ராமேசுவரத்தில் இருந்து 564 படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் கப்பல்களில் ரோந்து வந்தனர்.
அப்போது தமிழக மீனவர்களை பார்த்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. வலைகளை அறுத்து எறிந்ததோடு மீன்களை கொள்ளையடித்தனர்.
விரட்டி அடிக்கப்பட்ட மீனவர்கள் உயிருக்கு பயந்து தப்பித்தோம், பிழைத்தோம் தங்களது படகுகளை கரைக்கு திருப்பினர். இன்று காலை அனைத்து படகுகளும் வந்த நிலையில் 1064 என்ற எண்ணுள்ள படகில் சென்ற 4 மீனவர்கள் மட்டும் இன்னும் கரைக்கு திரும்பவில்லை.
அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனரா? அல்லது கடலில் திசைமாறி எங்காவது சென்று விட்டார்களா? என்பது தெரிய வில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய மீன்பிடிப் பெரு நிறுவனங்களின் அதி நவீன மீன்பிடி முறைகளால் இலங்கை ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இதே வேளை இலங்கையில் மீன்பிடித் துறையில் நோர்வே நிறுவனங்கள் முதலீடுகளை ஆரம்பித்துள்ளமை அவர்களை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. இந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கை அரசு இலங்கை இந்திய அப்பாவி மீனவர்களிடையே முரண்பாடுகளை திட்டமிட்டு ஆழப்படுத்தி வருகின்றது. இலங்கை இந்திய ஏழை மீனவர்களிடையேயான பொது ஒத்துழைப்பு ஒன்று உருவாக்கப்படுவதன் ஊடாகவே இலங்கை இந்திய அரசுகளின் சதிகளை முறியடிக்க முடியும்.








