பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) கட்சி சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே வேளை கட்டண உயர்விற்கு எதிராகப் போராடிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தையும் அதன் துணை அமைப்புக்களையும் சேர்ந்த 59 தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் ஆண்கள் பெண்கள் 52பேர் மட்டுமல்லாமல் கை குழந்தைகள் 7 பேரையும் சேர்த்து மொத்தம் 59பேரை சிறையில் அடைத்துள்ளது ஜெயலலிதா அரசு.
தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் காவல் துறையின் ஒடுக்கு முறை மோதல்களை உருவாக்கியது. ஜெயலலிதாவின் உருவத்திற்கு செருப்பால் அடித்துப் போராடியவர்கள் கைது எனப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.







