Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 21 ] : T.சௌந்தர்

இனியொரு... by இனியொரு...
09/17/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

soundharஇசை தொடர்பான ஆய்வு நூல்கள் தமிழில் அரிதாகவே காணப்படுகின்றன. தமிழிசை தொடர்பான பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் ரி.சௌந்தரின் தமிழ்த்திரை இசையில் ராகங்கள் என்ற தொடரின் 21 வது பாகம் இது. தமிழ்த் திரையிசையில் பல்வேறு பரிணாமங்களை நீண்ட ஆய்விற்கு உட்படுத்தியுள்ள சொந்தரின் இத் தொடர் புதிய சேர்க்கைகளோடு நூலாக வெளிவரவுள்ளது. அண்மையில் காலனமான இலங்கை கம்யூனிச இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் ஆசிரியருமான தோழர் தங்கவடிவேல் அவர்கள் சௌந்தரின் தந்தை. சொந்தரின் ஏனைய கட்டுரைகள்:

தமிழ்சினிமா இசையில் அகத்தூண்டுதல்

நாடோடிகளின் இனிய இசை

இசை – பக்தியிலிருந்து சிம்பொனி நோக்கி …

கர்நாடக இசை தமிழிசையே 

செவ்வியல் இசை ராகங்களில் கலை நயமிக்க மெல்லிசை கானங்களால் உணர்வுகளை இதப்படுததி ,பல்வகைப் பாவங்களை துலாம்பரமாக சித்தரித்துக் காட்டிய சினிமா இசையில் இணையற்ற வகையில் பயன்பட்ட ராகங்களில் மாய மாளவ கௌளை என்ற ராகமும் ஒன்று.

இல்லாத மோட்சத்துக்கு வழி காட்டிக் கொண்டிருந்த பல நூற்றாண்டு கால பக்தி இசையின் இயலாமையை பயன்படுத்திய சினிமா இசை ராகங்களை வகை வகையாக கையாண்டு மக்களை மகிழ்ச்சி படுத்தி வந்திருக்கிறது.

ராகங்களை ரசிப்பதற்கு இசை தெரிந்திருக்க வேண்டும் அல்லது ” பிறவி ஞானம் ” வேண்டும் என்ற பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த கருத்துக்களைக் கேலிக்குரியதாக்கி . கொடுக்கும் விதத்தில் கொடுத்தால் எல்லோரையும் ரசிக்க வைக்க முடியும் என்ற பண்பட்ட நிலையை உருவாக்கியது சினிமா இசையே.

காலத்திற்குக் காலம் மாறும் போக்குகளுக்கேற்ப வளர்ந்தும் மாறியும் வந்ததுடன் இசையமைப்பாளர்களின் ஆற்றலுக்கேற்பவும் ராகங்கள் அழகாகக் கையாளபட்டிருப்பதை அவதானிக்கலாம்.

மிகப் பழங்காலம் தொட்டு தமிழ் மக்கள் பழகி வந்த ராகங்களில் இந்த ராகமும் முக்கியமானது கி.பி.4 ம் நூற்றாண்டைச் சேர்ந்தகாரைக்கால் அம்மையார் [ புனிதவதியார் ] எழுதிய திருப்பதிகங்கள் நட்டபாடை ,இந்தளம் போன்ற பண்களில் பாடப்பட்டிருக்கின்றன என்கிற குறிப்புக்களை தமிழ் இசை நூல்களில் காணலாம்.உள்ளத்தைக் கவர்ந்து களிப்பூட்டும் ராகங்களில் தமிழ் மக்கள் ஊறித் திளைத்த வரலாறு இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பின் செல்லக்கூடியதே.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் மறைத்து வைக்கப்பட்ட தேவார பதிகங்களில் கரையான் அரித்தவை போக மீதம் 796 பதிகங்களில் உள்ள 8250 பாடல்களில் குறிப்பிடப்படுகின்ற பண்களில் இந்தளம் என்கிற பண் இன்றைய மாயாமாளவ கௌளை ராகம் என்பது இசையறிஞர்களின் கருத்தாகும்.

இன்று பொதுவாக “தென்னிந்திய இசை” என்று அறியப்படுகின்ற கர்னாடக இசை , தமிழிசையை மூலமாகக் கொண்டதே என்பதை மறுப்பவர்கள் அது இந்தியாவின் வேறு எந்த பகுதியின் இசையை கொண்டதென்பதை சொல்லவதில்லை.

“தமிழிசை ” என்று சொல்லும் போது மட்டும் மலையாள இசை , தெலுங்கு இசை ,கன்னட இசை என்ற ஒன்றில்லிலை , அது போலவே தமிழிசை என்று கிடையாது என்பதாக சிலர் கருதுகிறார்கள். மலையாள இசை , தெலுங்கு இசை ,கன்னட இசை என்பதில்லை என்பது தெரிந்தும் இவ்விதமான விஷமத்தனங்கள் பரப்பப்படுகின்றன.

1980 களில் தியாகராஜ சுவாமிகளுக்கு ஆந்திராவில் அரச விழா எடுப்பதை முன்னைநாள் ஆந்திர முதல்வர் என்.டி . ராமராவ் அரசு விரும்பவில்லை என்பதன் காரணம் தியாகராஜரின் இசை தமிழ்நாட்டு இசை என்று கருதியதாக செய்திகள் வந்தன.

தமிழிசையை பக்தி இசையாக மாற்றி உருவானதே கர்னாடக இசை என்பதை பல அறிஞர்கள் நிரூபித்த பின்னாலும் தமிழிசை என்பதற்கு மறைமுகமான எதிர்ப்புக்களை மென்மையாக கூறி , தமிழ் மக்களின் இசைக்கு எதிரான அந்த கருத்தியலை நிலை நிறுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.

ராகங்கள் என்பவை தொல்காப்பியர் காலத்திற்கும் முன் நோக்கி செல்பவை என்பதும் தமிழ் நாட்டார் வழக்கியலில் , புராதன நாட்டுப்புற இசையின் வேர்களில் செழித்து வளர்ந்தது என்பதையும் பலர் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழர்களின் பழமை இசைப் பண்பில் ஊறிய ராகங்களின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டு செல்கிறது.அவை கர்நாடக இசையாக , நாட்டுப்புற இசையாக இருப்பினும் , உன்னிப்பாக அவதானித்தால் அதன் அடி நாதம் ராகங்களால் இயக்கப்படுவதையும் உணரலாம்.

நாட்டுப்புறப் பண்பில் ஊறிய ராகமாகவும் , தமிழ் செவ்வியல் இசையின் கருணை ரசத்திற்கும் , மனதை வசீகரம் செய்யும் ராகமாகவும் இருக்கும் ராகங்களில் முதன்மையானது இந்த மாய மாளவ கௌளை ராகம்.

மனத்தைக் கொள்ளை கொள்ளும் இந்த ராகத்திற்கு இணையாக ஹிந்துஸ்தானி இசையில் பைரவ் [ Bairav ] என்கிற ராகம் உள்ளது.அல்லது மாய மாளவ கௌளை ராகத்தை பைரவ் என்று அழைக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

வட இந்தியாவில் மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் [ குறிப்பாக அரேபிய நாட்டுப்புற இசையிலும் ] , கிழக்கு ஐரோப்பிய ஜிப்சி இசையிலும், ஸ்பானிய ப்ளமிங்கோ இசையிலும் இந்த ராகத்தை , அல்லது அதன் கடுமையான வாசத்தைக் கேட்டு இன்புறலாம்.

தமிழ் செவ்விசையில் 15 வது மேளகர்த்தா ராகமாகக் கருதப்படுகிறது.செவ்வியல் இசை பயிலும் மாணவர்களுக்கு இந்த ராகத்திலேயே முதல் பாடம் தொடங்கப்படுகிறது.

தற்காலத்தில் மாயமாளவ கௌளை ராகத்தில் தான் இசை பயிலும் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு சுர முறைகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது.இது புரந்தரதாசர் காலத்தில் ஏற்பட்டதென்பர்.

” ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண – கண்
ஆயிரம் வேண்டாமோ ..”

நல்லூர் ,அண்ணாமலை இசைத் தமிழ் மன்ற சங்கீத வகுப்பில் நான் படித்த இந்தப் பாடல் மாயமாளவ கௌளை ராகத்தை என்றென்றும் நினைவுறுத்தும் இனிய பாடலாகும்.

ஆரோகணம்: ச ரி1 க3 ம1 ப த1 நி3 ச
அவரோகணம்: ச நி3 த1 ப ம1 க3 ரி1 ச

இதன் பிள்ளை ராகங்கள் சில:

பௌளி
நாதநாமக்கிரியா
மலஹரி
சாவேரி
ரேவகுப்தி

கிரகபேதம் செய்வதனால் கிடைக்கும் ராகங்கள் : சிம்மேந்திரமத்திமம் , ரசிகப்ப்ரியா.

மிகுந்த கற்பனை வளத்திற்கு இடம் கொடுக்கும் இந்த ராகத்தை சிறப்பாகக் கையாண்டால் மரபு ரீதியாக அற்புதங்களை காண்பிக்கலாம். கர்னாடக இசையில் பெரும்பாலும் அதிகமாகப் பயன்பட்டு வரும் ராகங்களில் இதுவும் ஒன்று.

ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண – அருணாசலக் கவிராயர்
தேவ தேவ கலயாமி – சுவாதித்திருநாள்
மாய தீத ஸ்வரூபிணி – பொன்னையாபிள்ளை
சீர சாகர சயனா – மைசூர் மகராஜா
துளசி தல முல – தியாகராஜர்
மேரு சமனா தீர வர ரகு வர – தியாகராஜர்
பாத மலர் கேயனே நம்பினேன் ஐய்யா – பாபநாசம் சிவன்.

போன்ற பாடல்கள் கர்னாடக இசை மேடைகளில் பிரபலமானவையாகும்.

நாதஸ்வர இசை தரும் கருணையிலும் , கம்பீரத்திலும் இந்த ராகத்தின் ஆழத்தையும் நாம் அனுபவிக்கலாம்.மன எழுச்சி தரு இந்த ராகத்தை இனிமையாகப் பாடும் பாடகர்களின் ஆலாபனையிலும் கேட்டு இன்புறலாம்.

“ஆடிக்கொண்டார அந்த வேடிக்கைக் காண கண்
ஆயிரம் வேண்டாமோ..”

thangavadivelu
கே.தங்கவடிவேல்

என்ற இந்த பாடலை நினைக்கும் போதெல்லாம் எனது தந்தையாரின் [ கே.தங்கவடிவேல் ] நண்பரும் ,சக ஆசிரியரும் , நல்ல இசை ரசிகரும் ,பாடும் திறமைமிக்கவருமான திரு.சண்முகம் என்கிற ஆசிரியர் என் நினைவுக்கு வருகின்றார்.அவர் எங்கள் அயல் கிராமமான “இலக்கணாவத்தை” என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.ஆங்கிலம் மற்றும் சமயம் போன்ற கற்பிக்கும் ஆசிரியர்.அத்துடன் சங்கீதத்திலும் , சோதிடம் பார்ப்பதிலும் திறமை வாய்ந்தவர்.

எனது தந்தையாரை சந்திக்க எமதுவீடு வரும் போதெல்லாம் இசை பற்றிய பிரஷ்தாபிப்புகள் நிகழ்வதுடன் , எனது தந்தையாரை பாடும்படி அவர் வேண்டுவதும் , பின் அவர் பாடுவதும் வழக்கமாக நடக்கும்.அவ்விதம் ஒரு நாள் மதியம் மிக அருமையாக அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார்.

அன்று மேல் சொன்ன பாடலை பாடி விட்டு , தான் சங்கீதம் தெரிந்தும் நீண்ட காலம் பாடாமல் இருந்ததாகவும் , தனது தாயார் அந்த பாடலைப்பாடும் படி எத்தனையோ தடவை வேண்டியும் தான் அதை நிறைவேற்றவில்லை என்றும் ,தனது தாய் இறக்கும் தருவாயில் வேண்டியதால் , இந்த பாடலை பாடிய போது தனது தாயின் உயிர் பிரிந்தது என்று சொல்லி மிகவும் வேதனைப்பட்டார்.

இந்த பாடலை என்னும் போதெல்லாம் அருமை சண்முகம் மாஸ்டர் நினைவுக்கு வந்து போவது தவிர்க்க முடியாதுள்ளது.

இல்லாததை விரும்பி கெடுகிறார் – அது
எட்டாததை வருந்தி கொட்டாவி விடுகிறார்

என்று தொடங்கும் இந்தப்பாடலை 1980 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கர்நாடக இசை கச்சேரியில் பாடி சிறப்பித்தார் கே.ஜே.யேசுதாஸ்.அவருக்குப் பின்னர் வேறு யாரு இந்தப் பாடலைப்பாடி நான் இதுவரை கேட்டதேயில்லை.

கருணை ரசமிக்க கர்னாடக இசையில் ஒலிக்கும் இந்த ராகத்தில் வேறு பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த ராகத்திற்கு புதிய பரிமாணம் தந்தது சினிமா இசை என்பது மிகையான கூற்று அல்ல.

தமிழ் சினிமாவில் மாய மாளவ கௌளை ராகத்தில் அவ்வப்போது எளிமையான பாடல்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.சினிமா கதைக் களம் கடந்து நம் நெஞ்சங்களை நிறைக்கும் பாடல்கள் ஏராளம்.

01 அம்மா பசிக்குதே – படம்: சம்சாரம் [ 1951 ]- பாடியவர்கள்: சரோஜினி +ஜிக்கி – இசை: ஈமணி சங்கரசாஸ்திரி
பாலும் பழமும் வேண்டாம் தாயே
பசிக்கு சோறு கிடைத்தால் போதும் ….

பசியின் அவலத்தை உணர்த்தும் பாடல்.ராகத்தை ஆழ்ந்துணர்ந்து சோகரசம் ததும்ப தந்த இசையமைப்பாளரின் திறமை வியக்கத்தக்கது.

02 அழகான பொண்ணுதான் – படம்:அலிபாபாவும் 40 திருடர்களும் 1956 – பாடியவர்:பானுமதி – இசை: எஸ்.தட்சிணாமூர்த்தி
தன்னம்பிக்கையும், நகைச்சுவையும் , நையாண்டியும் கலந்து காலத்தை வென்று நிற்கின்ற பாடலைத் தந்த எஸ்.தட்சினாமூர்த்தியின் இசையாற்றல் வியக்கத்தக்கது.பானுமதி பாடிய வெற்றிப்பாடல்களில் இதுவும் ஒன்று.

03 வானில் காணும் நிலாவே – படம்: – பாடியவர்:A . M .ராஜா + ஜிக்கி – இசை:
இலங்கை வானொலியில் ஒளிபரப்பாகும் நெஞ்சில் நிறைந்தவை நிகழச்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் பாடல்களில் ஒன்று.இசைத்தம்பதிகளான ராஜாவும் ஜிக்கியும் பாடிய சோகப் பாடல்களில் ஒன்று.விரக்த்திக்கு பெயர் போன பல பாடல்களை பாடி சிரஞ்சீவித்தன்மை ஆக்கியவர் ஏ.எம்.ராஜா

04 நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ – படம்:பட்டினத்தார் 1964 – பாடியவர்: TMS + P .லீலா – இசை: ஜி.ராமநாதன்

செவ்வியல் இசையின் சாயல் கொண்ட பாடல்களை உயிர் இனிக்க தந்த ஜி.ராமனாதனின் அற்புதமான பாடல்.பிள்ளைப்பாக்கியமற்ற தம்பதிகள் இறைவனிடம் இறைஞ்சும் பாடல்.பாடல் இசையமைப்பிலும் , பாடல் வரிகளும் கரையாத நெஞ்சங்களையும் கரைய வைத்து விடுகின்ற பாடல்.இசையில் புதிய சகாப்தத்தை தொடக்கி வைத்த ஜி.ராமநாதன் செவ்வியல் இசை சார்ந்து தந்த இந்தப் பாடல் தியாகய்யரின் ” துளசி தல முல ” என்ற கீர்த்தனையின் சாயல் இருப்பதை அவதானிக்கலாம்.

05 கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா – படம்:ஆலயமணி 1963 – பாடியவர்:T M .சௌந்தரராஜன் + L .R .ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பூர்வ ராகங்கங்களிளிருந்து நாம் கேட்க்காத விதத்தில் , நுண் ஆற்றல்களை தன்னியல்பாக , அகத்தைப் வருடும் பாடல்களாக்கி தந்த பெருமைமிக்க இசையாமைப்பாலர்க்லான மெல்லிசை மன்னர்களின் அற்புதமான படைப்பு இந்தப் பாடல்.
ஹம்மிங்கில் புதுவகை தந்து மனதை பரவசப்படுத்தும் பாடல். வானத்துத் தேவதைகள் நம்மை தூக்கிச் செல்வது போன்ற உணர்வை தனது அபூர்வ ஹம்மிங் திறத்தால் செம்மாந்த நிலைக்கு உயார்த்திய பெருமை எல்.ஆர் .ஈஸ்வரி அவர்களைச் சேரும்.

06 பூ முடிப்பாள் இந்த பூங் குழலி – படம்:நெஞ்சிருக்கும் வரை 1966 – பாடியவர்:T M .சௌந்தரராஜன் – இசை: விஸ்வநாதன்

மெல்லிசைமன்னர்களின் பிரிவுக்குப் பின்னரும் தொடர்ச்சியாக பல இனிய பாடல்களைத் தந்த விஸ்வநாதன் தந்த அருமையான பாடல்.மெல்லிசையின் வழி வந்தாலும் செவ்வியல் சார்ந்த இந்த பாடலில் நாயகனின் மன உணர்வுகளை மனம் நெகிழ வைக்கும் வண்ணம் தந்த பாடல்.பாடலின் உணர்ச்சியின் உயிரை மீட்ட நாதஸ்வர இசையை பயன்படுத்தியிருப்பது அருமையிலும் அருமை எனலாம்.மெல்லிசை மட்டுமல்ல செவ்வியல் இசையிலும் அனாசயமாக இசையமைக்க முடியும் என இசைநயம் காட்டிய விஸ்வநாதனின் மேதமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.

07 பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் – படம்:பணம் படைத்தவன் 1965- பாடியவர்:T M .சௌந்தரராஜன் + L .R .ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மிக அருமையான ஹம்மிங்கில் அமைக்கப்பட்ட பாடல்.”ஹம்மிங் ஸ்பெசலிஸ்ட் ” எல்.ஆர் ஈஸ்வரின் திரமமியை மெல்லிசை மன்னர் பயன்படுத்தி வெற்றி கண்ட இன்னுமொரு பாடல்.அமானுஷ்ய உணர்வு கூர்மைபேற்றிலங்கும் புத்தழகு மிக்க இந்த பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கும்.

08 நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என – படம்:குமரிக்கோட்டம் 1970 – பாடியவர்:T M .சௌந்தரராஜன் + L .R .ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன்
இந்தப் பாடலில் மேல் சொன்ன பாடலின் தாக்கம் இருப்பதை சிறிது ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.எளிமையான மேட்டிலும் பூர்வ ராகங்கள் பழுதுபடாமல் தரவேண்டும் என்று முனைப்புக் காட்டிய மெல்லிசைமன்னரின் இசை ஆர்வம் ,ஆற்றல் நம்மை வியக்க வைப்பதாகும்.

09 நினைத்தேன் வந்தாய் நூறு வயது – படம்:காவல் காரன் 1967- பாடியவர்:T M .சௌந்தரராஜன் + P .சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
கிளியோபாட்ரோ , சீசர் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.மாயமாளவ கௌளை ராகத்தில் எழும்பும் ஓயாத அலையில் மிதந்து வரும் பாடலில் மெல்லிசைமன்னரின் முன்னைய சில பாடல்களின் சாயல் தெரிவதை அவதானிக்கலாம்.

10 பட்டத்து ராணி பார்க்கும் பார்வை – படம்:சிவந்த மண் 1970 – பாடியவர்: L .R .ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன்

எல்.ஆர்.ஈஸ்வரிக்கும் ஹம்மிங்கிற்க்கும் எவ்வவளவு பொருத்தப்பாடு அமைந்ததோ , அதேயளவு இந்த ராகத்திற்கும் உண்டு என்று முத்திரைன் குத்திக் கூறுமளவுக்கு சென்ற ராகம் இது.படத்தின் சூழ்நிலைக்குப் பொருத்தமாக செவ்வியல் ராகங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் காட்டி பாடல்களை முழங்க வைத்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

ஸ்பெயின் நாட்டு ஜிப்சிகளின் இசையில் அதிகம் பயன்படும் இந்த ராகத்தின் இனிமையை நாம் கேட்டு இன்புறலாம்.அரேபிய, கிரேக்க , இந்திய இசையின் கலப்பு இசையாக உருவாகிய ப்ளமிங்கோ இசையை , இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த ஜிப்சிகள் தமது இசையுடன் கலந்து வளர்த்தெடுத்து பிரபல்யப்படுத்தினார்கள் என்பது என்பது ப்ளமிங்கோ இசை வரலாறாகும்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும் ” ..என்ற பல்லவியிலேயே [ பார்வை என்று வரும் பகுதியில் ] , அதனோடிணைந்த அசைவிலேயே இனிமையைத் தருகின்ற பாடல்.எக்கோடியன் வாத்தியத்தின் இனிமையை அழகுடன் வெளிக்கொண்டு வந்த பாடல்.படத்தில் அரேபிய உடையில் தோன்றும் நாயகன் , நாயகி பாடுவதாக அமைக்கப்பட்டமை தற்செயலானதல்ல.அரேபிய நாட்டுபுற இசையிலும் பயன்பாட்டில் உள்ள ராகம் என்பதை அறிந்து பயன்படுத்தியுள்ளார் மெல்லிசைமன்னர்.

11 நீ நினைத்த நேரமெல்லாம் வர வேண்டுமோ – படம்:பெண்ணை நம்புங்கள் – பாடியவர்: S.P .பாலசுப்ரமணியம் + P .சுசீலா – இசை: வீ. குமார்

12 சொல்லடி அபிராமி – படம்: ஆதிபராசக்தி – பாடியவர்: T .M .சௌந்தரராஜன் – இசை : K.V.மகாதேவன்
ஜி.ராராமநாதனைப் போலவே செவ்வியல் இசையை அனுசரித்துப் பாடல்கள் தந்த பெருமைமிக்க இசைமேதை கே.வீ.மகாதேவன் இசையமைத்த மாயாமாளவ கௌளை ராகப்பாடல்.

13 வான் வந்து தேன் சிந்தும் நேரம் – படம்:எங்கள் தாய்க்குலமே வருக 1988 – பாடியவர்: K .J .ஜேசுதாஸ் – இசை: விஸ்வநாதன்
மெல்லிசைமன்னரின் வற்றாத இசைஞானத்திற்கு சான்று பகரும் பாடல்.இசைஞானியின் வாத்திய இசையில் சிக்காமல் , புதிய பாணியில் மெல்லிசைமன்னர் வாத்தியங்களைக் கையாள்வதை அவதானிக்கலாம்.

எளிமையும் , இனிமையும் அமைந்த பாடல்களால் தனக்கு முன்பிருந்த இசைமேதைகளின் பாதையை பின்பற்றாமல் , மரபி இசையின் பண்புகளை அனுசரித்து இசையில் புது நோக்கு மிளிர்கின்ற பாடல்களால் இசையின் சிகரங்களைத் தொட்டு , புதிய நெறிகளைக் காட்டிய பெருமைக்குரிய இசைஞானியின் பாடல்கள் சில.

01 பூப் போல உன் புன்னகையில் – படம்:கவரிமான் – பாடியவர் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை இளையராஜா

பூர்வ ராகங்களில் எளிமையான மெட்டை அமைத்தாலும் தரம் குறைந்து விடாது என்பதை உணர்த்தும் பாடல்.உள்ளுறைவில் உணர்வின் வசீகரத்தை தொட்டு செல்வதுடன் மனதை நெருடாவும் வைக்கும் பாடல்.நடிகர்களின் தலையீடுகளால் பாடல்களிலும் மிகையுணர்ச்சி காட்டி , பாடலின் உணர்வுகையும் மிகைப்படுத்தி திரித்துக் காட்டும் முறையைப் புறம் தள்ளி , பாடலின் இயல்போட்டத்திலேயே பேருணுனர்ச்சிகளைத் தந்து உயிருக்கு இன்பம் தருவதில் தனித்துவம் காட்டிய இசைஞானியின் அருமையான பாடல்.

02 அந்தப்புரத்தில் ஒரு மகராணி – படம் :தீபம் 1978 – பாடியவர்கள் :சௌந்தரராஜன் + எஸ்.ஜானகி – இசை இளையராஜா

பெரும்பாலான இசை ரசிகர்களுக்கு வேப்பங் காயாகக் கசக்கும் தமிழ் செவ்வியல் ராகங்களில் அவர்களையும் அறியாமல் மயங்கி நிற்கின்ற பாடல்களைத் தந்து , இசை ரசிகர்களில் சகல பிரிவினரையும் ஏற்க வைத்த இசைஞானியின் புதிய கோணம் காட்டும் இனிமையான பாடல்.டி.எம். சௌந்தரராஜன் , இளையராஜா கூட்டணியில் அமைந்த சிறப்பான சில பாடல்களில் பாடல் ஒன்று.

03 இள மனதினில் எழும் கனவினில் – படம்: – பாடியவர்கள் :ஜேசுதாஸ் + பி.எஸ்.சசிரேகா – இசை இளையராஜா

பாட்டுத் திறத்தாலே ஆளும் யேசுதாசும் , இசைத்திறத்தாலேஆளும் இசைஞானியும் இணைந்த பரிசோதனைப்பாடல்.ஜீவசத்துள்ள ராகத்தில் எத்தனை அழகான கற்பனை ! என வியக்க வைக்கும் பாடல்.கட்டமைதியுடன் துள்ளும் மிருதங்கத் தாளத்தில் மட்டும் அமைக்கப்பட்ட இந்தப் பாடலில் கோரஸ் ,மற்றும் பின்னணி இசை என எத்தனை கோடி இன்பம் வைத்துள்ள பாடலில் பழமையில் புதுமையை வலிமையுடன் கட்டி வைத்த அழகியலை என்னவென்பது.!?

நவயுக இசைச்சக்கரவர்த்தி இசைஞானி ராகத்தின் உள்ளும் புறமும் தெரிந்த இசைமேதை என நிரூபிக்கும் பாடல்.இந்த வகையில் ஒரு பாடல் தருவதற்கு ஒரு கலைஞனுக்கு எவ்விதமான மன எழுச்சி இருக்க வேண்டும் என்று எண்ணி ,எண்ணி வியக்க வைக்கும் வகையில் வாத்திய அமைப்பும் பிற சேர்க்கைகளும் அமைந்த பாடல்.இந்தப் பாடலைக் கேட்டால் இசைமடமை நீங்கும். இனிய இசையின் லாவண்யங்களை காட்டி தூய இசையமுதம் பருகச் செய்த இசைஞானி இளையராஜா உலக இசைகளின் கட்டுகளை அறுத்து விடுகிறார்.

04 ராம நாமம் ஒரு வேதமே – படம்: ஸ்ரீ ராகவேந்திரா 1985 – பாடியவர்கள் :ஜேசுதாஸ் + வாணிஜெயராம் – இசை இளையராஜா

எளிமையானாலும் வேகமான நடையில் அமைக்கப்பட்டு மாயமாளவ கௌளை ராகத்திற்கு வந்தனம் செய்வது போன்றமைந்த பாடல்.குழாயில் உரமும் ,பிசிறற்ற தன்மையும் ,தெளிவும் , கம்பீரமும் ஒன்றிணைந்த குரல் கொண்ட யேசுதாஸ் பாடிய பாடல்.ஒளிவு மறைவற்று ,திறந்த குரலில் யேசுதாஸ் பாடுவது அவருக்கு நிகர் அவரே என்று சொல்ல வைக்கிறது.

05 செந்தாழம் பூவில் – படம்: முள்ளும் மலரும் 1978 – பாடியவர் :ஜேசுதாஸ் – இசை இளையராஜா
எதிர்காலக் கரைகளைத் தாண்டும் இசைப்படைப்புக்களை தந்து இசைக்கலையில் சிரஞ்சீவித்தன்மை வாயந்ததாக்கும் பாடல்களில் ஒன்று.
மரபு ரீதியாக தனது முன்னோடிகளையும் சிறப்பாகப் போற்றும் அதே நேரத்தில் , ராகங்களில் அவர்கள் எண்ணிப்பார்க்க முடியாத புதிய கோணங்களில் பாடல்கள் தந்து கற்பனை வளத்தில் அதி உச்சம் தொட்டு செல்லும் இசைஞானியின் அனாயாசமான பாடல்.
” நதியில் விளையாடி கோடியில் தலை சீவி
நடந்த இளந் தென்றல் …..
இங்கே செந்தாழம்பூவில் வந்தாடி நம்மை குளிர வைக்கிறது தென்றல்.கண்ணதாசனின் அழகான கற்பனை எழில் மிக்க பாடல்.கண்ணதாசன் வானுலகைக் காட்டும் அற்புதத்தை என்னவென்பது?

கவிநயமும் , இசைநயமும் தன்னெழுச்சியாக வருகின்ற உற்சாகத்தைக் கட்டறுத்து பாய வைப்பதுடன் , இன்ப உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்ற பாடல்.தெளிந்த நீரோட்டம் போல வாத்தியங்களின் தரும் கற்பனை நம்மை இன்ப லஹரியில் மிதக்க வைக்கும்.

செனாயும் , புல்லாங்குழலும் , வயலினும் தங்களுக்கேயுரிய இன்பத்தை அள்ளிக் கொட்டுகின்றன.

1978 இல் டெசம்பர் மாதத்தில் நடை பெற்ற எனது பெரிய மாமாவின் திருமணத்தில் முதலில் நான் கேட்ட இந்தப் பாடல் தந்த பரவச உணர்வும் , மாரிகாலக் குளிரும் மறக்க முடியாதவையாகும்.எங்கள் தலைமுறையை பெருமை கொள்ள வைக்கும் பாடல்.எனது அபிமான பாடகர் பாடியதில் அதை விடப்பெருமை.

மறவேன் மறவேன் அற்புதக்காட்சி ! வாழ்க,வாழ்க கண்ணதாசன் , இளையராஜா , ஜேசுதாஸ்.!!

06 மாரியம்மா மாரியம்மா – படம்: கரகாட்டக்காரன் – பாடியவர்கள: மலேசியா வாசுதேவன் + சித்ரா – இசை இளையராஜா

மன எழுச்சிம்தரும் வாத்தியங்களின் கூட்டணி குரலிசையுடன் கலந்து உலர்ந்த நெஞ்சங்களையும் நெகிழ வைத்து விடுவதாக அமைந்த பாடல்.நாட்டார் வழிபாட்டின் பாங்கை கண் முன் நிறுத்தத்த மாயமாளவ கௌளை ராகத்தை மார்பில் வந்த ராகம் என பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட பாடல். இப்பாடலில் வெறுமனே தாளத்தைப் போட்டு முழக்காமல் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மதகை உடைத்துப் பாயும் வெள்ளம் போல உணர்ச்சி வெள்ளம் பாயும் பாடல்.உயிர்ப்புடைய பாடல்களால் ராகங்கள் பற்றி முன் அறியப்பட்ட நியதிகளையும், மதிப்பீடுகளையும் தாண்டி சென்று ரசிகர்களின் கற்பனைகளையும், கனவுகளையும் கட்டறுத்து விடும் இசைஞானியின் அனாசயப்பாடல்.

07 பூங்கதவே தாழ் திறவாய் – படம்: நிழல்கள் – பாடியவர்கள: தீபன் சக்கரவர்த்தி + உமாரமணன் – இசை இளையராஜா

மேலை செவ்வியல் நேயனாகவும்,தமிழ் செவ்வியல் நேயனாகவும் விளங்கும் இசைஞானி மேல் சொன்ன இசையின் நுட்பங்களை எல்லாம் ஒன்றாகச் சிறைபிடித்த அற்புதமான பாடல்.இசைக்கலவைகளைக் கட்டுக்கோப்பில் , அதில் வண்ண வண்ணக் கலவைகளைத தந்து இசை சிருஷ்டியின் எழில் காட்டும் பாடல்.
மாயமாளவ கௌளை ராகத்திற்கு எழில் கூட்டிய அற்புதமான பாடலில் இசையின் நுண்மைகளை நுணுகித் தந்து நம்மையும் , நமது இசையையும் பெருமிதம் கொள்ள வைக்கும் ஆனந்தபாடல்.இனிய ஒலிகளை இழைத்து இழைத்து கட்டி புதிய கற்பனைகளைக் காட்ட யாரால் முடியும்?இது போன்ற ஆற்றல் இசைஞானிக்கு முன்பும், பின்பும் யாருமில்லை.சினிமா இசையில் இனப்த்தின் உரிமைத் தேனில் நம்மைத் திளைக்க வைத்த பாடல்களில் ஒன்று.

“கிழக்கும் மேற்கும் ஒரு காலமும் ஒன்றிணைய முடியாது ” என்று ஓர் மேலைத்தேய அறிஞர் கூறினார். இரு இசையின் பேதங்களையும் கடந்து பரிசோதனை செய்து சினிமா இசைக்கு புதிய கண்ணோட்டமும் தந்தார்.அந்த வகையில் இசைஞானி அமைத்த How To Name It என்ற இசைவடிவத்தில் வரும் மூன்றாவது இசைத் துணுக்குக்கு முன்னோடியாக் அமைந்தது இந்தப்பாடல். எனலாம்.

08 தென்னக் கீற்றும் தென்றல் காற்றும் – படம்: முடிவல்ல ஆரம்பம் 1985 – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + பி.சுசீலா – இசை இளையராஜா
தனெக்கென அமைத்துக் கொண்ட இசை இணைப்புக்களில் ,துள்ளும் தானகளில் உணர்ச்சிகளை சிறை வைப்பதுடன், மனக்கிளர்ச்சியையும் தந்து இன்பமூட்டும் பாடல்.மதில் எழும் அழகுணர்ச்சியை தூண்டி , இசை விழிப்புணர்வு வைத்து, வார்த்தைகளை அர்த்தமம்ற்றதாக்கி பின் தள்ளும் பாடல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.உணர்ச்சித் துடிப்புகளை இசை தோண்டுவதால் உண்டாகும் இன்பத்தில் நம்மை மிதக்க வைக்கும் பாடல். மலேசியா வாசுதேவன் பாடிய அழகான் பாடல்களில் ஒன்று.

09 அந்தி வரும் நேரம் – படம்: முந்தானை முடிச்சு 1983 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை இளையராஜா

ஊற்றிலிருந்து பொங்கி எழும் நீர் போல் நாதங்களை எழுப்பி எழுச்சியோ எழுச்சி தருகின்ற முன்னிசையுடன் தொடங்கும் மெய்சிலிர்க்க வைக்கின்ற பாடல்.இசையில் வர்ணத்தை வனையும் கைவல்யக்காரன் இசைஞானியின் பேராற்றல் வெளிப்படும் பாடலில் காலத்திற்கேற்ப புதுமையும் , ராகத்திற்கு ஒரு புதிய ஒளியும் , இன்பத்தில் நம்மை திக்குமுக்காடவும் வைக்கின்ற பாடல்.மின்னல் பாய்ச்சும் ஒளிக்கீற்றுக்கள் போல் வரும் ஒலியலைகள் உடலில் பாய்ந்து மெய்சிலிர்க்க வைக்கின்ற பாடல்.

10 காதல் மகராணி கவிதை தேன் குடித்தாள் – படம்: காதல் பரிசு 1985 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை இளையராஜா

மேல் சொன்ன பாடல் போல் எழுச்சிமிக்க தாளத்துடன் ஆரம்பிக்கும் பாடலில் இசையணியாறுகள் வெவேறு திசைகளில் ஓடி ஒன்று கலந்து இனிய இசையின் உயர்வை உணர்த்துகின்ற பாடல்.அதிக வாத்தியமிருந்தால் பாடல் வரிகள் கேட்காது என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் பாடல்.எத்தனை வாத்தியக்கருவிகள் இருந்தாலும் இசையின் உயிர் வற்றாத பாடல்களை தருபவர் இசைஞானி.

11 மருத மரிக்கொழுந்து வாசம் – படம்: எங்க ஊரு பாட்டுக்காரன் 1987 – பாடியவர்கள் :மனோ + சித்ரா – இசை இளையராஜா

தன்னைச் சுற்றியிருக்கும் இசை நயங்களில் லயிக்கும் கலைஞன் உள்ளத்தில் புதிய புதிய எண்ண அலைகள் தோன்றும்.தனக்கு வேண்டியதை மரபில் எடுத்துக் கொண்டு , தான் ரசித்த இசை வடிவங்களையும் புரிந்து கொண்டு , மரபை இறுகப் பிடித்துக் கொண்டே தங்கு தடங்கலற்ற பாடல்களை தனக்கே உரிய பாகில் தந்து ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனங்களை தடங்கலின்றிக் கவரும் இசைஞானியின் சிறப்பான பாடல்.

இசையலங்காரமும், தரமுயர்ந்த ராகப்பிரயோகமும் , நாட்டுப்புற இசையின் இனிமையும் , தடங்கலற்ற தாளமும் ஒன்றிணைந்து வரும் பேரின்பப் பாடல்.ஒழி நயன்களைத் தேடி மாயாமல் பாடலோடியைந்து இயல்பாய் தருகின்ற இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் மெய்சிலிர்க்கும் அற்புதத்தை உணர முடியும்.

நமது இசையின் அற்புதத்தை நமக்கே உணர்த்திக் காட்டி , நமது இசையின் மாண்பைத் தனது இசை ஆட்சியில் அமர்த்திக்காட்டிய இசைஞானியின் ஞானத்தை வின்றிக்க முடியுமா..?

12 பூவை எடுத்து ஒரு மாலை – படம்:அம்மன் கோயில் கிழக்காலே – பாடியவர்கள் :பி.ஜெயசந்திரன் + எஸ்.ஜானகி – இசை இளையராஜா

என்னென்ன விதமாக நவீனங்களைக் கலந்தாலும் தமிழ் நாட்டுப்புற இசையின் உயிர்நிலை பெற்றிருக்கும் படியாக அமைக்கப்பட்ட பாடல்.ஜெயச்சந்திரன் பாடல்களில் குறிப்பிடத் தகுந்த பாடல்.

13 மச்சி மன்னாரு படம்: என் உயிர் தோழன் 1990 – பாடியவர் :இளையராஜா + சித்ரா – இசை இளையராஜா

சென்னை வாழ் மக்களின் பேச்சு மொழியோடு ஒட்டி அமைந்த இனிமையான் நகைச்சுவைப்பாடல்.

14 மாசறு பொன்னே வருக – படம்: தேவர் மகன் 1992 – பாடியவர்கள் :மின்மினி + எஸ்.ஜானகி – இசை இளையராஜா

மாயாமாளவ ராகத்திற்கு வளமூட்டும் இன்னுமொரு பாடல்.கனிவும், இதமும் இரண்டறக்கலந்து வரும் இனிமையான பாடல்.இசை நிகழ்ச்சிகளில் இசைஞானியை வரவேற்றுப் பாடும் பாடலாகவும் இந்தப் பாடலின் மெட்டு பயன்படுவது மனக்கிளர்ச்சியை தருவதாய் இருக்கும்.

15 கொட்டு கழி கொட்டு நாயனம் கேட்குது படம்: சின்னவர் 1992 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா – இசை இளையராஜா

இதமான செனாய் வாத்திய இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடலில் இடையிடையே வந்து போகும் வாத்தியங்கள் மரபிசையின் வாசத்தை அள்ளி வீசுகின்றன.மரபிசையின் ஆழத்திலிருந்து எடுத்து நவீனத்தில் தோய்த்த அற்புத இசை வீச்சு.

ராகங்களைக் கையாள்வதில் இசைமேதை ஜி.ராமனாதனையும் , இசைமேதை கே.வீ.மகாதேவனையும் , மெல்லிசைப்பாங்கில்உயர் பிரகோகங்கள் காட்டிய மேதைகள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் தனி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒன்று கலந்து ,அவற்றுடன் தனக்கேயுரிய சப்தஜாலங்களைக் காட்டி நம்மை தன இசையோடு கட்டி வைத்து , நினைவில் நின்றகலாத பாடல்களைத் தந்த இசைஞானி இளையராஜா அமைத்த இன்னும் சில மாயமாளவ கௌளை ராகத்தில் அமைந்த பாடல்கள் வருமாறு.

16 என் சோகக் கதைக் கேளு தாய்க் குலமே – படம்: தூறல் நின்னு போச்சு 1982 – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + குழுவினர் – இசை இளையராஜா

17 காதல் கவிதைகள் படித்திடும் நேரம் படம்: கோபுரவாசலிலே 190 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா – இசை இளையராஜா

18 சாமிகளே சாமிகளே சொந்தக் கதை படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் 1989 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை இளையராஜா

19 ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா – படம்: நம்மபூமி 1992 – பாடியவர் :ஜேசுதாஸ் + சுவர்ணலதா – இசை இளையராஜா

20 சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல படம்: கிளி பேச்சு கேட்க வா 1993 – பாடியவர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை இளையராஜா

21 நண்டூருது நரியூருது – படம்: பைரவி 1978 – பாடியவர் :சௌந்தரராஜன் – இசை இளையராஜா

22 மஞ்சள் நிலாவுக்கு இன்று – படம்:முதலிரவு – பாடியவர்கள் :பி.ஜெயசந்திரன் _ பி.சுசீலா – இசை இளையராஜா

23 ஆண்பிள்ளை என்றாலும் – படம்: ஆறிலிருந்து அறுபது வரை 1979 – பாடியவர்கள் :பி.எஸ்.சசிரேகா + எஸ்.பி.சைலஜா – இசை இளையராஜா

24 மழலையின் மொழியினில் அழகிய படம்: 1989 – பாடியவர் :மனோ – இசை இளையராஜா

25 என் தாயெனும் கோவிலை படம்: அரண்மனைக்கிளி 1993 – பாடியவர் :இளையராஜா – இசை இளையராஜா

26 குயிலை புடிச்சு கூண்டில் அடிச்சு படம்: சின்னத்தம்பி 1991 – பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை இளையராஜா

27 அப்பன் என்றும் அம்மை என்றும் படம்: குணா 1992 – பாடியவர் :இளையராஜா – இசை இளையராஜா

28 தாயுண்டு தந்தையுண்டு படம்: கோயில்காளை 1993 – பாடியவர் :இளையராஜா – இசை இளையராஜா

29 கண்ணின் மணியே கண்ணின் மணியே – படம்:மனதில் உறுதி வேண்டும் – பாடியவர்: சித்ரா – இசை இளையராஜா

30 ஒனப்பு தட்டு புண்ணாக்கு படம்: சின்ன ஜாமீன் 1993 – பாடியவர் :சுவர்ணலதா – இசை இளையராஜா

31 அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் படம்: சந்திரலேகா 1993 – பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன் + பிரீத்தி உத்தம்சிங் – இசை இளையராஜா

32 இந்த வீடு நமக்கு சொந்தமில்லை படம்: – பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை இளையராஜா

33 ஆறும் அது ஆழமில்லை படம்: ஆண்பாவம் – பாடியவர் : இளையராஜா – இசை இளையராஜா

ஒவ்வொரு பாடலையும் பாருங்கள்..எத்தனை விதம் ..! எத்தனை விதமான பாடல்கள் !!

குறுகிய கால எல்லைக்குள் நீண்ட காலம் வாழும் இசைப்படைப்புக்களை நமது மரபிசையின் பண்புகளைச் சார்ந்து, நம்மை இன்பத்திலும் ,துன்பத்திலும் ஆற்றுப்படுத்தி இசை என்கிற பேரானந்தத்தில் நிறைய வைத்த இசைஞானி தந்த பாடல்கள தான் எத்தனை எத்தனை ..!!

உலக இசையின் உயிர்வளையங்களை எல்லாம் வடம்பிடித்து மனித மனங்களை மறைக்கும் வரட்டுக் கௌரவங்களையும் ,போலித் தடைகளையும் தாண்டி , மெய்மறந்து ரசிக்க வைக்கும் பாடல்களால் உயர் இசை உன்னதத்தின் உறைவிடமாக விளங்கும் இசைஞானியின் பாடல்களை ,அது தரும் சுகத்தை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் ஏது..!?

இசையமைப்பதில் நூதன வேகமும் , ராகங்களைக் கையாள்வதில் விவேகமும், நிதானமும் ஒலிகளின் தொனிகளில் புதிய ,புதிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும் தன்னிகரற்று முதல் நிலையில் இருப்பவர் இசைஞானி இளையராஜா.

ஒரு ராகத்தை வைத்துக் கொண்டு எத்தனை எத்தனை வண்ணங்களில் , புது புது வடிவங்களில் , புது புது உணர்வுகளில் , பாவங்களில் ,மேலைத்தேய செவ்வியல் நமது இசை மரபு வடிவங்களுடன் படாடோபமற்ற வகையில் கலந்து , கிராமிய மனம் மாறாமல் ,இசையின் பன்னலக்கூட்டில் தந்த நல்லிசைச்சாதனை என்பது இன்று வரை யாராலும் எட்ட முடியாததாகும்.

அவருக்கு முன்பின்னான இசையமைப்பாளர்கள் பற்றி அதிகம் பேசப்படாமைக்கும், இசைஞானி பற்றி மட்டும் அதிகம் பேசப்படுவதற்கும் காரணம் இசை பற்றிய அவரது தேடலே.!அவருள் எரியும் இசை நெருப்பு உறுதி தாளராது ஓங்கி நிற்கிறது.

[ தொடரும் ]

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 20 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 19 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 18 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 16 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 15 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 14 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 12 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 11 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 10 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 9 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 7 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 4 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

Comments 10

  1. முகிலன் says:
    11 years ago

    தொடருங்கள் தோழர் சௌந்தர். இனிய வாழ்த்துகள்!!
    தங்களது இசைநுணுக்க அறிவியல் பகுப்பாய்வுக் கட்டுரை கண்டு பெரும் பயனடைபவர்களில் அடியேனும் ஒருவன். புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தங்களது விருப்புத் துறையான ‘இசை’ தொடர்பாக ஆழமாகத் தேடி அறிந்துகொண்டு “தான்பெற்ற இன்பம் பெறுக வையகம்” என்று கோட்பாட்டிற்கு அமைவாக இணையவலை தொடர்பூடகத்தின் வழியில் தாங்கள் பகிரும் இசை ஆய்வுத் தொகுப்புகள் கண்டு மெய்மறந்து போகிறோம். தங்களது அரிய பணிக்கு சிரம் தாழ்த்தி வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்!!
    தங்களது இசைநுணுக்க ஆய்வுப் பகுப்பாக வெளிவர இருக்கும் நூலை பெரும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். தங்களது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகளை நேசமுடன் தெரிவிக்கிறோம். தொடரட்டும் தங்களது இசை ஆய்வுப் பயணம்.

    “பொதுவாக “தென்னிந்திய இசை” என்று அறியப்படுகின்ற கர்னாடக இசை , தமிழிசையை மூலமாகக் கொண்டதே என்பதை மறுப்பவர்கள் அது இந்தியாவின் வேறு எந்த பகுதியின் இசையை கொண்டதென்பதை சொல்லவதில்லை. “தமிழிசை ” என்று சொல்லும் போது மட்டும் மலையாள இசை , தெலுங்கு இசை ,கன்னட இசை என்ற ஒன்றில்லிலை , அது போலவே தமிழிசை என்று கிடையாது என்பதாக சிலர் கருதுகிறார்கள். மலையாள இசை , தெலுங்கு இசை ,கன்னட இசை என்பதில்லை என்பது தெரிந்தும் இவ்விதமான விஷமத்தனங்கள் பரப்பப்படுகின்றன.”
    அடிக் கோடிட்டுக் குறிப்பிடப்படவேண்டிய வாசகங்கள்.

    – கேட்டலால் உணரப்படும் ‘இசை’ என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட ‘ஓசை’ அவ்வளவென்றே மேதாவிகள் குறிப்பிடுவார்கள் இசைஞானி இளையராசாவும் அதிகவளவில் குறிப்பிட்டிருக்கிறார். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டார் இசை, தமிழிசை,  ஹிந்துஸ்தானி இசை, ல்ல மத்திய கிழக்கு அரேபிய நாட்டுப்புற இசை , கிழக்கு ஐரோப்பிய ஜிப்சி இசை, ஸ்பானிய ப்ளமிங்கோ இசை எனப் பலவாக பகுத்துக் கொண்டு திறனாய்வு செய்வதை புதிய அறிவியலாகவே நாம் கொள்கிறோம். வெறும் ஓசைகளும் இதனது எதிரான மௌனமும் இவற்றிக் கலவைகளும் இலக்கியமாக மனித மனத்தில் இடம்பிடிக்கின்றன.
    கண்களாலும்,  காதுகளாலும், தொடுகைகளாலும், வாசனைதரும் மூக்காலும், அறுசுசை உணர்வைப் பிரித்து வழங்கும் நாக்காலும், காலம் காலமாக கடத்திவரப்படும் நினைவுகளாலும் இணைக்கப்பட்டுள்ள மனித மனம் எனும் மிப் பெரிய ‘சுயதானியங்கிக் கணினி’ புவியின் ஏனைய உயிரிகளிலிருந்து வேறுபடுத்திப் பிரித்த ‘மானுட வாழ்வை’ அளித்திருக்கிறது. இது திடீரென்று வந்தவை அல்ல. வரலாற்று இயங்கியல் நோக்கில் இத்தகைய முன்னகர்வுக்கான செதுக்கல்களைத் தொன்மச் சமூகத்திலிருந்து இன்று வரையில் மனிதனது கடுமையான அயராத உழைப்பே வழங்கிவருகிறது.
    தொன்மையின் நீட்சியுடன் தொடரும் சமுககங்கள் தாம் கடந்து வந்த பாதைவழியாக நிறையப் பொக்கிசங்களை அள்ளிக் கொண்டு செல்வதாகவே கடக்கும். இவற்றில் இசைக் கூறுகளும் அடங்கும். இத்தகைய நோக்கில் உலகம் தழுவிய இசைப் பகுப்பாய்வில் தமிழிசையும் தனித்து அடையாளத்துடன் மிளிரும். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதை வட இந்திய இசை – தென்னிந்திய இசை எனவாக நிலவியல் பிரிப்பாக பொதுமைப்படுத்துகிறார்கள்.

  2. vimal says:
    11 years ago

    திரு. சௌந்தர் அவர்களே!

    மீண்டும் ஒரு அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  3. gowthaman says:
    11 years ago

    eneya soundarakku valthukkalum nandrikalum unkal isai ayvum isai vearpakkupayvum tamilukku nenkal setha thondu yar vemarsiththalumeappty vemarsiththalum unkal pani thodaratum valthukal gowthaman

  4. கணேஷ்  says:
    11 years ago

    அசாத்தியமான கட்டுரை..பாடல்களின்  தொகுப்பு என்னை எப்போதும் பிரமிக்க வைப்பதாக உள்ளது.
    நன்றியும் வாழ்த்துகளும்.

  5. Ravikumar says:
    11 years ago

    சௌந்தர் 

    பாகேஸ்வரி ராகம் குறித்து எழுதுங்கள்.இந்தப் பதிவும் சோடைபோகவில்லை.

  6. charles says:
    11 years ago

    சௌந்தர் சார் 

                         இளையராஜா பற்றி நானும் எனது இசை அனுபவங்களைக் கொண்டு பதிவு எழுதி வருகிறேன் . ஆனால் உங்களைப் போல் ஆழ்ந்த இசை அறிவுடன் என்னால் எழுத முடியாது. இளையராஜாவின் இசை அற்புதத்தை எந்த வார்த்தைகள் கொண்டு சித்தரிப்பது என்று நான் தவிக்கும் சூழலில் உங்களின் இந்தப் பதிவு அதற்கு விடையாக அமைந்திருக்கிறது . இசை ஞானமில்லாமல் வெறும் கேள்வி ஞானத்தால் மட்டுமே அவரிசையை  நான் அள்ளிப்பருகிய அனுபவத்தினை உங்களின் சொல்லாட்சி மிக்க கட்டுரை வாசிக்கும்போதே கொடுக்கிறது . மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களை நான் ரசித்தாலும் இளையராஜாவின் பாடல்கள் கேட்கும்போது உயிரைத் தொடுவதை உணர முடிகிறது . உங்களின் கட்டுரை அதை நிரூபிக்கிறது .  முடிந்தால் என் பதிவிற்கு வாருங்கள். நன்றி .

                             http://puthukaatru.blogspot.in/2014/10/i.html

  7. T.சௌந்தர் says:
    11 years ago

    Thank you Charles.

  8. Ram Chari says:
    11 years ago

    Hi Soundar,
    I have read every one of your article in this section. You are an exceptional writer and possess in depth knowledge of music. I am yet to come across anyone with this combination.

    I just want to point out that ” adi kondar antha vedikkai kana” was composed by Muthuthandavar and not Arunachala kavirayar as you have mentioned in this article. If I am wrong, I apologize.

    Keep up the good work.

    Regards

    Ram

    • T.சௌந்தர் says:
      11 years ago

      Ram Chari அவர்களே

      தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

      “ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை ” என்ற பாடலை எழுதியவர் முத்துத்தாண்டவர் என்பதே சரியானது.தவறை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி..

  9. uma chelvan says:
    10 years ago

    Excellent write up as usual. Keep up the good work. I was busy, and missed many of your outstanding posts. My bad !

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...