இந்திய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விட்டதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட பின் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுள்ள ரவிசங்கர் சுவாமிகள், சென்னையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்ததாக “ரைம்ஸ் ஒவ் இன்டியா’ பத்திரிகை நேற்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 2500 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்று, இடம்பெயர்ந்தோரை தான் சந்தித்த தருணத்தில் அறிந்தவற்றை சுவாமிகள் கூறியுள்ளார்.
“பாரிய மனித துன்பியலுக்கு நாம் சாட்சியமாகவுள்ளோம். தொழிலில் சிறப்பு பெற்றிருந்த மக்கள் இன்று பிச்சைக்காரர்களாக உள்ளனர். இந்தத் துன்பத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இடம்பெயர்ந்தோருக்கு நிரந்தர அமைவிடங்களை ஏற்படுத்த இலங்கை அரசு திட்டமிடுகிறது. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல உதவுமாறு தன்னை வலியுறுத்தியதாக ரவிசங்கர் சுவாமிகள் கூறியுள்ளார்.
?இந்த விடயத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் எடுக்கும் என்று எனக்கு கூறப்பட்டது என்றும் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தமது நிலைமை தொடர்பாக இந்தியாவின் கரிசனை குறித்து தமிழர்கள் எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி தெரிவித்த ரவிசங்கர் சுவாமிகள், “அவர்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொடர்ந்து பீதியுடன் இருக்கிறார்கள். இதனைப் பற்றி கதைக்கக் கூட அவர்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
முகாம்களில் உதவியோ, உதவியாளர்களோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேசுவதற்கு மேற்கொண்ட முயற்சி பற்றி குறிப்பிட்ட அவர், முடிந்தவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு வலியுறுத்தினேன். ஆனால், அது கிட்டவில்லை என்று கூறினார்.
இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கைக்கு அவசரமாக 120 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். நிலைமை குறித்து தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு தெரிவிக்க சந்திப்புக்கான நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருப்பதாகவும் அது இன்னமும் கிடைக்கவில்லை எனவும் சுவாமிகள் கூறியுள்ளார்.
இலங்கை விஜயம் தொடர்பாக அவர் உடனடியாக அடைந்தது என்ன என்று கேட்கப்பட்ட போது, அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் செயற்படத் தவறிவிட்டன. ஆனால், “மனித நேயம்’ இப்போதும் இருந்து கொண்டுதான் உள்ளது என்று இலங்கைத் தமிழருக்கு தெரிவிக்க விரும்பியிருந்தேன் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.







