யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும், மாணவிகளும் நாளாந்தம் விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு மணித்தியாலக் கணக்கில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.
நாளாந்தம் சுமார் மூன்று மாணவிகள் வீதம் வவுனியாவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.
மாணவர்களின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்பட்டே இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதி நம்பிக்கையாக எஞ்சியிருந்த பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் திசைவழியற்று அழிந்துபோகும் அபாயம் உருவாகியுள்ளது.
இவ்வாறான அழிவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவையா என்ற சந்தேகங்களை பல தகவல்கள் ஏற்படுத்துகின்றன. அழிப்பினால் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சுற்றியிருக்கும் சுயனலமிகளும் வியாபாரிகளும் மக்களின் அவலத்தைத் தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.யாழ்.பல்கலைக்கழக்த்தின் இருப்பு இன்று கேள்விக்குரியாதக மாறியுள்ளதன் பின்புலத்தில் பல்வேறு அரசியல் பிழைப்புவாதிகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.