இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் அதிகரித்திருக்கும் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கு இந்தியா முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கவுள்ள நிலையில் தமது அயல்நாடான இலங்கையில் தமது செல்வாக்கை அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுத்திருக்கும் இந்தியா, மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் பூரண ஈடுபாட்டுடன் இருப்பதாகக் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாகக் கொழும்பு விரைந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியா உதவும் என்ற செய்தியை இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்துக்கு தாக்குதல்களை நடத்தும் ஆயுதங்களை வழங்க இந்தியா மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இலங்கை சீனாவின் உதவியை நாடியது. கடந்த சில வருடங்களாக இலங்கைக்குப் பாரிய உதவிகளை வழங்கும் முன்னணி நாடாக சீனா விளங்கிவருகிறது.
இதன் பலனாக இலங்கையின் தென்பகுதியின் முக்கியமான கரையோரமாக விளங்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளை சீனா பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் தற்பொழுது பயங்கவராதம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், சீனா இலங்கை மீது செலுத்தியிருக்கும் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது ஆதிக்கத்தைக் கூட்டுவதற்கு இந்தியா முயற்சிகளை எடுத்துள்ளது.
இதன் ஒரு அங்கமாகவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடனடியாக இலங்கை விரைந்தனர். அத்துடன், இலங்கையில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கும், புனரமைப்புப் பணிகளுக்குமென இந்தியா முதற்கட்டமாக ஒரு தொகுதி நிதியுதவி வழங்கியது.
அத்துடன், இந்தியா ஏற்கனவே வைத்தியர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி திருகோணமலை புல்மோட்டையில் களவைத்தியசாலையொன்றை அமைத்து மருத்துவ உதவிகளை வழங்கிவந்தது. இந்த வைத்தியசாலையும் தற்பொழுது வவுனியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியவகையில் அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரப் பகிர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்தியா தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.







