விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த 24 மணித்தியால கால அவகாசம் குறித்து தாம் எதுவும் கூறவிரும்பவில்லையெனவும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையெனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் கூறினார்.
“இலங்கையின் மனிதநிலைமைகள் தொடர்பாக நாங்கள் கவலையடைந்துள்ளோம். அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்களைக் குறைத்து அவர்களைப் பாதுகாப்பதற்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பும் முன்வரவேண்டும்” எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் கூறினார்.
இலங்கையில் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா பல்வேறு தருப்புக்களின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“நிலைமை தற்பொழுது மோசமடைந்துள்ளது. எனினும், இதனைக் கையாழ்வதற்கு எம்மிடம் மந்திரக் கோல்கள் எதுவும் இல்லை. ஆனால், மோதல்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது” என வூட் கூறினார்.







