வி.சிவலிங்கத்தின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல; விவாத நோக்கில் பதிவிடப்படுகிறது.
(நீண்ட காலமாக அரசியல், இலக்கிய, கலாசாரத் தளங்களில் இலக்கியச் சந்திப்பு நண்பர்களுடன் நட்பு ரீதியான உறவினைக்கொண்டிருந்தவன் என்ற அடிப்படையிலும், 40வது இலக்கியச் சந்திப்பு லண்டன் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்தவன் என்ற வகையிலும், இந்த இலக்கிச் சந்திப்பின் இரு நாள் அமர்வுகளிலும் கலந்துகொண்டு அங்கு நிகழ்ந்தவற்றை அவதானித்தவன் என்ற வகையிலும், எனது மனச்சாட்சியை முன்நிறுத்தி என்னுடைய கருத்துக்களைச் சொல்வது எனது தார்மீகப் பொறுப்பு என நான் உணர்கிறேன்.)
கால்நூற்றாண்டு ஆயுளை எட்டியுள்ள இலக்கியச் சந்திப்பு, லன்டனில் இடம்பெற்ற 40வது இலக்கியச் சந்திப்பிற்கு பின் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறித்து பேசவேண்டிய தருணம் இதுவென்றே எண்ணுகிறேன்.
இவ் இலக்கியச் சந்திப்பில் இடம்பெற்ற நிகழ்வுகள் கடந்த 39 சந்திப்புகள் சந்தித்த பிரச்சனைகளை விட மிக வித்தியசமானது. இதுவரையான இலக்கிய சந்திப்புகள் புகலிடத்தில், பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாக பேசும் சூழலில் இடம்பெற்றது. அது மட்டுமல்ல இலக்கியச் சந்திப்பினை தோற்றுவித்த பங்களிப்பாளர்களின் நோக்கங்களைக் கேள்விக்குட்படுத்தும் நிலமைகள் எழவில்லை.
ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அதிகாரத்திற்கு எதிரான தார்மீக கோபம் போன்ற விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு செயற்படும் இலக்கியப் படைப்பாளர்களை, வாசகர்களை இணைக்கும் ஓர் தளமாகவே இச்சந்திப்பு தோற்றுவிக்கப்பட்டது, வளர்த்தெடுக்கப்ட்டது. இதனை வளர்த்தெடுத்தவர்களில் சிலர் மரணமடைந்தும் விட்டனர். அவர்கள் பற்றி 40வது இலக்கியச் சந்திப்பின்போதும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இன்னும் சிலர் இன்னமும் இதில் செயற்படுகிறார்கள்.
இலங்கையில் இலக்கியச் சந்திப்பினை நடத்துவது தொடர்பாக இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் வெளியிடப்பட்ட கருத்துகள் சந்திப்பினை எங்கு நடத்துவது என்பது தொடர்பான தீர்மானங்கள் எடுத்த முறைமை தொடர்பானதாக இருந்ததே தவிர, புகலிட சந்திப்பு இலங்கையில் இடம்பெறுவது தொடர்பான தார தம்மியங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. அவ்வாறான சில கருத்துகள் வெளியிடப்பட்டபோது அவை தனி நபர் தாக்குதல்களாக, அவமதிப்புகளாக முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலமைகளே காணப்பட்டன. அல்லது அதற்கான ஆக்கபூர்வமான விவாதங்களைத் திறப்பதற்கான வாய்ப்புகள் அற்ற போக்கே காணப்பட்டது.
இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.
1. இலக்கியச் சந்திப்பு என்பது தனக்கான ஸ்தாபனக் கட்டமைப்பினைக் கொண்டிராத பலவீனம் வெளிப்படையாக தெரிந்தது.
– கடந்த சந்திப்புகள் அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராக செல்ல எத்தனிக்கவில்லை. இலங்கையில் இன்றுள்ள நிலமைகள் பலரும் அறிந்ததே. அது மட்டுமல்ல புகலிட இலக்கியம் என்ற அம்சம் இலங்கை நிலமைகளை வைத்தே தோற்றுவிக்கப்பட்டது. அங்கு நிலமைகள் மாறலாம் அதனால் புகலிட இலக்கியம் மாற்றம் பெறவேண்டிய அவசியம் இல்லை. அதற்கென தனியான விசேட பண்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை வளர்ந்து வருகின்றன. இவ்வாறான போக்கு ஏனைய புகலிட சமூகங்களிலும் உள்ளன. இலங்கையில் புகலிட இலக்கியம் குறித்து விவாதிக்கலாம் ஆனால் புகலிட இலக்கிய அமைப்பு தனது சந்திப்பை அங்கு நடத்துவதாயின் அதன் அடிப்படை கோட்பாட்டு அம்சங்களில் குறைந்தபட்ச உடன்பாடு காணப்பட வேண்டும். இவை மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர வெறுமனே விவாதங்களற்ற அல்லது இலக்கிய சந்திப்பு தொடர்பான வரலாற்றுத் தொடர்புகளற்றவர்கள் கையை உயர்த்தி தீர்மானிக்கும் விவகாரம் அல்ல.
– இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்தவதா? இல்லையா? என்பதை வாக்கெடுப்பிற்கு விட்டு தீர்மானிக்க முடியாது. வாக்களிப்பவருக்கான அடிப்படைத் தகுதி வரையறுக்கப்படாத நிலையில் வாக்கெடுப்பு என்ற அம்சம் பொருத்தமற்ற தெரிவாகிறது. கடந்த காலங்களில் எங்கு நடத்துவது? தொடர்பாக எடுத்த முடிவுகள் வாக்கெடுப்பாக கொள்ள முடியாது. அவை ஒப்புதல் பெறப்பட்ட அம்சமே தவிர வேறெதுவும் அல்ல. சந்திப்பின் இறுதியில் அடுத்த சந்திப்பிற்கான முன்மொழிவு என்பது எப்போதுமே ஏகமனதான முடிவாக இருந்துள்ளது. இந் நிலையில் ஏகமனதான முடிவினை எட்ட முடியாத நிலையில் வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற வாதம் பொருத்தமற்றது. பதிலாக மேலும் கலந்து முடிவு செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வாக்கெடுப்பு தவிர்க்க முடியாதது எனத் தெரிவிப்பவர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் செயற்பட்டமை அப்பட்டமாக தெரிந்தது. இது இலக்கியச் சந்திப்பின் கலாச்சாரம் அல்ல.
– இலங்கையில் நடத்துவது தொடர்பான வாதத்திற்கு இடமளிக்காமையும், வாக்கெடுப்பிற்கு விடவேண்டுமென்ற வாதங்களும், வாக்களிப்பதற்கான தகுதி வரையறுக்கப்படாமையும் இலக்கியச் சந்திப்பு அமைப்பின் ஸ்தாபனக் குறைபாடு எனக் கருதுகிறேன். இது சரி செய்யப்படுவது மிக அவசியமென்றே கருதுகிறேன்.
–
2. இலக்கியச் சந்திப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு அவை ஒவ்வோர் சந்திப்பிலும் உறுதி செய்யப்படுவதற்கான பொறிமுறை இல்லாமை.
அனுசரித்துச் செல்லப்பட்ட கோட்பாட்டு நிலைப்பாடுகளிலிருந்து இச் சந்திப்பு விலகிச் செல்வதாக இதில் நீண்ட காலமாக இணைந்து சென்றவர்கள் கருதிய நிலையில், அதனை விவாதிக்க இடமளிக்கப்படவில்லை. தனி நபர் தாக்குதல்களாக (பெரும்பாலும் தலித் எதிர் வெள்ளாளர்), மாற்றப்பட்டு அவமதிப்பே எஞ்சி நின்றது.
25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பு வடிவத்தில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டவர்கள் அதனைக் காப்பாற்ற முயற்சிப்பது தமது சொத்தாக எண்ணுவதை விட அதன் அழிவை அல்லது கோட்பாட்டு விலகல் தற்கொலை முயற்சியாக அமையலாம் என்ற அச்சமாகவும் அதனைக் கருத முடியும். இலக்கியச் சந்திப்பின் கோட்பாட்டு விலகல் பற்றிய விவாதத்தின் அடிப்படையிலேயே இம் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர வாக்கெடுப்பு மருந்து அல்ல. 41வது சந்திப்பு என்ற விவகாரம் இம்மாதிரியான முடிவுக்குச் சென்றுள்ளமை அதன் அடிப்படை கோட்பாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக, சிலர் முன்வைக்கும் கருத்துக்களில் நான் உடன்படுகிறேன். எனவே இலக்கியச் சந்திப்பு தனது கோட்பாட்டு நிலைப்பாடுகளை மீண்டும் உறுதி செய்வதற்கான வேளை இதுவெனக் கருதுகிறேன்.
40வது இலக்கியச் சந்திப்பு ஆரம்பமாகிய தினம் முதல் அதன் செயற்பாட்டை கேள்விக்குட்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக பேச்சாளர்களாக ரயாகரன், சாத்திரி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். பேச்சாளர்களை அழைப்பதற்கான முடிவை நிருவாகக் குழுவினரே முடிவு செய்திருந்தனர். அம் முடிவில் திருப்தியடையாதவர்கள் தமது அதிருப்தியை நிர்வாகக் குழுவிடமே பேசியிருக்க வேண்டும். பேச்சாளர் பற்றிய விபரம் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான போதிய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பதிலாக அவர்களைப் புண்படுத்தும் விதத்தில் பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கு விநியோகிக்கப்பட்டு அவர்களது பேச்சும் தடைப்படுத்தப்பட்டது. நேரக் கட்டுப்பாடு காரணமாக சில விவாதங்களுக்கான காலங்கள் மாற்றப்பட்டது குறித்து ஆங்காங்கே வெளியிடப்பட்ட கருத்துக்கள் புண்படுத்துவதாகவே அமைந்திருந்தன. இச் சந்திப்பிற்கென இலங்கை, தமிழகத்திலிருந்து பேச்சாளர்கள் அழைக்கப்பட்ட நிலையில் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், மன்னிப்புக் கோரும் அழுத்தங்கள் என்பன சந்திப்பின் சுமுகமான செயற்பாட்டை தடைப்படுத்துவதற்கான முயற்சிகளாகவே காணப்பட்டன. கலகம் செய்கின்றோம் என்ற போர்வையில் மோசமான ஜனநாயக மீறல்களும், அநாகரீக செயற்பாடுகளும் அரங்கேற்றப்பட்டன.
இலக்கியச் சந்திப்பின் முக்கியத்துவத்தை மலினப்படுத்திய போக்காகவே நான் அவதானித்தேன். நிர்வாகக் குழுவில் ராகவன் அவர்கள் இருந்தார். ரயாகரன், சாத்திரி ஆகியோரை அழைப்பதாக எடுத்த முடிவின் போது அவர் தனது சந்தேகங்களை வெளிப்படுத்திய போதிலும் இறுதியில் அழைப்பது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு செயற்படுவதுதான் ஜனநாயக நடைமுறை. ஆனால் சந்திப்பின்போது சாத்திரி அவர்களின் உரையை அதன் ஆரம்பத்திலேயே கேள்விக்குட்படுத்தியவர் ராகவன் அவர்களாகும்.
இதுவே அவரது நோக்கம்; குறித்த சந்தேகங்களை எம் மத்தியில் எழுப்புகிறது. இச் சந்திப்பு தொடர்பாக ராகவன் அவர்கள் குறிப்புகள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது இவ்வாறான நடவடிக்கை குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. தானும் இணைந்து எடுத்த முடிவை எதிர்த்து அங்கு நடந்து கொண்ட முறை அவரது ஜனநாயகம் குறித்த புரிதல்களை கேள்விக்குட்படுத்துகிறது. இதே போன்று, 41வது இலக்கியச் சந்திப்பு தொடர்பான விவாதத்தில் தலைமை வகித்த நிலையில், தன்னிச்சையான பக்கச்சார்புடன் எவ்வித ஆலோசனையுமின்றி வாக்கெடுப்பிற்கு விட்டிருந்ததும் சந்தேகத்தை தருகிறது. குறிப்பில் கொடுத்த விளக்கங்களை விட அவரது செயற்பாடுகள் அதிக விளக்கங்களை பார்வையாளர்களுக்கு வழங்கியது என்பதே யதார்த்தம்.
இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பாக இரு சாராரும் பேசி முடிவுக்கு வரவேண்டுமென தாம் இரு சாராரையும் வற்புறுத்தியதாக கூறும் அவர், இரு சாராரின் நிலைப்பாட்டின் உண்மையான தார்ப்பரியத்தை குறிப்பாக இலங்கைக்கு எடுத்துச் செல்வதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த வாதங்களின் கருத்துக்களை வெறுமனே கனடாச் சந்திப்பில் காணப்பட்ட குறைபாடுகளுக்குள் வரையறுத்து கூறியது இலக்கியச் சந்திப்பின் கோட்பாடுகளின் தாக்கத்தை பலவீனப்படுத்தும் ஓர் முயற்சியாகவே காணப்பட்டது.
இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கு முயற்சித்தவர்கள் அதற்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்கு ஆக்கபூர்வமான பதில்களை வழங்கவில்லை. பதிலாக அவை ஓர் சாதிப் பிரிவினரின் திட்டமிட்ட சதி என்ற அடிப்படையில் விவாதங்கள் நகர்த்தப்பட்டன. அங்கு சாதிப் பிரிவினரின் ஆதிக்கம் குறித்து மிகவும் மோசமான விதத்தில் சிலரின் பேச்சுக்கள் இருந்தன. அவரின் தலைமையின் கீழ் இவை நடந்தேறின. ஆனால் இவை குறித்து எந்தவிதமான கருத்தும் ராகவன் அவர்களின் குறிப்பில் காணப்படவில்லை. இவை அவரின் கவனத்தை ஈர்க்கவில்லை அல்லது அவை ஒரு பொருட்டாக கொள்ளத் தேவையில்லை என அவர் கருதுகிறாரா?
சாதிப் பிரிவின் ஆதிக்கம் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மிகவும் கேவலமானவை. இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கான நியாயங்கள் இவ்வளவு கீழ் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பலரை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமைந்தன. இவ்வாறான உரைகள் பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்டன. அவர்களுக்கு எவ்வாறான செய்தியை இந்த நிகழ்வுகள் வழங்கின? இவர்களை அழைத்தவர்கள் எவ்வாறான மன நிலைக்க தள்ளப்பட்டார்கள்?
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 40வது சந்திப்பினை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே ஏலNவு திட்டமிடப்பட்ட வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்தது என என்னால் சிந்திக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக நடைபெற்ற சந்திப்பினை உரிய முறையில் முடித்துவைக்க இவர்கள் உதவவில்லை. ராகவன் அவர்களின் குறிப்பில் இலண்டனில் பேசி முடிவு செய்யலாம் என்ற நம்பிக்கையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பியவர்கள் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகிறார். இரண்டாக உடையும் ஆபத்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். பிளவு ஏற்படும் என்ற நிலையை நான் உணரவில்லை ஆனால் தற்போது அதனை உணர்கிறேன். ஏனெனில் சாதி என்னும் துருப்புச் சீட்டு தனி நபர் குணவியல்புகளையும், தாம் மற்றவர்கள் மேல் கொண்டிருக்கும் உறவு நிலையின் புரிதல்கள் என்பன பற்றியும் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. நட்பு, தனிநபர் விழுமியங்கள் என்பனவும் இதில் பங்கு வகிக்கின்றன. அத்துடன் ஒரு பெண்னை இழிவுபடுத்தியதாக முன்வைக்கப்படும் அபத்தக் குற்றச்சாட்டு இதில் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் இழிநிலையையும், வங்குரோத்துத்தனத்தையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.
ராகவன் அவர்கள் ‘இலங்கை அரசை எதிர்ப்பது வேறு, அரசு மேற்கொள்ளும் நிகழ்வுகளை எதிர்ப்பது வேறு, யாரும் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்பன வௌ;வேறானது’ என வாதிக்கிறார். இதில் முதலில் குறிப்பிட்ட நிலைப்பாடு அரசின் அதிகாரப் போக்கிற்கு எதிராக எழும் உணர்வு எனவும், இலங்கையில் இருப்பவர்கள் யாரும் எங்களை கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது என்ற நிலை இரண்டாவது நிலைப்பாட்டிற்கு காரணம் எனவும் கூறுகிறார். இப் போக்கு ஆதிக்கச் செருக்கு எனவும் வரையறுக்கிறார். இந்த இரண்டு அனுமானங்களும் தவறு எனக் கருதுகிறேன். இலங்கை அரசை எதிர்ப்பது என்பது எங்கிருந்து எழுகிறது? இலக்கியச் சந்திப்பின் கோட்பாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கையில் இருப்பவர்கள் எம்மைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலை குறித்து தெரிவித்திருப்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அவ்வாறான ஒரு நிலை காணப்படுமானால் அதற்குக் காரணம் தனி நபர் அல்ல பதிலாக ஸ்தாபன வடிவம் அற்ற இலக்கியச் சந்திப்பு ஆகும். அக் குறிப்பில் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் உதவி பெறப்பட வேண்டும் என ஆலோசனை வழங்க முயற்சிக்கிறார். ஆனால் இவர்கள் 40 இலக்கியச் சந்திப்பின் முடிவுகள் அதன் தோற்றத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை தொலைத்துவிட்டதாக உணர்கிறார்கள். அத்துடன் இதுவரை காலமும் கட்டி எழுப்பிய தனிநபர் உறவு அதன் மிகவும் பலவீனமான பகுதியை வெளிப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
தலித்தியம், பெண்ணியம் போன்ற உயரிய கோட்பாடுகளை தமது குறுகிய அரசியலுக்கு தொடர்ந்தும் பாவிக்கும் ஒரு சிறுபிரிவினருடன் தொடர்ச்சியாக பயணிக்கமுடியுமா என்ற ஆழமான வினாவினையும், சந்தேகத்தினையும் மிக வெளிப்படையாகவே இந்த நிகழ்வு தோற்றுவித்துள்ளதை பலருடன் உரையாடியதிலிருந்தும், எனது பார்வையிலிருந்தும் என்னால் காணமுடிகிறது.
நன்றி.








நன்றி தோழர் சிவலிங்கம்.ஒரு கருத்து வாக்கெடுப்பின் போது கோரிக்கைக்கு ஆதரவாக தமது கையை உயர்த்தாத தோழ்ர்களை வலது குறைந்தவர்களாக வர்ணிக்கும் ஷோபா சக்தி போன்றவர்களுக்கும் அதை ஜோக் என்று ஆதரிக்கும் நிர்மலா போன்றவர்களுக்கும் நல்ல பதிலடி
41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே!
[சுசீந்திரன்-சிவலிங்கம் போன்றோரது கருத்துக்கள்மீதான மாற்றுக் கருத்தாடல்].
இலன்டனில் நடந்தேறிய 40 வது இலக்கியச் சந்திப்புக்குப் பின் 41 வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடாத்தவேண்டுமெனத் தொடர்ந்த கதையாடல்கள் இப்போது சந்திக்கு வருகின்றன.இங்கே, குழுவாதம் மேலும் நெருக்கடிக்குள் நகர்த்தும் தமிழ்த் தேசியவினத்தின் ஓரளவான சனநாயகப்பண்புக்குடந்தையான இச்சந்திப்பைத் தொடர்ந்து, சிதைத்துவரும் இந்தக் குழுவாதமானது இன்றுச்சத்தில் வளர்ந்து கிளைபரப்புகிறது?.
திரு.சிவலிங்கம் மற்றும் ,நண்பர் திரு.சுசீந்திரன் போன்றோர் தமது கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கின்றனர்.இருவருமே குழுவாதத்தின் சதித்தனமான அணிச் சேர்க்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்-வரவேற்கப்பட வேண்டியது.
இத்தகைய குழுவாதமானது கடந்த நான்கு-ஐந்து சந்திப்புக்குள் வலுவாகவும்-வேகமாகவும் வளர்வதற்கான தோற்றுவாய்கள் மெல்லத் தலித்துவ,சாதிய-பெண்ணிய அடையாளங்கட்குட்பட்ட நலன்களது தெரிவில் -இலங்கை ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலை – இந்திய நலன் மற்றும் லொபிக் குழுக்களால் மிக நேர்த்தியாக நமக்குள் திணிக்கப்பட்டதைக் கடந்த 2005 ஆம் ஆண்டுகளிலிருந்து “நாம் நேர்மையான முறையில் அரசியலைக்கொண்டிருந்தால் ” கண்டடைந்திருப்போம்.
இது, காலங் கடந்த ஞானமாகவே திரு.சுசீந்திரனது கருத்துக்களிலிருந்து தொகுக்கமுடியும்.இதுவரை இத்தகைய குழுவாதத்துள் இலக்கியச் சந்திப்புச் சிதைவதைக் கவனத்துள் எடுக்காது அத்தகைய ஓட்டத்தோடு ஒத்தோடிய நண்பர் சுசீந்திரன் இப்போது, இது குறித்துக் கருத்துச் சொல்வது இந்த நெருக்கடியின் வன்மத்தை உண்மையாவுணரவைக்கிறது.என்றபோதும் , இதன் அரசியல் என்ன?-தெரிவுகள் என்வென்பதைக் குறித்து நாம் பார்த்தாகவேண்டும்.
இன்றைய கட்டத்துள் புலம் பெயர் எதிர்ப்பிலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது,மொத்தக் குத்தகைச் செய்தவர்கள், இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்ப் போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்ச பச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு, வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.இது ,40 வது இலக்கியச் சந்திப்புள் வலு உச்சத்திலிருப்பதைக் காணக் கூடியதாகவே இருக்கின்றது.தம்மைத் தாமே தலைமைத்துவ வடிவமாகவுணரும் அதிகாரத்தை இவர்கள் கைக் கொண்ட தருணமானது ஒருவித அரசியற்றொடர்ச்சியை இலங்கைக்குள் வலிந்து காணுமிடத்துள் இவர்களது தெரிவு, இலங்கைக்குச் சந்திப்பை நகர்த்துவதில் குறியான எதிர்ப்பார்ப்பானது அதற்கான தெரிவுகளில் அணிகளைக் கட்டியமைத்தது.அதுள், “தலித்தியம்-சாதிய மார்க்சியம் ” எனப் பல மானுடவிரோதக் கருத்தாடல்களை இதன் எதிர்ப் பாளர்களுக்கு அது வலிந்து போர்த்தியபோது இன்றைய இலங்கையின் பிளவுவாத அரசியலது உச்சம் புலம்பெயர் மக்களுக்குள் இடறிக்கொண்டதை நாம் உணர்கிறோம்.
இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே”தீர்மானங்களும்”-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர். இத்தகைய நோக்குக்கு இலங்கையில் தொடரும் இலக்கியச் சந்திப்பானது புத்திமட்டத்தில் வலுவான கருத்தியலை ஊன்றமுடியும்.தமிழ்த் தேசியவினத்தின் இதயத்தைக் குதறும் அரசியலைத் தொடரும் இன்றைய தமிழ் அரசியல் நடாத்தையுள் இது, மற்றொரு தெரிவு.இதற்குள் சிக்குப்பட்ட பிழைப்புவாதத் தலித்துவ-குழுவாத,இயக்கவாத மாயைக்குட்பட்ட நபர்கள்-குழுக்கள் ,தமது அராசக அரசியலைத் தொடர்ந்து, உதயன் பத்திரிகையை நெருப்பூட்டியெரிப்பதிலிருந்து மீளவுருவாக்கும் வன்மைத் தனமான அரசியலுள் இலக்கியச் சந்திப்பும் சிக்குண்டே போனது.
இலண்டன் 40வது இலக்கியச் சந்திப்பின் தற்காலிகத் தலமையானது இலங்கையின் அரசியல் சூழ்ச்சியோடு ஒன்றித்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.இதுள் ,இராகவன் என்ற தனி நபருக்குப் பின் பலர் தம்மை இனங்காட்ட மறுக்கின்றனர்?.
இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழி நிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.
பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் ,தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் கடந்தகாலத்துள் இருந்தார்கள்.அவர்களுள் நண்பர் சுசீந்திரனும் ஒருவராகவே இருந்தாரென்று குற்றஞ் சுமத்தாதுபோயினும் எனது உணர்வுக்கு அப்படியேதாம் படுகிறது!இந்த இழி நிலைக்கு மாற்றான தெரிவுகளை இனங்காணவேண்டிய சந்தர்ப்பத்தை இத்தகைய பண்பே இல்லாதாக்கியது!
இன்று, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு, இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.,சாதிய வாதம்-தலித்துவம் மற்றும் பிரதேசவாதம் உச்சத்துள் வைத்துக் கருத்தியற்றளம் உருவாக்கப்படுகிறது.இதுவே, சாதிய அடையாளத்தைத் சுதேசி அடையாளமாக ஏற்கவேண்டுமென ஆய்வும் செய்து ,இந்தியாவில் இருப்புற்ற நிறவனப்பட்ட வடிவமாகச் சாதிய அடையாளத்தைக் கோருகிறது.இதற்குத் தோதாகவேதாம் புலம்பெயர் தலித்துவக் குழுக்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.இவர்களது தெரிவில் ,வகுக்கப்படும் இந்தச் சதித்தனமான அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிராகவே தொடர்கிறது.
எனவே தொடர்ந்து ஊன்றப்படும் மேற்சொன்ன அரசியலது தெரிவாகவே நமக்குள் கடந்த காலத்துள் இலக்கியச் சந்திப்போடு “சமாதானப் பட்டறை, அபிவிருத்திப்பட்டறை,தீர்வுத்திட்ட ஒன்றுகூடல்,சிந்தனையாளர்களது அவைக்கான கருவூலம் அமைத்தல் ” என்றும், இன்னபிற வடிவங்களிலும் மிக நேர்மையின்றிப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட முனைந்தோம்!
இதன் தொடரக இன்று ,எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.இது கொள்ளும் முகமூடிகளானது மேற்சொன்ன நிகழ்வுகளாக விரிகிறது.இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இலங்கைக்கு நகர்த்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்காக க் கைக்கொள்ளப்பட்ட அரசியல் மிக மோசமான தெரிவு.இது, பற்பல சந்தேகங்களுக்குட்பட்டுச் சிந்திக்கவேண்டிய அணிதிரட்சியாகும்.தனிநபர்கள் அணியுறும் தருணமானது எப்பவும் ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இருப்பதில்லை!அது, ஒடுக்கு முறையாளரது அரசியலது தெரிவாகவும் மாறியதும்-இயங்கியதும் நமக்கு ஏலவே பாடமாச்சு.
இந்த அரசியல்-சதிகளைப் புரிய நாம் வள்ளவரிடம் போவோம்.அதன் அநுபவத்தோடு இலங்கைக்குள் நகர்த்தப்படும் சாணாக்கியம் பிழைப்புவாதத் தமிழர்களை எப்படியெல்லாம் பிழைக்கத் தூண்டுகிறதெனப் பார்க்கலாம்.
“வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை.” -குறள்:872, பக்கம்:347
வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!
சாணாக்கியனின் உலகத்தில் ,தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே “இலக்கியச் சந்திப்பு”ச் செய்பவர்களாகவும்,”சிந்தனையாளர்களின்” அவை அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.இவர்களே 40 வது இலக்கியச் சந்திப்பில் இலன்டனில் மிக நேர்த்தியாகக் கூடினார்கள் . கூடவே ,பலருக்குத் தலைவெட்டி ஒரு வினோதமான அரசியல் நடாத்தையைச் செய்தனர்.இதற்காகவே, பயிற்றுவிக்கப்பட்ட தலித்துவக் குழுக்களது தயவில் மேலும், விருத்தியான இந்த அரசக அரசியல் மெல்லத் தளத்தை மாற்றி இலக்கியச் சந்திப்பைக் கையகப்படுத்தியது.இதற்கு உடந்தையான இலங்கை -இந்திய உளவுக் கூலிகள் தொடர்ந்து பிளவுவாத அரசியலைகத் தமது எதிர்ப்பாளருக்கு முன் நிறுத்திச் சாதிய வாதத்தை ஆயுதமாக்கினர்.இது குறித்துத்தாம் சுசீந்திரன் தனது கட்டுரையில் கறாராகப் பேசியுள்ளார்.
இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவோம்.
கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர் Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும்,கடந்த முள்ளி வாய்க்கால் யுத்தமானது இந்திய-இலங்கை அரசுகளது கூட்டு வன்னிப் படுகொலையாக மாறியது!இதுவே ஒரு கட்டத்தில் தமிழினப் படுகொலை நெட்டூரமாக எழுந்தது.இதை எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.
ஜனாதிபதி இராஜபக்ஷ தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும்.ஆனால் ,இராகவன் குழு மற்றும் ,தலித்துவக் குழுக்கள் இராசபக்சே பின்னால் சனநாயகந் தேடியதும்-திரண்டதும் நாம் ஏலவே, பார்த்த கதைதாம்.இவர்களது அரசியல் இன்று ,மாற்றுக் கருத்துத் தளமான இலக்கியச் சந்திப்பை மெல்ல விழுங்கி ஏப்பமிட்டிருப்பினும் அதன் அரசியலைச் சரியாக மதிப்பிட்டே ஆகவேண்டும்.
தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இதுவரை,இலங்கை இனப் பிரச்சனையுள் நடைபெறும் அரச தந்திரங்கள்-இராணுவ வியூகங்கள் ,நெறிகள் யாவும் பாசிசப் போக்கினது வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியா-அந்நிய அரசியலே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்து வந்தது-இன்னும் தொடர்ந்து வருகிறது.
இதற்காக அமெரிக்காவும், மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் மறு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.இந்நிலையுள்,தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் புலியழிப்பிலிருந்து விளங்க முற்படுபவர்கள் மீளவும் வரலாற்றில் உண்மைகளையும் புலிகளுக்கூடாகவே கற்பிக்க முனைகின்றனர்.புலித் தலைமையினது பாதையிலும் மீளவும் நடக்கக் கற்பிக்கின்றனர்.
காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது. இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து”இலங்கையர்கள்”எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்”இலங்கையர்கள்”எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது, சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.இங்குதாம் தலித்துவக் குழுக்களது அரசியல் சதியும்-பிழைப்புவாதமும் இலங்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.இது, ஒரு கட்ட
நிலவிலே பேசுவோம்
சிவலிங்கம் அவர்களுக்கு
40 வது இலக்கியச்சந்திப்பு பற்றிய உங்களின் உள்ளக் குமுறுல்கைளை நானும் பார்த்தேன். உங்களை தோழர் என்று அழைக்கவா? ஐயாவென்று அழைக்கவா? சிவலிங்கம் என்றழைக்கவா? சிவப்பிரகாசம் என்றழைக்கவா ?என்ற குளப்பத்திலிருந்து தெளிவைக்காண முயற்சித்தேன்.என் கே ரகுநாதனின் நிலவிலே பேசுவேம் சிறுகதையை மறுபடியும் வாசித்தால் குளப்பம் தீரும் எனத் தோன்றியது.அதிலிருந்த சில வரிகளை உங்களுக்கும் சொல்லி விடுகிறேன்.
“ யாரோ பத்துப்பன்னிரண்டுபேர் நசிந்து போன கூட்டம் அதாவது உழைத்தால்தான் உணவு என்கிற நிலையில் இருக்கும் உழைப்பாழி வர்க்கம் அவர்களில் ஒருவன் தயங்கித்தயங்கி இவரண்டை வந்தான் மற்றவர்கள் அங்கேயே வெளியே நின்று விட்டார்கள்.சிவப்பிரகாசம் எழுந்து இரண்டி முன்னே நடந்து வந்தவனை உற்றுப்பார்த்தார்.
அடேய் நீயா கந்தா!என்ன சேதி என்றார்?
உங்களைக் காணவேண்டும் என்றுவந்தோம் இந்த மதுவிலக்கு சம்மந்தமாக என்று தயக்கத்துடன் சொன்னான்.
ஆகா அதெற்கென்ன நல்லாய்பேசலாமே! என்று சொன்னர் சிவப்பிரகாசம்.
இன்னும் சிலர் வந்திருக்கின்றார்கள் அப்படியானால் அவர்களையும் கூப்பிட்டு—-வார்த்தையை முடிக்காமல் வாசற்பக்கம் திரும்பி அங்கே உள்ளவர்களைக் கூப்பிட எத்தனித்தான் அவன்.
சிவப்பிரகாசம் ஒரு கணம் திக்கமுக்காடினார் மனதிலே ஒரு பரபரப்பு தடு மாற்றம் தலையைச் சொறிந்து நெற்றிப்பருவங்களை உயர்த்தி ஏதோ யோசனை செய்தவர் திடீரொன்று ஒரு முடிவுக்கு வந்தார்.
வேண்டாம் கந்தா கூப்பிடாதே! இதெல்லாம் இரண்டாம் பேர் அறியக்கூடாத விடயங்கள். மனைவி மக்களென்றாலும் இந்தக்காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்கின்றதென்று யாருக்குத் தெரியும்? அதோ பார் வெளியே நல்ல நிலவு அத்துடன் பால் போன்ற மணல் அங்கே பேய் பேசிக் கொள்ளலாம் வா! என்று அவன் பதிலை எதிர் பாராமலேயே கீழே இறங்கி நடந்தார். அவன் பின் தொடர்ந்தான்“;
ஐயா! சிவலிங்கம் அவர்களே! நீங்கள் எழுதிய ஆய்வுகளையும் கட்டுரைகளையும் பேசிய மேடைப் பேச்சுக்களையும் உரையாடல்களையும் இன்றுவரைக்கும் நான் மிகப் பிடிவாதமான பொறுமையுடன் கேட்டுவந்திருக்கிறேன். இதற்குப்பின்னும் 40 வது இலக்கியச்சந்திப்பில் அநாகரிகமான வார்த்தைப்பிரயோகங்கள் அவமானப்படுத்துகின்ற வார்த்தைப்பிரயோகங்கள் நாகரிகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் பாவிக்கப்பட்டு இலக்கியத்சந்திப்பின் கோட்பாட்டையும் மரபையும் ஒரு சிறு பிரிவினர் தகர்த்தெறிந்தவிட்டார்கள் என்று எப்படி தங்களால் ஆதங்கப்பட முடிகிறது. ஒருசிறு பிரிவினர் என்பது குளப்பவாதிகள் பயங்கரவாதிகள் நாகரீகமற்றவர்கள் என்பதை சர்வதேச அரசுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருநாளும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் அந்த ஒரு பிரிவினருக்கு எதிரான மறு பிரிவினராக தங்களை அடையாளப்படுத்திய நர்மையை மெச்சாமால் இருக்க முடியவில்லை. மொத்தத்தில் இம்முறை நடந்தேறியது இளிசனர் இலக்கியச்சந்திப்பு அதில் தவறுதலாக நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள் என்பதை தங்களின் கட்டுரை வாயிலாக அறிந்து கோண்டேன்.
இலக்கியச்சந்திப்புக்கு கோட்பாடு மரபு எல்லாம் இருப்பதாக தாங்கள் அடிக்கடி எல்லோருக்கும் உணர்த்த முயற்சித்திருக்கின்றீர்கள். இயங்கியல் தத்துவத்தை நம்புகின்ற தங்களைப்போல ஒரு மாக்சியருக்கு கோட்பாடும் மரபும் நிலைற்றவை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் வெள்ளார் என்ற வார்த்தைப்பிரயோகம் மட்டும் இயங்கியலை இடைநிறுத்தி முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றது. அந்த வார்த்தைப் பிரயோகம் நாகரிகமற்றவை என்று நாசூக்காக தீர்ப்புச்சொல்லி விட்டு போய்விடுகிறீர்கள். அதனால் தான் தங்களைப் போன்றவர்களை வெள்ளாள மாக்சியாகள் என்று தொடர்ந்தும் விழிக்க வேண்டியிருக்கின்றது.
42 வது இலக்கியச்சந்திப்பை நீங்கள் ஒரு நிலவு வெளிச்சத்தில் நடத்துவதாக அறிவித்தால் கூட நான் அங்கும் வரத்தயாராகவே இருக்கிறேன்.
hவவி://றறற.ழெழடயாயஅ.நெவ/pசழதநஉவ/03/252/252.pனக
காலம் கடந்த ஞானம். இப்போதுதானா உங்களுக்கு புரிகிறது?
திரு அல்லது தோழர் சிவலிங்கம்,
கிட்டதட்ட ராகவன், சோபா உட்பட தலித், பிரதேசவாத, சாதிவாத கோஷ்டிகளின் பிப்பீ ஆக இருந்த சிவலிங்கம் ஐயா, இவர்களுகு எதிராக மற்றவர்கள் கதைத்த பொது நீங்கள் பேசாமல் இருந்தீர்கள். உங்கள் மேல கைவைத்த உடன் மட்டும் கட்டுரை பீரிடுகிறது. நான் முன்னர் பிழை செய்தேன் என பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள். உங்கள் கதைகளுக்கு பெறுமதி இருக்கும்.
நிலவிலே பேசுவோம் அது இதுவென்று வார்த்தை ஜாலமிட்டு உங்கள் அதிகாரத்தின் மீதான பேராசையை மற்ற மனிதர்களை உங்கள் காலடிகளில் போட்டு நசித்து மிதிக்க துடிக்கும் உங்கள் வன்மத்தை மக்கள் புரிந்து கொள்ளுவார்கள். நாட்டில் தங்கள் சொந்த லாபங்களுக்காக பொதுப் பிரச்சனைகளில் சாதியத்தை கையாளும் நபர்கள் குறித்தும் அவர்கள் மகிந்த அரசின் காலடியில் எவ்வாறு ஜக்கியப்பட்டு பாம்புக்கும் நோகாமல் தடிக்கும் நோகாமல் காரியமாற்றுகிறார்கள் என்பதையும் மக்கள் உணர்ந்தேயுள்ளனர். ராகவன் டான் ரிவியில் வந்து தனக்கு இலங்கை அரசின் மேல் சில விமர்சனங்கள் தான் இருக்கிறது என்கிறார். இலங்கை அரசு தமிழ் மக்களின் நண்பனா? ராகவனின் நண்பனா?