Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் : தோழர் மருதையன்

இனியொரு... by இனியொரு...
06/25/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, புதிய ஜனநாயகம், அரசியல்
0 0
17
Home பிரதான பதிவுகள் | Principle posts

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரணதண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களுடைய பொதுக்கருத்தின் திரண்ட உருவமாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் அலைமோதிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளம், தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்பளித்தது. இது இறுதி வெற்றி அல்ல என்றபோதிலும், குறிப்பிடத்தக்க வெற்றி. தமிழுணர்வாளர்களும் பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் செய்த பரப்புரைக்கும் பரவலாக நடைபெற்ற போர்க்குணமிக்க போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. மக்கள் மத்தியில் கருத்து ரீதியான ஆதரவை உருவாக்குவதில் வைகோ, சீமான் போன்றோர் ஆற்றிய பங்கும், கருமமே கண்ணாக இருந்து இவ்வழக்கினைக் கொண்டு சென்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி போன்றோரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கவை.

ஏறத்தாழ உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான அதேநேரத்தில், மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவரைக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோரைக் காட்டிலும் அதிர்ச்சி அடைந்தோரே அதிகம். முந்தைய நாள் இதே பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, குடியரசுத்தலைவர் நிராகரித்த கருணை மனுவை அங்கீகரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ஒன்றையும் அதற்கு ஆதாரம் காட்டினார். மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அதிகாரமில்லை என்பதுடன் அதில் தனக்கு விருப்பமும் இல்லை என்பதை அவரது பேச்சு பளிச்சென்று காட்டியது.

முதல்வரைச் சந்திப்பதற்கு பேரறிவாளனின் தாயார் மற்றும் வைகோ உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வேலூர் சிறையின் தூக்கு மேடைக்கு பூசை போடப்படுவதையும் புதுப்பிக்கப்படுவதையும் வக்கிரப் பரவசத்துடன் வருணித்துக் கொண்டிருந்தது, தினமலர். ஜெயலலிதா கும்பலின் உறுப்பினர்களான பார்ப்பன பாசிஸ்டு சுப்பிரமணிய சாமி, சோ போன்றோர் நடைபெறவிருக்கும் நரகாசுரவதம் குறித்த தங்களது மறைக்கவொண்ணா மகிழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று வெளிவந்தது ஜெயலலிதாவின் அந்தர்பல்டி அறிவிப்பு.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று முந்தின நாள் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை மறுத்து முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பி.யு.சி.எல் அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர். சுரேஷ் இது தொடர்பான அரசியல் சட்டத்தின் நிலையை அக்கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மைமிக்க அதிகாரத்தையோ, இபிகோ பிரிவு 54 மற்றும் கு.ந.ச பிரிவு 433 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிர்வாகரீதியான அறிவுறுத்து கடிதம் பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மேலும், இந்திய ஒன்றியத்தின் மாநில மைய அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினைகள் வரையறுக்கப்பட்டுள்ள துறைகளில், குடியரசுத்தலைவர் மேல் என்றும் ஆளுநர் கீழென்றும் (அதாவது மைய அரசு மேல், மாநில அரசு கீழ் என்று) கருதும் அதிகாரப் படிநிலை அணுகுமுறை பொருந்தாது என்பதே அரசியல் சட்டத்தின் நிலை. எனவே, குடியரசுத்தலைவர் நிராகரித்த மனுவை மீண்டும் குடியரசுத்தலைவர்தான் பரிசீலிக்க இயலும் என்ற கருத்து தவறு என்று அவரது கடிதம் விளக்குகிறது.

இவையெல்லாம் தமிழக அரசுக்கோ, ஜெயலலிதாவின் ஆலோசகர்களுக்கோ தெரியாததல்ல. சட்டப்பிரிவு 161 அம்மாவின் கருணைக்கரங்களைக் கட்டிப் போட்டிருப்பதனால்தான், தூக்கு தண்டனையை அம்மா ரத்து செய்யமுடியவில்லை என்று அ.தி.மு.க வைச் சேர்ந்த அடிமுட்டாளும்கூட நம்பமாட்டான். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா தமிழகத்தில் நடத்திவரும் அரசியலின் மையப்புள்ளியே புலி பீதியூட்டுவதுதான் . ராஜீவ் கொலைப் பழியை தி.மு.க.வின் மீது போட்டு, ராஜீவின் பிணத்தின் மீதேறித்தான் ஜெயலலிதா முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார். அன்று ஈழத்தமிழர்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும் எதிராக அவர் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்துவிடவில்லை.

தடா, பொடா சட்டங்களை ஏவியதாக இருக்கட்டும், புலிகள் இயக்கத்தை வேரறுப்பதற்கு முனைந்து நின்றதாக இருக்கட்டும், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியைக் சாடியதாக இருக்கட்டும் அனைத்திலும் ‘மாறாத கொள்கை உறுதி’யை பார்ப்பன பாசிச ஜெயலலிதா காட்டி வந்திருக்கிறார். ஒரு தாய் என்ற காரணத்தினால் நளினியின் மரண தண்டனையை அன்றைய தி.மு.க. அரசு ஆயுள்தண்டனையாக குறைத்தபோது, அதையும் எதிர்த்த இந்த அம்மையார்தான், “மூவரின் கருணை மனுவை நிராகரித்தவர் கருணாநிதி” என்ற உண்மையை இன்று உலகுக்கு அறிவித்து அவரது சந்தர்ப்பவாதத்தை சாடுகிறார்.

“எதுவும் செய்யமுடியாது” என்று முந்தின நாள் கைவிரித்து விட்டு, மறுநாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அம்மாவின் அந்தர்பல்டிக்கு அடிப்படை என்ன? மனிதாபிமானமோ, தமிழுணர்வோ 24 மணி நேரத்துக்குள் முதல்வரிடம் ஊற்றெடுத்துப் பெருகி சட்டமன்றத்தில் பாய்ந்துவிடவில்லை. தமிழக மக்களின் மனநிலை குறித்த அவரது மதிப்பீடுதான் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் விளைவாக முடிவிலும் மாற்றம் வந்திருக்கிறது.
முதலாவதாக, இம்மரணதண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் அவதானிக்கத்தக்கதொரு போர்க்குணம் இருந்தது. அமைப்பு சார்ந்த போராட்டங்கள் மட்டுமின்றி, தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர்கள் வழக்குரைஞர்களின் போராட்டங்களும் ஈழப்போரின் இறுதி நாட்களில் தமிழகம் இருந்த நிலையை நினைவூட்டின. சமச்சீர் கல்விக்கான போராட்டங்களுக்காக தெருவுக்கு வந்து பழகிய மாணவர்களும், ஈழம் மற்றும் உயர் நீதிமன்ற போலீசு தாக்குதல் தொடர்பான பிரச்சினைகளில் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கும் வழக்குரைஞர்களும் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கக் கூடிய சாத்தியப்பாடு விளங்கிக் கொள்ள முடியாததல்ல.
1991-இல் ராஜீவின் உடலைக் கண்டு தமிழகம் அழுததும், அந்தக் கண்ணீரை ஓட்டுகளாக ஜெயலலிதா மாற்றிக் கொண்டதும் உண்மைதான். ஆனால், அது வேறு தமிழகம். இன்று, இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாமல் தோற்றது மட்டுமின்றி, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க முடியாமல் பாதுகாத்து நிற்கும் டெல்லியைக் கண்டு குமுறிக் கொண்டிருக்கிறது, ஒரு தலைமுறை. இந்த குமுறலின் மீது உப்புக் காகிதத்தைத் தேய்க்கும் விதமாக மூவரின் தண்டனையை நிறைவேற்ற முற்பட்டால், அது தோற்றுவிக்கும் காயமானது பார்ப்பனக் கும்பலையும் அவர்களது தேசியத்தையும் வெறுக்கின்ற புதியதொரு தலைமுறையை உருவாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்க, ‘அபாயகரமான’ அந்த சாத்தியப்பாட்டினைத் தடுப்பதற்கானதொரு உபாயமாகவும் அம்மா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.

மூன்றாவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கிடைத்துவிடும் என்பது ஓரளவு சட்டம் தெரிந்த அனைவரும் எதிர்பார்த்த விடயம். வேறொரு வழக்கில் கருணை மனுவின்மீது கருத்து கூறாமல் 2 ஆண்டுகள் தாமதித்ததையே காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 11 ஆண்டுகள் என்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த இயலாத தாமதம் என்பதால், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சூழலில், சட்டமன்றத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு விடப்படும் வேண்டுகோள் அரசியல் ரீதியில் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்றும் ஜெயலலிதா கணக்கிட்டிருக்கக் கூடும்.

இக்காரணிகள் அனைத்தின் கூட்டல் கழித்தலில் வந்திருக்கக் கூடிய விடைகளில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம். இது அமைச்சரவை முடிவல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சிக்கு வந்த மறுகணமே உடுக்கை இழந்தவன் கைபோல மெட்ரிக் முதலாளிகளின் இடுக்கண் களைவதற்காக நீண்ட கரங்கள் அல்ல இவை. இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காக நீண்டிருக்கும் கரம். அதிலும் கூட கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே.

உண்மை இவ்வாறிருக்க, “இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இக்கட்டில் ஆழ்த்துவதற்காகத்தான் காங்கிரசு அரசு கருணை மனுவை நிராகரித்திருக்கிறது” என்றொரு நகைக்கத்தக்க காரணத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள், “ரூம் போட்டு” சிந்திக்கும் சில அறிஞர் பெருமக்கள். ‘தமிழினத்தின் மானத்துக்கு மரணதண்டனை விதிக்காதீர்கள்’ என்பதுதான் நாம் இவர்களிடம் பணிந்தளிக்கும் கருணை மனு.

குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியிருப்பது மத்திய உள்துறை அமைச்சகம். அதன் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல் களத்தில் முரண்பாடுகள் இருந்த போதிலும், ஈழப்போராட்டத்தை ஒடுக்குவதில் அவர்கள் கொள்கை ரீதியான ஒற்றுமை உடையவர்கள். தமக்கிடையிலான சில்லறை முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தேசியநலனுடன்’ தொடர்புள்ள விடயங்களில் சேர்ந்தியங்கும் ‘பக்குவம்’ உடையவர்கள். மேலும், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அம்மாவின் ஆட்சி அமைந்திருக்கும் இந்தச் சூழல்தான் சுமுகமாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் இல்லாமலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தகுந்த சூழல் என்று மத்திய உளவுத்துறைகளும் மதிப்பிட்டிருக்கும். தமது மதிப்பீடு முற்றிலுமாய்ப் பொய்த்துவிடும் என்று உளவுத்துறையினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் மட்டுமா, ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று இப்படியொரு அந்தர்பல்டி தீர்மானத்தை முன்மொழியப் போகிறோம் என்பதை ஆகஸ்டு 29 ஆம் தேதியன்று ஜெயலலிதாவே எண்ணிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகையதொரு துரதிருஷ்டம் குறித்து சோதிடர்கள்கூட முதல்வரை எச்சரித்ததாகத் தெரியவில்லையே.

இந்த சட்டமன்றத் தீர்மானம் சில அரசியல் துணை விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவைப் போல, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக நான் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கான எதிர்வினை இவ்வளவு அமைதியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. “இதே தீர்மானத்தை இந்தக் கருணாநிதி நிறைவேற்றியிருந்தால் பிரிவினை வாதம், தேசத்துரோகம் என்று பத்திரிகைகள் என்னை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா உடன்பிறப்பே” என்று கேட்கத்தான் கலைஞரும் நினைத்திருப்பார்.

நாம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அம்மா உதைத்து விட்டிருக்கும் இந்தப்பாறையானது உருண்டு போகிற போக்கில் பல ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ விளைவுகளை ஏற்படுத்தித்தான் செல்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக சுயேச்சையான பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அசைத்திருக்கும் இந்த ஆப்பில், அதிகாரபூர்வ பார்ப்பன பாசிஸ்டுகளான பாரதிய ஜனதாவினரின் உயிர்நிலை மாட்டிக்கொண்டுவிட்டது. அவர்கள் வாயைத் திறக்கிறார்கள், பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால் வார்த்தை வரமறுக்கிறது. ‘அப்சல் குருவை உடனே தூக்கில் போடு’ என்று தொடைதட்டியவர்கள், அம்மாவின் சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னர், ‘ஒமர் அப்துல்லா இப்படிப் பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று நெளிகிறார்கள்.வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் பொருத்தவரை மூவர் தூக்குக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பொதுக்கருத்தையோ, போராட்டங்களையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அத்தகைய பொதுக்கருத்து தோன்றுவதற்கான நியாயம் ஈழத்தின் இனப்படுகொலையிலும் இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது என்பதையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ‘இந்திய தேசியத்தின்’ சந்தேகப் பட்டியலில் நிரந்தரமாக அவர்கள் தமிழகத்தை வைத்திருக்கிறார்கள். ‘திராவிடதமிழ் அரசியலை’ தைரியமாக எதிர்கொண்டு நின்ற ஜெயலலிதாவும் இப்போது அதற்குப் பணிந்து விட்டார் என்பதுதான் அவர்களது மனக்குமுறல்.

தேசத்தின் முன்னாள் பிரதமரையே கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம் நடத்துவதும், அதனையொட்டி சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதும் அவர்களை நடுங்கச் செய்கிறது. இது நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதும் மிரட்டுவதும் ஆகும் என்று அந்த ஊடகங்களில் கருத்துரைக்கின்றனர் அதிகாரபூர்வ அறிவுஜீவிகள்.

இது அபத்தமானதும் அரசமைப்புச்சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள மன்னிக்கும் அதிகாரத்தை மறுப்பதும் ஆகும். நீதிமன்றம் தனக்கு முன்னால் வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தின் தன்மையையும் குற்றவாளிகளையும் முடிவு செய்து தண்டனை விதிக்கிறது. ஆனால் மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும் அரசு (Ececutive) குற்றத்தின் தன்மையை ஆராய்வதில்லை. குற்றவாளிகளின் சமூக, கலாச்சார பின்னணி, குறிப்பிட்ட குற்றத்தை இழைக்குமாறு அந்தக் குற்றவாளியைத் தூண்டிய காரணிகள், குற்றத்தின் சமூகப் பின்புலம் ஆகியவற்றை பரிசீலித்து மன்னிப்பு வழங்குவது பற்றி முடிவு செய்கிறது. மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பது, ஆயுள்தண்டனையின் காலத்தை குறைப்பது ஆகியவை பற்றி மட்டும்தான் அரசு முடிவு செய்கிறதேயன்றி, குற்றத்திலிருந்து குற்றவாளிகளை விடுவிப்பதில்லை.

ராஜீவ் கொலை வழக்கையே எடுத்துக் கொள்வோம். இந்திய அரசு அதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கிறது. ஆனால் ‘ராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதக் குற்றமல்ல’ என்று தனது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகக் கூறும் உச்ச நீதிமன்றம், ராஜீவைத் தவிர வேறு யாரையும் கொலை செய்யும் நோக்கமோ இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கமோ கொலையாளிகளுக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் தண்டிக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னரும் ராஜீவ் கொலையுண்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத்தான் இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த அயோக்கியத்தனத்தை அதிகாரபூர்வமான நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வதா, அதிகாரபூர்வமற்ற அரசியல் குறுக்கீடு என்பதா?

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கின் வாக்குமூலங்களும் சாட்சியங்களும் கைதிகளிடம் மிரட்டிப் பெறப்பட்டவை, அல்லது போலீசால் தயாரித்துக் கொள்ளப்பட்டவை. தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால், குற்றவாளிகளை தண்டித்திருக்கவே முடியாது என விசாரணை அதிகாரி கார்த்திகேயன் அன்று கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது. “ஆனானப்பட்ட ஜோன் ஆப் ஆர்க்கூடச் சித்திரவதை பொறுக்காமல் தன்னை ஒரு சூனியக்காரி என்று ஒப்புக்கொண்டாள். சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் எதையும் ஒப்புக்கொள்வான். எனவே தடா சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கது என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறதெனினும், அது பலவீனமான சாட்சியமே” என்று கூறி உல்ஃபா இயக்கத்தை சேர்ந்த புய்யான் என்பவரை சமீபத்தில் (17.2.2011) விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அப்படிப்பட்ட ‘பலவீனமான’ சாட்சியம்தான் இம்மூவரின் மரண தண்டனைக்கும் அடிப்படை.அது மட்டுமல்ல, எந்த ஜெயின் கமிசன் அறிக்கையில் தி.மு.க. வின் புலி ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காட்டி 1998 இல் ஐக்கிய முன்னணி ஆட்சியைக் காங்கிரசு கவிழ்த்ததோ, அதே ஜெயின் கமிசன் அறிக்கை ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியார் விசாரிக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தும், அதற்காகவே பலநோக்கு கண்காணிப்பு முகமை (MDMA) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தும் அத்தகைய விசாரணை எதுவும் நடைபெறவில்லை. ஒரு அரசியல் கொலை வழக்கில், சந்தேகத்திற்கிடமான சிலரை விசாரிக்காமலிருக்கும்போதே ஏனையோரின் உயிரைப் பறிப்பது, அப்பட்டமான அநீதி மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமளிக்கும் சதியும் ஆகும்.

இந்திய இலங்கை ஒப்பந்த திணிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு, அமைதிப்படையை திரும்பப் பெற்ற வி.பி.சிங் மீது ராஜீவ் வெளியிட்ட கண்டனம் — ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் நடைபெற்றதே ராஜீவ் கொலை என்று கூறுகிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இதுதான் இந்தக் ‘குற்றத்தின்’ அரசியல் பின்புலம். ராஜீவ் கொலையை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களும் எதிர்ப்பவர்களும் கூட, அதன் அரசியல் நியாயத்துக்குத் தம்மையறியாமல் தலைவணங்குவதன் விளைவுதான் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான பொதுக்கருத்து.

‘சங்கடமளிக்கும்’ இந்த அரசியல் பின்புலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனிதாபிமானம், நிரபராதிகள், மரணதண்டனை ஒழிப்பு என்றெல்லாம் பேசுவதன் மூலம் பரந்த மக்கட்பிரிவினரையும் அரசியல் கட்சிகளையும் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டிவிட முடியும் என்று கருதுவோர் அம்மயக்கத்திலிருந்து விடுபடவேண்டும். இம்மூவரின் இடத்தில் நிற்பவர்கள் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாக இருந்திருப்பின், தமிழகம் இவர்களைத் திரும்பியும் பார்த்திருக்காது. தன்னுடைய ரத்தத்தின் ரத்தங்களேயானாலும், அவர்களுக்காக ஜெயலலிதா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கவும் முடியாது.

மரண தண்டனை ஒழிப்பு என்ற பொதுக்கோரிக்கை, ராஜீவுடைய போர்க்குற்றத்தை மூடும் வெள்ளைத்துணி ஆகிவிடக்கூடாது. குற்றம் ராஜீவுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. அதனால்தான் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் தூக்கு மேடையில் நிற்கிறார்கள். இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை மறித்து நிற்பதனால்தான் அப்சல் குருவும் தூக்குமேடையில் நிற்க நேர்ந்திருக்கிறது.

கருப்புத்துணி மூடித் தூக்கிலிடப்படவோ, கருணை மனுவினால் விடுவிக்கப்படவோ முடியாத, உண்மையின் இந்த முகம்தான் மக்களைப் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது. மூவரையும் தூக்குமேடையிலிருந்து இறக்க வல்லதும் அதுதான்.

_________________________________________________________________

– மருதையன், புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: தமிழ் இனவாதிகள்இந்திய செய்திஇன்றைய செய்தி
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இராணுவத்தின் துணையோடு தொடரும் மர்மமனிதனின் பெண்கள் மீதான தாக்குதல்கள்

Comments 17

  1. Vasanth says:
    14 years ago

    இந்த மூவரையும் தூக்கில் போட பச்சை கொடி காட்டியதே திமுக தான். கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் உங்களை போன்றவர்கள் உண்மையை கண்டு பேடி போல பதுங்குவது வாடிக்கைதான். ஜெயலலிதா என்ன செய்தாலும் அது தப்பு என்று கங்கணம் கட்டி கொண்டு எழுத வருகிறீர்கள். இதற்கு பார்ப்பனீய சாயம் பூசி போலி திராவிடம் பேசி தமிழ் என்று உங்கள் தலைவன் போல உணர்ச்சி பொங்க கண்ணீர் வடிக்கிறீர்கள். கருணாநிதி ஆட்சியில்தான் இந்த மூவருக்கும் தூக்கு ஓகே ஆனது. ஜெயலலிதாவை கார்னர் செய்யும் விதமாக காங்கிரஸ் தற்போது இந்த தண்டனையை உறுதி செய்துள்ளது. ஒட்டு மொத்த தமிழிலக மக்களால் துரத்தி அடிக்கப்பட்டு இன்னும் வெட்கமில்லாமல் தான் எதோ நல்லவன் போல முதலை கண்ணீர் விடும் கருணாநிதியை பற்றி விமர்சனம் செய்ய துப்பு இல்லாமல் பெண் என்பதற்காக ஜெயலலிதாவை என்ன செய்தாலும் குறை கூறுவது உங்களின் பொட்டைதனத்தை தோலுரித்து காட்டுகிறது.ஆண் மகன் போல உண்மையை எழுத முயற்சி செய்யவும்.

  2. thurai ilamurugu says:
    14 years ago

    தமிழக சட்டப்பேரவை தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்பதைஅறிந்துதான் செயலலிதா அத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் தொடக்கம் முதல் தமிழர்களை வெறுப்ப்வர்செயலலிதாதான், தமிழ் இனப்பகை அவர் அவர் ஒரு தீர்மானம் இயற்றிவிட்டதற்காக நீங்கள் போடும் ஆட்டம் அதிகம் தான் இதைக் கருணானிதி செய்திருந்தால் செயலலிதா சோ போன்றவர்கள் தேசத்தூரோகி பட்டம் சூட்டி இருப்பார்கள் எனபதில் அய்யம் இல்லை
    ., முடிந்தால் அவரிடம் சொல்லிப்-பாருங்கள் அமைச்சரவை தீர்மானம் போடச் சொல்லுங்கள் !!அது கூட வேண்டாம் அ தி மு க அவைக்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற சொல்லுங்கள்!!! தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரம் தன்னிடம் இல்லை /அத்தீர்மானம் அது எழுதப்,பட்டுள்ள தாளின் மதிப்புகூட கிடையாது என்பதுதான் சட்ட விதிகளின் படி உண்மைபுதியதமிழகம் கிருட்டிணசாமி சட்ட அவையில் பேசக் கூட முடியவில்லை அவைத்தலவரின் வானாளாவிய அதிகாரம் அப்படி!! திமுகவிற்கு வைக்கப்படும் ஆப்புகள் அனைவருக்கும்விரைவில் வரும் என்பது அவர்களுக்கும் தெரியும்
    முத்துக் குமார் சடலத்தை வைத்து 3 நாள் கொண்டாடியவர்கள் செங்கொடியை சலனமின்றி சத்தமின்றி புதைத்து விட்டனர் மாமியா கொக்க்கா? பின்புறம் பழுத்துப்,போய்விடும் என்பது அவர்களுக்கு தெரியாத என்ன?

  3. T.சௌந்தர் says:
    14 years ago

    ” ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா தமிழகத்தில் நடத்திவரும் அரசியலின் மையப்புள்ளியே புலி பீதியூட்டுவதுதான் . ராஜீவ் கொலைப் பழியை தி.மு.க.வின் மீது போட்டு, ராஜீவின் பிணத்தின் மீதேறித்தான் ஜெயலலிதா முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார். அன்று ஈழத்தமிழர்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும் எதிராக அவர் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்துவிடவில்லை..”

    ஆனால் தமிழ் தேசியவாதிகள் ,புலி ஆதரவாளர்கள் அம்மாவை புகழ்ந்து தள்ளுகிறார்களே !

  4. veeran says:
    14 years ago

    புலி இயக்கத்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை, அழிவு தான் மிஞசியது, இந்த மூவரும் ராஜிவ் கொலையில் சம்பந்தம் உள்ளவர்கள், சாந்தன் புலிகலின் உள்வுப்பிரிவை சேர்ந்தவர், ராஜிவ் கொலையால் இலஙகை தமிழர்களுக்கு ஏற்பட்ட சேதம் சொல்லி மாளாது, இவர்களுக்கு கருணை காட்ட அவசியம் இல்லலை, இலங்கை கண்டியில்ருந்து தமிழன்

  5. veeran says:
    14 years ago

    முதற்பக்கம்

    அதிரடி
    ஆனந்தசங்கரி
    ஈ.பி.ஆர்.எல்.எப்
    ஈ.பி.டி.பி
    ஈரஅனல்
    கவிமலர்
    தாயகம்
    புளொட்
    தூ
    நெருப்பு
    டெலோ நியூஸ்
    பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
    இலங்கைநெற் மீன்மகள்
    சூத்திரம் மகாவலி உண்மைகள் அறிவுடன் கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை அலை பூர்வீகம் பூந்தளிர் எங்கள்தேசம் சலசலப்பு நோயல்நடேசன் விடிவெள்ளி எங்கள்பூமி ரீவடை இணையம் தமிழ்யுகே புயல் புளொட்யுகே யாழ்முஸ்லீம் புண்ணியாமீன்
    யவ்னா ருடே எஸ்.ஆர்.லெம்பட் பஷீர் தமிழ்யூஎன் கவசங்களைதல் தூங்காத கண்கள்

    Asientribune
    Lines-Magahzine
    The lka academic
    Tamil Week sldf
    Uthr

    Online Newspaper in Tamil Vol.10 12.09.2011

    சட்டம், தர்மம், நியாயம்!

    – துக்ளக் –

    ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் மூவர் (ஒருவருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது), செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள்’ என்ற செய்தி வெளியானதிலிருந்து, அந்த மூவரைக் காப்பாற்ற பல முயற்சிகள், பல தரப்புகளில் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த மூவரே கூட, தங்களுடைய கருணை மனு ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு, சென்னை ஹைகோர்ட்டை அணுகி, தூக்கு தண்டனைக்குத் தடை உத்திரவைப் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் – புலி ஆதரவாளர்கள்; சட்ட வல்லுனர்கள்; இவ்விஷயத்தில் மென்மை காட்டுவது ஓட்டைப் பெற்றுத் தரும் என்று நினைப்பவர்கள்; விளம்பரப் பிரியர்கள்; மனிதாபிமானிகள்; பத்திரிகையாளர்கள்; அறிவுஜீவிகள்; மரண தண்டனையை எதிர்ப்பவர்கள்… என்று பலர், பல்வேறு வகைகளில், இந்த மூவருக்காக வாதாடி வருகின்றனர்.

    இப்படி இந்த மூவர் சார்பாக கூறப்படுகிற வாதங்களை, கேள்விகள் உருவில் இங்கு பார்ப்போம். மூவர் தரப்பு வாதங்களின் மையக் கருத்துக்களைக் கேள்விகளாக்கி – நமது கருத்தை பதில்களாகத் தருகிறோம் :

    மூவர் தரப்பு கேள்வி: இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில், ஜனாதிபதி (மத்திய அரசு) நிகழ்த்தியுள்ள தாமதம், முறைதானா?
    நமது பதில் : நிச்சயமாக இந்தத் தாமதம், கண்டனத்திற்குரியது. ‘கருணை மனுக்களைப் பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பதில், ஏற்க முடியாத தாமதம் இருக்கக் கூடாது’ என்று சுப்ரீம் கோர்ட்டே கூட, முன்பு ஒரு வழக்கில் கூறியிருக்கிறது. ஆனால், ‘ஏற்க முடியாத தாமதம்’ எது – அல்லது எந்தக் கால அளவு – என்பதை நீதிமன்றம் விளக்கவில்லை. அரசியல் சட்டமோ, ஜனாதிபதி அல்லது கவர்னர், இவ்விஷயத்தில் முடிவு எடுக்க, எந்தக் காலவரையறையையும் விதிக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் காரணங்களுக்காகவும், முடிவு எடுக்கிற தெளிவின்மை காரணமாகவும், கருணை மனுக்கள் அப்படியே கிடப்பில் போடப்படுவது வழக்கமாகி விட்டது. இது மிகவும் தவறு. ஆனால், இந்த மூவர் விவகாரத்தில் நிகழ்ந்த தாமதத்திற்கு, அவர்களும் கூடக் காரணமாகி இருக்கிறார்கள். முதலில் விசேஷ கோர்ட் அளித்த தண்டனைகள், சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்குள்ளாகியது; இது சட்ட நிர்பந்தம்.

    விசேஷ கோர்ட், 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது; சுப்ரீம் கோர்ட், இதில் 19 பேர் செய்த குற்றத்திற்கு, அதுவரை அனுபவித்த சிறைவாசமே போதுமான தண்டனை என்றும், மூவருக்கு ஆயுள் தண்டனை என்றும் கூறி, நால்வருக்கு விசேஷ கோர்ட் விதித்த மரண தண்டனையை உறுதி செய்தது.

    இந்த நால்வர், சுப்ரீம் கோர்ட்டில் மறு பரிசீலனை மனு தாக்கல் செய்தனர்; வழக்கத்திற்கு விரோதமாக இதன் மீது வாதங்கள் அனுமதிக்கப்பட்டன. தோல்வி. மரண தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

    பின்னர், தமிழக கவர்னர் முன், இவர்கள் கருணை மனுக்களை சமர்ப்பித்தனர். அதை கவர்னர் நிராகரித்தார் என்று கூறி, மீண்டும் ஹைகோர்ட்டை இவர்கள் அணுக, ‘அமைச்சரவையின் ஆலோசனை பெற்று, முடிவைச் சொல்லவும்’ என்று கூறி, நீதிமன்றம் அந்த மனுக்களை கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

    மந்திரி சபை, ‘ஒருவருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைப்பு; மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு’ என்று ஆலோசனை வழங்கியது. அவ்வாறே கவர்னர் முடிவு எடுத்தார்.

    இதுவரை நடந்ததிலேயே, சுப்ரீம் கோர்ட்டில் மறு பரிசீலனை கோரிக்கை, கவர்னரின் முதல் முடிவு மீது நீதிமன்ற வழக்கு – ஆகிய தாமதங்களுக்கு, அந்த மூவரே காரணம்.

    கவர்னரின் நிராகரிப்புடன் இந்த விவகாரம் முடிந்திருக்க வேண்டும். அப்படி முடியாமல், ஜனாதிபதியிடம் சென்று, இந்த விஷயம் நீண்டு கொண்டே போனதற்கு, அந்த மூவரே முதற்காரணம்.

    கவர்னரின் முடிவிற்குப் பிறகு, இந்தக் கருணை மனுக்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது முறையே அல்ல. கவர்னரும், ஜனாதிபதியும் மாறி மாறி இவ்விஷயத்தில் முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்க முடியாது; அம்மாதிரி செய்வது அரசியல் சட்டத்தைக் கேலி செய்வது போல இருக்கும்.

    ஜனாதிபதி (மத்திய அரசு) இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது தவறு; அதன் மீது ஒரு முடிவை அறிவிக்க இத்தனை நீண்ட காலம் எடுத்துக் கொண்டது, அதைவிடப் பெரிய தவறு. இந்த இரு தவறுகளின் பலனை, தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கு அளிப்பது, எல்லாவற்றையும் விடப் பெரிய தவறாக இருக்கும். (அடுத்த கேள்வி – பதிலில், விளக்கம் வருகிறது).

    மூவர் தரப்பு கேள்வி: இந்த மூவரும் இருபது வருடங்கள் சிறையில் இருந்ததால், மரண தண்டனையை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்?
    நமது பதில் : அவர்களுடைய குற்றத்தின் தன்மை மிகக் கொடூரமானது என்ற வகையில், இது நியாயமே! ‘மரண தண்டனை விதிக்கக் கூடிய அளவு கொடுமையானது என்று ஒரு கொலை எப்போது கருதப்படுகிறது?’ என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வாதம் நிகழ்ந்தது; அதில் கூறப்பட்ட கருத்தை நீதிமன்றம் ஏற்றது. ‘முனைந்து திட்டமிட்ட செயல்; அல்லது கொலை செய்த விதம் கொடூரமானது; அல்லது கொலை செய்யப்பட்டவர், ட்யூட்டியில் இருக்கிற ராணுவ வீரர் அல்லது போலீஸ்காரர் அல்லது பொது ஊழியர். இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால், அப்போது அந்தக் கொலை, மரண தண்டனைக்குரியதாகக் கருதப்படும் என்பதே அது. – இந்த அம்சங்களில் ஒன்று அல்ல; மூன்றுமே ராஜீவ் கொலையில் உள்ளன. நீண்ட, முனைப்புடன் கூடிய திட்டம்;

    தற்கொலை செய்ய முன்வந்த ஒரு பெண்ணின் மூலமாக, குறி வைக்கப்பட்ட நபர் மட்டுமல்லாமல் கூட்டத்தில் பலர் உயிர் இழப்பார்கள் என்று தெரிந்தே செய்யப்பட்ட கொடூரத்தனம்;

    ட்யூட்டியில் இருந்த ஒரு டெபுடி சூப்பரின் டென்டெண்ட்; இரண்டு இன்ஸ்பெக்டர்கள்; ஒரு சப்-இன்ஸ்பெக்டர்; நாலு கான்ஸ்டபிள்கள்; ஒரு பெண் கான்ஸ்டபிள் – ஆகிய ஒன்பது பேர் கொலையுண்டனர்.

    இப்படி சுப்ரீம் கோர்ட் கூறிய கருத்தின்படி, (அது உத்திரவு அல்ல) ராஜீவ் கொலை வழக்கில், குற்றவாளிகள், மரண தண்டனைக்குரியவர்களே.

    அப்படிப்பட்ட குற்றத்தை செய்து விட்டு, தாங்களும் கருணை மனு தாமதத்திற்குக் காரணமாக இருந்து விட்டு, இப்போது தாமதத்தைக் காரணம் காட்டி, கருணை கோருவது ஏற்கக் கூடியது அல்ல.

    மூவர் தரப்பு கேள்வி: தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கிற மூவரும், தாங்கள் நிரபராதிகள் என்று கூறியிருக்கிறார்களே? அதை கவனத்தில் கொள்ள வேண்டாமா?
    நமது பதில் : தாங்கள் நிரபராதிகள் என்று அவர்கள் கூறியது, நீதிமன்றங்களினால் மூன்று முறைகள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. விசேஷ நீதிமன்றம் முதல் முறை; சுப்ரீம் கோர்ட் இரண்டாவது முறை; இவர்கள் மனுச் செய்ததின் காரணமாக மீண்டும் ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது, மூன்றாவது முறை நிராகரிப்பு. இப்படி மீண்டும் மீண்டும் நீதிபதிகள் இந்த விஷயத்தைப் பரிசீலித்து, இவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தீர்ப்பளித்தனர். விசேஷ நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனைகள் சில, சுப்ரீம் கோர்ட்டினால் மாற்றப்பட்டன. ஆனால், இந்த மூவருக்கும் விசேஷ நீதிமன்றம் விதித்த தண்டனையை சுப்ரீம் கோர்ட் இரண்டு முறை உறுதி செய்தது.

    இவர்களுடைய விடுதலைப் புலிகள், தாங்களாகவே குற்றம் சுமத்தி, தாங்களாகவே விசாரித்து, தாங்களாகவே தீர்ப்பு வழங்கி, தாங்களாகவே பல அப்பாவித் தமிழர்களை, துரோகிகள் என்று பட்டம் கட்டி, விளக்குக் கம்பங்களில் தூக்கிலிட்டு வந்தார்களே – அது போன்றதல்ல நமது நாட்டு நீதி நிர்வாகம். முறையான விசாரணை; முறையான வழக்கு; முறையான தீர்ப்பு; அந்தத் தீர்ப்பு மீண்டும் இரண்டு முறை பரிசீலனை… என்ற கட்டங்கள் கடக்கப்பட்டன. அதில் எந்த ஒரு கட்டத்திலும் இவர்கள் நிரபராதிகள் என்று நிரூபணம் ஆகவில்லை. நீதிமன்றத்தின் முன்னால் நிரபராதிகள் என்று நிரூபிக்க முடியாத இவர்கள், வெளியே வந்து தாங்கள் நிரபராதிகள் என்று சொல்வதை யார் ஏற்க வேண்டும்? எப்படி ஏற்க வேண்டும்? மீண்டும் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்குமா? அல்லது ஜனாதிபதியே விசாரித்து, இவர்களை நிரபராதிகள் என்று அறிவித்து விடுவாரா? இனிமேலும் இவர்களை நிரபராதிகள் என்று சட்டபூர்வமாக முடிவு செய்ய நம் நாட்டில் யாருக்கும் அதிகாரமில்லை.

    இவர்கள் தங்களை நிரபராதிகள் என்று சொல்வதை நீதிமுறை ஏற்க வேண்டும் என்று சொன்னால் – இனிமேல் கிரிமினல் வழக்குகளை மிகச் சுலபமாக முடித்து விடலாம். விசாரணை நடந்து, வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து நீதிபதி, ‘நீ குற்றவாளிதான் என்று தீர்மானிக்கிறேன்’ என்று கூற, குற்றவாளி ‘நீங்கள் சொல்வது தவறு; நான் நிரபராதி!’ என்று கூற; உடனே நீதிபதி ‘அப்படியா? சரி! நான்தான் தவறாக ஏதோ சொல்லி விட்டேன். நீயே சொன்ன பிறகு அதற்கு அப்பீல் ஏது? நீ நிரபராதி! வீட்டிற்குப் போய் சுகமாக இருப்பாயாக!’ என்று கூற, வழக்கு வெகு விரைவில் முடிந்து விடும்!

    இந்த மூவருடைய ஆதரவாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் போலிருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து நடத்த வேண்டியவர்கள், நீதி நிர்வாகம் செய்யத் தொடங்கினால்தான் இது நடக்கும்.

    மூவர் தரப்பு கேள்வி: கொலை செய்தவர்களுக்கு அளிக்கிற தண்டனையை, அந்தக் கொலைக்கு உதவியவர்களுக்கும் அளிக்க முடியுமா?
    நமது பதில் : ‘முடியுமா?’ என்பது அல்ல – அதே தண்டனையை அளிக்க வேண்டும். ஏனென்றால், ஒரு கொடூரமான சதியில் பங்கு பெற்று, அந்தக் கொலை நடக்க பலவித உதவிகளைச் செய்தவர்களும், கொலைக் குற்றம் செய்தவர்களே – என்று சட்டம் கூறுகிறது. இது பகுத்தறிவுக்கும் – வேண்டாம், அது வேறு சமாச்சாரமாகிவிடும் – சாதாரண அறிவுக்கும் எட்டுகிற விஷயமே.

    நம்மைத் தாக்க, சிலர் திட்டம் தீட்ட; அந்த சதியில் ஈடுபடுபவர்களில் சிலர் ஆயுதம் தருகிற பொறுப்பை ஏற்க; ஒருவர் வந்து நம்மை அந்த ஆயுதம் கொண்டு தாக்கினால் – அவர் மட்டுமே குற்றவாளி என்று நாம் கூறுவோமா? சதியில் பங்கு பெற்றவர்களும், ஆயுதம் கொண்டு வந்தவர்களும், பல உதவிகளைப் புரிந்தவர்களும் ‘அப்பாவிகள்’ என்று நாம் கூறுவோமா? மாட்டோம். சட்டமும் அதே அணுகுமுறையைத்தான் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் கடைப்பிடிக்கிறது. சதியில் பங்கு பெற்று, கொலைக்குப் பல உதவிகளைப் புரிபவர்களுக்கும், கொலைக்கான தண்டனைதான்.

    மூவர் தரப்பு கேள்வி: சட்டசபையே தீர்மானம் இயற்றி விட்ட பிறகு, அதை ஏற்று, அந்த மூவர் மீதான தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைப்பதுதானே ஜனாதிபதியின் கடமை?
    நமது பதில் : கிடையாது. சட்டசபைத் தீர்மானத்திற்கு எந்த விளைவும் இருக்க முடியாது. இது அரசியல் நடவடிக்கை. இதற்கும், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க முடியாது. அப்படி இது ஒரு சரியான வழிமுறை என்றால், இனி எந்த மரண தண்டனை விஷயத்திலும், ஏதாவது ஒரு மாநில சட்டசபை இப்படி தீர்மானம் போடலாம். அப்புறம் கவர்னர் மன்னிப்பு, ஜனாதிபதி மன்னிப்பு எல்லாம் ஏன்? தண்டனை பெற்றவர் பேசாமல் மாநில சட்டசபையின் மன்னிப்பைக் கோர வேண்டியதுதானே! இது சட்டமும் அல்ல; மரபும் அல்ல; அரசியல்.

    மரண தண்டனை மட்டுமல்ல; வேறு தண்டனைகளையும் ஜனாதிபதி அல்லது கவர்னரால் குறைக்க முடியும், அப்படி அவர்கள் எடுக்கிற முடிவுகளை, மாற்ற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானங்கள் போடலாமா?

    அது மட்டுமல்ல, மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் போட்டு, தண்டனையை மாற்றுகிற உரிமை சட்டசபைக்கு உண்டு என்றால் – ‘மரண தண்டனை வேண்டும்; ஜனாதிபதி கருணை மனுவை ஏற்றது தவறு; மரண தண்டனையை நிறைவேற்ற இந்தச் சபை வற்புறுத்துகிறது’ என்றும் வேறு ஒரு வழக்கில், ஒரு சட்டசபை தீர்மானம் போடலாமே! அசல் கூத்துக்கு அல்லவா இது வழி வகுக்கும்!

    தமிழக சட்டசபை இப்படிச் செய்ததால், ஓமர் அப்துல்லா ‘இதே மாதிரி, அஃப்ஸல் குருவை மன்னிக்கக் கோரி, ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், பரவாயில்லையா?’ என்று கேட்டிருக்கிறார். நியாயமான கேள்வி.

    முன்னாள் பிரதமர் மற்றும் 16 பேரை கொலை செய்தவர்களை மன்னிக்கலாம் என்றால் – பாராளுமன்றத் தாக்குதல் குற்றவாளியை ஏன் மன்னிக்கக் கூடாது? ‘ராஜீவ் மற்றும் 16 பேர் கொலை சாதா குற்றம்; பாராளுமன்றத் தாக்குதல் மசாலா போட்ட குற்றம்’ என்று வாதிட முடியுமா?

    வ்வொரு மாநிலத்திலும், அந்த மாநில மொழி பேசுகிற ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் – உடனே அந்த மாநில சட்டசபை, மன்னிப்பை வற்புறுத்துகிற தீர்மானத்தை நிறைவேற்றலாமே!

    இது பற்றி, தமிழக முதல்வர் முதல் தினம் அளித்த விளக்கம் சட்டபூர்வமானது; தெளிவானது. ஆனால், அதற்கடுத்த தினம் தமிழக சட்டசபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம், ஒரு தவறான முன்னோடி.

    மூவர் தரப்பு கேள்வி: மரண தண்டனையை விட ஆயுள் முழுவதும் சிறையில் வருந்தி வாடுவதுதான் கொடிய தண்டனை. தூக்கு தண்டனையால் பயன் ஒன்றுமில்லை அல்லவா?
    நமது பதில் : ‘மரண தண்டனையே கொடியது, அது கூடாது’ என்பவர்கள், அதைவிட கொடியது என்று அவர்களே வர்ணிக்கிற ஆயுள் தண்டனையை வரவேற்பது எப்படி? ‘ஒருவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் வருந்தி வாடச் செய்வது, மனிதாபிமானம்; பயனுடையது. ஆனால் மரண தண்டனை பயனற்றது’ என்பது என்ன வாதம்? உண்மையில், வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடுவது – ஏன் கோரப்படுகிறது? பிறகு மற்றுமொரு கருணை மனு போடலாம்; பல மனிதாபிமானிகள், தமிழபிமானிகள், ஈழ அபிமானிகள், விளம்பர அபிமானிகள் எல்லோருமாகச் சேர்ந்து, அந்த வாழ்நாள் வாடுதலை, விரைவில் சில நாள் வாடுதலாகக் குறைத்து விடலாம் என்று நம்புகிறார்களா?

    மூவர் தரப்பு கேள்வி: கலைஞர் சொல்கிற மாதிரி, ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால், இந்த மூவரை மன்னித்திருப்பாரே! அப்படியிருக்க, இப்போது கவர்னர் மன்னிக்கக் கூடாதா?
    நமது பதில் : கலைஞர் பகுத்தறிவாளர். அதனால் இறந்து போன ராஜீவ் காந்தி, இறந்து போகாமல் இருந்திருந்தால் – அதாவது, கொலையுண்ட ராஜீவ் காந்தி, கொலையுண்ட பிறகு, உயிருடன் இருந்திருந்தால் – தன்னைக் கொலை செய்தவர்களை மன்னித்திருப்பார் என்று அவர் கூறுகிறார்.

    ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால், கொலையே இல்லை; அப்புறம் மரண தண்டனை ஏன்? மன்னிப்பு ஏன்? இந்தப் பகுத்தறிவு உபன்யாசம், சாதா அறிவு படைத்த நம்மைப் போன்றவர்களுக்கு எட்டாதது; இதைப் புரிந்து கொள்ள சாதாரண பகுத்தறிவு கூடப் போதாது; இதற்கு தமிழ் இனமான உணர்வு உள்ள பகுத்தறிவு வேண்டும். அப்போதுதான், உயிரை விட மானமே பெரிது என்று எண்ணுகிற தமிழ் வீரர்களின் உயிர்களுக்கு, இன, மொழி, மானத் தலைவர

  6. நிர்மலன் says:
    14 years ago

    //புலி இயக்கத்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை, அழிவு தான் மிஞசியது //veeran
    புலிகள் அமைப்பு எந்த மக்களின் உரிமைக்காக போராடுகிறார்களோ அந்த மக்கள்தான் புலிகள் போராட்டம் தமக்கு நன்மையானதா / தீமையானதா எனச் சொல்ல வேண்டுமே தவிர இந்தியா சிறிலங்கா அரசபயங்காதவாதத்தின் சலுகைக்கு விலை போனவர்கள் சொல்லக்கூடாது.
    ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் தூக்குதண்டணை விதிக்கப்பட்டவர்கள் நிரபராதிகள் என்ற உண்மையின் அடிப்படையிலும் அம்மூவரும் புலிகள் அமைப்பின் அங்கத்தவர் / அனுதாபி எனும் இனவுணர்வின் அடிப்படையிலுமே தமிழக மக்கள் தமது உயிரை கூட ஈகம் செய்து போராடுகிறார்கள். இதுவே தமிழ் ஒட்டுக்குழு உறுப்பினர்களாக இருந்தால் எவருமே கண்டுகொள்ள மாட்டார்கள். இந்த யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

    சோ சுப்பிரமணியசுவாமி வகையாறுக்கள் தமிழின எதிரிகள் என்பது யாவரும் அறிந்த நிதர்சனம். இந்நிலையில் தமிழர்கள் எந்தவகையில் கொல்லப்பட்டாலும் மகிழ்சியடையவே செய்வார்கள்.

    //தமிழக சட்டசபை இப்படிச் செய்ததால் ஓமர் அப்துல்லா ‘இதே மாதிரி அஃப்ஸல் குருவை மன்னிக்கக் கோரி ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் பரவாயில்லையா?’ என்று கேட்டிருக்கிறார். நியாயமான கேள்வி//

    ஓமர் அப்துல்லாவிற்கு அஃப்ஸல் குருவை காப்பாற்றும் உண்மையில் உள விருப்பிருந்தால்!
    1)இந்த 3 தமிழர்களின் தூக்குத்தண்டணையும் ரத்துசெய்யும் வரை பொறுமையாக இருந்துவிட்டு. இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தீர்மானமூடாக காபாற்றியிருக்கலாம்.
    2) அவசரமாக அஃப்ஸல் குருவை காப்பாற்றும் தேவையிருந்தால் தமிழ்நாடு சட்டசபை மாதிரி நடவடிக்கை எடுத்திருக் வேண்டியதுதானே ஏன் அடுத்தவர்களின் அபிராயத்திற்கு காத்திருக்க வேண்டும்.
    ஆக ஓமர் அப்துல்லா உனும் விலைபோன பயலுக்கு 3 தமிழரும் சாகணும் அப்சல் குருவும் சாகணுமெனும் எனும் அரகத்தனமே அவனை பேச வைத்துள்ளது. இவன் காங்கிரசினதும் பாரதீயஜனதாவினதும் கூட்டு விருப்பை வெளிப்படுத்தியுள்ளான்.

    //16 பேர் கொலையானார்களே! அவர்களும் வந்து மன்னிப்பார்களா? அல்லது அவர்கள் கொலையுண்டது ஒரு பெரிய விஷயமே இல்லையா? அந்த உயிரெல்லாம் தமிழர் உயிர் இல்லையா? – ராஜீவ் மற்றும் அவரது உதவியாளர் குப்தா தவிரஇ அன்று கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்கள்தானே?//

    பத்மநாபாவும் டக்ளசும் தமிழர் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்! ஆனால் தமிழர்கள் அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை.
    ராஜீவிற்கு காவல் காக்கவும் ஆலாவட்டம் பிடிக்கப்போனவர்கள் தமது எசமானின் உயிரை தமதுயிரை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டியவர்களே. என்ன தமது ஏசமானை காப்பாற்ற முடியாத கையாளகதவர்களாய் இறந்து போனார்கள்.
    மீனம்பாக்கம் விமானநிலையத்தில் றோவின் உதவியுடன் வெடிக்கப்பட்ட குண்டில் பல பத்து பேர் இறந்தார்களே அவர்கள் மனிதர்கள்/ தமிழர்கள் இல்லையா! சிறிலங்கா அரசபயங்கரவாத கேடி டக்ளசால் சூளைமேட்டில் இருவர் கொல்லப்பட்டனேரே அவர்கள் மனிதர்கள்/ தமிழர்கள் இல்லையா! இந்தச்சம்பவங்களின் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன? சிவப்புக்கம்பள வரவேற்பும் விருந்தும் தானே காங்கிரசு அரசால் கொடுக்கப்படுகிறது. இந்த அநியாயத்தை எப்பவாவது சோ ராமசாமி கேட்டனா!

  7. veeran says:
    14 years ago

    புலிகள் அமைப்பு எந்த மக்களின் உரிமைக்காக போராடுகிறார்களோ  க்க க்கா புலி  யாருக்காக போரடியது,அது கொன்ற தமிழர்கள் ரஜபக்ச கொன்ற  அளவை கிட்ட தட்ட எட்டும், புலி கடைசியில் தன்னை காப்பாற்ற போராடி ரஜபகச்வைடம் பணம் வாங்கி அவரை பதவிக்கு கொண்டு வந்து அதனாலே செத்து போனது, தெய்வம்நின்று கொன்று விட்டது, இலங்கை கண்டி தமிழன்

    • veeran says:
      14 years ago

      ஈந்த விதண்டாவாதம் புத்திபேதலித்து போன புலியால் மட்டும் முடியும், பாவம் கையாலகததால் வந்தநிலமை, தலையே  சரணடைந்து  கொவனம் கட்டி காலில்  வ்ழுந்த்தது, வாலுகல்  கத்தி திரிகின்றன, இதனை எழுதும்நான் டக்ளசின் ஆளோ அல்லது ராஜபக்சவின் ஆளோ அல்ல, புலி  யின் முட்ட்டாள் தனத்த்கல் பாதிக்கப்பட்ட தமிழன்

  8. veeran says:
    14 years ago

    ஏசமானை காப்பாற்ற முடியாத கையாளகதவர்களாய் இறந்து போனார்கள்.மீனம்பாக்கம் விமானநிலையத்தில் றோவின் உதவியுடன் வெடிக்கப்பட்ட குண்டில் பல பத்து பேர் இறந்தார்களே அவர்கள் மனிதர்கள்/ தமிழர்கள் இல்லையா! சிறிலங்கா அரசபயங்கரவாத கேடி டக்ளசால் சூளைமேட்டில் இருவர் கொல்லப்பட்டனேரே அவர்கள் மனிதர்கள்/ தமிழர்கள் இல்லையா!

    இந்த விதண்டாவாதம் புத்திபேதலித்து போன புலியால் மட்டும் முடியும், பாவம் கையாலகததால் வந்தநிலமை, தலையே  சரணடைந்து  கொவனம் கட்டி காலில்  வ்ழுந்த்தது, வாலுகல்  கத்தி திரிகின்றன  

  9. நிர்மலன் says:
    14 years ago

    குதர்க்கத்திற்கும் விதண்டாவாதத்திற்கும் பெயர் போன துக்ளக் சோவின் வாந்தியை இங்கு கொட்டிய தாங்கள் எனது பதில் விதாண்டவாதமென்பது ரொம்ப வேடிக்கைதான்.
    ஏதோ கடவுள் நின்று கொல்லும் எனும் வசனத்தை சொல்கிறீர்கள். அதே கடவுள்தான் ராஜீவையும் பத்மநாபா கும்பலையும் நின்று கொன்றதாக நம்புங்களேன். பிறகேன் நிரபராதிகளை தூக்கில் போடணுமென அலைகிறீர்கள்!
    லங்காபுவத் செய்தி உங்களிற்கு இனிக்கலாம் ஈழத்தமிழன் அதை ஒருபோதும் நம்புவதில்லை என்ற உண்மைதெரியாத ஆளாயிருக்கிறீர்களே. பிணத்தை புணர்ந்த சிறிலங்கா அரசபயங்கரவாதிகளின் அடிமையிடம் சைக்கோதனம் நிரம்பியிருக்கும் என்பதைதான் இங்குவந்து நிருபிக்கிறீர்கள்.
    ஈழத்தமிழரின் தலைமை யாரென்பதை ஈழத்தமிழன்தான் முடிவெடுக்கணுமே தவிர இந்திய சிறிலங்கா அரசபயங்கரவாதிகளின் அடிமை அல்ல.
    தாங்கள் கண்டியில் “ஈந்து” எழுதும் தமிழனல்ல தமிழை தாய்மொழியாகவும் மதத்தை இனமாக்கி கொண்டவர் என்பதும் ஈழத்தமிழருக்கும் மலையகத்தமிழருக்கும் சிண்டுமுடிய திரியும் அற்பர் என்பதும் தெரியும்.

  10. veeran says:
    14 years ago

    ஏன் தோட்டக்காட்டான் என்றோ வடக்கதியான் என்றோ சொல்லுங்களேன்,நான் கண்டியில் வசித்தாலும் 2 வருடங்களுக்கு முன்பு வரை இவன் லூசன் பிரபாவின் ஊரில் தான் வசித்தேன் எனது ஊரும் அது தான்,நானும் அவனை போல்நீங்கள் சொல்லும் கரையான் தான், என்வே தான் ராஜிவ் கொலையின் விளைவுகளை அறிந்தவன், குற்றம் சாட்டப்படவர்கள் புலி உறுப்பினர்கள் சயனைட் வில்லைகளை கழுத்தில் தாங்கியசவர்கள் என்வே அவர்கள் சாவுக்கு பயப்படாதார்கள் பிறகு சாக வேண்டியது தானே , சாந்தன் ஏன் ராஜிவ் கொலை அன்று அந்த கூட்டதில் ஏன் அதிமுக கரை வேட்டி அணிந்த்து கலந்து கொண்டார், சில சமயம் ஜெயலலிதா அழைத்திருக்கலாம் , பாவம் அவர் ஒன்றும் தெரியாதவர், அவரை வெளியே விட்டு தேசிக்காய் தலவரை போல் கோவனம் கட்டி படம் எடுக்க்க வேண்டும், என்பதே தலைவரின் மற்றும் பொட்டனின் வ்ருப்பம். தெய்வம்நின்று கொல்கின்றது அன்பரே, எனது அனுதாபங்கள்

    • நிர்மலன் says:
      14 years ago

      மலையகத்தமிழரையும் ஈழத்தமிழரையும் இழிவுசெய்யும் சாதீ சமூக வார்த்தை பிரயோகம் செய்ததன் மூலம் நீங்கள் தமிழனல்ல தமிழ்பேசும் சலுகைக்கு விலைபோன சமூகத்தை சார்ந்தவனென்பதை உறுதிபடுத்தியுள்ளீர். நீங்கள் “ஈந்து” பேசுமிடம் சிங்களத்தின் காலிற்குள் என்பதும் உறுதி.

  11. estate boy says:
    14 years ago

    னான் கேள்வி பட்டவரையில் வடக்கில் எங்களை தோட்டக்காடன் என்றும் தமிழ்நாட்டவரை வடக்கத்தியான் என்று அழைப்பதாக கேள்வி பட்டேன்,மூவரையும் காப்பாற்ற வேண்டும் என்றவுடன் எஙகள் மீது அனுதாபம் வந்து விட்டதுநிர்மலனுக்கு, தமிழ்நாட்டு காரர்களுக்கு யழ்ப்பானையை பற்றி தெரியாமல் கத்தி திரிகின்றனர்

    • கிறுக்கன் says:
      14 years ago

      ஜாதி ஏற்றத்தாழ்வு பாகுபாடு எல்லாம் மலையகத்துக்குள்ளும் இருக்கிறது இந்தியாவிலும் இருக்கிறது சகோதரரே… நீங்கள் உண்மையில் மலையாக நண்பர் இல்லை என்பது உங்கள் முகமூடியில் தெரிகிறது.   சும்மா கிச்சு கிச்சு மூட்டி விடுற வேலை எதுக்கு உங்களுக்கு ஏதாவது லாபம்?? இனியொரு வேற வேற பேரில வந்து இங்கை கப்பசா விடுறவையை வெளிப்படுத்தோனும். அப்பா மினக்கெட்டு இருந்து ஒருத்தரும் பதில் கொடுக்க மாட்டினம் இல்லையோ 

      • veeran says:
        14 years ago

        கிருக்கன் உங்களுக்கு பொருத்தமான பெயர், உங்கள் குனத்துக்கும் செயலுக்கும் பொருத்தமான பெயர், இந்த பெயர் தேசிக்காய் தலைவருக்கும் பொருந்தும், அவர் ஆபிரிக்காவில் பயிற்சி எடுத்து வந்து அதிரடி தாக்குதல்நடத்தி, இந்த மூவரையும் வெளியே எடுப்பர்

  12. நிர்மலன் says:
    14 years ago

    estate boy!
    இந்த மூவரை உங்களால் எப்படி காப்பற்ற முடியும். தமிழ்நாடு இந்தியதேசத்திற்குட்பட்டதே தவிர பாகிஸ்தானில் இல்லையே! அதைவிட மலையக மக்களின் குடியுரிமையை சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து சிறிலங்கா முஸ்லீம்கள் பறித்த போது ஜீஜீ பொன்னம்பலமும் ஆமா போட்டதை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய அமரர் செல்வநாயகம் கடைசிவரை மலையக மக்களிற்கும் சேர்த்து போராடினார். ஆனால் இன்றும் சிறிலங்கா அரசிலும் இராணுவ புலானாய்வு பிரிவிலும் கடமையாற்றும் சிறிலங்கா முஸ்லீம்கள் 1977 ல் சிங்கள பேரினவாதிகளால் அகதியாக்கப்பட்ட மலையகதமிழர்கள் வன்னியில் குடியேறிய நிலங்களை ரிசார்ட் பதியூதீன் தலைமையில் பறிக்கிறீர்களே. உங்களிற்கு மனச்சாட்சி என்று ஒன்று இல்லையா!
    தமிழர்களிற்கு ஒன்றும் தெரியாது. சலுகைக்கு விலைபோன உங்களிற்கு எல்லாம் தெரியும்தான்!
    veeran!
    இந்த மூன்று நிரபராதிகள் தண்டிக்கப்பட்டால் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்க போவது இந்திய ஒற்றுமை மட்டுமல்ல சிறிலங்காவின் இருப்பும்தான். அமெரிக்காவரிசையில் கனடா பிரித்தானியா அவுஸ்திரேலியா சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட ஆயத்தமாகி விட்டனர். நீங்கள் மகிந்தா காலிற்குள் “ஈந்து” கனவு காணுங்கள்.

    • estate boy says:
      14 years ago

      அன்புடயீர்நீங்கள்நினைப்பது போல்நான் இஸ்லாமிய தமிழன் அல்ல,நான் இந்து மதத்தை சேர்ந்த மலையக அல்லது இந்திய வம்சாவளி தமிழன்,நாங்கள் ம்கிந்த்வை பதவிக்கு கொண்டு வரவில்லை. அவரரை கொண்டு வந்தது உங்கள் தேசிக்காய் தலைவன்,நாங்கள் 2005 தேர்தலிலும் , 2010 தேர்தலிலும் மகிந்தவுக்கு எதிராக வாக்கக்ளித்தோம். மூவரையும்நிரபராதி என்பதுநகைப்புகிடமானது, சாந்தன் பத்மனாபா கொலையிலும் சம்பந்த் பட்டவன், சாந்தன் ஏன் ராஜிவ் கொலை அன்று அந்த கூட்டதில் ஏன் அதிமுக கரை வேட்டி அணிந்த்து கலந்து கொண்டார், என்று மற்றவர் கேட்ட கேள்விநியாமானதே, செல்வனாயகம் அமிர்தலிஙகம் சிவ சிதம்பரம் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு, ஆனல் பிரபாகரனும் அவனது குழுவும் அழிக்கப்படவேன்டியவர்கள் என்றுநாங்கள் திடமாகநம்புகின்றோம், ஏனெனில் தமிழர்களின் இன்றைய கேவலமானநிலைக்கு அவ்னும் அவனது திமிருமே காரணம், அவனோடு சேர்ந்து கொலை சதியில் ஈடுபட்ட மூவரும் தண்டிக்க பட வேண்டியவர்களே, இந்திய ஒற்றுமையை பற்றிநீங்கள் ஏன் கவலை பட வேணடும், இந்தியா பிரிந்தால் ஈழ்ம் அமைய வாய்ப்புன்டே

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...