல் மீள்பிரசுரம்” செய்தமையும்,இணைய தர்மம்,நேர்மை போன்றவற்றை சமாதி கட்டி விட்டது.

    2.”கீறிஸ் யக்கா” என்கிற ஆயுதத்தை,சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராகப் பிரயோகித்ததின் விளைவே அந்த உரையாடல்.அந்த “கீறிஸ் யக்கா” தாக்குதல்,சபா நவலானால் வெளிக் கொணர்ந்தது,”தனி நபர் குறித்த விடயம்” என்பதை விட முக்கியமானது.
    அந்தத் தாக்குதல்,ஒரு சிங்கள பௌத்த பேரினவாத அடிவருடியால்,ஒரு தமிழ் மனிதனுக்கு எதிராக,”ஜனநாயக நாட்டில்” நடத்தப்பட்ட தாக்குதல்,ஒளித்து வைக்கப்படுவதற்கல்ல;மாறாக அது பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக,சிங்கள பௌத்த பேரினவாதத்தால் முடுக்கி விடப்பட்ட குறியீட்டு அச்சுறுத்தல் எனபதை, நாம் மறுக்க முடியாது.
    இதில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மை நிலையை ஓரங்கட்டி விட முயற்சிப்பது மடமைத்தனம்..
    “தனி நபர் குறித்த விடயம்” என்பதுதான் புலிகளின் தோல்வியில் ஒன்று என்பதை வரலாறு ஓங்கி அறைந்திருக்கிறது.

    3.தோல்வி மனிதர்கள்,துவண்ட மனங்கள்,தமிழ்ப் பணையக் கைதிகளின் வாழ்நிலையை வைத்து, சோர்வடையக் கூடாது.

    4.இலங்கைத்தீவின் அறுவதாண்டுகளுக்கு மேலான போராட்டத்தின் தீர்வு தனி நாடு என்பதைத் தவிர எதுவுமில்லை.தலைமை,போராட்ட முறை தோல்வி அடைந்துள்ளது. தவிர தமிழினப்படுகொலையின் உச்ச நிலையில் உள்ள சிங்கள பௌத்த பேரினவாதம் நிர்மூலமாக்கபடல்,சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல,,மனித உலகிற்கு நாம் செய்யக் கூடிய சேவை.அந்தச் சேவை தமிழிழம் உருவாக்குவதிலே தங்கியுள்ளது.

    5.”புரட்சி செய்யப்போகிறோம் எனப் படம்”,”உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியாது.” “புலிகள் இயக்கத்தின் வரலாறு”என்கிற வாய்ப்பாட்டு முறை பற்றி,பிறிதொரு தருணத்தில் தொடர்வோம்.

  16. thamizhan says:
    14 years ago

    மக்கள் ஆதரவு இருந்தால் எந்த தலைவர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்கவே முடியாது.அதனால்தான் “சும்மா நான்கு” தெருவுக்குள் மட்டும் ஆதரவை வைத்திருந்த மற்ற இயக்க தலைவர்களை புலிகள் இயக்கம் அழிக்கும்போதும் மக்கள் வேடிக்கை பார்த்தார்கள்.புலிகளின் ஆயுததத்திற்கு மக்கள் பயந்துகொண்டார்கள் என்பது சும்மா பூச்சாண்டி காட்டும் கதை.புலிகள் அழிந்ததற்கு இங்கு பல பேர் பல புதிய தேற்றம் எழுதிக்காட்டுகிறார்கள்: இவை எல்லாம்நேரத்தை போக்குவதற்கே.போராட்டவாதிகள் பலமாய் இருக்கும் போது தங்களது இலட்சியத்தை அடைந்து விட வேண்டும். இல்லையெ அந்த இயக்கம் உள்ளிருப்பவர்களாலாயே அழிக்கப்படும். அதனால் தான் மிகப்பெரிய மக்கள் ஆதரவு இருந்த்தும் புலிகழைப் புலிகளாலேயே காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.ஒரு தலைமையின் கீழ் 35 வருடங்கள் போராடவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.இந்த வருடங்களுக்குள் ஓன்றில் இலட்சியம் அடைந்து இருத்தல் வேண்டும். அல்லது தலைமை மாற்றப்பட்டு போராட்டம் தொடர்ந்து இருத்தல் வேண்டும். இவை இரண்டில் ஒன்றுநடந்து இருந்த்தால் , இன்று புலிகள் உயிரோடு இருந்து இருப்பார்கள். இதைவிட்டு, புலிகள் என்னை அப்படி அடித்தார்கள் , என் நண்பனை இப்படி அடித்தார்கள் ; இப்படி புளீச்ச கதைகளை ச்சொன்னாலும், மக்கள் புலிகளை ஆதரிக்கும் வரை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள்

    • Kumar says:
      14 years ago

      மக்கள் ஆயுதக்கவா்ச்சியில் மயங்கிக்கிடந்ததால்தான் இயக்கங்களின் தலைமைகள் ஆயுதங்களின் உதவியுடன் தம்மை கதாநாயகா்களாக நிலைநிறுத்த முயன்றார்கள்.
       தமிழன், நான் எப்போதும் மக்களின் பக்கம்தான் எந்த தலைமைக்கோ இயக்கங்களுக்கோ கொடி பிடிக்கும் கூட்டத்தை சோ்ந்தவனல்ல இருந்தாலும் சொல்கிறேன் நம் மக்களிடத்தில் ஏதோ ஒரு குறைபாடொன்று என்றுமே இருக்கின்றது அது என்னவென்று புரிந்துகொள்ளமுடியாமல் 30 வருடங்களாக தவிக்கிறேன். இதிலிருந்து புலிகளை ஆதரிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    • மகேன் மாசில் says:
      14 years ago

       தாங்கள் கூறும் புலிகளை மக்கள் ஆதரித்து கொண்டே இருப்பார்கள். யார் அந்த புலிகள் பிரபாகரன் பெயரை மட்டும் உச்சரித்து கொண்டு பிழைப்பு நடத்துபவர்களா? இவர்களால் ஒரு மக்கள் போராட்டத்தை நகர்த்தி அதன் மூலம் மக்களை விடுதலை பெற செய்ய முடியுமென நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? அதென்ன 4 தெருவில் ஆதரவு வைத்திருந்த இயக்கங்கள் வல்வெட்டிதுறையில் 4 தெருவில் ஆதரவு வைத்திருந்த இயக்கம் பற்றியா பேசுகிறீர்கள் 1985 இலேயே 8,000 பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளை கொண்டிருந்த இயக்கங்கள்  ஈழத்திலிருந்ததை மறந்து விடாதீர்கள்.

      • நிர்மலன் says:
        14 years ago

        அதென்ன பயிற்சி மகேன் மாசில்
        ? எப்படி இராணுவதுணைகுழுவாய் இயங்கும் பயிற்சியோ! அவர்களை போராளிகள் என்று சொல்வதில்லை.

        • மகேன் மாசில் says:
          14 years ago

          கருணா அம்மானிடமும், பானுவிடமும் பயிற்சி பெற்ற போராளிகள் 
          ப்ற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை நிர்மலன் 

  17. மகேன் மாசில் says:
    14 years ago

    ஏன் நாவலன் நீங்கள் டெலோ உறுப்பினர் என்று இந்திய இராணுவத்திடம் கூறியிருந்தால் உடனேயே விடுதலை செய்திருப்பார்களே!

  18. அரிச்சந்திரன் says:
    14 years ago

    மகேன் மாசில், 1985 இலேயே 8,000 பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளை கொண்டிருந்த இயக்கங்கள் ஈழத்திலிருந்ததை மறந்து விடவுமில்லை மறக்கவும் முடியாது. இவர்களின் ஒரு பகுதியினர்தான் மாலைதீவை கைப்பற்ற கப்பலேறிப்போனவர்கள் என்பதையும் மறந்துவிடவுமில்லை. அக்காலத்தில் தமிழர்களின் சோற்றுப்பார்சலை மிக வேகமாக தின்று தீர்த்த பெருமையும் இவர்களையே சாரும்.

    • மகேன் மாசில் says:
      14 years ago

      உண்மைதான் அரிச்சந்திரன் மாலைதீவிற்கு சென்று செத்தொழிந்தவர்கள் தாங்களே தான் அழிவை தேடினர் அதனால் உலகில் வாழ்ந்த மற்றைய தமிழன் இம்மியளவும் பாதிக்கபடவில்லை. அதேபோல் கூலிக்கு செய்யப்பட்ட ராஜீவ் கொலையும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தமிழரின் அனைத்து நலன் களையும் உணர்வு. உடமை, உயிர்களையும் குழிதோண்டி புதைதவர்களையும் மறக்காமல், உங்கள் சோற்று பார்சல்களை தின்று தீர்த்து அதன் மூல்ம் வங்குரோத்து ஆக்கியவர்களையும் மறக்காதீர். இனியாவது சரியான திசைகளில் பயணிப்பவரை அடையாளம் கண்டு ஆதரிப்போம்

      • thamizhan says:
        14 years ago

        ஏன் ராசீவ்காந்தி உயிர் மட்டும்தான் உயிர், ஈழத்தமிழ்மக்களது உயிர் என்ன வெறும் மயிரோ??? ராசீவ் இரு எண்டால் இருக்கவும், படு எண்டால் படுக்கவும், அடி எண்டால் அடிக்கவும்நாங்கள் என்ன இந்தியாவிலா இருந்தோம். இல்லை இந்தியாவிற்க்காவா போராடினோம். புளட்டுக்கு ஈழத்தை பிடிப்பதை விட்டு யார் மாலதீவை பிடிக்கச் சொன்னது. அதுக்காகவா தங்கள் பிள்ளைகளை பெற்றோர் போராட்டத்துக்கு அனுப்பினர். தனது மண்ணுக்கும் , மானத்துக்கும் , இருப்பிற்கும் அச்சுறுத்தல் வரும் போது எந்த மானமுள்ள உயிரும் போராடத்தான் சசெய்யும். அதைதான் புலிகளும் இந்திய ராணுவத்திற்காகவும், ராசிவ்விற்காகவும் செய்தனர். ராசிவை கொன்றது புலிகளை அழிக்கவும், ஈழப்போராட்டத்தை தன் வசப் படுத்தவும் இந்தியாவிற்கு ஒருநொண்டி சாட்டு. ராசிவ் மட்டும் பெரிய உத்தமரோ. போராட்டம் தோற்றால் தலைமையும், தலைவனையும் தூற்றுவது என்றால் , வெள்ளையனை எதிர்த்து வெல்லமுடியாது என்று தெரிந்த்தும், அந்தக் காலத்தில் ஆயிரக்கணக்கான இளையர் உயிர்களை போராட்டத்துக் அழைத்து அழிக்க காரணமான சங்கிலியன், பண்டாரவன்னியன் , கட்டபொம்மன் எல்லரையும் ஏன் தூற்றாமல் விட்டீர்கள்: போராடும்போது ஒன்று சேர்ந்து , ஒருமித்து, தோள்கொடுத்து போராடாமல், குழிபறித்து, கொன்றழித்து விட்டு, இப்போது ஏன் குய்யோ, மாய்யொ என்று கத்தி, முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள் மாசில்………

        • veeran says:
          14 years ago

          அட என் வீரம், தாங்கள் அங்கே ஐரோப்பாவில் இருந்து இனயத்தில் போராடாமல் இங்கே வந்து போராடவும், வரும் போது பிள்ளைகளையும் கூட்டி வந்து இயக்கம் ஆரம்பிக்கவும்,. தங்களுக்கும் ஒரு கோவனம் தயராக உள்ளது, தங்கள் தலைவர் கட்டியது போல தான், வெள்ளை கொடி வரும் போது லன்டனில் வாங்கி வரவும்

        • மகேன் மாசில் says:
          14 years ago

          தோள் கொடுத்து போராடி விழுப்புண் பட்ட தமிழா உனக்கு கிடைக்கும்
          வச்திகளில் சில துளிகளையாவது உம்மோடு சேர்ந்து போராடி இன்று 
          ச்மூகத்தில் புறந்தள்ளபட்டிருக்கும் உம் தோழருடனும் பகிர்ந்து
          கொள்ளும்.
          கட்டபொம்மனும்.பண்டார வன்னியனும் பின்வாங்கி(தந்திர பின்
          வாங்கல்) பின் எதிரியை தாக்கும் சந்தர்ப்பம் கிடைத்து அதை பயன்படுத்தாமல்
          விட்டிருந்தால் அது தவறுதான் ஆனால் நேற்றுநடந்த முள்ளிவாய்க்கால்
          பற்றி சரியாக தெரியவில்லை ப்ண்டாரவன்னியன் என்ன செய்தான் என்பதை எப்படி கணிப்ப்து. ஆனால் ஏகபிரனிதிக்கு ஆசைபட்டு மற்ற தமிழ் மறவரை வன்னியன் அழிக்கவில்லை

    • Kumar says:
      14 years ago

      பண்பு மிக்க,வீரம் கொண்ட அற்புதமான போராளிகள் அத்தனை இயக்கங்களிலுமே இருந்தார்கள் ஆனால் தவறான தலைமைத்துவங்களால் அவா்கள் சிதைக்கப்பட்டுவிட்டார்கள் என்பதில் யாருக்கும் கருத்து முரண்பாடு இருக்கமுடியாது.உத்தரப்பிரதேச மலைப்பள்ளத்தாக்குகளில் நிர்மலனோ அரிச்சந்திரனோ கூறும் துணைக்குழுக்கள் மட்டும் பயிற்சி எடுக்கவில்லை சாச்சா புலிகளும் இருந்தார்கள் என்பதை மறக்கலாமா.

      புலிகள் மிகவும் தீவிரமாக போராடிக்கொண்டிருந்தவைளை அவா்களுடன் இணைந்து போராடாமல் பொருளாதார நிமிர்த்தம் அகதிகளாக வெளியேறிய  பலருக்கு அன்னிய தேசத்திற்கு வந்தபின்புதான் நாட்டுப்பற்றும் புலிப்பற்றும் ஏற்பட்டு யாவையும் கெடுத்தது யாவரும் அறிந்ததே, இருந்தும் அதை அவா்கள் தொடர முயல்வதுதான் வேடிக்கை.

      • மகேன் மாசில் says:
        14 years ago

        புலம்பெயர்ந்த அரசியல் வியாபாரிகளிடம் புலித்தலைமை இறுதிநேரத்தில் ஏமாந்து விட்டது. இது தெரிந்தும் பலர் அதை ஏற்க மறுக்கின்றனர். மக்களுக்கு இப்போ உண்மையான கோபம் புலம்பெயர் புலித்தலைவர்கள் (கே.பி உட்பட) மீதுதான் இருக்க வேண்டும் ஆனால் அது இங்கு திசை திருப்பபட்டுள்ளது எம்மக்களின் இன்றைய நிலைக்கு கருணா, டக்ளசைவிட இவர்களின் பங்கே அதிகம் இவர்கள் புலிகொடிக்கு பின்னாலும் பிரபாகரனின் இறப்பை கேள்விக்குறியாக்குவதன் மூலமும் தங்கள் கோர முகங்களை மறைத்து நிற்கின்றனர்.

    • மகேன் மாசில் says:
      14 years ago

      32 மாதங்களுக்கு முன் நெருக்கடி நிதி என்ற பெயரில் உங்களிடம் ஆயிரக்கணக்கில் மோசடி பண்ணியவர்களை மறந்து மன்னித்தும் விட்டீர் ஆனால் 27 வருடங்களுக்கு முன்னால் 10 பார்சல் வாங்கி திண்டவன் மீது ஏன் கொலைவெறி?

  19. veeran says:
    14 years ago

     அக்காலத்தில் தமிழர்களின் சோற்றுப்பார்சலை மிக வேகமாக தின்று தீர்த்த பெருமையும் இவர்களையே சாரும்.

    ஆனால் தமிழர்களிம் உயிரை குடித்த பெருமை புலிகலுக்கே  சாரும்

    • Thevan 2 says:
      14 years ago

      மக்கள் நலன்களை மீறிய புலி சார்பு , புலி எதிர்ப்பு , அல்லது மக்கள் நலன்களை மீறிய இன்னுமொரு குழு சார்பு, குழு எதிர்ப்பு என்று குழு வாதத்திற்குள் இருப்பது தான் நாம் 60 வருடமாக கற்றுக் கொண்டது.

      குழு வாதத்திற்குள் குறுக்கி மீண்டும் 1980த்கு போக வழி தேடும் போக்கு தான் எமது சமூக அமைப்பு (அரை காலனிய ,அரை நிலப்பிரபுத்துவ ) உருவாக்கக்கூடிய அதியுச்ச முற்போக்கு போராட்ட அமைப்பு,வடிவமாகும்.

      நாம் நம் சமூக அமைப்பை புரிந்து அதற்கான நகர்வுகளை மேற்க்கொள்ளாதவரை மீண்டும் மீண்டும் மக்கள் நலன்களை முன்னிறுத்தாத குழு வாததிட்குள்ளேயே போய் விழுவோம்.

  20. thamizhan says:
    14 years ago

    மாசில் ,நான் கடந்த இருவது வருடங்களாய் ஈழப்போராட்டத்துக்கு சகலவழிகளிலும் தோள்கொடுக்கிறேன்.எனக்கு தாய்மண்மீது பற்று வைப்பதற்கும், தாயகமக்களை காப்பதற்கும் பாடம் யாரும் சொல்லித்தரத்தேவை இல்லை. மண்மீதும் , மக்கள்மீதும் பற்று எனக்குப் பிறக்கும்போதே கூடப்பிறந்தது. தாய் நாட்டைநேசிக்கக்கற்றுக்கொள்வதற்குநீர் தான்நீண்ட பாடம் கற்கவேண்டியுள்ளது.வன்னியன் ஏகபிரதினித்துவத்திற்கு ஆசைப்பட்டதால்தான்,நிச்சியம் காக்கைவன்னியன் உருவாகவேண்டி இருந்த்திருக்கிறது. இல்லாவிடின் வன்னியனுக்கு ஏன் ஒரு காக்கைவன்னியன் இருந்த்திருக்க வேண்டும். வரலாறுநிச்சயம் இதை மறைத்துவிட்டது. எப்படி ,ஈழவேந்தன் இராவணனை வரலாறு கொடுங்கோலன், பெண்பித்தன் என்று காட்டி திரிபிபடுத்தியதோ, காக்கைவன்னியலினும் இதுதான்நடந்த்து இருக்கலாம். சும்மா பொழுதுபோக்கிற்கு எல்லாம் காக்கைவன்னியன் , வன்னியனை எதிர் த்து இருக்கநிச்சயம் வாய்ப்பே இல்லை.வென்றால் வாழ்த்துவார்கள்: தோற்றால் தூற்றுவார்கள்: அதைத்தான்நீரும் செய்கின்றீர். தயவு செய்து திருந்த முயற்சி செய்யலாமே????

    • மகேன் மாசில் says:
      14 years ago

      அப்படியென்றால் கருணாக்கள் உருவாக பிரபாகரனிசமா காரணம்?

      • lala says:
        12 years ago

        யூ தாசுகள்  உருவாக இயேசு இஸம்தான்  காரணமா என்று கேட்டிருக்கலாம்.

    • மகேன் மாசில் says:
      14 years ago

      சிறந்த தலைவனை எதிர்பார்ப்பதை விட தலைமையை ஏற்படுத்துவதிலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.. ஒரு தனிமனிதனின் இழ்ப்பின் பின் புலிகள் நிர்வாகம் எவ்வாறு சீர்கெட்டு கிடக்கிறது என்பதிலிருந்தே கற்க வேண்டியவை நிறைய இருக்கிறது. இதற்கு உழைத்த ஆண்டுகள் மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளபட்டால் போதாது 20 ஆண்டுகள் மந்தைபோல் உழைப்பனை விட ஒருநொடியில் கூர்மையாக சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான்.

      • Thanesh says:
        12 years ago

        அற்புதம். 20 ஆண்டுகள் மந்தைபோல் உழைப்பனை விட ஒருநொடியில் கூர்மையாக சிந்திப்பவன் வெற்றி பெறுகிறான்.

      • Ranjith says:
        12 years ago

        தமிழீழ விடுதைலப் புலிகள் தான் தமிழ் மக்களின் உன்னத இலற்சியத்திற்காகப் போராடியவர்கள் என மாற்றியங்கங்களின் முடிவின் பின்னரால் நான் பார்த்த ஊடகள்கள் மூலமாக தெட்டத் தெளிவாக உணர முடிகின்கின்றது. ஆனால் தங்களின் கதையின் படி பார்த்தால் ஊடகள்கள் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி தங்களுக்கும் மாமனிதர்  நாட்டுப்பற்றாளர் என்கின்ற மதிப்புக்குரிய பட்டங்களைப் பெற்று வடகிழக்கின் அப்பாவி இளைஞர்ப் பயன்படுத்தினார்கள் என்பதில் கூட தப்பில்லை எனலாம். அத்துடன் 2002 போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட போரில் விடுதலைப்புலிகளால் வெற்றிறி கொள்ள முடியவில்லை காரணம் 18 வயதினை தாண்டிய இளைஞர் யுவதிகளை போராட்டத்தில் இணைக்க முடியவில்லை போராட்டம் பற்றிய தூய சிந்தைனை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் எனலாம்.  அதுவே வன்னி இளைஞர்களை வலுக்கட்டாயமாக படையில் இணைத்தார்கள். அப்படியாயின் க.பொ.த சா/த சித்தியடையாத அப்பாவுக்குப பயந்த பிள்கைளை வைத்துத் தான் போராட்டத்தை இவ்வளவு ஈவிரக்கமின்றி சொந்த சகோதரனையே கொன்று தலைமையிடம் நற்பெயா; பெற்றவர்களா அன்றைய மனநிலை குறைவான போராளிகள் என்கிறீரா?

  21. Mahendra says:
    14 years ago

    பிரபாகரன் ஏகபிரதிநிதித்துவத்துக்கு ஆசைபட்டிருந்தால் வரதராஜப் பெருமாள் என்ற பேர்வழி வடகிழக்கிணைந்த மாகாணத்திற்கு முதல்வராக தோன்றியிருக்க முடியாது. வரதராஜப் பெருமாள் புலிகளுக்கு பயந்து இலங்கையை விட்டு ஓடவில்லை. தமிழர்களுக்கு தமிழீழமே தீர்வு எனக் கூறியதால் ஓடவேண்டி ஏற்பட்டது.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      What a comparisan? Prabaharan was indeed a dictator. Varatharaja Perumal has an Upper Second Honours degree in Economics. I think he had a good time and got some exoerience with the help of India.

  22. manoharan says:
    14 years ago

    இப்பொழுதுள்ள எம்மக்களின் பிரச்சினைகள், தேவைகள், அரசின் ஒடுக்குமுறைகள், தளத்திலும் புலத்திலும் வாழ்கின்ற மக்களின் வாழ்நிலைகள் எல்லாம் மாறுதல் அடைந்துள்ளன. அதாவது தன் வடிவத்தை மாற்றிவிட்டது . இந்த வேறுபாட்டை நாங்கள் கருத்தில்
    கொள்ளாவிட்டால், எம் சிந்தனைமுறையில் மாற்றம் காணமுடியாது.

    இதற்கொரு உதாரணத்தை பார்ப்போமாயின், ஒரு சோடி பழுப்புநிற செருப்பு நாங்கள் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். பிறகு காலம் கழித்து, பல தடவை திருத்தி, அடித்தோலையும், மேல்தோலையும் அடிக்கடி புதிப்பித்து, அதன் நிறம் மாறிய பிறகும்கூட அதே பழுப்பு நிற செருப்புத்தான் போட்டுக்கொண்டு இருக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு இருப்போம். வாங்கும் போது அது இருந்த நிலைக்கும், அது இன்று இருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப் பார்க்காமலே சொல்லிக்கொண்டிருப்போம். ஏதோ ஒரு நாள், எப்பொழுதோ வாங்கிய செருப்பின் நினைப்பிலேதான் இப்பொழுதும் பேசிக்கொண்டிருப்போம். வாங்கிய செருப்பில் ஏற்பட்ட மாற்றங்களை நாங்கள் கவனிப்பதில்லை. எங்களை பொறுத்த வரை அதுவும் இதுவும் ஒன்றேதான். அன்று வாங்கிய செருப்பும் இன்று இருக்கின்ற செருப்பும் ஒற்றை நிலையிலேயே தான் இருந்து வருவதாக நினைக்கின்றோம். ஆகவே அந்த செருப்பின் ஒற்றை நிலையைத்தான் மனதில் கொண்டிருக்கின்றோம். அதைப் பார்க்கப்போய் முக்கியமானது எதுவும் நடக்காததுபோல், மாறுதல் ஏற்பட்டிருப்பதை கவனிக்காமல் இருந்து விடுகின்றோம்.

    இதேபோல்தான் இன்றும் பலர் இதுவரை போராடிய அமைப்பினில் எதுவும் நடக்காதது போல் எந்த மாற்றத்தையும் கவனிக்காமல் கட்டமைப்பு, தலைமை, கொடி என்று இருக்கின்றார்கள். அதாவது அன்று வீரத்துடன் போராடி பலமுகாம்களை தகர்த்த அந்த நினைப்பிலேயே இன்றும் இருக்கின்றார்கள். இன்றுள்ள இடைவெளியில் எம் தேசிய இனப்பிரச்சனையில் அதற்காக வேலைசெய்பவர்கள் ஒரு பொதுத்தளத்தை எட்ட முடியாமலுள்ள நிலையில், இதற்கான சிந்தனைமுறையில் எம்மீதுள்ள தவறுகளை பார்க்கவேண்டிய காலகட்டமிது.

  23. Vijey says:
    14 years ago

    இயக்கங்கள் மற்றும் இந்திய இராணுவ தாக்குதல்களை பெற்ற ஒரு துயர அனுபவம் இருக்கிறது. அதையும் மீறி அரசியல் உணர்வுடன் வாழும் உணர்வு… நல்லது.

  24. Kumari says:
    14 years ago

    இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களையும்>விமர்சனங்களையும படித்துமுடித்தபின்னர்> நான் 1991ஆம் ஆண்டு நொவெம்பர் மாத்தில் யாழ்ப்பாணத்தில் படித்திருந்த ‘எதிர்கால உலகமும் நாமும்’ என்ற நூலில் ஆராயப்பட்டுக் கூறப்பட்டிருப்பவைகளை இங்கு தொகுத்துத் தர விரும்புகிறேன். இவை உங்கள் அவைருக்கும் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் ஏன் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழிப்பது}டாக நசுக்கப்பட்டது என்பதை அறியவும்> இன்றைய இலங்கை அரசியலையையும்> இலங்கைத் தமிழர்களின் நிலையையும் அறிந்து செயற்பட உதவும் எனவும் நம்புகிறேன்.
    ” பூகோள ரீதியிலான வியாபாரத்தையும்> முதலீடுகளையும் எடுத்துக்கொண்டால் ….. ஜப்பான் அதனது பிரச்சினைகளுக்குத் ஒருவித தீர்வை ஏற்படுத்துவதாயின்> அது முதலில் பசுபிக் நாடுகளையும்> தென்கிழக்கு ஆசிய நாடுகளையும்> தென் ஆசிய நாடுகளையும் ‘பெளத்தம்’ என்பதன்கீழ் ஒருங்கிணைக்கவேண்டியுள்ளது…” (பக்கம் – 41).
    “இந்தியாவிற்கு மிக அருகேயுன்ன இலங்கைத்தீவில் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடுவதும் இந்தியாவின் அரசியலை உறுதியற்றதாக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. இலங்கைத் தமிழான் போராட்டம் இன்று தென் இந்தியத் தமிழ் நாட்டு மாநிலத்தின் அரசியலில் முக்கிய ஒரு விடயமாகி வருகிறது. இலங்கைத் தமிழர்கள் தனிநாடு அமைப்பது தென் இந்தியாவிலும்> ஏனைய பகுதிகளிலும் பிரிவினை வாதத்தினைத் தீவிரப்படுத்தும் என இந்திய ஆளும் வர்க்கங்கள் கருதுகிற்ன. இதனால்> இந்திய ஆளும் வர்க்கங்கள் இலங்கைத் தமிழர்கள் தனி நாடு அமைப்பதை எந்தவிதத்திலும் தடுப்பதை முழுமுதற்கொள்கையாகக் கொண்டுள்ளன.
    அமொpக்கா> ஐரோப்பிய சமூக நாடுகள்> ஜப்பான் என்பவைகளைப் பொறுத்தமட்டில்> இந்தியா முழுமையாக இருப்பதுவே  அவைகளுக்கு இலாபகரமானது. ….. ஒரு கட்சியைப் பயன்படுத்தி 850 மில்லியன் மக்களைச் சுரண்டுவது கைத்தொழில் நாடுகளுக்குச் சுலபமானதும்> இலாபமானதுமாகும். இந்தநிலையில்> கைத்தொழில் நாடுகளும் இலங்கையில் தமிழர்கள் தனிநாடு அமைப்பதை விரும்பமாட்டா. .. ” (பக்கம் – 45)
    ” .. இவைகள் அனைத்தையும் பார்க்கும்போது> இந்து சமுத்திர பிராந்தியமானது வருங்காலத்திலும் இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகவே இருக்கவுள்ளது. இந்தநிலையிலும்> இலங்கை இரு நாடுகளாக இத்தசாப்தத்தில் பிரிவதை அமொpக்கா அனுமதிக்கமாட்டாது. …  இவைகள் இந்திய> இலங்கை அரசியல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டுச் சிக்கலடையும் சந்தர்ப்பங்களையே எடுத்துக்காட்டுகின்றன. இங்குதான் விடுதலைக்கும்> தமது முன்னேற்றத்திற்கும் போராடிவரும் இலங்கைத் தமிழர்கள் தமது குறிக்கோள்களை அடைய எப்படியான தந்திரோபாயத்தினைக் பயன்படுத்தவேண்டும் என்பது மிகமுக்கியமாகிறது…” (பக்கம் – 53).
    ” … ஆகையால் அமொpக்கா> சிறீ லங்கா> இந்தியா என்பவைகளிடையே ஏற்படும் பூpந்துணர்வு அடிப்படையில்> தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை இராணுவ ரீதியாக முறியடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படலாம். குறிப்பாக: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொலைசெய்யப்பட முயற்சிகள் தீவிரப்படுத்தப்படலாம். . இலங்கைத் தமிழர்கள் தனிநாடு அமைத்துக்கொள்வதும்> நீய்ட காலக் கண்ணோட்டத்தில் ‘தமிழீழம்’ நிலைத்து நிற்பதும்> இலங்கைத் தமிழர்கள் இந்தியா – சிறீ லங்கா – அமொpக்க உறவுகள் தொடர்பாகவும்> இந்தியா> சிறீ லங்கா என்பவைகளின் அரசியல் உறுதி நிலை தொடர்பாகவும்> விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் எப்படியான தந்திரோபாயத்தினைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதிலும்> தமிழ் சமூகத்தினது அரசியல்> பொருளாதார> சமூக> விஞ்ஞான> தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்த எப்படியான தந்திரோபாயங்களைக் கடைப்பிடிக்கப் போகின்றனர் என்பதிலும்தான் பொpதும் தங்கியுள்ளது.
    இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய இரண்டு அடிப்படை மாற்றங்கள் பின்வருமாறு:
    1. “எனக்கு எல்லாம் தொpயும்” என்ற மனப்பான்மை மாற்றப்படவேண்டும்.
    2. “நான் தவறே செய்யாதவன்” என்ற கொள்கைப் போக்கு மாற்றப்படவேண்டும்.”
    இ வைகளை முள்ளிவாய்க்கால் பேர் காலத்திலும்> இன்று நடைபெறும் அரசியலுடனும் இணைத்து ஆராயுங்கள்!

  25. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    In 1987 Bengalis elected me President of the India Students Association of the Indiana State University in Terre Haute, Indiana, USA. Dr. Swapan Kumar Ghosh, Dr. Manas Kumar Majumdhar (1958) and Dr. Debashis Chakravarty. 812-237-2418. LBJ. 1964.

  26. kumar says:
    13 years ago

    நாங்களே எங்களை அழித்து விட்டோம் இப்போது எழுதி எங்களை அழிக்கிறோம்

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Just hobby Kumar.

  27. jkumar says:
    12 years ago

    tamil makkal savukku karanam maluvathum mttal prabhakaran.inni tamil makkal nalama irrupparkal.soldier also human they also family childrens .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...