Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்

இனியொரு... by இனியொரு...
07/09/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, வரலாற்றுப் பதிவுகள், அரசியல்
0 0
28
Home பிரதான பதிவுகள் | Principle posts

நான் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்ட வேளையில் என்னோடு சுந்தரம், குமரப்பா, மாதி ஆகியோரும் சென்னை நோக்கிப் பயணமாகின்றனர்.வேதாரண்யம் கடற்பகுதி ஊடாக இந்தியா சென்றடைந்த நாம் அங்கிருந்து தஞ்சாவூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு பின்னதாக சென்னை வந்தடைகிறோம். இந்த இடைவெளிக்குள் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு பெரிதாகிறது. அவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்படுகின்றன. அவர் இப்போது யாரையும் சந்திப்பதில்லை. அவர் எம்.எல்.ஏ விடுதியிலேயே தங்கியிருந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

பின்னர் அவர் அங்கிருந்தபடியே சம்பவம் தொடர்பாக நான் உட்பட்ட மத்திய குழுவினர் நித்தலின்பனார் இல்லத்தில் உமாமகேஸ்வரனிடம் இது குறித்து விளக்கம் கோருவதென முடிவாகிறது. இவ்வேளையில் அன்டன் பாலசிங்கமும் எம்முடன் இருக்கிறார். மத்திய குழு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்ட அதே வேளை இன்னுமொன்றையும் நாம் ஒழுங்கு செய்துகொள்கிறோம். உமாமகேஸ்வரன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாது முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் வாதிட்டால் அவரை அன்றே கொலைசெய்துவிடுவது என்றும் தீர்மானிக்கிறோம். பிரபாகரனால் முன்மொழியப்பட்டு எம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் ஒழுங்கு செய்யப்படுகின்றனர்.

சுந்தரம் அப்போதுதான் என்னோடு இலங்கையிலிருந்து சென்னை வந்து சேர்ந்திருந்தார். உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் தயாராகிவிட சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் சைதாப்பேட்டை பாலத்திற்கு அருகாமையில் வைத்துக் கொலைசெய்வதாக ஏற்பாடாகிறது.

உமாமகேஸ்வரனை உணர்வுமிக்க போராளியாகத் தான் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவர். இராணுவத் தூய்மைவாதத்தில் ஊறிப்போன எனக்கு உமாமகேஸ்வரனின் நடவடிக்கை துரோகமாகத் தான் தென்பட்டது. அனைத்திற்கும் மேலாக உமாமகேஸ்வரனிற்கு தனது ஊரில் ஒரு காதலி இருந்தார் என்பதும் எனக்குத் தெரிந்திருந்ததால் அவர்மீதான வெறுப்பு அதிகமாகியிருந்தது. அவரையே உமாமகேஸ்வரன் பின்நாளில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபாகரன், நான், நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகிய அனைவரும் உமாமகேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

சென்னையின் வெம்மை சுட்டுக்கொண்டிருந்தது. மிக நீண்ட நேரமாகியும் உமாமகேஸ்வரன் அங்கு வந்து சேரவில்லை. அவர் இனிமேல் வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தாகவேண்டியாயிற்று. அவர் வரவில்லை. நாங்கள் மட்டுமல்ல கொலைசெய்வதற்குத் தயாராக நின்றவர்களும் ஒருவகையான கலக்கத்துடன் திரும்பிவிடுகின்றனர்.

உமாமகேஸ்வரன் அன்று அங்கு வந்திருந்தால் அப்போதே பிரபாகரன் அனுப்பியவர்களால் கொலை செய்யப்பட்டிருப்பார். அதிஷ்டவசமாக அவர் அன்று உயிர்பிழைத்துக் கொள்கிறார். பின்நாளில் நடந்தவற்றை வைத்து அனுமானிக்கும் போது சுந்தரம் தான் உமா மகேஸ்வரனுக்கு கொலைத் திட்டமிடல் குறித்த தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையானதாகவே தெரியவந்தது. இதனால் தான் உமாமகேஸ்வரன் அங்கு எதிர்பார்த்தபடி வரவில்லை என்பது பலரும் பின்னர் ஊகித்துக்கொண்டார்கள்.

இந்த வேளையில் அன்டன் பாலசிங்கம் இந்த விடயம் பெரிதுபடுத்த வேண்டிய ஒன்றல்ல என்று ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் பேசிய போதும் நாம் அனைவரும் பிரபாகரன் கூறுவதே சரியானது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். உமாமகேஸ்வரன் வராவிட்டாலும் விளக்கமளிப்பதற்காக ஊர்மிளா அங்கு சமூகமளித்திருந்தார்.அன்டன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரை இந்தப்பிரச்சனை முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய ஒன்றல்ல என எம்மிடம் கூறிய போதும் பிரபாகரனுக்கு எதிராகப் பேசுவதற்கு அவருக்குப் போதிய துணிவு இருந்திருக்கவில்லை.

இதே வேளை பிரபாகரனுடன் படகில் இந்தியாவிற்கு வந்த சந்ததியார் புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் எம்மிலிருந்து ஒரு உளவாளி அனுப்பபப்ட்டார். நான் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் என்னை அழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று கூறுகிறார். எனக்கெல்லாம் பிரபாகரன் கூறுவதே சரியானதாகப்பட்டது. நானும் தனிமனிதத் தூய்மைவாதக் கண்ணோட்டத்திலேயே வளர்ந்தவன். மைக்கல் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பிரபாகரன் செய்வதெல்லம் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழத்திற்காகவும் என்றே நம்பியிருந்தவன். பதினேழு வயதுச் சிறுவனாக உணர்ச்சி வேகத்தில் பிரபாகரன் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இலங்கை அரசை அதிரவைக்கும் வெற்றியைக் கொடுத்தது. அப்போது ஏற்பட்ட நம்பிக்கை எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிறைவேற்றி ஒரு பலமான இராணுவத்தை உருவாக்கிவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.

பிரபாகரனும் அவரைத் தொடர்ந்து நாமும் துரோகி,எதிர்ப்புரட்சிக்காரன்,சமூகவிரோதி என்று எண்ணுபவர்களை எல்லாம் அழித்து நிர்மூலமாக்கிவிடுதல் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தோம். இது தான் ஆயிரமாயிரம் தேசபக்தர்களையும், சமூக உணர்வு படைத்தவர்களையும் எதிர்காலத்தில் கொன்றொழித்தது.

எம்மத்தியில் உறைந்து கிடந்த அர்ப்பண உணர்வை சரியான அரசியலை நோக்கி வளர்த்தெடுக்க யாரும் முன்வரவில்லை. அதற்கான வேலைத்திட்டம் குறித்துக்கூட யாரும் சிந்திததில்லை. எந்த அரசியலுமின்றி சிறிய இராணுவ வெற்றிகளினூடாகக் கிடைத்த நம்பிக்கையை மட்டுமே எமது தொடர்ந்த வேலைமுறையாக்கிக் கொண்டோம். முப்பதாண்டுகால புலிகளின் வரலாற்றையும் கூட இந்தச் சிந்தனை முறைதான் தீர்மானித்தது. சில இளைஞர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு எதிராக இளைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கோபம் கொண்டு போராட முன்வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்துவது அபாயகரமானது.

இலங்கையில் சண்முகதாசன் தலைமையில் ஒரு தத்துவார்த்தப் போராட்டமே எமக்குத் தெரியாமல் எமக்கு வெளியில் நடந்து கொண்டிருந்தது. அவர்களெல்லாம் அனைத்தையும் இழந்து போராட முன்வந்த எம்மை நெறிப்படுத்த வேண்டும் என்றோ எம்மோடு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றோ கிஞ்சித்தும் முயற்சித்ததில்லை. பாலசிங்கத்தின் வரவு கூட எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. எமது தவறுகளை நியாயப்படுத்துவதிலிருந்தே அவரின் அரசியல் ஆரம்பிக்கிறது.சந்ததியார் கூறியதெல்லாம் எனக்கு ஒரு அரசியல் சார்ந்த கருத்தாகப் படவில்லை. ஏதோ உமாமகேஸ்வரனுடைய நண்பர் என்ற அடிப்படையில் அவரை நியாயப்படுத்துகிறார் என்றே கருதினேன்.

இப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னால் அவருக்குத் தெரிந்தவாறே ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். அவர் வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர். இந்தக் காலப்பகுதியில் அன்டன் பாலசிங்கம் மார்க்சிய வகுப்புக்களை நடத்துகிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்றெல்லாம் பல கனதியான விடயங்கள் குறித்துப் பேசுவார். அவை யாருக்கும் புரிவதில்லை. குமரப்பா, சாந்தன் ஆகியோர் அக்கறையாக குறிப்புக்கள் எடுத்து அவற்றைப் படிப்பார்கள். எனக்கு எதுவும் புரிவதில்லை. பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர் அவரின் வகுப்புகளுக்கு வருவதே கிடையாது.

அன்டன் பாலசிங்கத்தை நாங்கள் எல்லாம் அண்ணா என்றுதான் அழைப்போம். மிக எளிமையாக அழகாகப் பேசவல்லவர். அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார். பிரபாகரன் கூட அவர் மீதான ஆழமான மதிப்பு வைத்திருந்தார்.

உமாகமகேஸ்வரன் கொலையிலிருந்து தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார். சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள் எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர் அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக நானும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறேன். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, நான் ஆகியோரே விவாதிக்கிறோம். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.

இறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க நாங்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறோம். நான் சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் அவரை எச்சரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்பப்படுகிறது. நான் சந்ததியாருடன் முன்னமே நீண்ட நேரம் பேசியிருந்தமையால் எனக்கு அவருடன் பேசுவதற்கான வெளி ஒன்று இருந்தது. நான் அவரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறேன். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவோமோ என்ற பயம் கூட அவரிடம் இருந்தது. அதுகுறித்தும் என்னிடம் பேசினார்.

நாங்கள் உங்களைக் கொலைசெய்யமாட்டோம் ஆனால் நீங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறோம் என நான் கூறி அவரை இலங்கைக்கு அனுப்பிவைக்கிறோம்.ஒரு தனிமனிதனின் அரசியல் உரிமையை ,பேச்சுரிமையை நாங்கள் கையிலெடுத்துக்கொண்டோம். நூறு கருத்துக்கள் மோதட்டும், நூறு பூக்கள் மலரட்டும் என்ற அழகான கவிதையின் ஆழம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு கருத்தையே கண்டு பயந்துபோய் கொன்று போட்டுவிடுகிற அளவிற்குக் கோழைத் தனமாக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள பல நாட்கள் கடந்திருக்கின்றன.

எம்மிடம் விடுதலை உணர்வு இருந்தது. அதற்கான வழிமுறைகளை நாங்கள் தனிமனிதத்தூய்மை வாத உணர்வின் அடிப்படையிலிருந்தே கட்டமைத்துக்கொண்டோம். தூய்மையானவர்களாகக் எம்மை நாமே கருதிக்கொண்டோம்.அதையே பிரகடனப்படுத்திக் கொண்டோம். போராட்டத்தின் முன்னோடிகளான நாம்தான் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உறுதியுடன் நிற்கின்றோம்.எம்மிடம் தூய்மையும் நேர்மையும் ஆழப்பதிந்து கிடக்கின்றது. இவற்றிற்கெல்லாம் யார் எதிர் வந்தாலும் அவர்கள் எம்மைப் பொறுத்தவரை துரோகிகளே. அழிக்கப்பட வேண்டியவர்களே.

மக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி இப்போது எமது கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம் செய்கிறார்…

 

இன்னும் வரும்..

 

பாகம் பதின்நான்கை வாசிக்க..  பாகம் பதின்மூன்றை வாசிக்க..  பாகம் பன்னிரண்டை வாசிக்க.. பாகம் பதினொன்றை வாசிக்க.. பாகம் பத்தை  வாசிக்க.. பாகம்  ஒன்பதை வாசிக்க.. பாகம் எட்டை வாசிக்க.. பாகம்  ஏழை வாசிக்க.. பகுதி  ஆறை  வாசிக்க… பகுதி ஐந்தை  வாசிக்க… பகுதி நான்கை வாசிக்க.. பகுதி மூன்றை வாசிக்க.. பகுதி இரண்டை வாசிக்க..  பகுதி ஒன்றை வாசிக்க..

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நளினியை புழல் சிறைக்கு மாற்ற தமிழக அரசுக்குப் பரிந்துறை.

Comments 28

  1. meerabharathy says:
    16 years ago

    “இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது… சந்ததியார்-…”
    எம்மத்தியில் உறைந்து கிடந்த அர்ப்பண உணர்வை சரியான அரசியலை நோக்கி வளர்த்தெடுக்க யாரும் முன்வரவில்லை. அதற்கான வேலைத்திட்டம் குறித்துக்கூட யாரும் சிந்திததில்லை.” …..
    நண்பர்களே இதை வாசித்த போது அழுகையும கோவமும் வந்தது….
    கடந்த வருடம் மே 18ம் திகதி காலையையும் அழுதேன் கோவத்துடன்…..
    இன்றும் அப்படியே…
    பிரக்ஞையுடன் மீண்டும் எழுவோமா நாம்?
    நட்புடன் மீராபாரதி

    • Shiva says:
      14 years ago

      இவை அனைத்தும் காலம்கடந்த ஞானங்களே. இந்த ஞானங்களை உணர்ந்த கொள்ளவும் தெரிந்து கொள்ளாமலும் பிரபாரன் போய்விட்டார். இதை நாம் நேரடியாக இல்லாமல் அநாமதேயமாக புலிகளுக்கு அறிவித்திருந்தோம். நம்மை வழிநடத்தவில்லை என்பது வெறும் பொய் குற்றச்சாட்டே. எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தன. அன்று பிரபாகரனில் வேட்கை இருந்தது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கொலை வெறியும் கூடவே இருந்தது. மன்னிக்க முடியாதது. வார்த்தைகளுக்குக் கூடத் துப்பாக்கியா பதில்; சொல்வது

    • Shiva says:
      14 years ago

      இவை அனைத்தும் காலம்கடந்த ஞானங்களே. இந்த ஞானங்களை உணர்ந்த கொள்ளவும் தெரிந்து கொள்ளாமலும் பிரபாரன் போய்விட்டார். இதை நாம் நேரடியாக இல்லாமல் அநாமதேயமாக புலிகளுக்கு அறிவித்திருந்தோம். நம்மை வழிநடத்தவில்லை என்பது வெறும் பொய் குற்றச்சாட்டே. எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தன. அன்று பிரபாகரனில் வேட்கை இருந்தது இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கொலை வெறியும் கூடவே இருந்தது. மன்னிக்க முடியாதது. வார்த்தைகளுக்குக் கூடத் துப்பாக்கியா பதில்; சொல்வது.
      இதற்கும் ஒரு முக்கியகாரணம் உண்டு. துரையப்பாவைக் கொன்றதன் விளைவு தலைக்கேறிய விசம். கொலைகளால் மட்டும் விடுதலையடையத்துடித்தவர் பிரபாகரன். இறுதியில் பிரபாகரன் இனத்தையே கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொண்டார்.

  2. வாதம் says:
    16 years ago

    “இது தான் ஆயிரமாயிரம் தேசபக்தர்களையும், சமூக உணர்வு படைத்தவர்களையும் எதிர்காலத்தில் கொன்றொழித்தது.”

    சேர்ந்திருந்து வளர்த்து விட்டு,இப்போதைய சுடலை ஞானத்தில் வரைந்து கொள்ளுங்கள்,நாங்கள் வாசித்து போகிறோம்.

    • aruna says:
      16 years ago

      வாதம் உங்களது பங்கு என்ன. இவர்களின் வளர்ச்சியில் உங்களுக்கும் பங்குள்ளது தானே.? மெளனமாக இருப்பது மிகவும் கொடுமையான சுடலை ஞானம். விடுதலைப் போராட்டத்தில் உங்கள் பங்குதான் என்ன? புலிக்கு பால் ஊத்தினீர்களா?

      • வாதம் says:
        16 years ago

        அய்யா அறு நா(aruna)!

        “புலிக்கு பால் ஊத்தினீர்களா?” என்கிறது உங்கள் பிறழ் நா.

        அடிக்கடி வந்து ஊளையிட்டுச் செல்லுங்கள்.

  3. meerabharathy says:
    16 years ago

    நட்புடன் “வாதம் ” என்ற பின்னுட்டமிடும் மனிதருக்கு….
    ஞானம் என்பது அனுபவத்தில் வருவது….பல சந்தர்ப்பங்களில் பல இழப்புகளை விலையாகக் கொடுத்தே இந்த அனுபவத்தையும் அதன் மூலம் ஞானத்தையும் பெறவேண்டிய தூ;ப்பாக்கிய நிலையில் மனிதர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்….இப்பொழுதாவது ஐயர் அவர்கள் பொறுப்புணர்வுடன் தனது ;அனுபவத்தை எழுதுவதை ஊக்குவிக்கவும் பாராட்டவும் வேண்டும்….முன்வைக்கும் விமர்சனங்களை ஆரோக்கியமான முன்வையுங்கள்….பிரபாகரன் என்ற மனிதரை புரிந்துகொள்வதற்கு இவரின் எழுத்துக்கள் பய்ன்படக்கூடியன….எல்லாத்தவறுகளையும் மற்றவர்கள் மீது சுமத்துவது இலேசான காரியம்….நமது பொறுப்பு என்ன என்பதை பிரக்ஞையுடன் உணரவும் சிந்திக்கவும் வேண்டும்…இல்லையேல் நாளை இன்னுமொரு பிரபாவும் உமாவும் ஊர்மிளாவும் மனித குறிப்பாக தமிழ ;பேசும் மனிதா;களின் வரலாற்றில் தோன்றலாம்…தோன்ற மாட்டார்கள் என்பதற்கான எந்த உத்தவராதமுமில்லை….நாம் பிரக்ஞையற்றும் பொறுப்பற்றும் வாழும் வரை……
    நன்றி
    ….நட்புடன் மீராபாரதி

    • வாதம் says:
      16 years ago

      ஆமாஞ்சாமியாயிருந்த அய்யரின் எழுத்து முப்பது வருசத்திற்கு முன்பு,கடைசி மூன்று வருசத்திற்கு முன்பாவது வந்திருக்கலாம்.ஏதாவது பிரயோசனம் இருந்திருக்கும்.

      இப்போது வேள்விக்கடாக்கள் பலி கொடுக்கப்பட்ட பின்,விருந்திலிருந்து வியாக்கியானம் பறைகிறது எந்தக் கேள்விச்செவியர்களுக்குத் தேவை.

      கே.பி.யை,காஷ்ரோவை அல்லது மேனாடுகளில் வாழ்ந்து வரும் புலிகளின் பிரக்கிராசி,டாக்குத்தர்மாரை, அரசியல் ஆய்வாளர்களை எழுத விட்டால்,அய்யரின் சரடு போல எல்லாம் பிரபாகரனின் தலையில் கொட்டுவினம்.

      பப்பா மரத்தில ஏத்தி விட்டதை ஏற்றுக் கொள்ள மாட்டினம்.

      மொத்தத்தில ஆறிப் போன புண்ணை கீறிப் பார்க்கிற விசயந்தான் அய்யர் காட்டிறது.

      ஆனாலும் அய்யர் வெள்ளிவிழா கொண்டாடித்தான் முடிப்பார் போல.

      மீராபாரதி!

      பிரபாகரன் என்கிற தனி மனுசன அறியிறதை விட,பிறந்த சமூகத்திலிருக்கிற பிறழ்வுகளைப் படிப்பம். உதாரணமாக ஆரம்பத்தில் சிங்கள அரசின் அடிவருடிகள்தான் புலிகளின் மேனாட்டு கங்காணிகள்,அதே போல புலிகளின் ஆமாஞ்சாமிகள்தான் இன்றைய அரசின் அடிவருடிகள்.

      ……………கோபத்துடன் வாதம்.

      • athivatham says:
        16 years ago

        இதில் நீங்கள் எந்த ரகம்? ஆமாஞ்சாமியா? அடிவருடியா? நீங்களும் கத்துகின்றீர்கள். உருப்படியா எதுவும் கூறலாமே

        எதிர்வாதம்.

  4. பரமா says:
    16 years ago

    //“இது தான் ஆயிரமாயிரம் தேசபக்தர்களையும், சமூக உணர்வு படைத்தவர்களையும் எதிர்காலத்தில் கொன்றொழித்தது.”

    சேர்ந்திருந்து வளர்த்து விட்டு,இப்போதைய சுடலை ஞானத்தில் வரைந்து கொள்ளுங்கள்,நாங்கள் வாசித்து போகிறோம்.//

    கட்டுப்பாடற்ற உடற்ச்சேர்க்கை புனிதத்துக்கு எதிரானது தூய்மைக்கு எதிரானது என்பது சமூகத்தின் இயக்கமாக இருக்கின்றதே. இதன் பின்னணியில் சாதிமாறிச் சேர்க்கையை தவிர்ப்பது தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவது கற்பு வலியுறுத்துவது என சமூகம் உடற்ச்சேர்க்கையை ஒரு பூதாகாரமான விடயமாக வரையறுத்திருந்தது. இவ்வாறான ஒரு சமூகத்தில் இருந்தே இந்த இயக்கங்கள் தோன்றுகின்றது. உமா ஊர்மிளா பிரச்சனை தொடக்கம் பின்னாளில் உடற்சேர்க்கை விடயத்தில் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீதான மரணதண்டனை வரை சமூகத்தின் தாக்கம் இருக்கவே செய்கின்றது. அடிப்படையில் இந்த இனம் சாதி மத பிரதேசவாத ஏற்றதாழ்வுகள் ஊடாக ஒருவன் கருத்தை தொழிலை செயலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தன்மை கொண்டது. இந்தத் தன்மைக்கேற்ப மிக நீண்ட காலம் பக்குவப்பட்டுவிட்ட மனநிலையை ஒவ்வொரு தனிமனிதனும் பெற்றுள்ளான். புதிய விடயங்களையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் போதும் செயற்படுத்தும் போதும் கூட வளர்த்துக்கொண்ட இந்த மனநிலை தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றது. இந்த மனநிலைக்கு பிரபாகரனோ இல்லை எந்த தலைவரோ அப்பாற்பட்டவர்கள் இல்லை. இந்த இனம் பல்வேறு பட்ட முரண்பாடகளாலும் ஏற்றதாழ்வுகளாலும் சகதியாக இருக்கின்றது. சகதிக்குள் இருந்து தூய்மையாக எழுதல் என்பது பின்னாளில் அனுபவங்கள் ஊடாக காணும் கனவாக இருக்கின்றதே தவிர நடைமுறைக்கு ஒவ்வாதது. என்ன ஒன்று அனுபவங்கள் செயலுக்கு வருமுன்னர் இனம் தனது இருப்பை இழந்துவிடுகின்றது.

  5. mmani says:
    16 years ago

    “இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது… சந்ததியார்-…” இதே கருத்தை பின்னாளில் ‘புளட்டில்’ இருக்கும் போதும் கூறினார் அதற்காகவே கொலையும் செய்யப்பட்டார். கொலை செய்தவர் யாருமல்ல சந்ததியாரால் இயக்கத்திற்குள் உள்வாங்கப்பட்ட கந்தசாமி. பிரபாகரனுக்கும் , கந்தசாமிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு இயக்கவிசுவாசம்,கொலைவெறி, சாந்தமான முகம், கல்வியறிவு,துணிவு, முன்னெச்சரிக்கை உணர்வு, பாலியல் கட்டுபாடு, பணக்கட்டுபாடு , சந்தேகம், கூட இருப்போருடன் அளவு கடந்த எச்சரிக்கையுணர்வு இவற்றில் பல ஒரு போராளிக்கு இருக்க வேண்டியதாயினும் இருவெருக்கும் இருந்த தாழ்வு மனபாண்மை பல அழிவுகளிற்கு காரணமாக அமைந்து விட்டது.

  6. Nadchathiran chevinthian. says:
    16 years ago

    ஐயரே,

    மிக முக்கியமான வரலாற்று ஆவணங்கள் உங்களுடைய இவ் எழுத்துக்கள். சாத்தியமான நேர்மையோடு தொடர்ந்தும் எழுதுவது மிக மெச்சத்தக்கது. பிரபாகரன் இன்னுமொரு பத்தாண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் உங்களுடைய இந்த விலைமதிக்கமுடியாத ஆவணம் எங்களுக்குக் கிடைக்காமலே போயிருக்கும். சரித்திரத்தை திரிக்கும் எழுத்தாளர்கள் மலிந்துள்ள இக்காலத்தில் நீங்கள் ஒரு யுகபுருஷர்.
    – தென் பசிபிக் கடலோரமிருந்து நட்சத்திரன் செவ்விந்தியன்.

  7. Nada Manivannan says:
    16 years ago

    Our past history is good for us to correct ourself and go forward with better attitude.
    I thing One’s attitude is very important in team work. We need to have clearly goal but we have to respect the humanity. Humanity in each and every aspect of life is most important. Humanity is base of everything.
    Our future Thamil leaders should understand that there are always differences exist and these differences have to be handled positively and constructively. At any circumstances killing is not an option.

    In my opinion we Thamils damaged more us than Singhalese. Let us hope for good.

  8. ranjani says:
    16 years ago

    ஐயருக்கு வணக்கம்,
    நீங்கள் ஒவ்வோர் முறையும் எழுதும் போதும், கண்ணீரோடு தான் வாசிப்பேன். உங்கள் ஒவ்வொரு வரிகளிலும் உண்மையும் நேர்மையும் தெரிகிறது. தமிழ்ச் சமூகம் உங்களுக்கு நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளது. உண்மையில் துரோகங்கள் மலிந்துள்ள எமது சமூகத்தில் நீங்கள் ஒரு யுக புருஷர் தான்.

  9. rathan says:
    16 years ago

    எவ்விடர் வரினும் தொடர்ந்து எழுதுங்கள் .நடந்து முடிந்ததை எழுதும்போது அதுகூட விளங்கிக்கொள்ளாமல் அதை மாற்றி எழுதசொல்வார்கள் போலிருக்கு.மிகவும் ஆர்வமாக வாசித்துக் கொண்டிருக்கின்றோம்.

    • Human says:
      16 years ago

      he can not write until the end,

  10. selva says:
    16 years ago

    எந்த கட்டுப்பாட்டை உமா மீறினார் என்று பிரபாகரன் எமாவை கொல்ல முடிவெடுத்தாரோ அதே கட்டுப்பாட்டை மதிவதனியை கண்டவுடன் அவர் மீறியது ஒரு சம்பவம். எந்த யனநாயகத்தை பேசியதற்காக பிரபாகரன் சந்ததியை கொல்ல முடிவெடுத்தானோ அதே ஜனநாயத்தை கேள்விக்குள்ளாக்கியதற்காகவே உமா சந்ததியைக் கொன்றான். இருவருமே சர்வாதிகாரிகள் என்பதற்கு வேறெதுவும் தேவையில்லை.

    • sivaguru says:
      14 years ago

      இதில் சுந்தரம் சொன்ன கருத்து ” உமாவுக்கும் ஊர்மிளவுக்கும் தொடர்பு இருப்பின் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பம்,                     திருமணம் செய்தவர்கள் அமைப்பில் இருக்ககூடாது எனில் ஏற்க்கனவே திருமணம் செய்தவர்களை என்ன செய்யலாம்?”

  11. Segar says:
    16 years ago

    ஐயர் அறிவது: “எம்மத்தியில் உறைந்து கிடந்த அர்ப்பண உணர்வை சரியான அரசியலை நோக்கி வளர்த்தெடுக்க யாரும் முன்வரவில்லை.” என நீங்கள் ஆதங்கப்படுவது விசித்திரமாகவுள்ளது. அவ்வாறு உங்களுக்குப் புத்தி சொல்ல எவரையும் நீங்கள் அனுமதிப்பதே இல்லையே. அறிவாளிகள் – தத்துவார்த்தவாதிகள் என்று உங்களுக்குத் தேவைப்பட்டவர்களெல்லாம் நீங்கள் செய்யும் அனைத்தையும் நியாயப்படுத்தவும் உங்கள் செயற்பாடுகளை பெரும் வீரதீரச் செயல்களாகவும் மிகுந்த ராஜதந்திர நகர்வுகளாகவும் மக்களுக்கு எடுத்தியம்பும் மூளைத்தொழிலாளர்களே. நீங்கள் எதை நினைத்து எதைச் செய்தாலும் அவர்கள் அவற்றுக்கு ஏதேனும் தத்துவ முலாம் பூசித் தருவர். ஒருவேளை அதை நீங்கள் படிக்க நேர்ந்தால் அட நாங்கள் செய்கிற காரியங்களில இப்படியெல்லாம் ராஜதந்திரங்கள் இருக்கோ என நீங்களே வியப்பீர்கள். புத்தி சொல்ல வந்த பாலசிங்கத்துக்கு என்ன நடந்தது? குடித்துவிட்டு மற்றவர்களிடம் இவங்களுக்கு ஒண்டும் மண்டைக்குள்ள ஏறாதடா என்று புலம்புவார். பிபாகரனைக் கண்டதும் அடங்குவார். பிரடிக்குப் பின்னால் துப்பாக்கி உறுத்திக் கொண்டிருக்கும்போது யாரையா புத்தி சொல்ல வருவான்? வக்காலத்து வாங்குபவன் மட்டும்தானே வந்து சேருவான்? இந்தத் திறத்தில சண்முகதாசன் தேவைப்படுகிறாரோ உங்களுக்கு மாவோயிசம் போதிக்க? எத்தகைய கொலையந்திரமாக நீங்கள் அமைந்திருந்துகொண்டு இதை எதிர்பார்க்கிறீர்களென்று புரிகிறதா?

  12. ஞானம் says:
    16 years ago

    ஐயருக்கு 30 ஆண்டடுகள் தேவைபட்டதா ஞானம் பெறுவதற்கு. அல்லது தற்பொழுது தான் நிஸ்டை கலைந்ததோ. ஞானத்திற்கும் சந்தர்பவாதத்திற்கும் இடையே இருப்பது மெல்லிதான இடைவெளியே. அருகிலிருந்தோர் ஒத்து ஊதினார்கள் அல்லது போட்ட தாளத்திற்கு ஆடினார்கள். தனிமனித வழிபாட்டிற்கு அன்று போட்ட பிள்ளையார் சுழி இன்று முள்ளிவாய்காலில் முற்று புள்ளியானதோ போராட்டம். நுpயாயத்தை காண்பதற்கு தத்துவ வாதிகளோ ஏட்டு கல்வியோ தேவை அல்ல> பகுத்தறிவும்> சுய புத்தியும் போதுமானது.

    • mmani says:
      16 years ago

      ஐயர் இதே கட்டுரையை 13 மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தால் 1 அல்லது 2 தொடர்தான் எங்களால் வாசிக்க முடிந்திருக்கும். சபாலிங்கத்திற்கு நடந்தது தெரியும்தானே.

      • ஞானம் says:
        16 years ago

        பாம்பின் கால் பாம்பறியும். ஜாக்கிரதை பற்றி ஐயருக்கு பாடம் அவசியம் அல்ல.
        எமக்கு எல்லாம் கிழுகிழுப்பாகும் கிசு கிசுக்கள்.

  13. கிறுக்கு says:
    16 years ago

    ஐயர் அவர்களே, விடுதலை இயக்கங்களில் ஜனநாயகம் இருக்க வேண்டுமென்பது சரியான கருத்துத்தான். ஜனநாயக உரிமைகளைப் பற்றிப் பேசிய எந்த விடுதலை இயக்கம் ஜனநாயக உரிமைகளை மதித்து நடந்ததென்று ஒன்றைக் கூறுவீர்களா? மற்றவர்கள் ஜனநாயகத்தைப் பேசியவாறு சர்வாதிகாரிகளாக இருந்தார்கள். ஆனால் புலிகளின் பாதை வெளிப்படையாக தெரிந்தது. எனக்கு உங்களிடம் இருக்கும் ஆதங்கம் ஏன் நீங்கள் அமைப்பை விட்டு வெளியேறாமல் சரியான பாதை என்று நீங்கள் கருதியதிற்காக உள்ளுக்கிருந்தே போராடி இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு மதிப்பிற்குரிய போராளி சந்ததியார் விடயத்தில் உங்கள் கருத்து மதிக்கப்பட்டிருந்ததே.

    சர்வாதிகாரம் கூடாதென்பது சரிதான். இன்று எல்லோருக்கும் தெரிந்த விடயம், இலங்கைத் தீவிலுள்ள உலகின் மிகப்பலவீனமான ஈழத்தமிழ் இனத்தை இரசாயனக் குண்டுகள் வீசியும் கொத்துக்குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்த நாடுகள் உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவும் இன்னொரு ஜனநாயக நாடான ஸ்ரீலங்காவும் தானே. இந்த யுத்தத்திற்கு உதவி செய்த நாடுகளும் ஜனநாயக நாடுகள் தானே. அதே போல் நீங்கள் பல சமயம் உதாரணத்திற்கு குறிப்பிடும் மாவோ உருவாக்கிய தேசமும் தானே அப்பாவி மக்களைக் கொன்று குவிக்க உதவி புரிந்தது.

    ஐயர் அவர்களே, இன்று தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு புலிகளை மட்டும் குறை கூறுவது இலக்கைத் தவற விடும் செயலாகும். ஈழத்தில் நிகழ்ந்தது சொல்லும் உண்மை மனிதன் எவ்வளவு விகாரமாக மாறிக்கொண்டிருக்கிறான் என்பதை. அதற்கு மேலாக அவன் தனது வெற்றிக்காக எதையும் செய்வான் என்பதை. தவிர அப்பாவி மக்களைக் காப்பாற்ற உலகில் எந்த ஒரு அமைப்பும் இல்லை என்பதை. மேலும் ஈழத்தமிழன் கற்றுக்கொள்வதற்கு முள்ளிவாய்க்கால் ஒன்றே இனி போதியதாக இருக்கும். தமிழினப்படுகொலையை நிறுத்தியிருக்கக் கூடிய மனிதர்கள் பலர் இந்த உலகில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மிக மகிழ்வார்கள் இந்த போராட்டப்பாதையின் குறை தான் இந்த நிலைக்கு காரணம் என்று அழுத்தம் கொடுக்கும்போது. போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கும் போரட்டப்பாதையின் குறைக்கும் என்ன சம்பந்தம். ஐயா, நக்சல்பாரிகளின் போராட்டமும் நசுக்கப்பட்டது நாற்பது வருடங்களுக்கு முன்பு. ஜேவிபியினரின் கிளர்ச்சி இந்திய இராணுவத்தால் ஒடுக்கப்பட்டது பல்லாயிரம் சிங்கள இளைஞர்களின் படுகொலையுடன். ஆகவே தமிழின அழிப்பின் குற்றவாளிகள் யாரென்பதை சரியாக அடையாளம் காட்டுங்கள். தவறின் உங்கள் முயற்சி காலம் தவறிச் செய்யும் வேளாண்மையாக போய்விடும். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது தமிழனின் ஆத்மாவில் ஏற்படுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆறாத ரணம், மாறாத வடு. மேலும் கருத்துக்கூறும் பலர் புலிகள் மேல் உள்ள வன்மத்தை தீர்த்துக்கொள்ள முனைகிறார்களே ஒழிய தமிழினத்தின் எதிர்காலத்தைப் பற்றி சற்றேனும் சிந்திக்கிறார்களில்லை. ஒரு மனிதனின் ஆயுள் நிர்ணயிக்கப்பட்டது தான். ஒரு மொழி பேசும் இனக்கூட்டத்தின் வாழ்வு தொடர்ச்சியானது. அதைத்தான் ஐயர் அவர்களும், அவர் போன்ற போரட்டத்தின் முன்னோடிகளும் மனதில் கொண்டு சராசரி மக்கள் விழிப்புறாத நிலையில், அந்த பெரிய பொறுப்பை தமது தோளில் சுமந்தார்கள். அதில் ஒருவர் தான் திரு பிரபாகரன் அவர்கள். அவர் பெரும்பான்மை தமிழ் மக்களால் நேசிக்கப்படும் மனிதர். இது யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மை. இல்லை என்பவர்கள் யதார்த்தத்தை உணர மறுக்கிறார்கள். ஆகவே அவரைக் கொச்சைப்படுத்த முனைவது தமிழினத்தை கொச்சைப்படுத்துவதற்கு சமனாகும். எல்லோரும் சற்று சிந்தியுங்கள்.

    • Shiva says:
      16 years ago

      பிரபாகரனையோ புலிகளையோ விமர்சிக்காமல் போராட்டம் என்ன திசயில் போய் எப்படிச் சீரழிந்தது என்று விளங்கிக் கொள்ள இயலாது. பழியைத் தனியே பிரபாகரன் மீதோ புலிகள் மீதோ சுமத்தத் தேவை இல்லை. அது தவறுங் கூட. ஆனால் உண்மைகள் கூறப்பட வேன்டும்.

      நக்சல்பரி இயக்கதினுள் கடுமையான விமர்சனமும் சுய விமர்சனமும் நடந்தன.பிளவுகள் ஏற்பட்டன. இன்றும் பல தவறுகள் திருத்தப் பட்டு வருகின்றன.

      1971இன் பின் ஜே.வி.பியில் இருந்து விமர்சனங்களின் அடிப்படையில் பிரிந்தாலும் விஜேவீரவின் தவறன தலைமைத்துவம் தொடர்ந்தது. 1971ஐ விட மோசமான பிழைகள் 1987-89இல் விடப்பட்டன. எத்தனை வீண் இழப்புக்கள்!
      சரியான சுயவிமர்சனம் இல்லாமல் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல் உள்ள ஜே.வி.பி. எங்கே போய்நிற்கிறது?
      விடுதலைப் புலிகளை மதிக்கும் ஒருவர் அவர்கட்கும் அதே விதமான பாதையைப் பரிந்துரைப்பாரா?

  14. மோகன சந்திரா says:
    16 years ago

    அய்யர் தொடர்ந்து தனது பதிவுகளை வெளியிட வேண்டும். பின்னூட்டம் இடுபவர்கள் அவர் இப்போதாவது எழுதுகிறாரே எண்டு மகிழ வேண்டும்.

  15. Shan Nalliah,Gandhiyist Norway says:
    16 years ago

    Thank you iyer! PLEASE CONTINUE YOUR STORY WITH TRUTH AND JUSTICE! THEN WE KNOW THE TRUTH TOO!
    IN THIS MODERN DANGEROUS WORLD WE SHD MOVE WITH DIPLOMACY,POLITICAL TACTICS ETC ETC! THINK ABOUT OUR +/- SIDES!PROMISE EVERYONE TO DO GOOD TO OUR SOCIETY! EVEN NOW,UNITED WE STAND! DIVIDED WE FALL! WE SHD GIVE ORDER TO OUR BRAINS TO WORK TOWARDS THIS GOAL! DEOCRACY,HR,EQUALITY,FREEDOM,HARMONY IS BETTER THAN ANYTHING ELSE! THEN WE CAN WIN!

  16. chandran.raja says:
    14 years ago

    கடந்தகாலம் நிகழ்காலத்தில் ஆட்சி புரியும். ஒரு சமூகம் தமது விடுதலை பற்றி சிந்திக்கும் போது அதற்கான தலைவனையே தேடிக்கொள்ளும்.
    யாழ்ப்பாண அப்புக்காத்து-அரசியல்சமூகம் தாம்தான் இந்த இலங்கையின் தமிழ்சமூகம் என பல்லாண்டுகாலமாக குறிப்பாக 2009 மே 19 திகதி வரைக்கும் வரையறுத்து வைத்திருந்தது. இன்றும் அது தேசியக்கூட்டமைப்பு என்கிற கட்டாக்காலிகளுடன் தொடர்கிறது. காலத்திற்கேற்ற தாளலங்கள் தான் வேறுபாடானவை.
    மூலதனத்தின் உலகமயமாக்கலின் விளைவே! தமிழ்சமூகத்தின்
    நான்கில் ஒருபகுதியினர் நாட்டைவிட்டு ஓடிப்போக வைத்தது.
    இவர்கள்தான் ஆங்கிலதிரைப் படங்களில் வரும் சாஸகச நிகழ்வுகளை இரண்டு சகாப்தத்திற்கு மேலாக நிகழ்த்திக் காட்டினார்கள். எம்.ஜீ.ஆர் ரஜினி படத்திற்கு உரிய வரவேற்ப்பு
    முட்டிதோதல்கள் கிடாய் அடிக்கிறதில் இருந்து கட்டவுட்டுக்கு
    பால்அபிசேஷகம் செய்கிறவரை ஒரே அமர்க்களம். ஆசிரியர் பேராசியர் பாடசாலைவாகனங்கள் பயணிகள் பஸ்சுக்கு குண்டுவைப்பதில் இருந்து “துரோகிகள் ஒழிந்தார்கள்” என்கிற கோஸம் புலம்பெயர் சமூகத்திடமிருந்து தான் புறப்பட்டது. இலங்கையுள்ள புலிகளின் பிரச்சாரசாதனங்கள் தனியே ரீயூனை மட்டுமே போட்டார்கள்.
    போத்திலுக்கு ஏற்ற மூடிமாதிரி அப்புகாத்து யாழ்பாணஅரசியல் கதைக்கும்சமூகம் பிரபாகரனை தெரிவு செய்ததில் எந்த வியப்பும் இல்லை. இது சந்ததியாரை கொலைசெய்ததும் இல்லாமல் புலிகளில் இருந்த முற்போக்கான கருத்தாளர்களையே மேட்டுகுடி வாதத்திற்காக களபலி இட்டிருக்கிறார்கள். இடதுசாரிகளையே நாட்டைவிட்டே ஓடப்பண்ணியிருக்கிறார்கள்.! இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
    தோழர் மணியத்தின் வாக்குமூலம் ஐயர் வாக்கு மூலத்திற்கு எந்தவகையுலும் குறைந்தது இல்லாமல் அடுத்து
    வரும் காலங்களுக்கு வழிவகை தேடக் கூடிய அர்த்தத்தை உடையது.
    ஒரு இனத்தின் தலைவிதி அங்குள்ள அறிவுபூர்வமான புத்திரிரர்களால் மட்டுமே வழிநடத்தி செல்லப்படுபவது. ஒரு அப்பக்காத்த கூட்டத்தாலையோ இன்றுள்ள தமிழ்தேச கூட்டமைபினால்-லோ அல்ல. அவர்கள் வாக்குரிமையை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள் என்றாலும்கூட.

    குறிப்பு: சந்ததியாரை புலிகள் கொலைசெய்யவில்லை. அது புளட்தான் கொலைசெய்தது போன்ற முட்டாள் தனமான கருத்துக்களை தயவு செய்து பின்னோட்டமாக வெளிப்படுத்தாதீர்கள். புலிகளும் மற்றைய இயக்கங்களுக்களுக்கும் அதிகவேறுபாடு இல்லாவிட்டாலும் இந்த முட்டாள் “தேசியதலைவன்” இல்லாதிருந்தால் வரலாற்று மாற்றத்திற்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்பதே எனது கருத்து.

  17. K SHANMUGAM says:
    12 years ago

    Who is this IYER,can someone tell who is HE?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...