அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 65 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராடத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, சிறை அதிகாரிகளால் தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டனர். இதில் சிலர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன
போரின் போது அவயவங்களை இழந்த அரசியல் கைதிகளும் இதன் போது தாக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிறைச்சாலைக்குள் இருந்த இந்துக் கோயிலையும் சிறை அதிகாரிகள் உடைத்தெறிந்துள்ளனர். இந்தநிலையில் உண்ணாவிரதத்தை நிறுத்தக்கோரி, பொலிஸ் அதிகாரி, துசித உடுவர, சிறைக்கைதிகளுடன் பேச்சு நடத்தினார்.
எனினும் தம்மீது இவ்வாறான தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது என்று உறுதியளிக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடமுடியாது என்று தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்து விட்டனர்.
இதற்கிடையில் தாக்கப்பட்ட சிறைக்கைதிகளை நேற்று பார்வையிட சென்ற சட்டத்தரணிகளை சிறையதிகாரிகள் தடுத்து விட்டனர்.
நாம் இலங்கையர் அமைப்பை சேர்ந்த சட்டத்தரணிகளுக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கைதிகளை பார்வையிட சட்டத்தரணிகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டமை இது முதல் தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையி;ல் மாவீரர் நிகழ்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கையில், சிறையதிகாரிகள், கைதிகள் இருந்த அறையை சோதனையிட்டு 19 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியதாக இலங்கையின் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறையில் இந்து கோயில் இடித்தமை தொடர்பில் விசாரிக்கவும்! ஐ.தே.க. பா.உ.
சிங்களம், தமிழ், முஸ்லிம் எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரவருக்கு தத்தமது சமயத்தைப், பின்பற்றுவதற்கு உரிமை இருக்கின்றது. இவ்வாறான நிலையில், அனுராதபுரம் சிறையிலுள்ள இந்துக் கோயில் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிராக தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோயில் இடித்து நொறுக்கப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.தே.க. எம்.பி.யான ஜயலத் ஜயவர்தன கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அனுராதபுர சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
எந்த சமயத்தவராக இருந்தாலும் அவரவர் தத்தமது சமயங்களின் பிரகாரம் வணங்குவதற்கு இடமளிக்கவேண்டும்.
எனினும் அனுராதபுர சிறைச்சாலையிலுள்ள இந்து கோவில் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இது அநீதியானது.
அனுராதபுர சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விளக்க மறியல் கைதிகள் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படும் வரை அவர்களை குற்றவாளிகள் என இனங்காண்பது தவறானதாகும்.
எனவே சிறைச்சாலை அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றார்.







