இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் அவர்கள், யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார், அவரை அழைத்து வருவதற்கு உதவி செய்த சக்தி எது? அந்த நிகழ்ச்சி பின்புலமாக இருந்து செயல்பட்ட இயக்கங்கள் எவை என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதியான யாசின் மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டிய கடமை நாம் தமிழர் கட்சிக்கு உண்டு என்பது மட்டுமின்றி, இந்தத் தலைவர்களுக்கு சில கேள்விகளையும் நாம் தமிழர் கட்சி எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது.
காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும், அவரது இயக்கமும் காஷமீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது.
காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? தமிழ்நாட்டை போல காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானே? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்? அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்? காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரை, நீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்? நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம், இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா? இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய்?
ஈழத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை போட்டு ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேயை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்களே, அது இந்த தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? தமிழினத்தை கொன்று குவித்த அந்நிய நாட்டுத் தலைவனை அழைத்து அரசு மரியாதை கொடுப்பதுதான் தேச பக்தியா? தேசப் பக்தியாளர் ஞானதேசிகன் பதில் சொல்லட்டமே. கடந்த 35 ஆண்டுகளாக கச்சத் தீவு கடற்பகுதியில் 544 மீனவர்களை கொன்று குவித்துள்ள சிங்கள கடற்படையின் தலைவரான ராஜபக்சவிற்கு ராஜ உபசாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றாதா? பிரிவினைக்கு வித்திடாதா? ஞானதேசிகன் பதில் சொல்லட்டும்.
இந்த நாட்டின் செல்வத்தை அந்நிய பெரு நிறுவனங்களும், நாடுகளும் கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு ஏற்ற வகையில் கொள்கை வகுத்துக்கொடுத்துக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கூறும் தேச பக்தி. காங்கிரஸ் அரசின் அனைத்து பொருளாதார சுரண்டல் கொள்கைக்கும் ஒத்துப்போகும் தேச பக்தியைத்தான் பாரதிய ஜனதா கடைபிடிக்கிறது. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள்தான் தேசப்பற்றை பற்றி பேசுகின்றன. நாங்கள் தேசப்பற்றைப் பற்றி பேசவில்லை, இந்த தேச மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம்.
தமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின் மாலிக் கூறினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன? இந்திய படைகள் தங்கள் மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அம்மக்கள் நடத்திய பெரும் போராட்டம் இந்த நாட்டிற்கே தெரியும். ஆனால் அந்த மக்களை இந்தியர்கள் என்றா பார்த்தது இந்திய மத்திய அரசு. துப்பாக்கியால் சுட்டு 104 பேரைக் கொன்றது.
அரசமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு அதிகமான சிறப்பு சலுகைகளை கொடுத்து அம்மாநிலம் செழிப்புடன் உதவி வருவதாக பொன் இராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியானால் அந்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவது ஏன்? அம்மாநிலத்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய இராணுவம் எந்த வீட்டில் வேண்டுமானாலும் நுழைந்து யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குத் தூக்கி செல்லலாம் என்கிற நிலையை இன்று வரை அனுமதிக்கிறீர்களே ஏன்? இராணுவத்தால் அம்மாநிலத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியதே அதற்கு இந்த தேச பகதர்களின் பதில் என்ன?
காஷ்மீராகட்டும், பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும், இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும். நாம் தமிழர் இந்திய அரசமைப்பை ஏற்று ஜனநாயக பாதையில் இயங்கிவரும் கட்சி. இலங்கையில் எம்மினத்தின் விடுதலைக்காகவும், இந்தியாவில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடும் அரசியல் கட்சி என்பதை தெட்டத் தெளிவாக, ஆவணப்பூர்வமாக விளக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கட்சியை தங்கள் கட்சியாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் தேசியக் கட்சிகள் எங்கள் மீது கூறும் குற்றச்சாற்றுகள் எந்த அடிப்படையும் அற்றது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.
நாங்கள் தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இவர்கள் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். இது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. இறையாண்மை என்பதற்கு உண்மையான பொருள் என்ன என்பதை அறியாத, புரியாத தலைவர்களுக்கு நாங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.









கூலிக்கேற்ற வேலை என்று வினையை விதைத்த சீமான்!
18-05-2013 சனிக்கிழமை கடலூரில் சிறப்பான ஓர் கூட்டத்தை நடத்தி ஈழத் தமிழ் இனத்தை மீழ முடியாத சிக்கலுக்குள் அமுக்கியுள்ளார் செந்தமிழன் சீமான். தயாரிப்பாளர்களுக்குக் கதை சொல்லி அவர்களை ஏமாற்றிப் படம் எடுத்து அதில் சம்பாதிப்பதை விடவும் அதே கதையை புலிகளுக்காக மேடையில் பேசினால் கோடிகளைச் சுருட்டலாம் என்று மிகவும் கால தாமதமாக ஈழத்துப் படகில் ஏறிய சீமான் தனது லட்சியத்தில் பாதியை எட்டிவிட்டார். மீதி இனி முதலமைச்சர் ஆவதுதான் பாக்கி!
ஓர் தொலைக்காட்சி நேர்க்காணலில் சூடேறிய சீமான், ‘ நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்குதானே கட்சியை ஆரம்பித்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ஆம் ஆட்;சியைப் பிடிப்பதற்குதான் கட்சியை ஆரம்பித்தேன் என்றார்.
தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர் பயணம் செய்யும் பாதை ஈழத் தமிழர்களுடைய தோள்களாக உள்ளன. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைகளில் பல ஆயிரம் கோடிகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்ட சீமான் ஈழம் பற்றி அவர்களுக்கே பாடம் நடத்தப் புறப்பட்டார். கனடா போன்ற நாடுகளில் இவரது உரையை, வாடகைக்கு மண்டபம் எடுத்து சி.டி.யில் திரையிட்டு கேட்டு ரசித்து மகிழ்ந்தனர் விவரம் தெரியாத வசதியானவர்கள்.
வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை ஓரம்கட்டி வாய்வீச்சில் வல்லவராகிவிட்டார் சீமான்! தமிழ் நாட்டில் மிகக் குறுகிய காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து பல கோடிகளைச் சுருட்டியவர் இவர் மட்டுமே!
எங்காவது ஓர் மூலையில் மேடை அமைத்து முழங்கி விட்டு, அதை அப்படியே கனடா, நோர்வேக்கு அனுப்பி விடுவார். அங்கே இருப்பவர்கள் ‘ஐயோ’ என்று டாலர்களில் அனுப்பி வைத்தவர்கள் பல பேர்!
2013ல் எதை வைத்து கதை பேசுவது என்று தெரியாமல் ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு சிறப்பு நிருபராக சிறிது நாள் நடித்தார். இயக்கமும் நடிப்பும் அவரது தொழில் என்பதை வெளிநாடு வாழ் தமிழர்கள் மறந்துவிட்டனர் சில காலமாக!
ஏதாவது ஒர் புரட்சி பண்ணினால்தான் தனது போட்டியாளர்களை வீழ்த்தி முதலமைச்சர் நாற்காலி வரை செல்லலாம் என்று ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணி தலைவரான, ‘ஜாசின் மாலிக்’ கை அழைத்து வந்து விட்டார் கடலூருக்கு. ஈழத் தமிழரது விடுதலைக்கு அவர் ஆதரவு வழங்குவார் என்று கூறினார் கூட்டத்தில்.
சீமானுக்குப் பெருமையோ பெருமை! மாலிக் ஆதரவு தருவதாகப் பேசிவிட்டார். ஆதலால் நோர்வே, கனாடாவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு கோடியாவது இந்த மாதத்துக்குள் வந்து சேர்ந்து விடும் என்று பொங்கி வழிந்து, செல்வச் செழிழப்பு தெரிந்தது அவரது முகத்தில்.
ஈழப் பிரச்சினையில் காஸ்மீர் பிரச்சினையைத் தொடர்பு படுத்தக் கூடாது என்று ஆரம்ப காலம் தொட்டே கவனமாக இருந்தனர் ஈழத் தமிழர்கள். வித்தியாசமாகப் படம் எடுக்கும் இயக்குனர்களின் படங்கள் போன்று, பின்விளைவு தெரியாமல் ஈழத்துப் பிரச்சினையுடன் காஸ்மீர் பிரச்சினையையும் கோர்த்துவிட்டார் சைமன்!
இந்தியா ஈழப்பிரச்சினையில் தயக்கம் காட்டியவற்றில் காஸ்மீர் பிரச்சினையும் ஒன்றாக இருந்தது. தனது புகழுக்காகவும் பணத்துக்காகவும் ஜாசீன் மாலிக்கை இழுத்து வந்து ஈழப்பிரச்சினையில முடிச்சுப் போட்டு இந்திய அரசை தமிழரிடமிருந்து தூர விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் சைமன்.
விழுந்து விழுந்து விடுதலைக்காக உழைப்பது போன்று காண்பித்துப பணம் தேடும் சீமான் விபரீதத்தைத் தொடுத்துவிட்டுள்ளார் ஈழத் தமிழர்களுடன்.
வெளிநாடு வாழ் பைனான்சியர்களுக்கு (விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்) இதன் விபரீதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ஈழப்பிரச்சினையில் உண்மையான வரலாறே இவர்களில் பலருக்குத் தெரியாது. அப்படியிருக்கையில் காஸ்மீர் பிரச்சினையின் பின்னணியும் ஈழத் தமிழ் இனத்தின் பின்னணியும் எப்படித் தெரிந்திருக்கப் போகிறது!
பணத்தை அள்ளி வீசினால் தமிழ் நாட்டில் பணி செய்ய பலர் காத்திருக்கின்றனர் என்று கண்டு பிடித்துள்ளனர் வெளிநாட்டு ஈழத் தமிழர்கள். நன்றாகக் குரைக்கிறவருக்கு அதிக பணம் அனுப்பிவைக்கின்றனர். குறைப்பதுடன் நிற்காமல் காஸ்மீர் காலைக் கடித்து இழுத்து வந்து விட்டார் சீமான்.
பாதிப்பு சீமானுக்குக் கிடையாது மாறாக ஈழத் தமிழர்களுக்குத்தான்! நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் ஜாசின் மாலிக்கை அழைத்து வந்து, தமிழ் நாட்டைத் துண்டாடுவேன் என்று கூறியிருந்தால் துணிந்த தலைவன்தான் என்று போற்றலாம். அவரோ ஈழத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி இழுத்து வந்து சந்தேகத்தையும் விளைவுகளையும் ஈழத் தமிழர் தலையில் கட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் ஈழவிடுதலை விரும்பிகள் தங்களது பணத்தைக் கொண்டு தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று கணிப்பது தவறானதாகும். இந்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்துவதன் மூலம் எங்கள் இனத்துக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்று யாராவது சொன்னால் அது உண்மைக்குப் புறம்பானதாகும்.
இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றால் அதற்கான வழிகள், திட்டங்கள் வேறு உள்ளன. எதிர்ப்பை வளர்த்து, சந்தேகங்களை வளர்த்து, உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து, வேறு இனப்பிரச்சினையை இழுத்து வந்து எங்கள் தலையில் கட்டி போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் செல்லாமல் தடைகள் தாண்டுவதையே தலையெழுத்தாக மாறிவிடக் கூடாது.
கடந்த காலங்களில் இதனைத்தான் புலிகளின் ஆதரவாளர்கள் செய்தனர். நட்புக் கொள்ள வேண்டியவர்களைப் பகைப்பதும், பகைக்க வேண்டியவர்களுடன் நட்புக் கொள்வதும் பின்னர் அதற்கு ராஜதந்திரம் என்று பொய் விளக்கம் கொடுப்பதும் வரலாறாக இருந்து வந்தது.
தயவுசெய்து சீமான் போன்ற நபர்களுக்குப் பணம் அனுப்பி ஈழத்துக்குப் பாதை அமைக்கும் பணியினைச் செய்ய வேண்டாம் என்று ஈழத் தமிழர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். விலை கொடுத்து விடுதலை வாங்க முடியாது. பணத்துக்காக நடிப்பவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். அதிலும் சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் பணத்தை மையமாகக் கொண்டவை. வெளிநாட்டு ஈழத் தமிழரது பணம் சிலர் வளமுடன் வாழ பயன்படுமே தவிர விடுதலைக்கு இதுவரையில் எந்தப் பயனையும் தந்தது கிடையாது.
தெரிந்து கொண்டால், விளங்கிக் கொண்டால் ஈழத் தமிழருக்கு நன்மை கிட்டும். கூலி கொடுத்து விடுதலைக்கு ஆள்பிடிக்க வேண்டாம். கூலிக்கேற்ற வேலை என்று நினைத்து வினையை விதைத்துக்கொண்டிருக்கிறார் அந்தக் கூலியாள்.
நன்றியுடன்,
ஈழப் பித்தன்.
இன்னமும் இந்திய அரசின் உண்மை முகத்தைப் புரிந்து கொள்ளாமல் தமிழர் – காஷ்மீர் உறவு காரணமாக இந்திய அரசு தமிழ் மக்களுக்கு உதவாமற் போய்விடும் என்று நம்புபவர்களை என்னவென்று சொல்வது?
உண்மைதான் a voter, ஆனால் இந்த போலி அரசியல் உலகில் இன்று எதையோ எங்கோ கொண்டு சென்று நியாயப்படுத்தி கதையை முடித்துவிடுகிறார்கள்.
இந்தியா உதவவேண்டியதில்லை சில வேளை உதவவருபவா்களை தடுக்க இதை பயன்படுத்தலாம் அல்லவா??.
என்னவென்று சொல்வதப்பா ..
உமது பதிவிற்கு, பேஸ்புக்கில் கீழ்கண்ட எனது கட்டுரிகளைக் கவனத்திற்கு ஈர்த்துள்ளேன்:
1. http://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seeman-come-together/
2. http://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affairs/
3. http://atrocitiesonindians.wordpress.com/2013/05/20/526-sebastian-seeman-and-yasin-malik-their-activities/
உங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.