வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்து தற்போது வெலிக்கந்ததிருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இவர் தங்கியிருந்த அறையில் உறங்கிக்கொண்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டதாக படை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26 வயது) என்ற இளைஞரே இவ்வாறு மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது வாயிலிருந்து நுரை தள்ளிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவரது சடலம் பொலநறுவ வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலநறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னி யுத்தத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர்களும் உறுப்பினர்களும் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.







