
தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி இனவாத அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில் பலர் இந்தியாவின் மனித குல விரோதியும் இனக் கொலையாளியுமான நரேந்திர மோடியை ஆதரிக்கும் இழி நிலைக்கு வந்தடைந்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் பிடித்துக்கொடுக்க நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா போன்ற மதவெறிக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்று போலியான நம்பிக்கைகளை வழங்கி மக்களைப் போராடவிடாமல் தடுக்கின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இந்திய அரசு பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழக மக்களின் மன நிலையையும், வெளியுறவு கொள்கையை கருத்தில் கொண்டு முடிவுகள் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற மாநாடுகளில் பங்கேற்பதன் மூலம்தான் நமது கருத்தை வலியுறுத்த முடியும் என்றார்.
காங்கிரசும் பாரதீய ஜனதாவும் இந்திய அதிகாரவர்க்கத்தின் அடியாட் கட்சிகளே என்பதை தமக்கு ஏற்றவாறு மறைக்கும் தமிழ் நாட்டின் இனவாதிகள் இறுதியில் கோருவதோ இந்திய அரசு இலங்கையில் தலையிட வேண்டும் என்பதே. இந்திய அரசின் ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்குத் துணைபோகும் இவர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் எதிரிகளே.








