பயங்கவாதத்திற்கு எதிரான, நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை விரைவுப்படுத்தவேண்டும் என கொழும்பில் நடைபெறும் தெற்காசிய ஒத்துழைப்புக்கான பிராந்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு செயலர் பாலித கோஹன, இது தொடர்பாக கருத்துரைக்கையில், மாநாடு, இது குறித்து உத்தியோகபூர்வமான வேண்டுகோள் ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் பிராந்திய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பிராந்திய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பாலித கோஹன குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத குடியேற்றங்கள், ஆயுத சேகரிப்புகள், போதைவஸ்து பாவனை என்பவற்றை தடுக்கவும் பிராந்திய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை சுமார் 300 மில்லியன் டொலர்களை கொண்ட ‘சார்க்’ நிதியம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கோஹன தெரிவித்துள்ளார்.