இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, இலங்கைக்கு பாதகமானதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை தளமாகக்கொண்ட தூதரக அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர், பெரும்பாலும் தனது அறிக்கையை இறுதிப்படுத்தி விட்டது.
அதேநேரம் இந்த அறிக்கை, வெளிப்படையாக அமையவேண்டும்.எனவே அதனை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், பான் கீ மூனை வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த மாத இறுதிக்குள் பான் கீ மூனிடம் கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிபுணர் குழுவின் அறிக்கை, பான் கி மூனாலேயே ஊடகங்களுக்கு வெளியிடப்படலாம் என்றும் அதிகாரி கூறினார்.
ஏற்கனவே இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் தலைமையிலான குழு, பான் கீ மூனை சந்தித்து, இந்த அறிக்கையை வெளிப்படுத்தவேண்டாம் எனக்கேட்டுக்கொண்ட போதும், அதனை மீறி அந்த அறிக்கை வெளிப்படுத்தப்பபட இருப்பதாக என அந்த தூதரக அதிகாரி தெரிவிததுள்ளார்.
போர்க் குற்றங்கள் நிகழ்ந்த காலத்திலும், அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை ஐக்கிய நாடுகள் குறிப்பான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. இவ்விவகாரம் குறித்து உலகில் மனிதாபிமான முற்போக்கு சக்திகள் வரையில் அதிர்ப்தி வளர்ந்து செல்வதால் காலத்தை நீடிக்கும் நோக்கிலேயே ஐக்கிய நாடுகள் இலங்கை அரசிற்கு எதிரான நாடகம் ஒன்றை ஆரம்பித்துள்ளதோ என அச்சம் கொள்வதாக ஐக்கிய நாடுகளைச் சார்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளிற்கு எதிரான தொடர் அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்







