11.10.2008.
மட்டக்களப்பில் அண்மையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் பின்னர் கடற்கரைப் பகுதியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் இன்று சர்வ சாதாரணமாகிப் போன விடயம் .இது குறித்து கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையான் பதில் கூறவேண்டும் எனக் கோரியுள்ளார்.
மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பொன்றில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இந்த இரு இளைஞர்களும் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களை தாம் சென்று பார்வையிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன் போது விசாரணையின் பின் விடுவிக்கப்படுவார்கள் என காவற்துறையினர் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
18 வயதான கந்தசாமி குகதாஸ் மற்றும் 26 வயதான ஏ குணசீலன், ஆகியோரின் சடலங்கள் கடந்த 4 ஆம் திகதி காத்தான்குடி கடலில் இருந்து மீட்கப்பட்டன.
இவர்கள் இருவரும், கடந்த 2 ஆம் திகதி சோதனை நடவடிக்கையின் போது மட்டக்களப்பு வலம்புரி என்ற வியாபாரத்தளத்தில் இருந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக துரைரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார்.







