Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
06/20/2021
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
50
Home பிரதான பதிவுகள் | Principle posts

leadersofenlfஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார்வையோ அதனை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டமோ இருந்திருக்கவில்லை.

இந்திய அரசின் தலையீடும் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் விடுதலை இயக்கங்களை வெற்று இராணுவக் குழுக்களாக மாற்றியமைத்திருந்தன. இந்த இராணுவக் குழுக்கள் தமது குழு நிலை நலன்களைப் பேணிக் கொள்வதற்காக தமக்கிடையே மோதிக்கொண்டன. தாமே சிறந்தவர்கள் என அறிவிப்பதற்கு ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒவ்வொரு பிரச்சார நியாயம் இருந்தது. புலிகளோ தாமே முதலில் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஆக, தம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என ஆண்டபரம்பரை ஆணவத்தோடு கூறினர். ஏனைய இயக்கங்களும் இராணுவக் குழுக்கள் என்ற வகையில் இவ்வகையான நிலப்பிரபுத்துவக் குழுவாத போக்குகளில் மூழ்கியிருந்தனர்.

அன்று 1986 ஏப்பிரல் மாதத்தின் கடைசிப்பகுதி – 29 ம் திகதி காலை, எப்போதும் போல விடியவில்லை. ஆங்காங்கே துப்பாக்கிப் சத்தங்கள் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எதோ ஒரு பயங்கரத்தை அறிவித்தது. வேப்ப மரங்களைக் கடந்து தெருமுனைக்கு வந்து விசாரணை செய்ததில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டை நடக்கிறது என்றார்கள்.அந்தக் காலத்தில் பலாலி இராணுவ முகாமிலிருந்து புறப்படும் குண்டுவீச்சி விமானங்கள் அதி காலையிலேயே ரோந்து செல்லப் பறப்பதற்கு ஆரம்பித்துவிடும். அன்று விமானங்கள் எதுவும் பறக்கவில்லை. அன்றிலிருந்து இரண்டு நாட்களுக்கு இலங்கை இராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது.

ஒரு பல்கலைக்கழகம் மக்களின் போராட்டத்தைத் தலைமை தாங்க முடியாது. அந்தவகையில், தான் சார்ந்த சமூகத்தின் அவலங்களில் தீர்க்கமான பங்கு வகித்த பெருமை யாழ்ப்பாணப் பல்கலைகழகத்திற்கு உண்டு. அங்கே சென்றால் தகவல்கள் தெரியாலாம் என எனது சைக்கிளில் பல்கலைகழகத்திற்குச் செல்கிறேன். ஒவ்வொரு மூலையிலும் பலர் கூடியிருக்கிறார்கள். டெலோ இயக்கத்தைப் புலிகள் அழித்துக்கொண்டிருகிறார்கள் என்ற தகவல் பரவாலகப் பேசப்படுகிறது. இனந்தெரியாத சோகம் அனைவரது முகங்களிலும் படர்ந்திருக்கிறது. டெலோவின் பிரதான இராணுவத் தளங்கள் அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் புறநகர், கள்வியன்காட்டு கட்டப்பிராய் ஆகிய அருகருகேயான பகுதிகளை நோக்கிப் புலிகள் நகர்வதாகத் தகவல்கள் வருகின்றன.

அதிகாலையைக் கடந்துகொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் இரண்டு பேரைப் புலிகள் உயிரோடு எரித்த தகவல்கள் மனிதாபிமானத்தின் உயிரை விசாரணை செய்தது.

நானும் வேறு சிலரும் அங்கே சென்று விசாரிக்கிறோம். ஆடியபாதம் வீதியில் தான் அந்தக் கோரம் நடந்திருந்தது. திருநெல்வேலிச் சந்தைச் சைக்கிள் தரிப்பகத்தைப் TELO நடத்திக்கொண்டிருந்தனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 14 வயதளவிலான சிறுவர்கள் அதற்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்த புலிகள் சில மீட்டர் தூரம் வரை கொண்டுசென்று அங்கே அவர்களை உயிரோடு எரித்திருக்கிறார்கள்.

நாங்கள் சென்ற வேளையில் புலிகள் அந்த இடத்திலிருந்து டெலோ நிலைகளை நோக்கி முன்னேறியிருந்தனர். எரிக்கப்பட்ட சிறுவர்களின் பிணங்களைப் பார்ப்பதற்கு எங்களுக்கு மனதில் துணிவு இருக்கவில்லை. அதற்கு முன்னாலிருந்த வீட்டு குடியிருப்பாளர்களிடம் பேசுவதற்காகக் கதவைத் தட்டினோம். யன்னலைத் திறந்து யார் எனக் கேட்ட வயதான பெண் ஒருவரிடம் விபரங்களைக் கேட்க முற்பட்ட போது, அவர் பேச மறுத்துவிட்டார். (டெலோ அழிக்கப்பட்ட சில வாரங்களின் பின்னர், நானும் சசி அல்லது தங்கராஜா என்ற கிராமிய உழைப்பாளர் சங்க செயலாளரும் அந்த வீட்டிற்குச் சென்று எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த வேளையில் அவர்கள் எரிக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தத்திலிருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை. வீட்டிலிருந்து இடம்பெயர்வதற்கான தயாரிப்புக்களைச் செய்துகொண்டிருந்தனர்.)

நான் இளைஞன்.  அவலங்களையும், அதிர்ச்சிகளையும் உள்வாங்கிக்கொள்ளும் மனோபக்குவும் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை.

பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வருகிறோம். டெலோ இயக்கப் போராளிகளுக்கு பயப் பீதியை ஏற்படுத்தும் நோக்கிலேயே உயிருடன் எரித்ததாக புலிகளின் முக்கிய உறுப்பினர் தனக்குக் கூறினார் என்று உதவி விரிவுரையாளர் மு,திருநாவுக்கரசு எமக்குக் கூறுகிறார். புலிகளை விமர்சன அடிப்படையிலேயே ஆதரிப்பதாக எப்போதும் கூறும் திருநாவுக்கரசு, நாம் இவை குறித்துப் பேசினால் கொல்லப்படுவதற்கான அபாயம் உருவாகலாம் என எச்சரிக்கிறார்.

மு.திருநாவுக்கரசு இப்போது சென்னயில் தங்கியிருக்கிறார். வன்னியில் இனப்படுகொலை நடைபெறும் வரை புலிகளுடனேயே தங்கியிருந்த அவர், இப்போது இந்திய அரசின் ஆதரவாளர். இந்தியாவைப் பகைத்துக்கொண்டதே இந்த அழிவுகளுக்கு எல்லாம் காரணம் என்றும், சீனாவிற்கு எதிராக இந்தியா ஈழம் பிடித்துத் தரும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

மதியம் கடந்த வேளையில் நான் சில பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து பேராசிரியர் சிவத்தம்பியைச் சந்திக்கிறேன். அவ்வேளையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவத் தளபதியாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தவுடன் சிவத்தம்பி அரசியல் தொடர்புகளைப் பேணிவந்தார். சிவத்தமபியிடம் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுகிறோம். குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கு, பல்கலைக் கழகத்தில் உடனடி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டால் அதனைத்தொடர்ந்து புலிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்க தான் முன்வருவதாகக் கூறினார்.

அதற்காக டெலோ இயக்கம் இன்னமும் பலத்துடன் நிலைகொண்டுள்ள கள்வியன்காட்டுப் பகுதியில் கார்த்திகேசு மாஸ்டர் என்பவர் உண்ணாவிரதமிருப்பதாகவும் அவரைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவந்து அங்கு போராட்டத்தைத் தொடர்ந்தால் அவரோடு ஏனையவர்களும் இணைந்துகொள்ளலாம் என்றார்.

அவரை அழைத்துவருவதற்கு நானும் யோகன் என்பவரும் இணக்கம் தெரிவிக்கிறோம். யோகனை எனக்கு நன்கு அறிமுகமில்லாதவர். புலிகளின் ஆதரவாளர். அவரது மூத்த சகோதரர் புளட் அமைப்பின் அரசியல் பிரிவில் காண்டீபன் என்ற பெயரில் செயற்பட்டவர்.

நாங்கள் கார்த்திகேசு மாஸ்டரை அழைத்துவரப் புறப்பட்ட வேளையில் டெலோ இயக்கத்தில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். கள்வியன்காடு பகுதியில் மட்டும் டெலோ இயக்கம் எதிர்த்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்து. அங்கு டெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் தங்கியிருந்ததால் இராணுவ பலமும் அதிகமாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

கள்வியன்காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் சட்டநாதர் கோவில் பகுதியில் புலிகள் இயக்கத்தினர் டெலோ நிலைகளை நோக்கி முன்னேறியவாறிருந்தனர். அவர்கள் முதலில் எங்களைக் கைது செய்து விசாரணை செய்கின்றனர். யோகன், சிவத்தம்பி ஆகியோர் மீது அதிக சந்தேகம் கொள்ளவில்லை என்பதால் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிக்கின்றனர்.

புலிகள் இயக்கத்தின் நிலைகளைத் தாண்டிச் செல்லும் போது டெலோ இயக்கத்தினர் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றனர். நாங்கள் ஏற்கனவே தயார்செய்திருந்த வெள்ளைத் துணிகளை உயர்த்திக் காட்டுகிறோம். கொல்லப்படுகின்ற அவலங்களைப் பார்த்த எங்களுக்கு எமது உயிர் மீது கூட வெறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருவாறு கள்வியன்காட்டை அடைந்ததும், டெலோ இயக்கப் போராளிகளிடம் எமது நோக்கத்தைச் சொல்கிறோம். அவர்கள் எங்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்றும், இறுதி மூச்சுவரை போராடுவோம் என்றும் சொல்கிறார்கள்.

மிகுந்த ஏமாற்றத்துடன் நாங்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை நோக்கித் திரும்பிவருகிறோம். சிவத்தம்பி அப்போது அங்கிருக்கவில்லை. அவருக்காகக் சில மணிநேரங்கள் காத்திருக்கிறோம். டெலோ இயக்கம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்ட செய்தியோடு அவரும் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் வேறு சில முக்கிய உறுப்பினர்களோடு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பலர் கொல்லப்பட்டும் கைதுசெய்யப்பட்டுமிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

1983ம் ஆண்டில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து உருவான தேசிய எழுச்சியோடு நான் டெலோவில் இணைந்துகொண்டேன். பின்னதாக டெலோவில் மத்திய குழுவை உருவாக்கி ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்று நடைபெற்ற போராட்டங்களில் நானும் இணைந்து கொண்டேன். ஆக, ஆறு மாதங்கள் வரை அவ்வமைப்பின் செயற்பாடுகளோடு இணைந்திருந்தேன். பின்னதாக முன்று மாதங்கள் வரை தொடர்ந்த உட்கட்சிப் போராட்டத்தில் பங்கெடுத்ததால் டெலோ இயக்கத்தினர் கொலை செய்வதற்காக என்னையும் தேடியலைந்தனர். உட்கட்சிப் போராட்டம் உச்சமடைந்திருந்த வேளையில் சிறீ சபாரத்தினத்தைச் சந்திப்பதற்காக வெறு சிலரோடு, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் முக்கிய உறுப்பினரன கபூர் என்பவரின் ஒழுங்குபடுத்தலில் சென்னைக்குச் சென்றோம்.

நாளாந்தப் பத்திரிகைகள் கூடப் படிக்காத குறைந்தபட்ச அரசியல் அறிவுமற்றவராக சிறீ சபாரத்தினத்தை நாம் சந்தித்த போது ஏற்பட்ட அதிர்ச்சி பல ஆண்டுகள் நீடித்தது. புலிகள் மற்றும் டெலோ ஆகிய இயக்கங்கள் தமிழரசுக் கட்சியின் தொடர்ச்சியாகவே தம்மைக் கருதிக்கொண்டனர். ஆக, அவர்களுக்கான அரசியலைத் தமிழரசுக் கட்சி என்ற வலதுசாரிக் கட்சியே வழங்கியிருந்தது. ஆக, இந்த இரண்டு இயக்கங்களுமே இடதுசாரி எதிர்ப்பு என்பதையும் தமது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தன. 1984 ஆம் ஆண்டில், அண்ணாமலை என்ற டொஸ்கிய தொழிற்சங்கத் தலைவரும், விஜயானந்தன் என்ற ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும் இரண்டு நாள் இடைவெளிக்குள் தெருவில் வைத்துப் புலிகளால் கொலைசெய்யப்பட்டதே முதலாவது இடதுசாரிகளின் மீதான நேரடியான கொலை.

டெலோ இயக்கம் அழிக்கப்பட்ட போது, சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், எதிர்த்துப் போராடியவர்கள் என்று சற்றேறக்குறைய 400 டெலொ இயக்கப் போராளிகள் அழிக்கப்படிருக்கலாம் என்று பின்னதாகத் தகவல்கள் வெளியாகின.தவிர பல ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர். இந்திய அரசு, புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் ஆகிய இயகங்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தது. டெலோ இயக்கத்திற்கு துப்பாக்கிகளை வழங்கிய போதும் அதற்கான ரவைகளை வழங்காமையால் துப்பாக்கிகள் கட்டப்பிராய் ஆயுதக் கிடங்கில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தையும் புலிகள் கையகப்படுத்திக்கொண்டனர். ஆக, புலிகளைப் பலப்படுத்தி டெலோவைத் தமது துணைக் குழுவாக மாற்றுவதற்கான இந்திய அரசின் தந்திரோபாயமே இது என பலர் கருதினர்.
புலிகளை, குறிப்பாகப் பிரபாகரனைப் பொறுத்தவரை டெலோ இயக்கத்தை அழிக்கவேண்டிய மற்றொரு தேவையும் இருந்தது. டெலோ இயக்கத்தின் தலைவர்கள் குடத்தனை என்ற இடத்தில் வைத்துக் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் இந்தியாவில் சிறீ சபாரத்தினத்தின் தலைமையில் டெலோ இயக்கத்திலேயே செயற்பட்ட பிரபாகரன், இந்திய இராணுவம் ஆயுத உதவியும் இராணுவப் பயிற்சியும் அறிவித்தெ வேளையில் 1982 இறுதிப் பகுதியில் டெலோவிலிருந்து செல்லக்கிளி போன்றவர்களுடன் பிரிந்து சென்று மீண்டும் புலிகள் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

இப்போது சென்னையில் வாழும் நாகராஜா என்ற புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால தலைவர் ஒருவரை சென்னையில் வைத்து பிரபாகரனும் வேறு சிலரும் கடத்தி வந்து கொலை செய்ய முற்பட்ட போது, சிறீ சபாரத்தினம் தலையிட்டு தன்னைக் காப்பாற்றியதாக 2009 ஆம் ஆண்டு சென்னையில் அவரைச் சந்தித்த போது என்னிடம் கூறினார். 1982 ஆம் ஆண்டு தன்னைக் கைது செய்த போது டெலோ இயக்கத்தின் இரண்டாவது தலைவர் என்ற அடிப்படையிலேயே பிரபாகரன் கடத்திச் சென்றதாகக் குறிப்பிட்டார். பிரபாகரன் 70 களின் பிற்பகுதியில் மீண்டும் டெலோவில் இணைந்த போது, அவரை இணைத்துக்கொள்ள வேண்டும் என தீவிரமாக வாதிட்டவர் சிறீ சபாரத்தினம் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.

சிறீ சபாரத்தினம் கோண்ட்டாவில் பகுதியிலுள்ள அன்னங்கை என்னுமிடத்தில் மறைந்திருந்தார். புலிகள் அவரைத் தேடிப் பல இடங்களைச் சுற்றிவளைத்தனர். பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். வசதி படைத்தவர்கள் கொழும்பிற்கும், சிலர் இந்தியாவிற்கும் தப்பியோடினர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் மாற்று வழிகள் இன்மையால் கைதுசெய்யப்படுக் கொலைசெய்யப்பட்டனர்.

இறுதியாக மே 5ம் திகதி சிறீ சபாரத்தினம் தலைமறைவாக இருந்த பகுதி புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டு என அறியப்பட்ட சதாசிவம் கிருஷ்ணகுமாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு சிறீ சபாரத்தினம் இரைகிப் போகின்றார்.

பின்னதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்த கபூர் அந்த இயக்கத்தின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தைப் புலிகளுக்குக் காட்டிக்கொடுத்தது ஈரோஸ் இயக்கம் என்று தனக்குச் சந்தேகமிருப்பதாக அவர் என்னோடு பேசும் போது ஒரு தடவை தெரிவித்தார்.

சிறீ சபாரத்தினதின் மறைவிடம் அவர் கொலைசெய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் அவரை மீட்டு இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார். இறுதியில் கோண்டாவிலில் இருந்து அவரை அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈரோஸ் இயக்கத்தையும் ஈடுபடுத்த எண்ணிய ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை அவர்களிடம் அது குறித்துப் பேசியதாகவும், இரு இயக்கங்களும் இணைந்து வைக்கல் நிரப்பிய லொறி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாகவும் கூறினார். வைக்கல் நிரப்பப்பட்ட லொறி சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்தை அண்மித்ததும் பழுதடைந்து நின்றுவிட்டதாகவும், அதன் பின்னர் அரை மணி நேரத்திற்குள்ளாக சிறீ சபாரத்தினத்தின் மறைவிடத்திற்குப் புலிகள் சென்று அவரைப் படுகொலை செய்ததாகவும் கூறினார்.

ஈரோஸ் இயக்கத்தில் அதன் தலைவர் பாலகுமார் ஊடாகவே தொடர்புகளைப் பேணியதாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தில் அதன் உளவுப் பிரிவிற்குத் பொறுப்பாகவிருந்த ஜேம்ஸ் என்பவரே மீட்பு முயற்சியை ஒழுங்கு செய்ததாகவும் அறியக் கூடியதாகவிருந்தது.

சிறீ சபாரத்தினம் மரணித்த செய்தி வெளியான போது அதற்காகக் கண்ணீர்வடிக்க முடியவில்லை. நாம் ஏன் கொல்லப்படுகிறோம் என அறியாமலே மரணித்துப் போன நூற்றுக்கான போராளிகள் கொசுக்கள் போலச் சாகடிக்கப்பட போது, இதயம் கனத்தது.

————————————————–

இவையெல்லாம் வெறுமனே சம்பவங்களோ மறுபடி இரைமீட்பதற்கான வரலாற்றுப் பதிவுகளோ அல்ல. நமது தவறுகள் ஒரு சுழற்சி போல ஒரு எல்லைக்குள்ளேயே மீண்டு வருகின்ற போது மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியவை.

அதிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது.

இவற்றிலிருந்து வெளியேறி, தவறுகளை சுயவிமர்சம் செய்துகொள்ளவும், அதன் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசைவழியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா.

தவறுகளைக சாவகாசமாகக் கடந்து சென்று மனிதாபிமானமற்ற கோரத்தனமான சமூகத்தைத் தோற்றுவிக்க நாம் காரணமாகிவிடக்கூடாது.

ஒவ்வொரு தவறுகளையும் எமது எதிரிகள் பயன்படுத்திக்கொண்டு முழுப் போராட்டமும் தவறு என நியாயப்படுத்துவதற்கான வழிகளை நாமே ஏற்படுத்திக்கொடுக்கிறோம்.

புலிகளுக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் நூலிடை இடைவெளி தான் காணப்படுகிறது. இரு பிரிவினருமே குறைந்தபட்ச சமூக அக்கறை கூட இல்லாமல் தமது சொந்த நலன் சார்ந்த உணர்ச்சி அரசியலையே முன்வைக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் இவ்விரு பிரிவினருமே எங்காவது ஒரு அதிகாரவர்க்கத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு நிலைப்பாட்டையே வரித்துக்கொள்கின்றனர். தாம் சார்ந்த குறுகிய நலன்களை நோக்கி அரசியல் தலைமையற்ற ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணையக் கோருகின்றனர். இறந்துபோன காலத்தின் அவலங்களை மறுபடி பேசுவதெல்லாம் இந்த இரண்டுக்கும் அப்பாலான புதிய அரசியல் சிந்தனையை உருவாக்குமானால் தெற்காசியாவின் தென் மூலையிலிருந்து புரட்சிக்கான வேர்கள் படர வாய்ப்புக்களுண்டு.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மாற்று வேலைத்திட்டம் உள்ள அமைப்புகளுடன் அணிதிரளாவிடின் மலையக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்:இ.தம்பையா

மாற்று வேலைத்திட்டம் உள்ள அமைப்புகளுடன் அணிதிரளாவிடின் மலையக மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்:இ.தம்பையா

Comments 50

  1. sivamathi says:
    15 years ago

    ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் வாசுதேவன் ஆற்றிய உரை.

    மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும்.
    மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

    தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!

    பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று விடுதலைப் புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம். நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்! தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.

    தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!

    நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்! அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.

    அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார். சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.

    எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…

    சரியாக 22 ஆண்டுகள் கழித்து 2009 மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!

    அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடி, சரணடைவு, நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லை, அவமானப்படவில்லை, ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!

    25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை. கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள்.

    இன்று நானும் ஒரு துரோகி! காரணம் நான் பழசை கிளறுகிறேனாம். நாம் செய்வதெல்லாவற்றையும் கூட்டி அப்படியே மறைத்து விட வேண்டும்! அதை சும்மா கிளறுவதால் என்ன பயன்? செய்தவர்கள் இன்று இல்லை! ஆனால் உவன் மகிந்தனை விடக்கூடாது. இவர்கள் எல்லாம் இன்றும் மறக்கும் ஒரு விடயம் எவன் ஒருவன் தனது கடந்தகாலத்தை மறக்கிறானோ அவன் மீண்டும் அதையே செய்ய முயல்வான் என்பதே!

    எம் தமிழ் தலைமைகள் எல்லாம் அன்று முதல் இன்று வரை தமது அதிகாரங்களை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய மக்கள் நலன் மீது எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. இவ்வளவு அவலம் வந்து முடிந்த பின்னரும் ஒரு மீளாய்வுக்கு தயார் இல்லை!

    அவசர அவசரமாக கட்சி கட்டுவதிலும் தேர்தல் வைப்பதிலும் குறியாக இருக்கின்றனர். ஜனநாயகப் பண்புகள் அற்ற அமைப்புகளை கட்டியெளுப்புவதுடன் ஆயுதங்களை விட பலமான ஊடகங்கள் இன்று கைகளில் வைத்துக் கோண்டு ஆராஜகம் செய்து வருகின்றனர். உண்மைகள் மக்களிடம் போனால் செல்வாக்கு போய்விடும் என்ற பயத்தில் சுயநலம் கொண்ட மிருகங்களாக மாறி நடந்து மடிந்த போரில் குற்றுயுரும் குலை உயிருமாக தப்பியவர்களின் நியாயமான கோபங்கள் ஆதங்கங்கள் பேன்றவற்றை இன்று உயிருடன் குழிதோண்டிப் புதைக்கின்றனர். அந்த மக்களின் பட்டினிச் சாவில் இன்று தம் வெட்கங்கெட்ட அரசியலை செய்கின்றனர்.

    50 வருடகாலமாக எதைப் பேசினோமோ அதையே இன்றும் பேசுகிறோம். உலக மாற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி அடுத்தவனை குறை கூறுவதிலும் எமது தவறுகளுக்கு நியாயம் கதைத்தபடி அடுத்தவன் தவறுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலேயெ நாம் கண்ணும் கருத்துமாக நிற்கிறோம்.

    காலாகாலமாக வேரூன்றி பெரு விருட்சமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவிற்குள் விரட்டியடித்து விட்டு சிங்களவன் எங்கடை காணியைப் பறிக்கிறான் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறோம். அந்த சமூகத்திடம் குறைந்த பட்சம் மன்னிப்புத்தான் கேட்க வேண்டாம் அது சரியென்று வியாக்கியானம் கொடுத்து அவர்களை இன்னமும் அவமானப்படுத்துகிறீர்கள். இலங்கை ஒரு பல கலாச்சாரங்களை, பல இனங்களை, பல மதங்களை கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து எனது சாதி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற சுயநலமும் மற்றவனை வீழ்த்த வேண்டும் என்ற ஆவேசமும் தான் எங்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தை வளர்த்தது என்பதை நாம் என்று உணரப்போகிறோம்?

    காலணித்துவ ஆட்சியின் பின் இலங்கையில் இனங்களிற்கிடையிலான சந்தேகங்களை வைத்து அரசியல் செய்த தமிழ் சிங்கள தலைமைகள் தான் இனவாத அரசியலைத் தோற்றுவித்தன. இதே சந்தேகங்கள்தான் இன்று எம் எல்லாரிடமும் பல்வேறு பிளவுகளை தோற்றுவித்தும் வருகிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இலங்கை என்ற அழகிய தீவில் மக்கள் என்றுமே நிம்மதியாக வாழ முடியாது.

    புலம்பெயர் மண்ணில் வாழும் மக்கள் இன்று ஆத்திரம் கொண்டவர்களாகவும் பழிக்கு பழி என்ற சிந்தனையை மட்டுமே தம்முள் வைத்தபடி இனவாத அரசியலை வளர்த்து வருகிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகளிற்கு இவர்கள் இன்னமும் தீனி போட்ட வண்ணமுள்ளனர். கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும் என்பதை பற்றியெல்லாம் இவர்களிற்கு கவலை இல்லை! நான் குருடானாலும் பரவாயில்லை என் எதிரியை குருடாக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் அவர்களிடம் மிஞ்சி நிற்கிறது.

    இன்று இந்த நிகழ்வு நடைபெறுவது கூட பலருக்கு தெரியாது. தெரிந்தாலும் அது பற்றி அக்கறையில்லை! இதுதான் எம் சமூகத்தின் சாபக்கேடு. தம் தவறுகளை திருத்த முயலாதவர்கள் எப்படி அடுத்தவனை திருந்தச்சொல்ல முடியும்?

    யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தள்ளது. புலம்பெயர் மண்ணில் உள்ளவர்கள் முதலில் தங்கள் கோபங்கள் ஆத்திரங்களை மறக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில் நடந்த ஒவ்வொரு விடயங்களையும் பக்க சார்பற்று நேர்மையுடன் திரும்பி பார்க்க வேண்டும். தாம் விட்ட தவறுகளிற்கு மன்னிப்பு கோர வேண்டும். தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாது அந்த தவறு திரும்பவும் நடைபெறாதிருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் முதலில் மன்னிக்க தயாராக வேண்டும். தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற நிறவெறிப் போராட்ட முடிவு இன்று எமக்க ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.

    இலங்கையர் அனைவரும் தான் சாராத இன மத கலாச்சாரங்கள் இலங்கையின் ஒரு கொடை என்பதை உள்வாங்க வேண்டும். அதையும் பாதுகாத்து வளர்ப்பது எமது கடமை என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். இதன் முலமாக இனங்களிற்கிடையிலான உறவு மேம்படுவதுடன் இன விரேதாங்களும் சந்தேகங்களும் அற்றுப்போகும் ஒரு சூழல் உருவாகும்.

    சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு முன்நோக்கி நகர வேண்டும். இதற்கு எல்லா இயக்கங்களிலுமிருந்து போராட சென்று மரணித்தவர்களை ஒன்றாக நினைவு கூர நாம் ஒரு பொதுவான தினத்தை தெரிந்தெடுக்க வேண்டும். இந்த தினம் எமது கடந்தகால இயக்க மோதல் காயங்களிற்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு தினமாக அமையவேண்டும். அன்று அனைவரும் தாம் முன்விட்ட பிழைகளை நேர்மையுடன் மனம் விட்டு பேச வேண்டும்.

    எமது போராட்டத்திற்கு தலைமை வகித்த எல்லா தலைவர்களும் இன்று எம்முடன் இல்லை. அவர்கள் யாருமே தம் தவறுகளிற்கு மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் இந்த நாளில் நான் சார்ந்த அமைப்பு செய்த சகல தவறுகளிற்கும் அந்த அமைப்பில் ஒரு காலத்தில் இருந்தவன் என்ற முறையிலும் இதனால் அன்று நான் செய்திருக்க கூடிய சகல தவறுகளிற்கும் இன்று உங்களிடம் ஒரு பொது மன்னிப்பை கோருகிறேன்.

    உலகில் மாற்றம் வரவேண்டுமாயின் அது உன்னுள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வாசகத்துடன் எனது உரையை முடிக்கிறேன்.

    • பார்த்திபராசன் says:
      15 years ago

      நீங்கள் கூறிய பல விடயங்களை 85 முதல் 87 காலப்பகுதியில் ஒரு புலிப்போராளி(பருத்தித்துறைக் கரிகாலன்) மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி போராட்டம் திசை மாறிடாது காக்க மக்கள் அணிதிரள எவ்வளவோ போராடினான். (ஆரம்பம் வட இந்து மகளிர் பாடசாலையில் 1985 சிவராத்திரிக்குப் போட்ட நாடகத்தில் இறுதியில் துப்பார்கிகள் மக்களுக்கெதிராகத் திருப்பப்பட்டு *”இது எமது பொது எதிரிக்காகத் தூக்கப்பட்ட துப்பாக்கிகள் உங்களுடைய தொடர்ச்சியான ஆதரவு கிடைக்கவில்லையானால் இது உங்களுக்கெதிராகவும் திருப்பப்படும்.”*) மக்கள் அவனுக்கு அளித்த பரிசு “உவன் துரோகி, உவனை மண்டையிலை போடவேனும்”. இப்படியான மக்களால் எப்படி ஒரு நல்ல ஆட்சியை அமைக்க முடியும்.

    • Nizam says:
      15 years ago

      யதார்தன்களுக்கு முகம் கொடுப்பவனும்,  பிளைகளை ஒத்துக்கொள்பவனும் தான் உண்மை வீரன். 

      I really appreciated about your attitude of accepting the atrocities and forcible eviction of innocent, unarmed, peace loving, minority  Muslims from their home land North for no reasons, by the so called freedom fighters  (cannibals of 20th century ) fighting for the rights of minorities LTTE in 1990. 

      Almighty God had punished them for the crime here and will punish them in the Hereafter. 

      Nizam

  2. THAMIL MARAN says:
    15 years ago

    வரலாற்றீன் பதிவு மனதை நெருடுகிறது,சொந்தச் சகோதரரே நம் சொந்தங்கள சூறயாடிய சோகமான நாடகங்கள் மனதை விட்டு விலகாமல் தொடர்கின்றன.

  3. S.G.Raghavan says:
    15 years ago

    சுந்தரம் படுகொலை, சுழிபுரம் கூட்டுப் படுகொலை, தாஸ் படுகொலை, அமீன் படுகொலை இந்தியாவில் நடந்த உட்கட்சி படுகொலை இவற்றை எல்லாம் தாண்டி டெலோ மீதான கூட்டுப் படுகொலை இவற்றை இன்றைய முள்ளிவாய்க்கால் அவலத்துடன் ஒத்துப் பார்கிறேன் அவலங்களுக்கு தங்க முலாம் பூச முடியாது கேட்ட அவலம் நல்ல அவலம் என்று எதுவும் கிடையாது. பருத்தித்துறை ஆனை விழுந்தான் சுடலை 1986 ஏப்ரல் மாதம் டெலோ போராளிகளின் கண்கள் கைகள் கட்டப் பட்ட உடலங்களால் நிரம்பி வழிந்தது தலை வெளியிலும் கால் கை வெளியில் தெரிந்த உடலங்களில் மண்ணையும் சுண்ணாம்பு கல்லையும் தூக்கி வைத்துவிட்டு கனத்த இதயங்களுடன் வீடு சென்றேன். 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தை பார்க்கும் போதும் அதே எண்ணமும் கவலையும் ஏற்படுகிறது. கைகள், கண்கள் கட்டப்பட்டு அனாதைப் பிணங்களாய்…. அன்று எங்களை சுடாதயுங்கோ என்று அலறிய அவலம் மணல் காடு கடல் வரை தெறித்து இருக்கும். 1990 இலும் அவர்கள் அரைகுறையாக புதைக்கப் பட்ட இடங்களில் மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் பார்க்க கூடியதாக இருந்தது. அன்று தமிழிலே அவர்கள் எழுப்பிய அவலம் எம்மவர் காதில் விழவில்லை. இன்று இவர்கள் எழுப்பிய அவலம் சிங்களவன் காதில் விழவில்லையா என்று எனது சமச்சீரற்ற எண்ணம் கவலைப் படுகிறது . 1987 கிழக்கில் ஒரு சில நாட்களில் நூற்றுக்கு மேற்பட்ட பிளாட் பழைய போராளிகள் அவர்களது வீடுகளில் வைத்தே சுடப் பட்டனர், வவுனியா மன்னார் பகுதியில் பிளாட், EPRLF அமைப்பில் இருந்து விலகியவர்கள் செயல் பட்டவர்கள் என பலநூறுபேர் பொது இடங்கள் வீடுகளில் வைத்துச் சுடப் பட்டனர். இவற்றை விஞ்சிய பொத்துவில் திருக்கோவில், நரிப்புல்மலை, தீவுச்சேனை, வெலிகந்தை பகுதியில் சரணடைந்த அல்லது சிறைபிட்டிகப் பட்ட நூற்றுகணக்கான TNA உறுப்பினர்கள் காடுகளில் உள்ள மாட்டு படிகளில் அடைக்கப் பட்டு கூட கூட்டுபடுகொலை செய்யப் பட்டனர். அவலங்கள் பேசப்படவேண்டும் அவை ஆசுவாசப் படுத்தப் படவேண்டும் சமுகத்தில் மேலும் மீள் எழாமல் பார்த்து கொள்ளப் பட வேண்டும். இந்த அவலங்கள் இனியேனும் மிக அவதானமாகவும் நிதானத்துடனும் பேசப் பட்டால் நாம் எமது விடுதலையில் பல தடைகளை கடக்க முடியும். நம்மத்தியில் நடந்த அவலங்களை பேசுவது என்பது முள்ளிவாய்காலில் நடந்த அவலங்களை கொச்சை படுத்தவோ, நிராகரிக்கவோ, நியாயப் படுத்தவோ பயன் படுத்த அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  4. அப்பாதுரை says:
    15 years ago

    வரலாறு வெறும் நினைவுகோல் அல்ல, கடந்து வந்த பாதையின் காலடிச்சுவடுகள் என்பதை மறந்து விடுகிறோம். முன்னேறும் பொழுது நடந்து வந்த பாதையை நினைத்தென்ன பயன் என்ற பார்வை பல நேரம் நம்மை பெருஞ்ச்சிக்கல்களில் நிறுத்திவிடுகிறது. உங்கள் உரையும், சிவமதியின் உரையும் பல மறந்து போன, சில நினைக்க மறுத்த, நிகழ்வுகளையும் பாடங்களையும் மனதில் கொண்டு வந்தன. TELOவுக்கும் புலிகளுக்குமிடையே இருந்த அகழியை அறியாதிருந்தேன். ‘எமது போராட்டத்திற்கு… தவறுகளுக்கு மன்னிப்பு கோரவில்லை’ எனும் சிவமதியின் வரிகள் நிறைய சிந்திக்க வைக்கின்றன. தலைவர்கள் எப்போது தாங்கள் தலைவர்கள் என்பதை மறந்தார்கள்?

    இன்று இலங்கையில் அமைதிக்கான சூழல் உண்மையிலேயே ஏற்பட்டிருக்கிறது என்ற பொதுவான கருத்து தமிழினத்துக்குள்ளே நிலவினால், அதைப் பரப்புவதே ஒரு வகையில் மரணித்தவர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகும் (மன்னிப்பும் கூட).

  5. Bharathi says:
    15 years ago

    //தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது. // – கட்டுரையாளர். 
    வாசுதேவன்  தனது  மன்னிப்பையும்,  சுய  விமர்சனத்தையும்  கே.பி  உடன் வேலை  செய்வதை    -நியாயப்படுத்துவதற்குப்  பாவிக்கிறார்.   சுய  விமர்சனத்தைப் பாவித்து  இது  போன்ற  வியாபாரங்கள் உடனடியாக    எதிர்கொள்ளப்பட வேண்டும்.   தமிழ்  மக்களுக்கு மட்டுமல்ல  கொல்லப்படும் சிங்கள  ஊடகவியலாளர்களுக்கு  கூட  துரோகம் இழைக்கும்  கே.பி யின்  உத்தியோக பூர்வ   புலம் பெயர் நபரான   வாசுதேவன்  போன்றோரை  ஒரு முகமாக  நிராகரிபதில் இருந்தே எமது  உரிமையை  வென்றெடுக்க  முடியும்.

  6. Nada Manivannan says:
    15 years ago

    we should be a learnt community so we can go forward in a better way.
    The events described in this article other similar events happened in the past should be considered truthfully and taken seriously. then only we, Thamils, will not make same mistakes in future.
    Truth always prevails.

  7. கணேஷன் says:
    15 years ago

    …3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!

    இனிமேலும் இது தான் நடக்கும்.
    ஆயுத மோகத்தால் துவக்கு தூக்கவும் ,இந்தியாவிற்கு பல்லாக்கு தூக்க இனிமல் போனாலும் இது தான் நடக்கும்

    • THAMIL MARAN says:
      15 years ago

      இதற்குப் பிறகாவது வாசுதேவன் போன்றவர்கள் கோப்பி குடித்த கதையை விடவேண்டும்.கள்ளக் கோழி பிடித்து சூப்புக் குடித்தோம் என்றூ இனியும் கதை அளந்து கொண்டிருக்க கூடாது.அடுத்து ஈரோஸ்காரர் பாம்புகள் போல மெதுவாய் ஊர்ந்து பலரைக் கடித்திருக்கிறார்கள்,சந்தர்ப்பத்திற்கு ஏறப தொப்பியை மாற்றீ, மாற்றீப் போட்டு பலரை மொட்டை அடித்திருக்கிறார்கள்.

  8. Selvan says:
    15 years ago

    பாரதி ஒருவரின் சுயவிமர்சனத்தை நிராகரிக்கும் உங்களிற்கு வாசுதேவனை எவ்வளவு நாளாக தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் வாசுதேவனை பல ஆண்டுகளிற்கு முன் நடைபெற்ற சிறீ சபாரத்தினம் நினைவு அஞ்சலி கூட்டத்தில் தான் முதலில் சந்தித்தேன். தொடர்ச்சியாக சிறீ அண்ணாவின் பல நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு வந்த முன்னாள் புலி அங்கத்தவர்கள் இருவரில் இவர் ஒருவர் மற்றவர் ராகவன். கேபியுடன் இணந்து வேலை செய்ய இந்த சுயவிமர்சனம் எந்த வகையில் பயனகும் எனறு எனக்கு புரியவில்லை.

  9. ethayam says:
    15 years ago

    பாரதியின் கருத்து நியாயமானது. சுயவிமர்சனம் என்ற போர்வையில் கூட மக்களுக்கு துரோகமிழைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். வாசு தேவன் போன்றோர் மக்கள் நலன் விரும்புபவர்களை வென்றெடுக்க மிகுந்த சிரமப்பட வேண்டும். மக்களுக்கு உதவி னெ;ற பெயரில் தமது வியாபாரங்களை ஆரம்பிக்க சுய விமர்சனம் என்பது புலிக்கு புதிய ஒரு ஆயுதமாகின்றது என்பதை கவனிக்க வேண்டும்.

  10. anusha says:
    15 years ago

    சுயவிமர்சனம் என்பது அரசியல்வாதிகளின் தந்திரமாகவும் இருப்பது வழமைதான். ஆனால் கே.பி.  வாசுதேவன் போன்றோர் புலிகளுக்காக வியாபாரம் செய்தவர்கள்.  அவர்களுடைய பணம் இங்கே உள்ள தமிழ் மக்களுக்கு பயன்படுவதற்கு ஏதாவது செய்யட்டும்.  அது அவர்கள் தேடிக்கொள்ளும் குறைந்தளவிலான ஒரு பிராயச்சித்தமாக என்றாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.  எமக்கு என்ன தேவை என்றால்> எமது நாட்டின் மீதான ஏகாதிபத்திய வல்லரசுகள்> பிராந்திய வல்லரசுகள் எதனதும் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எமது நாட்டுக் குற்றவாளிகளின் பணத்தைப் பயன்படுத்தலாமே என்பதுதான்.  அல்லாதுவிட்டால்>  இந்த ஆதிக்கப்போட்டியில் இங்கே மக்கள் தொடர்ந்தும் தரப்பாள்களுக்குள் சிவிக்கும் நிலைமைதான் தொடரும்.  

  11. anusha says:
    15 years ago

    நாவலன்! மார்க்சியத்தைப் படித்தவர்கள் மட்டும்தான் சரியான மனிதர்கள் என்று நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. ஒரு நாளிதழைக் கூட படிக்காத சிறீ ஒரு மனிதனா? என்பதே உங்கள் கேள்வி போலிருக்கிறது. ‘ஒரு தவறான மனிதனின் இழப்பு..’  கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புலிகளுக்கு கோப்பி கொடுத்த மக்கள் .. என்று வாசுதேவன் மனம் கூச்சப்படுகிறாரே அந்த மக்களின் நிலையில் இன்றும் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது.  

    • vasi says:
      15 years ago

      அனுஷா,
      எங்கே உங்கள் நண்பர் துரை?
      சரி கிடக்கட்டும். கட்டுரையின் கருத்துக்களை அரச சார்பானவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதில் கட்டுரையாளரே கவனமாக இருந்திருக்கிறது. விட்டல் கேபி, கருணா, டக்ளேசு, பிள்ளையான் ஏன் இமெல்டா சுகுமார் எல்லாரையும் மார்க்சிஸ்ட் என்று சொல்வீர்களோ?

      • anusha says:
        15 years ago

        அப்போ நாவலன் மார்க்சிஸ்ட் இல்லை என்கிறீர்களா? உங்களுக்குப் புரியவில்லைப் போலிருக்கிறது. நான் சொன்னது> மார்க்சியம் படித்தவர்கள் சரியான மனிதர்கள் என நாவலன் நினைக்கிறார் என்பதைத்தான்.  

        வசி! யதார்த்தவாதிகளை ஒருபக்கமாகத் தள்ளிவிட்டு தத்துவவாதிகளை ஒன்றிணைக்கப் பார்க்கிறீர்களாக்கும் . தத்துவவாதிகளுக்கு யதார்த்தவாதம் பிடிக்காது ஆனால் யதார்த்தவாதிகள் தத்துவங்கள் நடைமுறைக்கு ஒத்துவந்தால் அதையும் ஏற்றுக்கொள்வார்கள். 

    • Kumar says:
      15 years ago

      சந்தா்ப்ப வசத்தால் தலைவா்களாகியவா்கள், அா்த்தம் இல்லாமலே அவா்களை தெய்வங்களாக வணங்கிய போராளிகள், இயக்க சனநாயகம், விதிமுறைகள் என்று கேட்டவா்கள் துரோகிகள் ஆனார்கள் அளிக்கப்பட்டார்கள், காரணம், அதிகாரத்தின் மூலம் அவா்கள் கண்ட இன்பம்.
      ஒரு விடுதலைப்போராட்டம் எப்படி முன்னெடுக்கப்படவேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாவிட்டாலும் அதற்கான இயக்கம் எப்படிப்பட்ட கோட்பாடுகளை கொண்டதாக இருக்கவேண்டும் என்பதைக்கூட விளங்க முடியாதவா்களாக இருந்ததனால் நம்பிச்சென்ற அப்பாவி இளைஞா்களின் வாழ்க்கையை துஸ்பிரயோகம் செய்தார்கள்.

      சிறிசபா ஒரு தவறான மனிதா் என்பதை கவலையுடன் ஒத்துக்கொள்ளவேண்டியுள்ளது காரணம் ரெலோ என்ற சிலந்தி வலைக்குள் போய்வந்த நாவலன் போன்றோருக்கே புரியும்.

       

    • mamani says:
      15 years ago

      நாளிதழ் படிக்கும் பழக்கம் கூட இல்லாதவர் எப்படி இயக்கத்தை தலமையேற்று நடத்த முடியும்?

      • THAMIL MARAN says:
        15 years ago

        நாளீதழுக்கும் விடுதலை இயக்கத்துக்கும் சம்பந்தமில்லை அது ஒவ்வொருவரினதும் வித்தியாசமான பார்வை.ஜோர்ஜ் புஸ்ஸீற்கு பாகிஸ்தானை அறீந்திருக்கவில்லையே ஆக சபா அவர் காலத்தில் கீரோவே.அவரை புலிகள் கோழைத்தனமாகவே அழித்தனர் அதனால் கிட்டு பேப்பர் படிப்பவர் ஆக மாட்டார் ஏனென்றால் அவருக்கு வாசிக்கவே தெரியாது.

  12. thalai says:
    15 years ago

    உந்த ஈரோஸ் காரார் தாங்கள் படிச்ச இயக்கம் என்டு உல்டா விட்டுக்கொண்டு திருஞ்சவை … ஐயோ இப்ப பாருங்க நசுக்கிடாம வேல பாத்திருக்காங்கள்.

  13. கோமாளிகள் says:
    15 years ago

    மற்றவர்களில் குறை சொல்வோர்,குற்றம் காண்போர் கவனத்திற்கு!

    எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது,எவரும் மேதைகளாக இருக்கவில்லை.முயற்சியும்,பிறழ்வும் தொடர்ந்தே இருந்தன.கற்றல் என்பது வெறும் வாசிப்பு மட்டுமல்ல;நீண்ட அனுபவமும் கூட.

    தலைமைக்கான அடிப்படைத்தேவை தந்திரமும்,சூழ்ச்சியும். இதுதான் உலக அரசியலில்,விடுதலைப் பயணத்தில் நடப்பவை.

    அதிகாரத்தில் உள்ளோர், வரலாறு படைப்போராக, காந்தியையும்,கிட்லரையும் வரையறுக்கிறார்கள்.

    எல்லாம் இழந்தவர்கள் உண்மை சொல்வது,நியாயம் பிளப்பது,மன்னிப்பு கேட்பது அடக்குமுறையாளனுக்கு மகுடம் சூட்டவே.

    • Kumar says:
      15 years ago

      மேதைகள்தான் இயக்கம் நடத்தவேண்டும் என்ற நியதி எதுவும் கிடையாது சாதாரணமாக திறமையுள்ளவா்கட்கு முதலிடம் கொடுத்தால் போதுமானது அப்படிப்பட்டவா்கள் இயக்கங்களில் நிறயப்போ் இருந்தார்கள் ஆனால் அதிகாரவெறி அதை தடுத்துவிட்டது.

  14. பிடுங்கி says:
    15 years ago

    மக்கள் எதையும் மறக்கவல்லவர்கள் என்பதால் தான் அவர்கள் முதுகேறி மறுபடியும் தொடர்கிறது வதமும், வாதமும். மன்னிப்பின்றேல் வாழ்வில்லை என்று இப்போ மார்தட்டுகிற வாசுதேவன் அவர்களே அது எதிரிக்கும் புரியவேண்டும். கோழிகுஞ்சுக்கு மட்டும் கொல்லாமை போதித்துவிட்டுப் பருந்துகளுக்குப் பக்கபலம் தேடுவதைப்போலல்லவா உள்ளது வாசுதேவன் உரை. களவெடுத்ததெல்லாம் நாங்கள்! பழியெல்லாம் டெலோவிற்கு என்று இப்போ ஒத்துக்கொள்கிற வாசுதேவன் அவர்களே அப்போ எங்கு போயிற்று இந்தக்காந்தியப்புத்தி. களவுநீங்கள் செய்தவை என்றால் அப்போது என் அதைத் தட்டிக்கேட்கவில்லை? பாவமன்னிப்புப்பலிபீடத்தில் தானேநின்றுமக்களுக்காக மரித்த ஜேசுபிரானைபோல புலிசெய்தகுற்றங்களுக்கு தானே மன்னிப்புகேட்பதாக யாரை அவர்கள் கொன்றார்களோ அங்கு நின்று இன்று பிரகடனம் செய்கிறார் வாசு. கேட்கிறவன் கேணயனாக இருந்தால் புலிகூடப் புல்தின்னும் என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. சர்வதேசத்தையே உலுப்பவல்லவர்கள்,சயனைட் குப்பிகளைக் கட்டித்திரிந்தவர்கள், உலகத்தை அழிக்கவல்ல பயங்கர ஆயுதங்களை உறங்கும் வேளையிலும் கட்டித்தொழுதவர்கள் என்றெல்லாம் புகழப்பட்ட இந்தபுலிபோராளி, தான் அப்போ கையறு நிலையிலிருந்ததாக இப்போ கதைவிடுகின்றார்.நியாயம் கேட்கவேண்டிய அந்த வேளையில் தருணம் இது என்று தன் வயிற்ரைக் கழுவிக்கொண்டிருந்தவர் இன்றக்கு வேதாந்தம் பேச முற்படுவது வேடிக்கையாயிருக்கிறது.வேதனையாயிருக்கிறது. புலிதப்புச்செய்கிறது.சபாரத்தினத்தை போட்டுத்தள்ளபோகிறது என்றுதெரிந்திருந்தால் உளமார மாற்று இயக்கத்தை நேசித்திருந்தால்,மக்கள் போராட்டத்திற்கு நாமே முன்னுதாரணம்க இருப்போம் என்று எண்னியிருந்தால் வாசுதேவன் அவர்களே நீங்கள் தற்கொலைபோராளியாக மாறி அந்தக்கொடிய நிகழ்வைத் தடுத்திருக்கலாமே? அல்லது குறந்த பட்சம் உங்களை எல்லாம் ஏவி விடுகிற அல்லது தும்புத்தடியால் சாத்துகிற மேட்டிமைக்காரப்போராளியையாவது கொன்று மனித வாழ்விற்கோர் உதாரணபுருசராகிப் போயிருக்கலாமே? இன்றக்குத் தாடிவளர்த்தும், தாடியைச்சிரைத்தும் தட்துவம் பேசுகின்றீர்கள். சனநாயகம் பேசுகின்றீர்கள்.சமாதானம் பேசுகின்றீர்கள்.மக்கள் போராடவில்லை. மக்கள் பாராமுகமாக் இருந்தார்கள்.மக்கள் மறுதலிக்கவில்லை.மக்கள் கைகட்டிநின்றாகள்.கோப்பி தந்தார்கள் என்றெல்லாம் மக்களையே எல்லாக்குற்றத்திற்கும் மூலமாக்குகின்ற நீங்கள் எல்லாம் மக்களைக் கேட்டா இயக்கத்தைக் கட்டியவர்கள்?. .சபாரத்தினம் அவர்களை வெறும் தற்குறியாகவே கண்டேன் என்று பதிவிட்டிருக்கிறார் சபாநாவலன்.அப்படிப்பட்ட தற்குறிகளே தங்கள் மேட்டிமைகாகவும், தலைமைப்பதவிக்காகவும் ஒன்றாகி இரண்டாகிப் பலவாகிப்பிரிந்து மக்களைக் கொன்று அல்லது தின்று தீர்த்தார்கள். இதில் மக்களை மறுபடி ஏன் இழுக்கின்றீர்கள். மக்களைப் பயப்பட வைத்தீர்கள். அவர்கள் பயந்தார்கள். அந்தப் பயத்தினை மூலதனமாக்கி நீங்கள் வாழ்ந்தீர்கள். இதைவிட எதையும் எந்த இயக்கமும் மக்களுக்குச் செய்யவுமில்லை. செய்யமுனையவுமில்லை.

    • Nizam says:
      15 years ago

      Pidunki. 

      Your last two lines are more than enough to assess the cruelties, atrocities, looting, extortion, killings, etc etc of the LTTE and the so called freedom fighters.

      Nizam 

  15. அரிச்சந்திரன் says:
    15 years ago

    //மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள்.//
    விடுதலைப்போராட்டத்தில் இவை போன்றவை துன்பியல் நிகழ்வுகளே அத்துடன் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிவைகளும் கூட, இவை தொடர்பாக புலிகள் மீதே ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுவது சரியன்று,

    • paraa says:
      15 years ago

      புலிகள் இரண்டு சிறுவர்களை உயிரோடு எரித்திருக்கிறார்கள். இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூடக் குற்ற உணர்வில்லாமல் புலிகளைக் குற்றம் சாட்ட முடியாது என்று எப்படி உங்களால் கூற முடிகிறது?

  16. திருமலையான் says:
    15 years ago

    இன ஒடுக்குமுறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்கள்,அதேபோல் போராட்டகாலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண போராளிகள்.
    டெலோ- புலிகள் மோதலின்போது யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் முற்றுகையின்னால் தப்பியோட முடியாமல் அவர்களிடம் பிடிபட்டு அழிந்துபோனார்கள் . இதில் இருந்து
    தப்பிய போராளிகள் இந்திய சென்றனர், அங்கை சென்றதும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த போராளிகள் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர், ஆனால் கிழக்கு போராளிகளுக்கு
    வெளி நாடு போவதற்கு பணவசதி இல்லை இதை நன்கு புரிந்து புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் தாங்கள் இன்னும் அழியவில்லை என்று சொல்லிக்கொண்டு இவர்களை
    தங்களோடு வைத்திருந்தனர் . இதன் பின் இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்ததும் யாழ்ப்பாணம் போகமுடியாத இவர்கள் கிழக்கு மாகாணத்தில் தாங்கள் நிலையை தக்கவைப்பதக்கு இந்த
    கிழக்கு மாகாண போராளிகளை சாதகமாக பயன்படுத்தினார்கள் இதன்விளைவு புலிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள இவர்கள் இலங்கை படையிடம் சேர்ந்து புலிகளுக்கு எதிராக
    செயல் பட்டனர் அன்று தங்கள் சுயநலம் இல்லாமல் அவர்களை விடுகளுக்கு அனுப்பீருந்தாள். டெலோ – புலிகள் மோதலுடன் சகோதரத்துவ கொலைகள் முடிவுக்க்கு வந்திருக்கும்
    இதில் ஒன்றை குறிப்பிடுகிறான் ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார் புலிகளுடன் மோதாமல் தவித்ததால் சகோதரத்துவ கொலைகள் ஏற்ப்படவில்லை

    • Kumar says:
      15 years ago

      முற்றாக கிழக்கு இளைஞா்கள் வெளிநாட்டிற்கு வரவில்லை என்று கூறிவிடமுடியாது இருந்தாலும் வடமகாண இளைஞா்களுடன் ஒப்பிடும் போது குறைவுதான் ஆனால் கிழக்கு மகாண இளைஞா்கள் போராட்டம் என்று நம்பி வந்து வீடு திரும்பக்கூட முடியாமல் இடையில் நின்ற கொடுமையை மறக்கமுடியாது.

      ஈரோஸ் புலிகளின் ஒரு விதமான மிரட்டலுக்கு அடிபணிந்தமாதிரியே தெரிகிறது அப்படி எல்லோருமே இருக்கவேண்டுமா புலிகள் எல்லோரையும் அரவணைத்து சென்றிருந்தால் நிலமை வேறுவிதமாக இருந்திருக்குமல்லவா, என்னவோ முடிந்ததை மறுபடியும் மறுபடியும் வெளிக்கொண்டுவருவதால் பிரயோசனம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். 

  17. para says:
    15 years ago

    ஈரோஸ் காராரை புலிகள் அழிக்கவில்லை. எனக்கு தெரிந்தவரைக்கும் இந்தியாவின் மிக நெருக்கமான நண்பர்கள் பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தை சேர்ந்த நெப்போலியனை மலையகத்தில் வைத்து இந்தியாவின் உத்தரவு படி ஈரோஸ் தான் சுட்டுக்கொன்றார்கள். இப்போது ரவி போன்ற சிலர் இன்னும் குற்ற உணர்ச்சி இல்லாமல் ஈரோஸ் என்று சொல்லிக்கொண்டு மக்கள் முன் வருகிறார்கள்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      ஆழமாய் கீறப்பட்டிருக்கும் காயம்.உள்ளீருந்து இரத்தம் வழிகிறது.

  18. venkattan says:
    15 years ago

    ஒன்று மட்டும் விளங்கவில்லை. இந்த இயங்கங்கள் எல்லாம் முள்ளிவாய்க்காலுக்கு பின்பும் தமிழா;களை கருவறுக்க திரியும் இந்திய மத்திய அரசின் …. கழுவிகொண்டிருந்தன இருக்கின்றன. இதையல்லாம் தவிர்த்து என்ன மயிருக்குள்ளயிருந்து வேர் முளைக்கும் என்டு விளக்கவில்லை.

  19. திருமலையான் says:
    15 years ago

    kumar

    ஈரோஸ் புலிகளின் ஒரு விதமான மிரட்டலுக்கு அடிபணிந்தமாதிரியே தெரிகிறது அப்படி எல்லோருமே இருக்கவேண்டுமா ?
    என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.

    பாலகுமார் புலிகளால் தடை வந்தபோது அதை கிழக்கு போராளிகளுக்கு
    தெரிவித்தார், கிழக்கு போராளிகளோ சரண் அடைவதை விரும்பவில்லை. அதற்கு பாலகுமார் சொன்னார் நான் உங்களைப் காப்பாற்ற வேண்டும் அதுதான் எனது முதல் வேலை ஏனென்றால் நாங்கள்
    வடக்கை சேந்தவர்கள் இங்கே புலிகளின் ஆயுத பலம் , ஆட்பலம் முன் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது அப்படி மோதல் ஏற்பட்டால் நாங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு புலிகளுடன் மோத
    வேண்டி இருக்கும் வடக்கை சேர்ந்தவைகள் எல்லோரும் இந்தியாவில் இருந்துகொண்டு உங்களை (கிழக்கு போராளிகளை) மோத விட்டு அதனால் இன்னும் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு
    உங்களின் அழிவினால் நான் தலைவர் என்று சொல்லிக்கொண்டு இருப்பதை விட புலிகளிடம் சேர்ந்து இயங்குவதை விரும்புகிறான் . என்னுடன் வர விரும்பியவர்கள் வாருங்கள் விரும்பாதவர்கள்
    புலிகளுடன் மோதலை தவிர்த்து விடுங்கள். இதில் ஒரு பகுதியினர் பாலகுமாரனுடன் சென்றனர் , செல்ல விரும்பாதவர்கள் மோதலை தவிர்த்து ஒதுங்கி போனார்கள் ஒதுக்கியவர்கள் கிழக்கின் எமது
    போராளிகள் கொல்லப்படுவதை விரும்பவில்லை.

    இன்று இருக்கும் கிழக்கின் ஈரோஸ் போராளிகள் சொல்கிறார்கள் பாலகுமார் ஒரு சிறந்த தலைவர் அவர் அன்று அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால் நாங்களும் துரோகிகள் என்றும் ஒட்டுப்படை என்றும்
    மக்கள் மத்தியல் பேசப்பட்டிருப்போம் இன்று விடுதலை அடைந்துமோ இல்லையோ ஈரோஸ் போராளிகளை மக்கள் மதிக்கின்றனர்

    • THAMIL MARAN says:
      15 years ago

      சும்மா கதை விடாதீர்கள்.பாலகுமாரனின் சந்தர்ப்பவாதம், காட்டிக் கொடுப்பால் கொல்லப்பட்ட ஈரோஸ்காரரின் எண்ணீக்கை பாலகுமாரனோடு இணந்தவரை விட அதிகம்.புலிகளால் வேட்டையாடப்பட்டோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டோரை விட அதிகம்.புலிகள் தம் காலத்தில் மகிந்தவை விட மோசமானவர்கள்.இங்கே புனிதராக நீங்கள் புலிகள மாற்ற வேண்டாம்.

  20. S.G.Raghavan says:
    15 years ago

    பாலகுமார் ஸ்ரீயை காட்டி குடுத்திருக்க மாட்டார், சிலவேளைகளில் பரா அதனை செய்திருக்கலாம். பாலகுமார் புலிகளுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. 1990 தனது MP பதவியை ராஜினாமாச் செய்த பின் அவர் தனது வீட்டில் இருந்த போது துன்னாலை வீட்டில் இருந்து வலுகட்டாயமாக அழைத்துச் செல்லப் பட்டார். அற்புதனின் தொடர்பாளர்களின் தகவலின் படி EPRLF மூலம் தகவல் கசிய வாய்ப்பு இருந்ததாக சொல்லப் பட்டது. ஈரோஸ் இல் பராவின் இருப்பு காரணமாக டெலோ ஸ்ரீயை மீட்க்கும் விவகாரத்தில் ஈரோஸ் யை தொடர்புகொள்ள நியாயம் இல்லை. சாட்சாத் டக்லாஸ் இரட்டை (பன்முகவர்) வேலை செய்தார் என்பது எனது அனுமானம். டக்லாஸ் வெலிக்கடை சிறையில் இருந்த போதே இலங்கை அரசின் அபிமானி அத்துடன் உளவாளியும் கூட.

  21. S.G.Raghavan says:
    15 years ago

    ஈரோஸ் அமைப்பு செயல் பட்ட காலத்தில் பலாலி முகமாய் அண்டிய பகுதியில் புலிகளால் மூன்று ஈரோஸ் காரர்கள் (தமிழர்கள்- நம்மவர்) சுட்டுக்க் கொள்ளப் பட்டனர். தகவல் சரியா என்பதை ஈரோசினரே சொல்லவேண்டும். மற்றும் படி புலிகள் ஈரோசினரை குதறவில்லை.

  22. திருமலையான் says:
    15 years ago

    இனியாவது கிழக்கு தமிழ்மக்கள் தந்தை செல்வா , ஈரோஸ் பாலகுமார் ஆகியோர் போல் தலைவர் கிடைத்தால் அவர்கள் பின் செல்லுங்கள் இல்லையேல் அன்று அமிர்தலிங்கம் மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரையை அரசியலில் ஓரம் கட்டுவதக்கு என்னென்ன தந்திரங்களை செய்தார் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் ஒரு விடயத்தை சொல்கிறான் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரையையும் காசியனந்தனையும் போட்டி போடவிட்டு இதில் காசியானந்தன் தோற்றார் இதனால் காசியனந்தனுக்கு மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை குறைந்தது. இராஜதுரை வென்றார் கூட்டணி அரசியலில் இருந்து வெளியறினர். இந்த இரண்டு விடயங்களும் நடக்க வேண்டும் என்று அமிர்தலிங்கம் விரும்பினர் அது நடந்தது அவர் கிழக்கு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டு தானே தளபதி ஆனார் .கிழக்கு மக்களை இவர் போன்ற தலைவர் தேவையா?

    1 .ஸ்ரீ சபாரத்தினம் (டெலோ இயக்கத்தலைவர்) இவர் சகோதரத்துவ படு கொலைகளுக்கு வித்திட்ட தலைவர்களில் ஒருவர். இவரை நம்பிவந்த கிழக்கு போராளிகளை பலிகொடுத்து விட்டு தானும் பலி யகிப்போனர்.

    2 . பத்மநாபா (EPRLF இயக்கத்தலைவர்) இவர் இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டபின் தங்கள் இயக்கத்தின் வட மாகாண போராளிகள் அதிகமான அளவு வெளியேறியபின் கிழக்கு போராளிகளுடன் தனது இயக்கம் அழிய வில்லை என்று சொலிக்கொண்டு இந்தியாவில் இருந்தார் .1987 இந்திய இராணுவத்துடன் நாட்டுக்கு வந்தார் ஆனால் யாழ்ப்பாணம் போகமுடியாது அன்று உணந்த அவர் கிழக்குக்கு வந்து புலிகளுக்கு எதிராக செயல்பட்டு கிழக்கில் சகோதரத்துவ படு கொலைகளை நாடத்திவிட்டு இந்திய சென்று அங்கை தானும் பலியாகிப் போனார். கிழக்கில் 1000 இக்கு மேற்ப்பட்ட தமிழ் இளைஞர்கள் ,போராளிகள் பலியாவதற்கு காரணமானவர் அத்துடன் இவரால் கைவிடப்பட்ட போராளிகள் ஸ்ரீ லங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு ஒட்டுப்படை உருவாவதக்கு காரணமானவர் இந்த பத்மநாபா இந்த ஒட்டு ராசிக் குறுப் என்ற பெயருடன் செய்த அடாவடித்தனங்கள் ,கொலைகள் கிழக்கு தமிழ்மக்கள் என்றும் அழியாதவடுக்கள்

    3 .உமா மகேஸ்வரன் ( PLOT இயக்கத்தலைவர்) இவர் இயக்கம் உள்ளகப் படு கொலைகளுக்கு சொல்லில் அடங்காது ஒட்டுப்படை உருவாவதக்கு காரணமானவர் உள்ளகப் படு கொலைகளுக்கு தானும் பலியகிப்போனர்

    4 பிரபாகரன் (LTTE இயக்கத்தலைவர் ) இவர் இயக்கம் தமிழ் ஈழம்தான் என்ற குறிகோளுடன் போராடி அவர் மறைவுடன் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தது அவர் கிழக்கு மக்களுக்கு கருணா,பிள்ளையான்

    என்ற ஒட்டுப்படை உருவாவதக்கு காரணமானவர். இவர் பலத்துடன் இருத்த காலகட்டத்தில் பல சந்தப்பங்கள் இருந்தது அதை தவற விட்டவர் ,.

    இவர்கள் யாவரும் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கிழக்கு மக்களை பயன்படுத்தினார்கள் என்பது உண்மை . இந்த தலைவர்கள் யாவரும் வடமாகணத்தை சேர்ந்தவர்கள்

    கடைசியாக ஒன்றை சொல்ல விரும்பகிறேன் இராஜதுரை TULF கட்சியில் பிரிந்து போனபோது தனது ஆதரவளர்களிடம் கூறியது கிழக்கு மக்களுக்கு இரண்டு அரசியல் உண்டு. ஒன்று யாழ்ப்பாணத்து அரசியல்

    இரண்டு கொழும்வு அரசியல் தான் இவ்வளவு காலமும் யாழ்ப்பாணத்து அரசியல் இருந்தேன் மக்களுக்கு செய்ய முடியவில்லை இதனால் கொழும்வு அரசியலுக்கு போகிறேன் என்றாராம்

    e

  23. S.G.Raghavan says:
    15 years ago

    அமிர்தலிங்கத்தின் கபடித்தனம் மிகக் கொடுமையானது, தமிழ் மக்களின் அழிவுக்கும் காரணமானது. கிழக்கில் இருந்து ஒரு ஆளுமை மிக்க தலைவர் வருவதே இன்றைய சூழல் அனைத்துக்கும் உகந்தது அவ்வாறு வரின் சந்தோசப் படவேண்டும். சம்மந்தன் அமிர்தலிங்கத்திற்கு அடுத்தவர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுரேஷ், மாவை போன்றோர் வருவது ஏற்புடயதல்ல, தமிழ் மக்களின் ஒற்றுமையை காக்க வேண்டும் எனில் கிழக்கில் இருந்து ஒரு தலைவரை உருவாக்க வேண்டும் ஏற்று கொள்ளவும் வேண்டும். ராசிக் ஏன் ஒரு ஒட்டுக்குழுவாக வந்தார் என்பது தமிழ் மக்களுக்கு விளங்கவேண்டும். EPRLF தடைசெய்யப் பட்ட சமயம் யாழில் இருந்த ராசிக்கும் ஏனைய கிழக்கு போராளிகளும் கபூருடன் கிழக்கு செல்லும் நோக்குடன் வன்னி நிலப் பரப்புக்கு தப்பிச் சென்றனர் கபூர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை இன்றி பூநகரியில் மரணமடைய கிழக்கு செல்லும் வழியில் இடரை சந்தித்த போராளிகள் ஒட்டிசுட்டான் ஸ்ரீலங்கா படைத்தளத்தில் சரணடைய வேண்டி வந்தது. இதுவே பின்னாளில் ராசிகை புலிகளுக்கு எதிராக செயல் பட வைத்தது.
    இதன் பின்னர் இந்திய ராணுவ வருகையுடன் உருவாகப் பட்ட TNA அமைப்பில் அம்பாறை, மட்டகளப்பு பகுதியில் இருந்து புலிகள் தாக்கத் தொடங்க (பத்ம நாபா உட்பட்ட தலைவர்கள் செய்த தவறு) வெலிகந்தை ஊடாக மட்டு பொலநறுவை எல்லை வரை தப்பிச் செல்ல புலிகளாலும் இலங்கை ராணுவத்தாலும் நிராயுத பாணிகள் கூட வேட்டையாடப் பட இறுதியில் புலிகளுடன் அவர் மேடற்கொண்ட சமரச விடயத்திலும் நம்பி வந்த தமது சக உறுப்பினர்கள் கொல்லப் பட காட்டில் பதுங்கி இருந்து பின்னர், புலிகள் இலங்கை படை மோதலில் புலிகளை ஒழிக்கும் ஒட்டுப் படையாக மாறினார். என்னை பொறுத்தவரையில் இவர்களை ஒட்டுப் படையாக நாமே
    உருவாக்கினோம். திருமலையானின் கருத்துக்களுடன் ஒத்துப் போகலாம், இருப்பினும் கிழக்கு வடக்கு என்ற வாதப் பொருளை கைவிடுவது ஆரோக்கியமாகும் என்பது எனது கருத்து.

    • திருமலையான் says:
      15 years ago

      S.G.Raghavan
      கிழக்கு வடக்கு என்ற வாதப் பொருளை கைவிடுவது ஆரோக்கியமாகும் என்ற தங்களின் ஏற்றுக்கொள்கிறேன் .

      வடகிழக்கு தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் இது தந்தை செல்வா கூறியது

  24. THAMILMARAN says:
    15 years ago

    தந்தை சொன்னார் தாயார் சொன்னார் என்றூ தவண்டு கொண்டிருக்காது இனியாவது எல்லவற்றயும் மாற்றப் பார்ப்போம்.மாற்றூவோம்.இயேசு ஒரு கன்னத்தில் அடித்தால் மறூகன்னத்தை காட்டச் சொன்னார் கறூவலுக்கு காட்டினால் என்ன நடக்கும் நினைத்துப் பாருங்கள் மூஞ்சியே இருக்காது.

    • Nizam says:
      15 years ago

      The so called Thanthai and his party Thamil Arasu Kadchi are the root cause of the happenings.

      Even after the long suffering under them and the armed groups still they are trying to fulfill their inferior motives of selfish Political Power utilizing the name of the innocent Tamils. 

      Pathavi veri pidiththu naakai thonkavittu kondu thiriyum paraarihal.

      Piraba (avarin paasaiyil)  vitta thavaru ivarhalai vittu vaithathu.

      Nizam

  25. Panpu says:
    15 years ago

    Prabagaran is Arakkan

    • Nizam says:
      15 years ago

      Panpu,

      Not only Pirabaharan was an Arakkan but also a Cannibal of centuries and a Megalomaniac .

      Nizam

  26. Panpu says:
    15 years ago

    He is not Human

  27. Panpu says:
    15 years ago

    Prabagaran want to kill all tamil people and he did it thats all.

  28. .ச..சிங்கம் says:
    15 years ago

    தலைவர் என்பவர் தகுதியால் வரவேண்டும் ஒழிய பிரதேசவாதத்தால் அல்ல.

    நாவலன்  ராகவன் இலங்கையில் இருந்தால் என்ன செயதிருப்பீர்கள்.யாரையும் துரோகி என்ன சொல்லாதீர்கள்.

    இமல்டா சுகுமாரை திட்டும் நீங்கள் கல்விபணிப்பாளர் விக்கினேஸ்வரனை கட்டாய லீவுக்கு என்ன செயதீர்கள்.

    த.தே.கூட்டமைப்பு இன்று கூட இலங்கையில் ஒரு கட்சியாக அங்கத்தவர்களை சேர்க்கவில்லை.வட மாகாண சபை தேர்தல் திகதி அறவித்த பின்னரே யார் போட்டியிடுவது என அறிவிக்கும் .இப்ப அறிவித்தால் பிரச்சனை உட்கட்சி புசல் வரும்
    ……………………………….ச..சிங்கம்

  29. kavi says:
    15 years ago

    Have you read about late Jack Layton of Canada. Why don’t you build a positive future?
    Right or wrong – history is history. Do not confuse with uniting people for the future against writing history.
    You cannot do both. We need reconcile within us. If you cannot unit people, atlease do not divide them.
    Not sure you people can learn before you die.

  30. Nirukshan says:
    13 years ago

    என் மாமா கரிகாலன் (ராஜா) TELO, HE SHOT BY LTTE

  31. Murugu says:
    10 years ago

    1986 ஏப்ரல் 28 மாலை நேரம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாக நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டு நின்றிருந்தேன், அவ்வேளையில் துப்பாக்கி வேட்டுக்களும், கைக்குண்டு வீச்சுக்களும் கேட்டுக் கொண்டிருந்தன, சத்தம் அருகில் கேட்பதாகவே உணரக் கூடியதாகவே இருந்தது, இப்படியான தொடர் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களை இந்தப் பகுதில் கேட்டறியாத நாம் என்ன சத்தம் எனக் கண்டறியும் நோக்கத்தில் அந்தத் திசை நோக்கி நகர ஆரம்பித்தோம்.

    அடுத்த சில வினாடிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின்பாரத் தலைமையிலான 10 – 12 பேர் வரையிலான குழுவினர் துப்பாக்கி ஏந்தியவர்களாக விரைவு நடையுடன் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு எதிரே கிழக்குப் பக்கமாக சென்று கொண்டிருந்தார்கள், ஏதோ பெரிய விபரீதம் நடந்து விட்டதென உணர்ந்து சம்பவம் நடந்த திசை நோக்கி சைக்கிளில் விரைந்து சென்றோம்,

    அது ஒரு தமிழீழ விடுதலை இயக்கத்தினரின் முகாமாக இருந்தது, வாசலைக் கடந்ததும் உழவு இயந்திரப் பெட்டி ஒன்று காணப்பட்டது உள்ளே எட்டிப் பார்த்தேன், 14 -16 வயது மதிக்கத்தக்க 5, 6 பேர் மரணித்து இருந்தார்கள் இவர்களின் மேனியில் துப்பாக்கிச் சுட்டுக் காயங்களும், கைக்குண்டு வீச்சினால் ஏற்படுத்தப்பட்ட உடற் சிதிலங்களும், அங்கங்களான கை, கால்கள் வாளால் வெட்டப்பட்டும் காணப்பட்டன, எவரும் உயிருடன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை,

    அடுத்து வீட்டினுள் நுழைந்து பார்த்த போது காலில் இரத்த சகதி மிதிபட்டது, உள்ளே முனகல் சத்தம் கேட்டது, பலர் கொல்லப்பட்டு கிடந்தனர், வீட்டுக்கு பின்பக்கத்தில் ஒருவர் பலத்த காயத்த்துடன் பூமரப் பற்றைக்குள் காணப்பட்டார், நேரம் மாலை 7 மணி இருக்கும் என நினைக்கின்றேன், உயிரோடு இருந்தவர்களை வெளியே தூக்கிக் கொண்டு வந்தோம்,

    அந்த நேரத்தில் அருகில் குடியிருக்கும் மக்களும் கூடி விட்டார்கள், ஒரு வாகனமொன்று வந்தது, அது ஈழ மக்கள் புரட்சிகர விடுத்லை முன்னணியினரது வாகனமென அருகில் இருந்தோர் கூறினர், காயப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தவர்கள் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்,

    இந்த முகாமில் இருந்த ரெலோ உறுப்பினர்கள் அனைவரும் அம்மை நோயினால் பீடிக்கப்பட்டு உபாதையில் இருந்தவர்கள், இவர்களில் அதிகமானோர் கிழக்கு மாகாணப் போராளிகளாவர், மேலும் நேரம் இருளாகிக் கொண்டிருந்ததால் எங்களுக்கும் அதிக நேரம் அவ்விடத்தில் நிற்கத் திராணியற்று வெளியேறினோம்.

    இப்படிக்கு முருகு

  32. Thirunathan says:
    10 years ago

    சிறீ சபாரத்தினம் பிரபாகரனின் நெருங்கிய நண்பர், ரெலோ உடன் பிரபாகரன் இணைந்து செயற்பட்ட போது சிறீ பிரபாகரன் கொலைசெய்ய முற்பட்ட பலரைக் காப்பாற்றியிருக்கிறார். குடத்தனையிலிருந்து குட்டிமணி தங்கதுரை இந்தியா செல்ல முற்பட்ட சம்பவம் பிரபாகரனைத் தவிர ஒருவருக்கும் தெரியாது. அப்போது பிரபாகரன் ரெலோவில் இருந்தார். ஓட்டிதான் காட்டிக்கொடுத்தார் என்று பிரபாகரன் கூறி வந்தார். பின்னர் ஓட்டியைக் கொலைசெய்துவிட்டார்கள். இதைத் தவிர, குட்டிமணி, சிறீ உட்பட பலருக்கு பிரபாகரனில் சந்தேகம் இருந்தது. 83 ஆம் ஆண்டு சிறையை உடைத்து குட்டிமணி தங்கத்துரையை வெளியில் எடுப்பதற்காக ரெலோ இயக்கம் 22 பேருக்கு பண்ணையில் பயிற்சி கொடுத்தார்கள். தாஸ் உட்பட பலர் அங்கு பயிற்சி எடுத்தார்கள். தாக்குதல் தொடர்பான திட்டமும் தீட்டப்பட்டது. அந்த நேரத்தில் எல்லா இயக்கங்களிடமும் ரெலோ பேச்சு நடத்திற்று. இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதாக இருந்தால் வெலிக்கடை சிறை உடைப்பு முடிந்ததும் நடத்தச் சொன்னார்கள். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிதாக இருக்கவில்லை. இத் தகலவல் பிரபாகரனுக்கும் சொல்லப்பட்டது. அதனால் தான் 83 தாக்குதல் நடத்தப்பட்டது. அதை நடத்தி இலங்கை அரச பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுகச் செய்வது தான் பிரபாகரனின் நோக்கம். ஆனால் குட்டிமணி உடபட எல்லாரும் கொலை செய்ய்யப்பட்டுவிட்டார்கள். பின்னாளில் தமிழ் நெட் நடத்திய தராகி சிவராம் இது தொடர்பாக எழுதிய கட்டுரை கனடாவிலிருந்து வரும் தாயகத்தில் வந்திருந்தது:
    http://www.thayagam.com/sabalingam/

  33. andrew says:
    10 years ago

    86 may days Telo’s blood day

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...