Wednesday, March 18, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!: ‘மே 18 இயக்கம்’ விடுக்கும் அறிக்கை.

இனியொரு... by இனியொரு...
03/24/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
27
Home பிரதான பதிவுகள் | Principle posts

 மீண்டும் ஒரு தேர்தல்! புலிகளை சிங்கள பேரினவாத அரசு தோற்கடித்து ஒரு வருடத்தினுள் தமிழர் தாயகத்தில் நடைபெறும் மூன்றாவது தேர்தல்!! நடத்தப்படும் தேர்தல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் தன்மையை மதிப்பிடுவதாயிருந்தால் அந்த பட்டியலில் சிறீலங்கா முன்னிலையில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துரதிஸ்டவசமாக ஜனநாயகம் என்பது இந்த தேர்தல் நடத்துவது என்பதை விட இன்னமும் ஆழமான தார்ப்பரியங்களைக் கொண்டது. அப்படிப் பார்த்தால், யுத்தம் முடிந்து, பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பாமலேயே, யுத்தத்திற்கு இட்டுச் சென்ற அரசியல் பிரச்சனைகள் பற்றிய தீர்வு காணாமலேயே, இன்னும் குறிப்பாக அப்படிப்பட்ட தீர்வுகளை காண்பதற்கான நிர்ப்பந்தங்களை தள்ளிப்போடும் நோக்கில் நடத்தப்படும் தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தை கருவறுக்கும் செயற்பாடுகளேயாகும். ஆனாலும் பரவாயில்லை. அதில் போட்டியிடவும் தயாராக பல குழுக்கள்! முன்னர் பின்னர் தேர்தல்களில் கலந்து கொள்ளும் நோக்கமோ, அது தொடர்பான சிந்தனையையோ கொண்டிராத பலர் கூட களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எல்லாம் ஆளும் கட்சியின் உபயம் தான். தனது அரசியல் எதிராளிகளை தோற்கடிப்பதற்காக, அந்தந்த பிரதேசங்களில் உள்ள பல்வேறு குழுக்களையும் பணத்தைக் கொடுத்து செயற்கையாக களத்தில் இறக்கும் செயற்பாட்டை ஆளும் கட்சி செய்து வருகிறது. இதுவொன்றும் ஜனநாயகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஜனநாயகம் மீது இந்த கும்பல் கொண்டுள்ள இளக்காரமான பார்வையைத்தான் காட்டுகிறது.

இந்த தேர்தலில் நாம் கலந்து  கொள்ளாவிட்டாலும் கூட, ஒரு அரசியல் அமைப்பு என்ற வகையில் எமது அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம். அந்த நோக்கிலேயே இந்த அறிக்கையானது வெளியிடப்படுகிறது. புரட்சிகர, முற்போக்கு சக்திகள் பாராளுமன்ற தேர்தல்களை தமது பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்று கருதும்  ‘மே 18 அமைப்பு’ இந்த தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடுகளை முன்வைக்கிறது.
இந்த தேர்தல் தொடர்பாக நாம் அணுகும் போது பின்வரும் விடயங்கள் எமது கவனத்திற்கு உரியனவாக இருப்பது அவசியமானது.

• மக்களுக்கு தேர்தல்கள் தொடர்பாக கல்வியூட்டுவது.

• மோசமான பிற்போக்கு சக்திகள், அரச கைக்கூலிகளை தனிமைப்படுத்துவது.

• முற்போக்கான சக்திகளை இனம் காட்டுவது.

• ஒரு விரிவான ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை நோக்கி வென்றெடுக்க முயல்வது.

இந்த நோக்கில் பின்வரும் நிலைப்பாடுகளை நாம் முன்வைக்கலாம் என்று கருதுகிறேம்

சிங்கள கட்சிகள்.

ஐ.தே.க மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டுமே தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர்கள். இப்போதும் கூட இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே நிராகரிக்கும், ஒற்றையாட்சி முறைக்குள் சில நிர்வாக மீளொழுங்குகளை மேற்கொள்வதன் மூலமாக தீர்வு காண முனைவதாக கூறுவதன் மூலமாக இலங்கை ஒரு பல்தேச சமூகம் என்பதை மறுத்துரைக்கும் இவர்கள் தமிழ் மக்களது  எதிரிகளாவர். தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மொத்தமாக மறுதளித்துவிட்டு இவர்கள் தருவதாக கூறப்படும் அபிவிருத்தி பூச்சாண்டிகளை தமிழ் மக்கள் நிராகரிப்பதன் மூலமாக தமது சுதந்திரத்திற்கான வேட்கையை வெளிப்படுத்த வேண்டும்.
 

கூலிப்படைகள்

புலிகள் இருந்த காலத்தில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி சிறீலங்கா அரசுடனும், இந்திய அரசுடனும் ஒட்டிக் கொண்டிருந்த கூலிப்படைகள் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளுடன் விளையாடுவதற்காக வருகிறார்கள்.

புலிகளது அராஜகத்திற்கு எதிராக போராடுவதாக் கூறிக் கொண்டே இவர்கள செய்து முடித்த அராஜகங்களும், மனித உரிமை மீறல்களும் மிகவும் அதிகம். இப்போது புலிகள் மடிந்த பின்னரும், தாம் அரசுடன் ஒட்டிக் கொண்ட காலத்தில் பெற்ற சலுகைகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களை விற்றுப் பிழைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். சிங்கள அரசிடம் எந்தவிதமான சமாதான முன்மொழிவுகளும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிந்து கொண்டே, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள். ஜனநாயக வழிமுறைக்கு திரும்பிவிட்டதாக கூறிக் கொண்ட போதிலும் இப்போதும் ஆயுதங்களை ஏந்தியவாறு, தமக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களையும், முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும், ஊடக சுதந்திரத்தையும் ஒடுக்குவதற்கு மாத்திரம் இந்த ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

தமிழ் சமூகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எந்த விதமான தேசிய, ஜனநாயக முன்முயற்சிகளையும் தீவிரமாக நசுக்குவதில் முன்னிற்பவர்கள் என்ற வகையில், இவர்கள் தமிழ் மக்களது அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்படுவது, இந்த முன்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மிகவும் அவசியமானதாகிறது. ஆதலால் இவர்களை சிங்கள அரசின் கூலிப்படைகளாக இனம் கண்டு முற்றாக நிராகரிக்குமாறு மக்களை கோருகிறோம்.

சிங்கள தேசமானது தமிழ் மக்களை ஒரு தனியான தேசம் என்பதை மறுதலித்து, அவர்களை அடிமைகள் போல நடத்த முனைகிறது. தனியான, சுயமான அரசியல் அதிகாரத்தை கோரி நிற்கும் ஒரு தேசத்தின் முன் சில எலும்புத் துண்டுகளை எறிந்துவிட்டு, அபிவிருத்தி என்று பூச்சாண்டி காட்டுகிறது. இந்த திமிரான ஆதிக்க சக்திகளது குப்பை கூழங்களை கூவி விற்கும் இந்த பொறுக்கிகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தமிழ் மக்களது வாக்குகள் அமைய வேண்டும்.

தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடவே வக்கில்லாத இந்த அடிமைகள், ஒரு தேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காட்ட முனைவது என்பது சுத்த மோசடியாகும். ஒரு தேசத்தின் சுயமரியாதையை விற்று பிழைப்பு நடத்தும் இவர்கள் தமிழரது தேசிய அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டிய களைகள் ஆகும். இப்போது இந்த பீடைகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிவைக்க கிடைத்துள்ள தருணத்தை தமிழ் மக்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டக்லஸ் தேவானந்தா, கருணா அம்மான், பிள்ளையான் போன்ற கைக்கூலிகளை ஜனநாயகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் தனிமைப்படுத்துக! அமைச்சர் பதவிகளை வைத்துக் கொண்டு அதிகாரம் பண்ணும் நிலைமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

தமிழர் தேசிய கூட்டமைப்பு

சரியான அர்த்தத்தில் பார்த்தால் இவர்கள் ஒரு அரசியல் கட்சியோ, அல்லது அமைப்போ கூட கிடையாது. புலிகள் தமது ஏவலை செய்வதற்கு சில அரசியல்வாதிகளை தேடினார்கள். இன்னும் சரியாக கூறுவதானால், தமிழர் தாயகத்தில் உள்ள பாராளுமன்ற ஆசனங்களை கூலிப்படையினர் அலங்கரித்துக் கொண்டு, அரசின் பிரச்சாரத்திற்கு துணை போவதை தடுக்க முனைந்தார்கள். அதற்காக பொறுக்கியெடுக்கப்பட்ட தனிநபர்களே இவர்கள். தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கு என்று ஒரு அமைப்பு வடிவமோ, அல்லது திட்டவட்டமான கொள்கை நிலைப்பாடுகளோ கிடையாது. அதில் இருப்பதாக கூறப்படும் பல்வேறு அமைப்புக்களும் கூட இந்த தலைவர்களது கட்டுப்பாடுகளில் கிடையாது. ஆக மொத்தத்தில் தமது பதவி சுகங்களுக்காக வெட்கம் இன்றி புலிகளது கொத்தடிமைகளாக செயற்பட்ட ஒரு கூட்டம் இது. பதவியில் இருந்த காலத்தில் இவர்கள் புலிகள் அமைப்பிற்கோ, அல்லது தமிழ் மக்களுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. தத்தம் சொந்த சொத்து சேர்க்கும் வேட்டையில் முழுமையாக மூழ்கித் திழைத்தவர்கள். இவர்களுள் பலர் தமது தொகுதிகளுக்கு செல்லாதது மட்டுமல்ல, இலங்கையிலேயே கூட இருந்ததில்லை. அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, இலங்கை திரும்பும் போதெல்லாம், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த சலுகைகளை பயன்படுத்தி புத்தம் புதிய வாகனங்களை இறக்குமதி செய்து விற்று கொள்ளை இலாபம் சம்பாதித்தவர்கள். வன்னியில் மக்கள் கடும்துயரில் இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கையில் தமது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்துக் கொண்டே, புலிகளால் பலவந்தமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாக, வன்னி மண் அந்த மக்களது மண் எனவும், அவர்கள் அங்கு தங்கி நிற்பதே சரியானது என்ற வித்திலும் மிகவும் பொறுப்பற்ற அறிக்கை விட்டவர்கள்.

புலிகளது மறைவுடன் இவர்களது இருப்பிற்கான காரணம் மறைந்து விட்டது. ஆயினும் பாராளுமன்ற ஆசனங்கள் என்ற ஒரே குறியில் இவர்கள் அந்த அமைப்பை காப்பாற்றி வருகிறார்கள். இந்த ஆசனங்களை குறியாக வைத்தே ஒரு கூட்டம் இதைச் சுற்றிக் கொண்டு வருகிறது. முன்பு புலிகள் அமைப்பு இருந்த போது, வன்னியில் இவர்களது கட்டளைத் தலைமையகம் இருந்தது. இப்போது இது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அரசின் நலன்களுக்கு தமிழ் மக்களை தாரைவார்க்க தயாராகிவிட்டார்கள்.
 
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுத்து வந்த பிற்போக்கு, வலதுசாரி, மேட்டுக்குடியின் மிச்ச சொச்சமான இந்த அமைப்பானது, வரலாற்றுரீதியிலும், அரசியல்ரீதியிலும் காலாவதியாகிப்போன ஒரு போக்கை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமானது, இந்த பிற்போக்குத் தலைமைகள் முறியடிக்கப்படுவதிலேயே தங்கியுள்ளது.
 
 
தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தமிழ் கொங்கிரஸ் கூட்டு)

தமிழ் கொங்கிரஸ் அமைப்பானது தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் தோன்றிய சாபக்கேடான ஒரு அமைப்பாகும். தமிழ் சமுதாயத்தில் காணப்பட்ட அத்தனை பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு ஒட்டு மொத்தமான வடிவமாக திகழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் அரசியலை மாத்திரமே செய்து வந்தவர்கள். தொண்ணூறுகளில்; புலிகளுக்கு ஆதரவாக ஆங்கிலத்தில் அறிக்கை விடும் ஒருவராக செயற்பட்டு, அரசினால் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ஒரு தகைமை மட்டுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிற்காலத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியது. புலிகளது காலத்தில் தமிழ் மக்களது விடுதலைக்காக இவர்கள் எந்தவிதமான உருப்படியான  முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை.
 
புலிகளின் நியமனத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இடம் பெற்ற கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் புலிகளது நியமனம் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியையோ, அரசியல் முன்னெடுப்பையோ கொண்டிராதவர்கள். இப்போது இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக, அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள இவர்கள் முன்வைக்கும் வாதங்களை நம்பும் அளவிற்கு தமிழ் மக்கள் அரசியல்ரீதியில் ஒன்றும் அப்பாவிகள் அல்லர்.

விக்கரமாபாகு கருணாரத்ன தலைமையிலான இடது முன்னணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் நவ சமசமாஜ கட்சியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரித்தோம். கடந்த காலத்தில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்தவர் என்ற ரீதியிலும், தொடர்ந்தும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஆதரித்து வந்தவர் என்ற வகையிலும் இந்த ஆதரவிற்கான முடிவு எடுக்கப்பட்டது. இவர் கடந்த காலத்தில் புலிகளை நிபந்தனையின்றி ஆதரித்தது தவறு என்ற விமர்னத்தை நாம் கவனத்தில் கொண்டோம். ஆயினும் சிங்கள தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் என்ற வகையில், தமிழர் தரப்பில் வேறு மாற்று சக்திகள் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாத நிலையில் அதனை ஒரு பாரதூரமான தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில், வேறு எந்த முற்போக்கு சக்திகளும் அரங்கில் இல்லாத நிலையில், தமிழ் வலதுசாரி தலைமைக்கு முடிவு கட்டுவது, மற்றும் சிங்கள முதற்போக்கு சக்திகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடனும் மேற்கொள்ளப்பட்ட அந்த முடிவானது சரியானது என்றே நம்புகிறோம்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் நிலைமைகள் வேறுபட்டிருப்பதாக நாம் உணர்கிறோம். முற்போக்கான அமைப்பு என்ற வகையில் நவ சமசமாஜ கட்சியானது, இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன் கூட்டுக் சேராது, சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ஆகியோருடன் கூட்டு சேர்ந்திருப்பது விநோதமானதாக இருக்கிறது. இவர்கள் இருவருமே, தமிழ் சமூகத்தின் மிகவும் பிற்போக்கான கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள். இவர்கள் முன்னெடுக்கும் அரசியலானது கோமாளித்தனமானது. தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு முற்போக்கான கட்சி என்ற வகையிலும், தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்பவர்கள் என்ற வகையிலும் இவர்கள் தமிழ் மக்களின் நட்பு சக்திகள் என்றே நாம் கருதுகிறோம். ஆனால் இவர்கள் தமிழ் பிற்போக்கு வலதுசாரிகளுடன் எற்படுத்திக் கொண்ட தேர்தல் கூட்டானது இவர்கள் தமிழ் மக்களது முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் ஆதரவை பெற்றுக் கொடுப்பதில் தடையாக அமைந்து விட்டதாகவே நாம் கருதுகிறோம்.

கழகம் மற்றும் ஈபிஆர்எல்எப் (நாபா) பிரிவு

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், இப்போது அந்த கூட்டுக்கு வெளியில் நிற்கிறார்கள். அதற்கான விளக்கங்களை முன்வைக்கவில்லை. 1983 யூலை கலவரத்தின் பின்பு தன்னியல்பாக  தோன்றிய பல்வேறு குழுக்களும் அவற்றின் வரலாற்றுக் காலத்தையும் கடந்து, திட்டவட்டமான அரசியல் செயற்பாடுகள் எதுவும் அற்ற விதத்தில் வெறுமனே செயற்கையாக ஆதிக்க சக்திகளால் உயிர்வாழ வைக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் தனிநபர்களது பிழைப்பு மற்றும் ஆசனத்திற்கான கனவுகளே இந்த அமைப்புக்கள் உயிர்வாழ்வதற்கான காரணங்களாக அமைகின்றன.  

இப்படிப்பட்ட சில தனிநபர்களது பிழைப்பிற்காக, ஒரு தொகையான இளைஞர்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளிலும் இதன் அங்கத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கடந்த கால அடாவடித்தனங்கள், மோசமான மனித உரிமை மீறல்கள் மற்;றம் இன்றைய பாத்திரம் போன்றவற்றை கருத்திற் கொள்ளும் போது, இப்படிப்பட்ட அமைப்புக்களை கலைத்துவிடுவதே தமிழ் மக்களது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது. இது இவர்களுக்கு மாத்திரம் அன்றி, அந்நிய சக்திகளது தயவில் செயற்கையாக இயக்கப்படும் இன்னும் பல உதிரிக் குழுக்களுக்கும் பொருந்தி வரக்கூடியது என்றே கருதுகிறோம்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபை

ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அமைப்பாவதும், அதன் அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுப்பதும் சரியானதே. ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக தேர்தலி;ல் நிற்பது என்பதுடன் எமக்கு கொள்கையளவில் முரண்பாடு கிடையாது. ஆனால் இந்த இடைக்காலத்தில் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. தலித் முன்னணி என்ற அமைப்பின் தோற்றமும், அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியத்தை மறுதலிக்கும் வகையில் முன்வைப்பதும், இந்த அமைப்பின் நோக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அத்தோடு இந்த அமைப்பானது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் குழுக்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளும் சந்தேகத்திற்கு உரியனவாக உள்ளன. அத்தோடு அரசாங்கம் மற்றும் தன்னார்வ குழுக்களது பணங்கள் கைமாறப்படுவதான குற்றச்சாட்டுக்களை எம்மால் நிரூபிக்க முடியாவிட்டாலும், அது அவர்கள் மீது ஒரு கறையாக படிவதை தவிர்க்க முடியாதுள்ளது. நூடளாவிய ரீதியில், தமது எதிரணிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெருந்தொகையான பணத்தை விசியெறிந்து பல்வேறு குழுக்களை செயற்கையாக உருவாக்கி தேர்தலில் கலந்து கொள்ளச் செய்து தமது எதிரணிகளது வாக்குகளை சிதறடிக்க முனைவதை காண்கிறோம். அது இவர்கள் விடயத்திலும் நடப்பதாக ஒரு சந்தேகம் நிலவுவதை நாம் மறுத்துரைக்க முடியவில்லை.
 
கடந்த காலத்தில் சிங்கள அரசானது தமிழ் தேசியத்தினுள் உள்ள அக முரண்பாடுகளை கிளறிவிட்டு அதில் குளிர்காய்ந்ததை நாம் அறிவோம். தமிழ் தேசிய இயக்கத்தினுள் யாழ்மையவாதம், சாதியம், வர்க்கம், ஆணாதிக்கம் போன்ற முரண்பாடுகளும், ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்கள் – முஸ்லிம் மலைய மக்கள் – தொடர்பான தப்பெண்ணங்களும் நிலவுவது உண்மையே. இவை ஒரு தேசத்தினுள் உள்ள அகமுரண்பாடுகள் என்ற வகையில் தேசத்தினுள்ளும், ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்களுடனான சமத்துவம் பற்றிய விடயமாக அந்த சகோதர தேசங்களுடன் அரசியல்ரீதியாக பேசியும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளாகும். ஆனால், எதிரகளோ இந்த முரண்பாடுகளை மிகவும் கூர்மையடையச் செய்து, தமிழர் தேசத்தை அதன் கூறுகளாக சிதறடிக்கவும், பின்பு அந்த கூறுகளை ஒன்றோடொன்று மோதவிட்டு குளிர்காயவும் முயல்கின்றார்கள். அந்த நோக்கில் பயன்பட்டவர்களே இ;ந்த கருணா- பிள்ளையான கோஷ்டியும், தலித் முன்னணியாகும். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்காத தனிநபர்கள் அடையாள அரசியலை முன்வைப்பதும், தன்னார்வ குழுக்களது ஆதரவில் செயற்படுவதும் இப்போதும் நடந்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை அமைப்பாவதும், தாம் அன்றாடம் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட முன்வருவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் இந்த முயற்சியானது, இந்தியாவில் நடைபெறுவது போல, வெறுமனே சாதிச்சங்கங்களை தோற்றுவித்து ஒடுக்கப்பட்ட மக்களை வெறுமனே வாக்குவங்கிகளாக மாற்றி, அந்த ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட உணர்வுகளை திசை திருப்புவதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அத்துடன் இந்த அக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் என்ற பெயரில், வெளிப்படையாகவே எதிரியின் நடவடிக்கைகளுடன் கூட்டுச் சேர முனைவது தவறான அரசியல் என்றே நாம் கருதுகிறோம். ஆதலால் நாம் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை நிராகரிக்குமாறு கோருகிறோம். ஆனால் எமது ஆய்வுரைகளுக்கு மாறாக யதார்த்த நிலைமைகள் இருப்பதாக காணும் எவருமே தமது சுயமான முடிவுகளை எடுப்பதை நாம் ஊக்குவிக்கிறோம்.

புதிய ஜனநாயக கட்சி

இந்த தேர்தல் களத்தில் நிற்கும் கட்சிகளுள் முற்போக்கு கொள்கைகளுடனும், சந்தர்ப்பவாத கூட்டுக்கள் இல்லாமலும், தமது கொள்கை நிலைப்பாடுகளை மாத்திரம் முன்வைத்து தேர்தலில் நிற்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டிய சக்திகளாவர். ஒரு மரபார்ந்த இடதுசாரி அரசியல் கட்சி என்ற வகையில் இவர்களது கடந்த கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், இப்போது முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாகவும் எமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆயினும் ஒரு விரிவான ஜனநாயக கூட்டமைப்பு என்ற வகையில் இவர்களுடன் இணைந்து செயற்படவும், தொடர்ச்சியாக உரையாடல்களை நடத்தவும் இந்த குறைபாடுகள் பெரிய தடையாக அமைந்துவிடாது என்று நம்புகிறோம். ஆதலால் நாம் சில கருத்து வேறுபாடுகளுடன்தான் என்றாலும் புதிய ஜனநாயக கட்சிக்கு முழுமையாக ஆதரவு வழங்கலாம் என்று கருதுகிறோம்.
மேலே கூறப்பட்ட நிலைப்பாடுகள் எமது அமைப்பின் கருத்துக்கள் என்ற வகையிலேயே முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உங்களது சொந்த அனுபவங்கள், பரிசீலனைகளையும் வைத்து இறுதி முடிவை நீங்களே முன்வையுங்கள்.

சில குறிப்பான பிரச்சனைகள் குறித்து…

நாம் தேர்தல் தொடர்பான கொள்கை அடிப்படையிலான  நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, எமது தேசம் முகம் கொடுக்கும் குறிப்பான பிரச்சனைகள் குறித்து பாராமுகமாக இருக்க முடியாது என்றே கருதுகிறோம்.

அந்த வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற எல்லைப்புற மாவட்டங்களின் தேர்தல் களநிலைமைகள் குறிப்பான கவனத்தை வேண்டி நிற்கின்றனவாகும். இந்த மாவட்டங்களில் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களும், நிர்வாக மற்றும் தேர்தல் அலகுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசத்திலேயே தமது பிரதிநிதித்துவத்தை இழக்கும் ஆபத்தை எதிர் கொள்வதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் பிரதிநிதிகள் அதிகம் சாதிப்பார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் ஒரு சிங்கள பிரதிநிதியை வரவிடுவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையாவது தவிர்ப்பதில், தடுத்து நிறுத்துவதில் ஓரளவுக்காவது பயன்படும் என்பது உண்மையே. இப்படியாக மக்கள் மத்தியில் உள்ள பய உணர்வுகளை சில அமைப்புக்கள் பயன்படுத்தி தமது அரசியலை நடத்த முனைவதும் நாம் அறியாதது அல்ல. ஆயினும் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலைமைகளில் இந்த சர்ச்சைகளில் அதிக சக்தியை விரயம் செய்யாமல் இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதனால் நாம் முன்னர் குறிப்பிட்ட தவறான செயற்பாடுகளை உடைய கட்சிக்கு இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வாக்களிக்க நேர்வது தவிர்க்க முடியாது போகலாம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமைகளில் கூட, இந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் உள்ள தீவிரமாக செயற்படும் சக்திகளை இனம் கண்டு, அவர்களை முன்னுக்கு கொண்டுவர உதவுவதாக உங்களது வாக்குகள் அமையலாம்.

தமிழ் மக்களே! பிற்போக்கு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!!
முற்போக்கு ஜனநாயக சக்திகளை இனம் கண்டு ஆதரிப்போம்!!!

 ‘மே 18 இயக்கம்’

      மார்ச் 24, 2010

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யுத்த கனவு!! : விஜி(லண்டன்)

Comments 27

  1. meerabharathy says:
    16 years ago

    நட்புடன் வீயூகம் நண்பர்களுக்கு

    தொடர்ச்சியான ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல நடைமுறை சூழல் சார்ந்து இவ்வாறான கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்துச் செல்வது ஆரோக்கியமானதே….மேலும் பொதுக் கூட்டம் அல்லது கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை அறிந்து அதிலிருந்து தமது முடிவுகளை எடுத்து செயற்படுவதும் வரவேற்கத்தக்கதே….இவ்வாறான தொடர்ச்சியான ஒரு செயற்பாடு மிக விரைவில் ஒரு அமைப்பாக உருவாவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும்…அவ்வாறு ஒரு அமைப்பாக உருவாவதற்கு முன்பு சில கேள்விகளுக்கான பதில்களைக் கண்டு முன்வைத்து செல்வது மேலும் ஆரோக்கியமானதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்….அந்த அடிப்படையில் தங்களுக்கு ஏற்கனவே மின் அஞ்சல் மூலம் முன்வைத்த கேள்விகளை இங்கு முன்வைக்கின்றேன்….இனிவரும் தங்களது கலந்துரையாடல்களில் இதற்காக பதில்கள் கிடைக்கும் என நம்புகின்றேன்….
    மேலும் “மே 18 இயக்கம்” என்ற பெயருடன் எனக்கு உடன்பாடு இல்லாமையாலும் அது தொடர்பான எனது நிலைப்பாட்டை முன்பு தங்களுக்கு வைத்ததன் அடிப்படையிலும் தங்களை “வீயூகம் நண்பர்கள்” என்றே அழைக்க விரும்புகின்றேன்….
    தங்கள் பதிலலை எதிர்பார்த்து…நம்பிக்கையீனமான ஒரு சூழலில் நம்பிக்கையுடன் நீங்கள் செயற்படுவது மகிழ்வான விடயமே….
    அதேவேளை தாங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் வேலைத்திட்டங்கள் மற்றும் தங்களது பொதுவான மற்றும் தனிநபர் செயற்பாடுகள் தொடர்பான கேள்விகள் பல எழுகின்றன…
    இக்கேள்விகளை கேட்காமல் விடுவதும் நமது கருத்துக்களை முன்வைக்காது விடுவதும் பொறுப்பற்ற செயற்பாடு என்பதால் இங்கு முன்வைக்கின்றேன்….
    ஏனனில் தமிழீழ மக்கள் கட்சியில் இருந்து விலகிய போது ஒரு கருத்தை முன்வைத்தேன். அதாவது புலிகள் போல் இன்னுமொரு இயக்கம் தமிழ் பேசும் மனிதர்களுக்குத் தேவையில்லை என. அதற்குப் புலிகளே போதும் என்றும் ஏனனில் புலிகள் போல் வருவதற்கான சாத்தியங்களை அக் கட்சி கொண்டிருந்தது என்பது ஒரு காரணம்;. அதேபோல் தமிழ் பேசும் மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்த இருக்கின்ற தமிழ்க் கட்சிக்கள் போல் இன்னுமொரு கட்சி தேவையில்லை. இருக்கின்றவர்களே பொதும் என்பதனால் வீயூகம் தொடர்பான கருத்துக்களை முன்வைக்கவேண்டிய தேவை உள்ளது.

    மழை ஓய்ந்தபின் கன கனவென காளான்கள் முளைத்தகணக்கில் பல கட்சிகள் முளைத்துள்ளன…
    தவளைக் குஞ்சுகள் கத்துவதுபோல் வாக்குவேட்டைக்காக கத்திக்கொண்டு திரிகின்றன…
    இவ்வாறன வேளையில் வீயூகம் – அல்லது மே18 இயக்கமான நீங்களும் உங்களுடைய கருத்தை முன்வைக்க நிலைநாட்ட முயற்சிக்கின்றீர்கள்…..

    தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப் போராட்டம்…
    புலிகள் தோல்வியுற்றதன் மூலம்; அல்லது தோற்கடிக்கப்பட்டதன் மூலம்;…
    இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டது….
    ஆதன் பின்….
    தமிழ் பேசும் மனிதர்களுக்கு தமது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்த மீண்டும் நிலைநிறுத்த பல ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் நடைபெற்ற கடந்த சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல்…
    ஆனால் தமிழ் பேசும் மனிதர்களை அவர்களது ஏகபோக தலைமையாக புலிகளுக்குப் பின் நிலைநாட்ட முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத்பொன்சேக்காவிற்கு வாக்களிக்க கூறியதன் மூலம்…
    ஆரசியல் ரீதியாகவும் தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்தது….
    ஆல்லது
    தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைப்போராட்டம் சுயநிர்ணைய கோட்பாட்டிலிருந்து விலகிவிட்டதா என்பது கேள்விக்குறியது….
    இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகள் ஆதிக்கத்தில் இருந்தபோது அவர்களை எதிர்த்து தமது கருத்தை நிலைநாட்ட முடியாதது மட்டுமல்ல அவர்களுக்கு முன்டுகொடுத்துக் கொண்டு முதுகெழும்பு இல்லாத ஒரு அரசியலை செய்துகொண்டிருந்தனர்…
    இவ்வாறனவர்கள் இன்று எப்படி ஒரு நேர்மையாக அரசியலை செய்வார்கள் என எதிர்பார்ப்பது….
    இவர்கள் நேர்மையான அரசியலை செய்யமாட்டார்கள் என்பது சரத்தை ஆதரித்ததன் மூலம் நிலைாநாட்டினர்…
    இந்த நிலையில் தமிழ் பேசும் மனிதர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற தமிழ் அரசியல் கட்சிகள் பற்றி குறிப்பிடத்தேவையேயில்லை…
    அவர்களும் இவர்களுக்கு எந்தவகையிலும் சலைத்தவர்கள் அல்ல….
    ஏல்லோரும் ஒரே குட்டையில் ஊரியவர்கள்..
    இடதுசாரி கட்சிகளோ இன்னும் பழைய தத்துவங்களையே திரும்பதிரும்ப ஒப்பித்துக்கொண்டிருக்கின்றார்கள்…..

    இந்த நிலையில் வீயூகம் என்ன செய்யப்போகின்றது…
    புலம் பெயர் மனிதர்கள் என்ன செய்யலாம்…
    குறிப்பாக இந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் யாரும் ஏற்படுத்த முடியாது….இதில் பிரதான முரண்பாடாக இருப்பது மகிந்தவினது அரசியலும் அதற்கு எதிரான அரசியலுமே…மேலும் குறிப்பாக சிறிலங்கா என்ற தேசத்திற்குள் இருக்கும் உள்முரண்பாடே இன்றைய பிரதான அரசியல் முரண்பாடாக இருக்கின்றது….
    இந்தநிலையில் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிபட்டு போகின்றது..
    இதற்கு காரணம் கடந்த ஜனநாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மனிதர்கள் எடுத்த முடிவும்…
    மற்றும் தமிழ் கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை இல்லாமையுமே…..

    ஆகவே குறிகிய ;ஒரு காலத்தில் புலம் பெயர் மனிதர்களோ அல்லது வீயூகமோ எந்தவிதாமான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்பாட்டை அரசியல் ரீதியாக செய்ய முடியாது……
    ஆனால் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடு தொடர்பாக கதைக்களாம் கலந்துரையாடலாம்…..
    இந்தக் கலந்துரையாடல்கள் மூலம் இனிவரும் காலங்களில் இலங்கை அரசியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக சிந்திக்கலாம்…
    ஆதை நோக்கமாகக் கொண்டு சில கேள்விகளும் கருத்துக்களும்…

    மக்கள் புத்திசாலிகள் அல்லது முட்டாள்கள் அல்ல…
    முதலில் மக்கள் கூட்டம் என்பது மந்தைக் கூட்டங்களா இல்லையா என்பதில் தெளிவான ஒரு நிலைப்பாடு இருக்கவேண்டும்.
    மனிதர்களை மக்கள் கூட்டங்காளக பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் ஒன்றினைத்து வைத்திருப்பது அவர்களை ஆதிக்கம் செய்வதற்கும் சுரண்டுவதற்குமான ஆதிக்க சக்திகளின் ஒருவிதமான சதிவலையே. குறிப்பாக மனிதர்களளை தனித்துவமானவர்களாக சுய பிரக்ஞையுள்ளவர்களாக சமூகம் மதிப்பிடுவதில்லை. அவ்வாறு உருவாகுவதற்கும் அனுமதிப்பதில்லை. இதற்குச் சாதகமாக இருப்பது மனிதர்களின் பிரக்ஞையில்லா தன்மை. அதாவது விழிப்புணர்வு அற்ற தன்மை. இதனால்தான் சமய மற்றும் அரசியல் நிறுவனங்களும் மனிதர்களை இலகுவாக தம்வசப்படுத்தி பயன்படுத்துகின்றனர் மற்றும் சுரண்டுகின்றனர்.

    நான்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல்கள் வைப்பதும் அதில் இப்பொழுது இருக்கும் கட்சிக்கு மாற்றாக மற்ற கட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான கனிக்கப்பட வேண்டிய விடயம். இந்த ;புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய கட்சி இப்பொழுது ஆட்சியிலிருப்பவர்களுக்கு முன்பு அதாவது ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் மட்டுமல்ல மனித விரோத ;செயற்பாடுகளில் ஈடுபட்டபவர்கள் என்பதை மனிதர்கள் தற்பொழுது மறந்துவிடுகின்றனர். இதற்கு காரணம் மனிதர்களின் பிரக்ஞையற்ற தன்மையே….இதுபோல் ;ஒரு சாமியார் பிழைவிட்டால் இன்னுமொரு சாமியாரிடம் எந்தக் கேள்வியும் இன்றி பின் செல்வதும் இந்த பிரக்ஞையின்மை;யால் தான் என்பதை நாம் என்றும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் எதானலோ மக்கள் புத்திசாலிகள் என ஏற்றுக்கொள்கின்றோம்.

    இது ஒரு இரட்டை தன்மை நிலைப்பாடு என்றே கருதுகின்றேன்….
    ஏனனில் ஒரு புறம் “முன்னேறிய பிரிவினர்” எனக் கூறுவதும்
    மறு புறம் மக்கள் புத்திசாலிகள் எனக் கூறுவதும் இந்த நிலைப்பாட்டினாலையே….
    மேலும் மக்கள் புத்திசாலிகள் எனக் கருதுவதாயின்…
    அவர்களிடம் இருக்கும் பெண்களுக்கு சாதிகளுக்கு எதிராக கருத்துக்கள் செயற்பாடுகள் தொடர்பாக என்ன கூறுவது.
    ஆல்லது மக்கள் மந்தைகள் இல்லை புறவயமான சமூக அடித்தளக் கட்டமைப்புதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் எனின்
    கடந்தகால ;புரட்சிகளின் தோலிவிகளுக்கு காரணம் என்ன?
    புறவய சமூக மாற்றம் ஏற்பட்டபோதும் மனித வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவில்லையே ஏன்?

    கட்சியும் தனிபரும் இந்தடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது…
    வீயூகம் சஞ்சிகையில் கடந்தகால அரசியல் வரலாறு தொடர்பான குறிப்பாக விடுதலைப்புலிகளினதும் அவர்களது தலைவர் பிரபாகரனினதும் மற்றும் பெண்களின் பங்களிப்பு அல்லது எவ்வாறு பயன்படுத்தப்பட்டனர் என்பது தொடர்பாகவும் ஒரு வரலாற்று சுருக்கத்தை விமர்சனத்துடன் முன்வைத்திருந்தீர்கள். இது முக்கியமானதே. அதேவேளை கோட்பாடு உருவாக்கபம் செய்தீர்களா என்பது கேள்விக்குறியதே?
    ஆனால் தாங்கள் அதாவது வீயூகம் அல்லது மே 18 இயக்கத்தில் இருக்கும் மனிதர்கள் அவர்கள் சார்ந்த கடந்தகால இயக்கம் அல்லது கட்சி மற்றும் தனிநபர்கள் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்காமை நம்பிக்கையினத்தையே தருகின்றது.
    தீப்பொறியாக இருந்து தமிழீழ கட்சியாக பரிணாமடைந்த போதும் தமீழீழ கட்சி கலைக்கப்பட்டதும் எதனால்? இதற்கான பதில் இல்லை. ஏன்?
    இன்றுபோல் அன்றும் உயிர்ப்பு சஞ்சினை மூலம் “நாம் முன்னேறிய பிரிவினர்” எனக் கூறிக்கொண்டு செயற்பட்டீர்கள். ஆனால் அந்த செயற்பாடு வெற்றிபெறவில்லை. காரணம் என்ன?
    முன்னேறிய கோட்பாட்டின் மீது தவறா?
    ஆல்லது அக் கோட்பாட்டை முன்னெடுத்த தனிநபர்களின் தவறா?
    ஆல்லது அக் கோட்பாட்டையே உள்வாங்காத தனிநபர் செயற்பாட்டாளர்களின் தவறா?
    ஆல்லது எப்பொழுதும் குறிப்பிடுவது போன்று மனிதர்களின் பிரக்ஞையற்றதன்மையா காரணம்?
    இதற்கு பதில் இல்லை.?
    மேலும் புலிகள் தவிர்ந்து தமிழீழ மக்கள் கட்சி ஏன் கலைந்தது என்பது தொடர்பான விமர்சனமோ விளக்கமோ மட்டும் முன்வைக்கவில்லை…..
    வீயூகத்துடன் இணைந்திருக்கும் நண்பர்களின் பிற இயக்கங்கள் தொடர்பானதும் அதில் அவர்களின் தனிநபர் பங்களிப்பு செயற்பாடுகள் தொடர்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படவில்லையே?
    காரணம் என்ன?
    தொடர்ச்சியான முன்னேறிய செயற்பாட்டிற்கு இந்த சுயஃவிமர்சனங்கள் முக்கியமானவை எனக் கருதுகின்றேன்.
    ஏனனில் இப்பொழுதும் ஒருவிதமான குழுமனப்பான்மையே வீயூகம் நண்பர்களிடமும் தெரிகின்றது.
    இங்கு தான் தனிநபர் செயற்பாடுகள் அவர்களது விழிப்புணர்வு அல்லது பிரக்ஞை தொடர்பான முக்கியத்துவம் பெறுகின்றது….
    ஆனால் இது தொடர்பான அக்கறை இவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

    மேலும் இதுவரை முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் வைக்காதது மட்டுமல்ல….
    நடைபெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பாக….
    எந்தவிதமான சாராம்ச குறிப்புகளைக் கூட ஆகக் குறைந்தது கலந்துரையாடல்களில் பங்குபற்றுபவர்களுக்கு கூட சுற்றுக்கு விடாமை இவர்களது செய்ற்பாட்டுத்தன்மையை கேள்விக்குள்காக்கின்றது…?
    இவ்வாறு கேள்விக்குள்ளாக்குவது இழுத்துவிழுத்துவது நோக்கமல்ல….
    மாறாக ஆராக்கியமான முன்நோக்கிய செயற்பாட்டிற்கான அக்கறையின் பாற்பட்டதே…
    ஏனனில் பிரபாரகரனால் அல்லது புதிய விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட அவர்களது நான்கு அடிப்படை கொள்கைகளை அன்று கேள்வி கேட்காமல் விட்டமையே இன்றைய நிலைமை என்பதை கவனத்தில் கொள்வது மறக்காமல் இருப்பது நன்று.

    மேலும் புலம் பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் ;பேசும் மனிதர்கள் உதிரிகளாகவே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்குமாறகா இவர்களை ஒருங்கினைப்பதும் அதன் மூலம் இலங்கை அரசியிலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமான பெண்களை சம அளவிக் உள்ளடக்கிய சர்வதேச தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக சிந்திப்பது எதிர்காலத்தில் நன்மையளிக்கும். ஏனனில் இனிவரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேசிய அளவிளான ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு செயற்பாடே ஆரோக்கியமானதாக இருக்கும்.
    உரையாடல் தொடர்வோம்..
    நன்றி
    நட்புடன்
    மீராபாரதி

    • niranjan says:
      16 years ago

      உலகில் எந்தவொரு கோட்பாடும் அவற்றை உருவாக்கியவர்களின் சூழ்நிலை மற்றும் களம் சார்ந்தே தோற்றம் பெற்றன. சோவியத் யூனியன் என்னும் பல்லின சமுகத்தை ரஷ்யாவுக்கு கீழே கட்டியெழுப்ப , லெனினுக்கு அங்கே நிலவிய குறுந்தேசியங்களை நிராகரிப்பது அவசியமாயிற்று. அதே தேவையே மாவோக்கும் சீனாவில் காணப்பட்டது. இவற்றை எல்லாம் உணராது இலங்கையில் இன்று தமிழருக்கு அவசியமாயுள்ள தமிழ் தேசியத்தினை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது ஒரு வரலாறுத் தவறாகும். நூற்றாண்டுப் பழமையான இத்தகைய லெனின் மற்றும் அறுபதாண்டுகளுக்கு முந்திய மாவோ வாதங்களை இன்றும் வரிக்கு வரி கடை பிடித்தபடி தம்மை முற்போக்குவாதிகள் எனக் கூறிக்கொள்பவர்களுக்கும் மத நூல்களை அப்படியே கடைபிடிக்கும் வெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்?
      இங்கே புதிய ஜனநாயக் கட்சி மற்றும் மே 18 இயக்கம் மக்கள் மயபடுத்திய அரசியலை வலியுறுத்துகின்றன. ஆனால் அவர்கள் இதுவரை ஏந்த ஒரு கூட்டதையாவது பகிரங்கமாக மக்களை அழைத்து நடத்தியிருக்கின்றனரா? வெறுமனே இலக்கியவாதிகளை அழைத்துப் பேசுவது அரசியலாகாது. உங்களின் அடிப்படைக் கருத்துகளை சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் கொண்டு சேர்க்க முடியவில்லையெனில், யாருக்குத்தான் என்ன பயன்? மக்களை மந்தைகள் என்றோ முட்டாள்கள் என்றோ நினைக்காது இறங்கி வந்து வேலை செய்யுங்கள். அதுவரை உங்கள் பேச்சுகள் மற்றும் கொள்கைகள் நகைசுவையாகவே மக்கள் மத்தியில் இடம்பெறும்

    • xxx says:
      16 years ago

      தயவு செய்து சீன ரஷ்ய தேசிய இன்பப் பிரச்சனைகளப் பற்றிக் கொஞ்சம் விசாரித்துவிட்டு எழுதுங்கள்.
      குறுகிய தமிழ்த் தேசியவாதப் பொய்களை மீள மீள ஒப்புவித்து எதுவும் ஆகாது.

      தமிழ் மக்களை இப் பேரழிவுக்குள் கொண்டு சென்றோர் யார் என்ற உண்மையை மற்றவர்களைத் திட்டுவதால் மூடி விட முடியாது.

      • yyy says:
        16 years ago

        // தமிழ் மக்களை இப் பேரழிவுக்குள் கொண்டு சென்றோர் யார் என்ற உண்மையை மற்றவர்களைத் திட்டுவதால் மூடி விட முடியாது.//
        இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் இதையே சொல்லிக் கொண்டிருக்க போகுறீர்கள்? அப்படியென்றால் உங்களை கால கடிகாரத்தில் ஏற்றி சென்று 1947ல் விட்டால் தான் போராடுவீங்களோ ? 

        இப்போதுள்ள சூழ்நிலையில் உங்களால் முடியாவிட்டால் ஒதுங்கி விடுங்கள். அதைவிட்டு முற்போக்கு மாற்றுக் கருத்து என்று சொல்லிக் கொண்டு திரியாதீர்கள்.
        முதலில் மே 18 , தனது கூட்டங்களை வெளிபடையாக நடத்தட்டும். தாம் விரும்பியவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து தாம் விரும்பியவற்றை முடிவேடுப்பதால் ஒரு பயனும் இல்லை.

      • xxx says:
        16 years ago

        இந்தப் பேரழிவு நினைவில் உள்ளவரை அக் கேள்வி எழுந்துகொன்டே இருக்கும்.

        முற்போக்கு மாற்றுக் கருத்துக்கட்கு ஏன் அஞ்சுகிறீர்கள்?

        நான் ஒதுங்கி நிற்பதும் நிற்காததும் என் விருப்பம்.

        எவருக்கும் ஆணையிட உங்களுக்கு என்ன அதிகாரம்? (தமிழருக்கு ஆணையிட்ட ஒரு அதிகாரம் இப்போது போய் விட்டது).

  2. makeshwaran says:
    16 years ago

    வடம் பிடித்து தீர்தமாடி திருவிழா கொண்டாடுவது என முடிவெடுத்து விட்டீர்கள் உங்களை நம்பி (மாக்சிய வார்த்தைகளை) புதிய சக்திகள் திருவிழாவிற்கு வரலாம் ஆனால் தேர்தல் முடிய புதிய சக்திகள் இனம் காணப்பட்டு மகிந்த பாசிசம் அழிக்கும் நீங்கள் எல்லோரும் அந்நிய தேசத்தில் பாதுகாப்பாக குடும்பத்தோடு இருங்கள்

    • xxx says:
      16 years ago

      அப்படியானால் என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?
      யாரை ஆதரிப்பது?
      மக்களை ஏய்ப்பதென்றே கங்கணம் கட்டியுள்ள தமிழ்த் தேசியவாதக் கட்சிகளையா? அரசாங்க எடுபிடிகளையா? யூ.என்.பீயையா? சிவாஜிலிங்கம் விக்ரமபாகு கள்ளக் கூட்டையா?
      மகிந்த பாசிசத்தை மவுனமாக இருந்து அழிக்க முடியுமா? மக்களை அணி திரட்டாமல் முடியுமா?

      • loving person says:
        16 years ago

        directly மகிந்த, well we can not get anyt thing until we liberate our own tamil’s – pls do not talk use the aviable path to move further .

      • THAMILMARAN says:
        16 years ago

        மக்கலை அனிதிரட்டத்தான் கூட்டமைப்பும் அதன் தலைவருமான சம்பந்தர் அய்யா இருக்கிறாரே ஏன் இன்னும் கலக்கம்.நம் நோக்கங்கள் வெற்றீ தரும் எனும் உண்ர்வே தமிழரை உயர்த்தும்.

  3. மனோகரன்- கொழும்பு says:
    16 years ago

    மே 18 அமைப்பினர் சொல்லுகிற இந்த விசயம் உண்மை. யாழ்ப்பாணத்தில் பணம் தாராளமாக புழங்கும் அமைப்பாக இந்த சிறுபாண்மை தமிழர் மகாசபையும் ஈபிடிபியுமே உள்ளது. மகிந்தாவின் பூரண ஆசியை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை பஞ்சமர் மக்களை கூறுபோட்டு விற்கின்ற சதிவேலையை பிரான்சில் இருந்து வந்திறங்கியிருக்கும் சில அரசாங்க கைக்கூலிகள் மிக விசுவாசமாக செய்கிறார்கள். தாழ்த்தப்ட்ட பஞ்சமர் மக்களை ஓரணி திரட்டுவதற்கு பதிலாக இந்த மகிந்த கைக்கூலிகள் பிளவுகளை ஏற்படுத்தி பஞ்சமர் மக்களை இன்னும் துன்பத்திற்குள் தள்ளும் வேலையை செய்கிறார்கள். மகிந்தா நினைத்த வேலையை இக் கைக்கூலிகள் விசுவாசமாக நிறைவேற்றுகிறர்கள். மனோகரன்- கொழும்பு

  4. மு. மயூரன் says:
    16 years ago

    திருகோணமலையில் பேரினவாத சக்திகள் தமது எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தித் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க நிற்கின்ற இக்கட்டான நிலையில், ஒரு அரசியல் சிந்தனை வட்டம் என்ற வகையில் உறுதியான தெளிவான வார்த்தைகளை ஏன் இந்த அறிக்கை சொல்ல மறுக்கிறது?

    யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் கட்சிகள் தொடர்பாக விரிவான அலசலைச்செய்த இவ்வறிக்கை ஏன் பின்னிணைப்பாக நாலுவரியில் திருகோணமலை நிலை பற்றி தொட்டுவிட்டு முடிக்கிறது?

    கிழக்கு மாகாணத்தின் , திருகோணமலையின் அரசியல் போக்குகளைக் கற்குமளவுக்கு மே 18 இயக்கத்துக்கு ஆள்பலம் போதாதா?

    ஒரு சிந்தனை வட்டம் என்றவகையில் அரசியல் வாதிகளைப்போல பூசு மெழுகும் வார்த்தைகள் தேவையில்லையே.. ஏன் ஆட்களைக் குழப்புவான்?

    திருகோணமலையில் சம்பந்தருக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் வாக்களிக்கச்சொல்லி நேரடியாக சொல்ல வேண்டியதுதானே? அல்லது வாக்களிக்காமலிருக்கும்படிச் சொல்ல வேண்டியதுதானே?

    மிக அபாயமான அரசியற் சூழல் இல்லாத யாழ்ப்பாண நிலவரத்தை இவ்வளவு அலசிவிட்டு மக்கள் மிகவும் அச்சத்துடனும் குழப்பத்துடனும் எதிர்கொள்ளும் கிழக்குமாகாண தேர்தல் நிலவரத்தை அசட்டை செய்வது ஏன்?

    மே 18 க்கு வடக்கு-கிழக்கை இணைப்பாக பார்ப்பதில் சங்கடங்கள் உள்ளனவா?

    மே 18 வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரிக்கிறதா இல்லையா?

    • Shiva says:
      16 years ago

      திருகோணமலையில் உள்ள நிலைமையே அம்பாறையிலும் உள்ளது. அதைப் பேசுவார் யார்?

      பல வருடங்கள் முன்னர் அம்பாறையில் தமிழர் பிரதிநிதித்துவத்துக்குக் குழி பறித்த த.வி.கூ. மறுபடியும் அதே வேலையைச் செய்துள்ளது. அடாவடித்தனமான முறையில் வேட்பாளர் பட்டியலில் இருந்து 9 பேரை நீக்கிய சம்பந்தன் வேண்டுவது தனதும் மேலும் ஓரிருவரதும் பிரதிநிதித்துவமே.
      சம்பந்தனை அறிந்தோர் இதை அறிவர்.

      தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசுகிற சம்பந்தன் (த.வி.கூவிலிருந்து ஏறத்தாழ வேறு யாருமே எதுவும் பேசுவதில்லை) கிழக்கில் ஒரு பொது வேட்பாளர் பட்டியல் பற்றி விடுக்கப் பட்ட ஆலோசனைகளைக் கருத்தில் எடுக்கவே மறுத்தவர் என்ற குற்றச்சாட்டு வலுவானது.

      தமிழர் பிரதிநிதித்துவம் வலுவாக இருக்கக் கோரும் இந்தத் த.வி.கூ. ஏன் கொழும்பை யூ.என்.பீக்கு விட்டுக் கொடுத்துள்ளது?

      வடக்கில் புதிய-ஜனநாயகக் கட்சி நிற்பதால் அங்கே ஒரு தெரிவு உன்டு. தமிழர் பிரதிநிதித்துவத்தை வைத்துக் கிழக்கில் இதுவரை சம்பந்தனோ த.வி.கூ.வோ செய்ததென்ன? திருகோணமலைத் தமிழ் மக்களின் சார்பாக ஏன் ஒரு பொது விவாதத்தை நகரில் யாராவது கூட்டக் கூடாது?
      மக்கள் உண்மைகளை அறிந்து முடிவுக்கு வர அது ஒரு வாய்ப்பளிக்கும்.
      அரசாங்கத்தையோ யூ.என்.பீயையோ வெளிப்படையாக ஆதரிக்காதவர்களை மட்டும் கொண்டே பொது விவாதத்தை நடத்தலாமே!
      பங்குபற்றத் தயக்கமே கூடப் பல உண்மைகளை வெளிக்கொணரும்.

      தமிழர் பிரதிநிதிதுவம் என்பது தமிழர் ஒருவரைத் தெரிவு செய்வது பற்றியது மட்டுமல்ல.
      அவர் தமிழ் மக்களுக்காக நேர்மையாகக் குரல் கொடுக்க வல்லவரா என்பது கூட முக்கியமானது.
      திருகோணமலையில் தெரிவு கடினமானது.
      மயூரனின் மதிப்பீடு என்ன?

  5. THAMILMARAN says:
    16 years ago

    விடுதலையே மூச்சென்ற கூட்டம் வெளீநாட்டில் உல்லாச ஆட்டம் வள மனைகள் வாங்குவதில் நாட்டம் உனக்கு விளங்கலையோ அவர்களது நோக்கம்.

  6. Johnny Be Good says:
    16 years ago

    மே 18 இன் முக்கிய அமைப்பாளர் ரகுமான் ஜான் மாஸ்ரரே திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பதைக்கருத்திலே கொள்ளாமல் மு. மயூரன் வழக்கம்போல அவரின் யாழ்ப்பாணத்துக்கெதிரான வெறிப்பேச்சினைத் துப்புகிறார். இனவாதத்தைவிட மோசமானது இவரின் பிரதேசவாதம்

    • மு. மயூரன் says:
      16 years ago

      எனது கருத்தை பிரதேசவாதம் என்ற கண்ணால் பார்க்கின்ற பொழுதுதான் ஜான் மாஸ்டர் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

      அவரை அறிவேன்.

      யாழ்ப்பாணத்துக்கு வெளியே நடக்கும் தேர்தல் தொடர்பாக, அதிலும் மக்கள் மிகுந்த அச்சத்துடனும் குழப்பத்துடனும் எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணத் தேர்தல் தொடர்பாக ஒரு தெளிவான கருத்தை இவ்வறிக்கை முன்வைக்கத்தவறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதே என் நோக்கம்.

      (கூடவே பிரதேசவதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் எனக் குதிக்கின்ற மனநிலைகளை நான் நன்கறிவேன்)

      • Shiva says:
        16 years ago

        மயூரனுடன் உடன்பட இயலாதென்றல், உரிய வாதங்களை முன்வைக்கலாமே ஒழியக் கொச்சையாகப் பிரதேசவாதம் என்று கருத்துக்களைத் தட்டிக் கழிப்பது தவறு.

        சம்பந்தன் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பதல் அவர் யாழ் மையவாதக் கண்ணோட்டதிலே செயற்படும் ஒரு அமைப்பின் தலைவர் என்பது இல்லாமற் போய்விடுமா?

        மயூரனின் கவலை திருகோனமலை பற்றிய உரிய கவனிப்பு இல்லை என்பது மட்டுமே. திருகோணமலையைப் பற்றித் திட்டவட்டமாகக் கருத்துக் கூற இயலாமைக்கான விளக்கங்கள் கூட இவ்விடத்துப் போதுமனவையாய் இருந்திருக்கும்.
        கருத்துக்களை ஒரு முறைப்பாடகக் கொள்வது நல்லது.
        குற்றச்சாட்டாக்கி மோதுவது பயனற்றது.

    • sathiyan says:
      16 years ago

      ஜான் மாஷ்ரர் திருகொணமலை எனபது தெரியும். மயுரனின் கேள்விகளில் உள்ள அடிப்படையானது. இதைப் பிரதேச வாதம் என்று சொல்லி உங்கள் மேதட்டிமைத்தனத்தையோ அறிவுஜீவித் தனத்தையோ மெச்சிக் கொள்ளுங்கள். நாம் உங்களைவிட தமிழா; பிரதேசம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான அரசியல் வேலைத்திடடங்களைப்பற்றியே சிந்திக்ககின்றோம். செய்றபட முயற்சிக்கின்றோம். மக்களைச் சந்திக்கின்றோம் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் வெறுமனே கம்புயூட்டர் முன்னால் இருந்து கொண்டு வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசகட்கூடாது. இங்கு பேசுகின்ற எத்தனை பேருக்க திருகோணமலை களநிலவரம் தெரியும். மக்களின் மனோநிலை தெரியும் மிக நுட்பமாக திட்டமிட்டு செய்றபடுத்தப்டும் பேரிய வாத அரசியல் சூது புரியும். இப்படியே போன எழத்தும் ** என்றுதான் எழுத வேண்டி வரும் 

  7. Johnny Be Good says:
    16 years ago

    மயூரனின் கண்ணோட்டம் தொடர்ச்சியாகப் பிரதேசவாதத்திலேதான் வருவது. கம்புயூட்டர் முன்னால் இருந்து கொண்டு சமதர்மம் பேசுவதை நீங்கள் செய்கிறீர்களோ தெரியாது. நாங்கள் செய்யவில்லை. பேசப்படும் பிரதேசத்தை பிறதேசத்திலிருந்தாலும் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பிரதேசம் என்பதிலே உறுதியாக இருக்கும் நீங்கள் கருணா ஸ்ரீலங்கா அரசுடன் சேர்ந்தபோது, வெடிகொளுத்தி வரவேற்றிருப்பீர்கள். திருகோணமலையிலே நிகழும் சிங்களக்குடியேற்றங்களை நீங்களோ சிவசேகரமோ ஸ்ரீலங்கா அரசின் ஆசி பெற்ற எந்தச்சிறுபான்மைச்சமதர்மம் கூட்டங்களிலே பேசும் உதிரிக்கட்சிகளோ பண்ணமுடியவில்லை. ஆக சிங்களவர்களை அவர்களின் வெற்றியைக் கொண்டாட யாழ்ப்பாணத்துக்குக்கூட்டிப் போய் விளம்பரம் தேடுவதீலேயே முடிந்துவிடுகிறது. சுயநிர்ணய உரிமையைக்கூட பிரதேசவெறியிலே பேரினவாதத்துக்குச் சமதர்மப்போர்வையிலே போட்டுக்கொடுக்கும் ஆட்களுக்கு மற்றவர்களை மேட்டிமைவாதிகள் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறதோ? அரசியல்வேலைத்திட்டங்கள் என்பவை என்னவோ? உங்களின் சிங்களநண்பர்களுக்கு நிலாவெளி பீச் ஹொட்டலிலே புட்டும் சாம்பல்தீவு பலாச்சுளையும் ஆட்டிறச்சிக்கறியும் அரைப்போத்தலும் நிரப்புவதோ? விளம்பரங்களுக்கு எத்தனையோ வகையிருக்கின்றன. மூதூரிலே மக்கள் சாகும்போது வன்னிப்புலிகளிலிருந்து கருணா பிரிந்தார் என்று உவகையோடு கூத்தாடுவதுதான் திருகோணமலையைப் பற்றிக் கவலைப்படுவதென்றால், சரிதான். திருகோணமலையிலே அரசுப்பின்புலம் பலத்துடன் உதிரிகளாக நின்று செயற்படும் தமிழ்க்கட்சிகள் தமிழர்வாக்குகளைப் பிரிக்கும் என்ற கவலை பின்னியும் பிய்த்தும் தின்னுகின்றது. ஆனால் இது பற்றி மயூரன், சிவானந்தம் சிவசேகரம், செந்திவேல், தேவராஜன், ரவீந்திரன் இவர்களின் நிலைப்பாடு என்ன? இதுவரையிலான கருத்துவெளிப்பாடுகள் என்ன? அரசுடன் மறைமுகமாக இவர்களும் தமிழர்களின்சுயநிர்ணய உரிமையை, மரபார்ந்த பிரதேசங்களை ஸ்ரீலங்கா அரசின் குடியேற்றங்களுக்கு சமதர்மப்பேச்சின் வீச்சிலே அமுக்கிவிடுகின்றார்களா? எதுக்கு ஜான் மாஸ்ரரையும் மே 18 இயக்கத்தையும் மட்டும் பிடித்து புளி உலுக்கு உலுக்கவேணும்?

    • THAMILMARAN says:
      16 years ago

      உங்கள் உணர்ச்சியில் அர்த்தம் இருக்கிறது.திருக்கோணாமலையில் சேருவல சேர்ந்தே ஐம்பது வருடங்களாகி விட்டது.சேன நாயக்கா எனற இன வெறீச்சிங்களவனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த குடியேற்றங்கள் தமிழரின் கவனக்குறயால் சிங்கள அரசிற்கு சாதக மாயிற்றூ.இப்போது சிங்களரின் எண்ணீக்கையே திருக்கோணாமலையில் அதிகம்.

    • Shiva says:
      16 years ago

      இந்த விதமான மூர்க்கத்தனமான தனிப்பட்ட தாக்குதல்கள் வெட்கக் கேடானவை.

      சாதியத்தைக் கண்டித்தாலும் யாழ் மையவாதத்தைக் கண்டித்தாலும் முஸ்லிம் விரோதத்தைக் கண்டித்தாலும் ஒரே விதமான வெறித்தனமான எதிர்வினை தான் வரும் என்றால், விடுதலைப் புலிகளைத் தனிமைப் படுத்தியது எத்தகைய சிந்தனைப் போக்கு என விளங்கிக் கொள்ள முடியும்.

      மயூரனின் வாதங்களை வாதங்களல் வெல்ல முடியவிட்டால் அவருக்கு ஏதாவது முத்திரை குத்த வேண்டி உள்ளது. அவ்வாறே வேறு சிலர் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளைப் பொழிய வேண்டியுள்ளது.

      You are truly pathetic.

      • Johnny be Good says:
        16 years ago

        எது தனிப்பட்ட தாக்குதல்?

        சாதியத்தைக் கண்டித்ததினை யார் எதிர்த்தார்கள்? முஸ்லீம் விரோதத்தை யார் முன் வைத்தார்கள்? கற்பனையிலே சண்டைபோடாதீர்கள் சிவா. மே 18 அறிக்கையிலே சாதியம் எங்கே வந்தது? முஸ்லீம் விரோதம் எங்கே வந்தது?

        கருணாவுக்காகக் கிழக்கின் புதல்வன் என்று வாழ்க சொல்கிறபோது, கருணாவின் மீதான முஸ்லீம் விரோதகுற்றச்சாட்டுகள் எங்கே போயின? கிழக்கிலே முஸ்லீம்-தமிழ் விரோதத்திலே எவருமே புனிதர்களல்லர். சும்மா முஸ்லீம் விரோதம் என்று படம் காட்டுவது முற்போக்காகக் காட்டுமேயொழிய நற்போக்காகவல்ல. ஸ்ரீலங்கா அரசினையோ யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்செல்லும் சிங்களநண்பர்களையோ நோக்கித் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைச் சொல்லத் துணிவும் துப்புமற்றவர்கள் ஏதோ மே 18 இயக்கம்மட்டுமே திருகோணமலையிலே ஆணி புடுங்கிக்கொண்டிருப்பதாகக் கேட்பது எதற்கு?

        இராஜவரோதயம் சம்பந்தன் யாழ்ப்பாணமேலாதிக்கவாதியா? கௌரிமுகுந்தன் யாழ்ப்பாணத்துமேலாதிக்கவாதியா? இந்தப்பம்மாத்துப்படங்காட்டல்களை தவிருங்கள் சிவா .

        மயூரனை வாதங்களினால் வெல்லவேண்டிய அவசியமில்லை. இங்கே அவர் எழுப்பிய வாதங்களே அவரை வெல்லப்போதுமானவை. இதென்ன ஆணழகன், பெண்ணழகிப்போட்டியா, மயூரன் முன்னாலே இணையத்திலே நாவற்கிளைநாட்டி வாதமிட?

        எடுத்ததுக்கெல்லாம் கிழக்கின் புதல்வர்போலப் வாதிடும் இவர் எதற்காக சிங்கள அரசும் சிங்கள நண்பர்களும் சிங்கள சமுதாயமும் என்று வரும்போது, மற்ற சமுதாயங்களின் சுயநிர்ணய உரிமை, தொன்மபூமி இவற்றுக்கான உரித்துகள் பற்றியோ சிங்களசமுதாயத்திலேயும் புரையோடிப்போயிருக்கும் கொவிகம, கரவா சாதிப்பிக்கல்கள் பற்றியும் பேசுவதில்லை. கேட்பதில்லை. செத்த புலிகளின் வாலைப் பிடித்திழுத்துச் சுழற்றி எறிவதினாலே புலியெறிபயில்வான் வரிசைக்குத்தான் ஏராளமாக ஆட்கள் நிற்கின்றார்களே?

        If asking questions are pathetic, being pathetic is a bliss and bless

      • Shiva says:
        16 years ago

        Asking questions is not. Resorting to mudslinging is.
        Deal with the arguments if you can rather than insinuate intentions.

  8. Shiva says:
    16 years ago

    எல்லா மாற்றுக் கருத்துக்கட்கும் கேள்விகட்கும் பகைநோக்கம் தேடுகிற மனநோயினின்று நம் அரசியல் விடுதலை பெற வேன்டும்.

    ‘மே 18 இயக்கம்’ தயவு செய்து மயூரன் எழுப்பிய கேள்வியைப் பகைமையாக நோக்காமல் அதிற் பொதிந்துள்ள ஆழமான கவலையை விளித்து ஒரு சிறு விளக்கத்தைத் தந்தாலே போதும். இங்கு இடம்பெறும் பயனற்ற குரோதமான சொற்களுக்கு இடம் இல்லாது போகும்.

    கிழக்கு மாகாணப் பிரதிநிதித்துவம் ஒரு புறமும் வெல்லக் கூடிய அணிகளின் துரோகத்தனங்கள் மறு புறமுமாக அல்லற்படுத்துகிற போது ஊரிலே கூடநிற்பவர்களைக் கேட்டே ஒரு முடிவை எடுக்க முடியும்.

    • THAMILMARAN says:
      16 years ago

      மாற்றூக் கருத்து என்பதே மக்கலை ஏமாற்றூகிற,பேய்க்காட்டுகிற ஒன்றூ.உங்கள் கருத்தைச் சொல்ல ஏன் நீங்கள் கரம்பனுக்குப் போக வேண்டும்.

    • Shiva says:
      16 years ago

      புலிகளும் ஏறத்தாழ அப்படித்தான் சொன்னார்கள்.

  9. alex.eravi@gmail.com says:
    16 years ago

    With the bloody demise of the LTTE the Muslim community in Sri Lanka has reached political crossroads.

    In fact, even when the LTTE was at its summit of military might and political clout the Muslim community confronted two crucial questions: One, what would be the fate of the community in the unlikely event of a divided Sri Lanka between a Tamil Eelam, which would include one third of the Muslims, and a Sinhala Lanka with the rest two-thirds? And two, what would be the fate of the community’s so called ‘politics of pragmatism’ once the LTTE was wiped out?

    The fact that there was no serious public discussion or debate on these questions between 1983, when the LTTE took to its armed struggle, and 2009, when it was militarily eliminated, demonstrates not only a lack of foresight within the Muslim political leadership but also the community’s lackadaisical attitude towards national issues little realising that the price of insouciance could be very costly to the community’s long term survival and welfare.

    There is another election on April 8. Will the community learn from the past and produce better leaders?

    For more: http://www.abna.ir/data.asp?lang=3&id=182424

  10. agathy@mail.com says:
    16 years ago

    புதிய ஜனநாயகக் கட்சியைப் பற்றி மேலும் அறிய
    இணையத்தளம்
    http://www.ndpsl.org/
    Mailing Address S-47, 3rd Floor
    C.C.S.M.Complex
    Colombo -11
    SriLanka
    Telephone: [+94] 71 4302909
    Fax: [+94] 11 2473757
    E-mail Address: nfo@ndpsl.org
    2.Magazine
    http://www.ndpsl.org/puthiyapoomi.php
    3.History (Tamil version also available)
    The New Democratic Party was founded in 1978 as the Communist Party of Sri Lanka (Left). It adopted its present name at its Second National Congress in 1991, and is a true successor to the Marxist Leninist tradition of the Ceylon Communist Party, founded in 1943. Following the split of 1964 with the revisionists, who took the parliamentary line, the late Comrade N Sanmugathasan led the Marxist Leninists in defending Marxist Leninist theory and practice. The NDP was founded in 1978 under the leadership of Comrade KA Subramianiam, Founder General Secretary of the NDP, following debates on the stand on major national issues.
    The NDP upholds Marxism-Leninism-Mao Zedong Thought as its guide. It recognizes the national question as the main contradiction in the Sri Lankan society and has persevered in relentless struggle for social justice against imperialism and regional hegemony as well as forces of chauvinism and local reaction.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...