எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்த கருத்துகளுக்கு விளக்கம் அளிக்குமாறு நீதி விசாரணைக்குப் புறம்பானதும் தன்னிச்சையானதுமான மரண தண்டனை விவகாரத்தைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் கோரியிருந்ததற்கு அரசாங்கம் பதிலை அனுப்பியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார்.
பிலிப் அல்ஸ்ரனின் கடிதத்துக்கு பதில் அளிப்பதற்காக அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.விசேட அறிக்கையாளருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். அவரின் கடிதத்தின் உள்ளடக்கத்தை நாம் ஆராய்ந்து வருவதாக அவருக்கு விளக்கியுள்ளோம். அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை விசாரிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்திருப்பதாவதுஜெனரல் பொன்சேகாவின் அறிக்கைகள் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. ஆதலால் விசேட அறிக்கையாளரின் கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்க அதிகாரிகளுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது.கடிதம் அரசுக்கும் மக்களுக்கும் அடையாளம் வெளிப்படுத்தப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கும் அதிகளவிலான மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆதலால் இந்த விவகாரங்கள் சிலவற்றுக்கு உடனடியாக எம்மால் பதிலளிக்க முடியாது. எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக முன்வைத்துள்ளோம். ஆவணத்தை குழு ஆய்வு செய்த பின்னர் வெளிவிவகார அமைச்சு பதிலை அனுப்பிவைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.ஜெனரல் விடுத்த அறிக்கைகள் தொடர்பாக அவரை விசாரணை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது நாட்டின் சட்டத்தை எவராவது மீறினால் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் உரிமை உண்டு என்றும் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.
அதேசமயம், வெளிநாடுகளிலுள்ள புலிகளின் நிதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.வெளிநாடுகளுடன் இது தொடர்பாக நாம் தொடர்பு கொண்டு செயற்பட்டு வருகிறோம். அவற்றை விடுவித்து இலங்கைக்கு அவற்றை மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.
அதேசமயம், இந்த விடயத்தில் கே.பத்மநாதன் அல்லது கே.பி.யை அரசு பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் எங்குள்ளன? புலிகள் எவ்வாறு இயங்குகின்றனர் என்பது தொடர்பாக கே.பி.யிடமிருந்து விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் நாம் இருக்கிறோம் என்றும் அவர் சிறையில் இருப்பது இலங்கைக்கு அனுகூலமானது எனவும் போகொல்லாகம கூறியுள்ளார்.எரித்திரியாவிலுள்ள புலிகளுக்குச் சொந்தமான 10 கிலின் 1432 விமானங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன், ஜி.எஸ்.பி.+ சலுகையைப் பெற்றுக்கொள்வதிலும் அரசாங்கம் நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் போகொல்லாகம மேலும் கூறியுள்ளதாக டெய்லிமிரர் இணையத்தளம் தெரிவித்தது.