நான் தமிழன் என்பதால் பலபாதிப்புக்களையும் அநீதிகளையும் சந்தித்துள்ளேன் என ஆணைக்குழு முன் சாட்சியமளித்த டாக்டர் முரளி வல்லிபுரநாதன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கினார்.
வடமாராட்சியில் சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போதும் இதுவரை எந்தவிதமான நட்டஈடும் வழங்கப்படவில்லை. சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றிய வேளை வேறு மாவட்டங்களில் கடமையாற்றச் சென்ற டாக்டர்களுடன் ஒப்பிடுகையில் எமக்குக் குறைவான நிதியே கிடைத்தது. யுத்தம் முடிவடைந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களில் தொண்டர் அடிப்படையில் கடமையாற்ற விண்ணப்பித்த போதும் எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்த காலத்தில் வன்னியில் கடமையாற்றிய நான்கு வைத்தியர்களுக்கும் எதிரான வழக்குகள் இன்னும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளதால் அவர்களை நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அழைப்பு விடுத்திருக்கக் கூடாது எனவும் , சாட்சியமளித்த டாக்டர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் படையினரைக் காப்பாற்றுவதாகவே இருந்தது எனவும் டாக்டர் முரளி வல்லிபுரநாதன் ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.
வன்னியில் கடமையாற்றிய வைத்தியரொருவரிடம் தற்காலிக வைத்தியசாலைக்கு அருகில் புலிகளின் ஆட்லறி நிலைகள் இருந்தனவா என ஆணைக்குழு கேள்வி கேட்டமையின் நோக்கம் படையினரைக் காப்பாற்றுவதற்காகவே, உண்மையில் அவர்களிடம் மக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் மருந்துகள் இருந்தனவா? என்றுதான் கேடடிகப்பட்டிருக்க வேண்டும் எனவும் சாட்சியமளிப்பின் போது கேட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும், இடம் பெயர்ந்த மக்கள் அனைத்து வசதிகளுடனும் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட டாக்டர் முரளி வல்லிபுரநாதன் சிங்கள மொழிக்கு முக்கியத்தவம் அளித்தல், அரச ஆதரவுடனான குடியேற்றங்கள், சிறுபாண்மையினருக்கு எதிரான அநீதிகள், தமிழர்கள் அதகிளவில் வசிக்கும் இடங்களில் அதிகளிவல் இராணுவப் பிரசன்னம் என்பவற்றை அரசாங்கம் நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். சிறுபாண்மை மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் டாக்டர் முரளி வல்லிபுரநாதன் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருக்கிறார்.







