பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 18 நாட்களாக நடைபெறும் ஏர் இந்தியா பைலட்டுகளின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டம் சட்ட விரோதமானது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. இருந்தபோதும் போராட்டம் தொடர்கிறது. இதுவரை 101 பைலட்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏர் இந்தியா பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப மறுத்தால், புதிய பைலட்டுகளை பணியில் அமர்த்துவோம் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால், ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும், பைலட்டுகள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், புதிய பைலட்டுகளை பணியமர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







