வடக்கில் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் இளம் யுவதிகளுக்கும் பிரத்தியேக ரீதியிலான சுகாதார தேவைகளுக்குரிய பொருட்களை விநியோகிக்க வேண்டியிருப்பதாக ஐ.நாவின் சனத்தொகை நிதியம் கூறுகின்றது.
இவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பொதிகளை வழங்குவது தொடர்பாக வவுனியா சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு லட்சத்து 29 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான 25ஆயிரம் சுகாதாரப் பொதிகள் (சவர்க்காரம், பற்பசை, பற் தூரிகை, உள்ளாடைகள் உட்பட) கொள்வனவு செய்யப்பட்டு இவற்றில் 13 ஆயிரம் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவற்றைவிட பிரசவத்தின் பின்னரான பராமரிப்புத் தேவைகளுக்காக 20 படுக்கைகளும் 60 படுக்கை விரிப்புகளும் வவுனியா பகுதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நாவின் சனத்தொகை நிதியம் இலங்கை குடும்பத் திட்டச் சங்கம் நடத்தும் நடமாடும் சுகாதார சேவைகளில் தாய் சேய் நலன், குடும்பத்திட்டமிடல் குடும்ப திட்ட ஆலோசனைகள் வழங்கல், பாலியல் நோய் தொடர்பான தகவல்கள் வழங்குவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.







