வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது காயம் ஏற்படும் வகையிலேயே இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்பின்னர் இவ்வாறு குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் எனவும் அந்த இராணுவ அதிகாரி பகிரங்கமாக எச்சரித்ததாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை சம்பவத்தின் பின்னர், ஆத்திரமடைந்துள்ள நிலையில், இராணுவத்தினருடன் முரண்படும் மனநிலையை முகாம் மக்கள் கொண்டிருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களை அடுத்தே இந்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.







