பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதகால விசாவில் சென்னை வந்த பார்வதியம்மாளை கருணாநிதியின் ஆலோசனையில் பேரில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவில் திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். இது தொடர்பாக வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், இந்திய அதிகாரிகளிடம் மருத்துவ சிகிச்சைக்காக இப்போதைக்கு இந்தியா வரும் எண்ணம் இல்லை என்று பார்வதி அம்மாளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பார்வதி அம்மாள் சார்பில் இந்தியாவில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகினால், மத்திய அரசு அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.